பழைய விளையாட்டுகள் -- 1
நொண்டிக் கோடு
இன்றைய சிறுவர்கள், இளைஞர்கள் பொது இடங்களில் ஆடும் விளையாட்டு
ஒன்றே ஒன்றுதான்: கிரிக்கட்;
அதுவும் எப்போதாவது.
சுமார் எழுபத்தைந்து ஆண்டுக்கு முன்பு, தெருக்களில் நாள்தோறும், பலப் பல விளையாட்டுகள் ஆடப்பட்டன. தொலைக்
காட்சி, காணொளி (வீடியோ) ஆட்டங்கள், ஏன், வானொலிகூடத் தோன்றாத காலம்; ஊர்திகள் அதிகம் செல்லாத காரணத்தால், காலியாகக் கிடந்த மண் தெருக்களில் இறங்கி விளையாடிப் பொழுது போக்க வேண்டிய கட்டாயம்
அந்த விளையாட்டுகளை ஊக்குவித்தது.
மறைந்து போன அவற்றுள் ஐந்தை இன்றைய
இளைய தலைமுறைக்கு அறிவிக்கவே இக்கட்டுரை எழுதுகிறேன்.
1 -- நொண்டிக் கோடு
தெருவின் குறுக்கே,
ஒரு புறத்திலிருந்து மறு புறம் வரையிலும், காலால் ஓர் அகலமான
கோடு கிழித்து, கொஞ்ச தொலைவில் அதற்கு இணையாக
(parallel) இன்னொரு கோடு கிழிப்பர்; இவற்றை இணைத்து இரண்டு கோடுகள் போட்டுவிட்டால், நான்கும் சேர்ந்து
ஒரு பெரிய சதுரத்தைத் தோற்றுவிக்கும். இதுதான் ஆடுகளம். (இடம் போதாவிடில் நீள்சதுரக்
களம் அமைக்கலாம்).
ஆட்டக்காரர்கள் இரண்டு அணியாய்ப்
பிரிவார்கள். மொத்தம் எட்டுப் பேர் எனக் கொள்வோம்: ஓர் அணியினர் ஆடுகளத்துள் நுழைவர்;
மற்றவர் வெளியில் அமர்வர். இவர்களுள் ஒருவர் மட்டும்
எழுந்து, நொண்டியபடி சதுரத்துள் நுழைந்து
எதிரிகளைக் கையாலோ தூக்கிய திருவடியாலோ தொடவேண்டும்; அகப்பட்டவர் வெளியேறுவார்.
காலை மாற்றாமல் நொண்ட வேண்டும்;
களைத்துப் போயோ தவறுதலாகவோ காலைத் தரையில் ஊன்றிவிட்டால், "காலை உட்டான்" என்ற கூச்சல் எழும்;
வெளியே வந்துவிட
வேண்டியதுதான். இன்னொருவர் நுழைவார்.
உள்ளிருப்பவர் கோட்டை மிதித்தால் அல்லது கடந்தால் வெளியேற வேண்டும். உள்ளே இருக்கிற நால்வரையும் தொட்டுவிட்டால்
வெற்றி; ஒருவர் பாக்கி இருந்தாலும் தோல்வி.
இரு சாராரும் வியர்த்து சோர்ந்து விறுவிறுத்துப்
போவார்கள். உடலுக்கு அருமையான பயிற்சி.
அடுத்த ஆட்டத்தில் அணிகள் இடம் மாறும்.
உள்ளேயிருப்பவர், சிக்காமல் இருக்க,
ஒரு திசையில் கொஞ்ச தூரம் விரைவாய் ஓடித்
திடீரெனத் திரும்பி எதிர்த் திசையில் ஓடுவார். அதற்கு
"வெட்டுதல்" என்று பெயர். அப்படி வெட்டும்போது, கால் சர் எனச் சறுக்கிக்கொண்டு
அரை மீட்டர் வரைகூட போகும்; வெட்டுதலில் வல்லவர்கள் பலர் இருந்தனர்; அவர்களைத் தொடுதல்
மிக அரிது. வெட்டித் திரும்புவதை எதிர்பார்த்திராத நொண்டிக்காரர் நிலை தடுமாறிக் காலை "உட்டுடுதல்"
சகஜம்.
எதிர்த் தரப்பிலும் திறமைசாலிகள் இருப்பார்கள்; எட்ட எட்டக் காலை ஊன்றிச் சென்று, ஒருவரை மட்டுமல்ல, இருவரைக்கூடத் தொட்டுவிட
வல்ல அபாரக் கில்லாடிகள்!
நொண்டுபவர் அவரையும் இவரையும் மாறிமாறித்
துரத்துவது வீண் முயற்சியாய் முடியும். ஒருவரை மாத்திரம் குறி வைத்து அவரை விரட்டிக்
களைக்கச் செய்து தொடப் பார்ப்பதே சரியான உத்தி. இது, "ஒருத்தரைக் கரவம் கட்டுதல்" எனப்படும்.
அவரைத் தொட இயலாமற் போனாலும் சோர்ந்திருக்கிற அவர், அடுத்த நொண்டிக்காரரிடம் எளிதில் சிக்குவார்.
சிறுமிகளும் இதை ஆடுவது உண்டு.
=======================================================