Tuesday 11 June 2019

சிந்தனை மாற்றம்



  என் சிறு வயதிலும் இளமையிலும் பெரியவர்கள் அடிக்கடி சொல்லக் கேட்ட வாக்கியங்கள்:

   ஆரு காயம் ஆருக்கு நிச்சயம்?

   நீர்மேலே குமிழி நம்ப வாழ்க்கை.

   நம்ம கையிலே ஒண்ணுமில்லே.

   எல்லாம் கடவுள் செயல்.

   அவனன்றி ஒரு அணுவும் அசையாது.

   தலையெழுத்துப்படிதான் நடக்கும்.

   விதியை வெல்ல முடியாது.

   எதுக்கும் நேரங்காலம் வரவேண்டும்.

   என்ன பாடுபட்டாலும் கெடைக்கிறதுதான் கெடைக்கும்.

   எண்ணெய் தடவிக்கிட்டு மண்ணிலே புரண்டாலும் ஒட்டுறதுதான் ஒட்டும்.

  அப்போதைய பாட்டுகளும் இந்தக் கருத்துகளையே எதிரொலித்தன.

-  காயமே இது பொய்யடா வெறுங்
   காற்றடைத்த பையடா
   மாயனார் குயவன் செய்த
   மண்ணு பாண்டம் ஓடடா.

-  ஊத்தைக் குழியிலே மண்ணை யெடுத்து
   உதிரப் புனலிலே உண்டை சேர்த்து
   வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம்
   வரகோட்டுக்கும் ஆகாதென்று
   ஆடு பாம்பே!

-  யாரை விட்டது காண் விதி
   எவரை விட்டது காண்?

எட்டடிக் குச்சுக்குள்ளே
   சுப்பையா எத்தனை நாளிருப்பேன்
   கந்தையா எத்தனை நாளிருப்பேன்?
(உடம்புக்குள்ளே அடைபட்டுக் கிடக்கிற உயிர் புலம்புகிறது.)

  மேற்கண்ட கருத்துகள் எல்லாவற்றுக்கும் அடிப்படை:

 1. வாழ்வு நிலையற்றது.
 2. நம் முயற்சி வீண்.

  இவை நம் நல்வாழ்வையும் நாம் தீட்டக்கூடிய எதிர்காலத் திட்டங்களையும் நம் முன்னேற்றத்துக்காக நாம் மேற்கொள்ளும் முயற்சிகளையும் கருவிலேயே அழிக்க வல்லவை. பறக்கத் துடிப்பவர்களின் சிறகுகளைத் தொடக்கத்திலேயே முறிப்பவை.

 இன்றைய சமுதாயத்தின் சிந்தனையில் வரவேற்கத்தக்க தலைகீழ் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மேற்படி எதிர்மறைக் கருத்துகள் புறக்கணிக்கப்பட்டு விட்டன. அவரவரும் கல்வி, தொழில், வாழ்க்கைத் தரம் முதலியவற்றில் மேன்மேலும் உயர்வதற்கு முயல்கின்றனர்.

  இளைஞர்களின் கனவு, நன்கு கற்று வெளிநாட்டில் மேற்படிப்பு பெற்று அங்கேயே தங்கி இன்ப வாழ்வு வாழவேண்டுமென்பது.

  பொது மக்களின் மனம் என்ன நினைக்கிறது? எல்லா வாழ்க்கை வசதிகளையும் அனுபவிக்க வேண்டும் என்றுதான். எல்லார் கையிலும் அலைபேசி, ஏராளமானோரிடம் இரு வீலர்கள், கணிசமாகக் கார்கள், உள்நாட்டிலும் பிற நாடுகளிலும் இன்பச் சுற்றுலாக்கள், உல்லாச விடுதிகள், இரவுக் கொண்டாட்டம்.

  பெண்களும் பின்தங்கவில்லை. அவர்களுக்கு ஆணாதிக்கம் விதித்திருந்த அச்சம் நாணம் முதலான தடைகளைத் தகர்த்தெறிந்துவிட்டுக் கல்வி, அலுவல் ஆகியவற்றில் பீடு நடை போடுகிறார்கள். எங்கெங்கோ போய்ப் போட்டிகளிற் பங்கேற்றுப் பதக்கம் பெற்று நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை சேர்க்கிறார்கள்.

  இப்படி ஒட்டுமொத்த சமுதாயத்தில் ஏற்பட்ட புரட்சிகரமான மாறுதல்களுக்கு என்ன காரணம் என்று சிந்தித்தால், ஆங்கில வழிக் கல்வி எனத் தோன்றுகிறது. தமிழ் நூல்களில் பத்தாம்பசலிக் கருத்துகள் ஏராளமாக இடம்பெறுகின்றன. ஆங்கிலத்திலோ தன்முன்னேற்றம், எதிர்காலக் கனவு காணல், வாழ்வின் இன்பங்களைத் துய்த்தல் முதலானவை குறித்த ஆக்கச் சிந்தனைகள் நிரம்பி வழிகின்றன. அம்மொழிப் புத்தகங்கள் ரோல் மாடலாய்க் கொள்ளக்கூடிய அருஞ்சாதனையாளர்களை அடையாளங் காட்டி அவர்களைப் போல் சாதிக்கத் தூண்டுகிற ஆர்வத்தை யேற்படுத்தி நம்மால் முடியும் என்னுந் தன்னம்பிக்கையை ஊட்டிக் கடின உழைப்பையும் விடாமுயற்சியையும் கைக்கொண்டு மேன்மேலும் உயர்வதற்கு வழி காட்டுகின்றன. ஆகையால் மக்கள் கடவுள் மேல் பாரத்தைச் சுமத்தி அவரைச் சங்கடப்படுத்தாமல் தங்கள் சிலுவையைத் தாங்களே தூக்கிக்கொண்டு முன்னே செல்ல முனைகிறார்கள்.

  இன்னொரு காரணம் தனிக்குடித்தன வாழ்க்கை. கூட்டுக் குடும்பத்தில் சில நன்மைகள் இருப்பினும், தாத்தாவும் பாட்டியும் பேரக்குழந்தைகளின் மூளையில் கதைகள் மூலமாயும், உரையாடல் மூலமாயும் காலத்துக்கொவ்வாக் கருத்துகளைத் திணித்துப் பிஞ்சு வயதிலேயே முடக்கிவிடுவார்கள். முதியோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே தொடர்பு அறுந்துபோனமையால் அந்தத் தீமைக்கு இடமில்லாமற் போயிற்று.

  இளைய சமுதாயம்வாழ்க்கை வாழ்வதற்கே!’ என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டுள்ளது.

   எண்ணிய எண்ணியாங்கு எய்தும்
   (நினைத்ததைச் செய்து முடிக்க முடியும்)

   ஊழையும் உப்பக்கங் காண்பர்
   (விதியையும் வெல்ல இயலும்)

என்ற குறட்பாக்கள் சமுதாயத்துக்கு வழிகாட்டுவது போல் தோன்றுகிறது.

  வரவேற்கத்தக்க இனிய நிலைமை!

7 comments:

  1. உண்மைதான் ஐயா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

      Delete
  2. அருமையான உண்மையான விளக்கம் ஐயா...

    ReplyDelete
  3. எத்தனை பேருக்கு இப்படி சிந்திக்க முடியும்

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .நீங்கள் சொல்வது சரி . சிந்திக்கக்கூடியவர்களுள் நீங்களும் ஒருவர் என்பதற்கு உங்கள் பதிவுகள் சான்று .

      Delete
  4. இன்னும் விதியை நம்பி வாழ்க்கையை நடத்தும் பலர் இருப்பினும் பெரும்பான்மையானோரின் சிந்தனையில் மாற்றம் வந்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா என்று பாடிய காலத்தில் எதிர்வாதமாக
    நீயும் பொய்தான் நானும் பொய்தான்
    உனது வார்த்தை மெய்யடா
    இந்த காயம் பொய்தான்
    அடிக்கும் எனது கையும் கூட பொய்யடா
    என்று பூசாரியை சாத்து சாத்தென்று சாத்தும் எம்.ஆர்.ராதாவின் நடிப்பில் வெளியான துணிச்சல்மிகு வரிகளால் எழுதப்பட்ட பாடல் நினைவுக்கு வருகிறது. பாடலை எழுதியவர் யாரென்று தெரியவில்லை.
    சிறந்ததோர் ஆய்வுப்பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. பாடலாசிரியர் யாரென்று நானும் அறியேன்் பாராட்டிப் பின்னூட்டம் எழுதியமைக்கு மிக்க நன்றி.

      Delete