அந்தச் சிற்றூரிலிருந்த ஒரு குன்றின் அடிவாரத்தில்,
அடுத்தடுத்து அமைந்திருந்தன இரு குடிசைகள். அவற்றில் வசித்தவர்கள்,
வளங்குறைந்த மண்ணுடன் போராடித்தான் தங்கள் குழந்தைகளை வளர்க்க வேண்டியிருந்தது; குழந்தைகளுக்குப் பஞ்சமில்லை: குடிசைக்கு நான்கு!
பகல் முழுதும் தெருவில் விளையாடிப் பொழுது போக்கினார்கள். துய்வாஷ்
குடும்பத்தில் மூன்று சிறுவர்களும் ஒரு சிறுமியும்; வல்லேன் குடும்பத்தில்,
மூன்று பெண், ஓர் ஆண். கஷ்ட ஜீவனம்; சூப், உருளைக்கிழங்கு, தூய காற்று ஆகியவையே
முக்கிய உணவு.
ஒரு பிற்பகல்; குதிரை வண்டியொன்று குடிசைகளின் எதிரே திடீரென நின்றது. ஓட்டி வந்த பெண், தன் பக்கத்தில் இருந்தவரை நோக்கி,
" அதோ பார்,
ஆன்ரி, அந்தக் குழந்தைக் கூட்டத்தை. அவர்கள் புழுதியில்
கும்மாளம் போடுவதும் அழகாகத்தான்
இருக்கிறது" என்றாள். அவர் பதிலொன்றும் சொல்லவில்லை. திருமதி துய்ப்ளிஏரின் இந்த
வியப்புப் பேச்சு அவருக்குப் பழக்கமானதுதான்; அது அவருக்குத் துயரந் தரும்; தம்மீது அவள் குற்றஞ்
சுமத்துவதுபோல் அவருக்குத் தோன்றும்.
அவள் தொடர்ந்தாள்: "அவர்களை நான் கொஞ்ச
வேண்டும்; அதோ அந்தக் குழந்தையைப்போல எனக்கு ஒன்று
இருந்தால்!"