ஆங்கில எழுத்து என நாம் குறிப்பிடும் 26 எழுத்துக்கும் ஆதிமூலம் பினீசியரின்
(Phoenicians) நெடுங்கணக்கு.
இவர்கள் நடுநிலக் கடலின் மேலைக் கரையில், இப்போதைய லெபனான் நாட்டின் மேற்குப் பகுதியில், சுமார் 2500 ஆண்டுக்கு முன்பு தலைசிறந்த நாகரிகத்துடன் வாழ்ந்தவர்கள் ; விவிலியம் இவர்களைக் கானானியர் என்கிறது. இவர்கள்தான் தனித்தனி எழுத்துகளால் ஆன (மொத்தம் 22 எழுத்து) நெடுங்கணக்கை உருவாக்கிய உலக முதல்வர்கள்.
இதைத் தெரிந்துகொண்ட கிரேக்கர், தமது மொழியின் தேவைக்கேற்ப, கொஞ்சம் சீர்படுத்தியும் நான்கு எழுத்தைக் கூட்டியும் உபயோகித்தனர்; பினீசிய நெடுங்கணக்கின் முதலிரண்டு எழுத்துகளுக்குப் பெயர் அல்ஃபா, பேத் (alpha, beth). இந்தப் பெயர்களைக் கிரேக்கர் அப்படியே தங்களது மொழியின் முதலிரு எழுத்துகளுக்கும் சூட்டினர்: அல்ஃபா, பீட்டா (alpha, beta ). இவை
இரண்டும் சேர்ந்ததால் அல்ஃபாபெட்
(alphabet) என்னும் சொல் பிறந்தது.
கிரேக்கரிடமிருந்து, இத்தாலியில் வாழ்ந்த எத்ருஸ்கர் (Etruscans)
என்ற மக்களும் இவர்களிடமிருந்து, ரோமானியரும் நெடுங்கணக்கைக் கற்று, தத்தம் மொழிகளுக்கு உபயோகித்தார்கள். தென் ஐரோப்பா
முழுதும் ஒரு காலத்தில் ரோமானியரின் கையில் இருந்ததால் அவர்களின் மொழியாகிய லத்தீன் (26 எழுத்து) அக் கண்டத்தில் பரவியது; ரோமன் எழுத்து
(Roman Script) எனப் பெயரிடப்பட்ட அதை ஒவ்வொரு நாட்டாரும் கூட்டியோ
குறைத்தோ மாற்றியோ பயன்படுத்தினர்.
காட்டாக, பிரஞ்சில் 39 எழுத்துகள் உண்டு: a e i o u ஆகியவற்றின்மீது இரட்டைப் புள்ளி வைத்தோ, சாய்வுக் கோடு இழுத்தோ, தொப்பி போட்டோ புது எழுத்துகளை உருவாக்கியுள்ளனர்; o
வும் e யும் ஒட்டிக்கொண்ட ஓரெழுத்தும் வால் முளைத்த c யும் உண்டு.
இப்போது வெள்ளைக்காரர்கள் வாழும் எல்லா நாடுகளும் மட்டும் அல்லாமல் துருக்கி, வியட்நாம் முதலான வேறு சில நாடுகளும் ரோமனெழுத்தைக் கைக்கொண்டுள்ளன.
உலகத்தில் பெரும்பாலான பகுதிகளில் அமுலில் இருக்கும் நெடுங்கணக்கு ஆசியாக்காரரால் உருவாக்கப்பட்டது என்பதை எண்ணி நாம் பெருமை பாராட்டலாம்.
-------------------------------------