நான் வாசித்த நூல்களின் சில பகுதிகள் பலருக்கும் பயன்படலாம் எனக் கருதுகிறேன்; அவற்றை அவ்வப்போது பகிர்வேன்; முதல் நூல், அறிஞர் எஸ். வையாபுரி இயற்றிய "இலக்கியச் சிந்தனைகள்" (இரண்டாம் பதிப்பு - 1956 . பக். 137. 21 கட்டுரைகளுள்; தலைப்பு: தமிழும் அகராதியும்)
அகராதி என்ற பெயர் முதன்முதலில் காணப்படுவது 1594 இல் தோன்றிய 'அகராதி நிகண்டு' என்ற நூலின் பெயரிலேதான்; இதன் ஆசிரியர் சிதம்பர ரேவண சித்தர் என்னும் வீரசைவப் புலவர்; இவர் இட்ட பெயரே இப்போது டிக்ஷனரி என்று ஆங்கிலத்தில் கூறும் நூலுக்குரிய தமிழ்ப் பெயராய் அமைந்துவிட்டது.
அரிச்சுவடியிலுள்ள எழுத்து முறைப்படியே சொற்களை அமைப்பதுதான் அகராதிமுறை. இது நமக்கு எளிதாகத் தோன்றுகிறது; ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வளர்ந்து வந்திருக்கிற தமிழ் இலக்கிய சரித்திரத்தில், இம்முறை16-ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் முதன்முதல் புலப்படுகிறது; அப்பொழுதும் இது அரைகுறையாய்த்தான் கையாளப்பட்டது;
சொல்லின் முதலெழுத்து முறையையே ஆசிரியர்கள் நோக்கி வந்தனர். உதாரணமாக அறிவன், அடியான், அருள், அவன், அஃது, அமர் முதலிய சொற்களை, முதலெழுத்தாகிய அகரம் ஒன்றையே கருதி, அவற்றை ஒரு முறையில் நிறுத்தினர்; இந்த முறையை அகராதி நிகண்டில் காணலாம். இதனால் அகரத்தில் தொடங்கும் ஒரு சொல்லை, குறித்த ஓரிடத்தில் கண்டுபிடிப்பது எளிதாயில்லை. இரண்டாவது எழுத்தையும் நோக்கி சொற்களை முறைப்படுத்திய நூலொன்று சுமார் நூறு ஆண்டுகளின்பின் தோன்றியது; இதன் பெயர், 'அகராதி மோனைக் ககராதி எதுகை' என்பதாகும்; இம்முறையிலேயும் ஒரு சொல்லைக் குறிப்பிட்ட இடத்தில் கண்டுபிடிப்பதற்கு வழி இல்லாமலிருந்தது.
முதன்முதலில் சொற்களின் எழுத்துகள் அனைத்தையும் நோக்கி அகராதி அமைத்தவர்கள் ஐரோப்பியப் பாதிரிகளே ஆவர்; 17 ஆம் நூற்றாண்டு பிற்பகுதியில் ஐரோப்பியப் பாதிரியார்கள் தமிழ் நாட்டிற்கு வரத் தொடங்கினர்; தமிழ் மக்களுக்குக் கிறிஸ்தவ மத உண்மைகளைத் தமிழ் மொழியிலே போதிக்க வேண்டுமென இவர்கள் கருதினார்கள்; ஆகவே இவர்கள் தாமும் தமிழ் கற்க வேண்டுவது மிக அவசியமாய் முடிந்தது; கற்பதற்குக் கருவி நூலாக அகராதி ஒன்று இயற்ற வேண்டுவதும் இன்றியமையாததாயிற்று; எனவே, தமிழில் முதன்முதலில் அகராதி தோன்றுவதற்குக் காரணமாய் இருந்தவர்கள் இப்பாதிரிமார்களே ஆவர்.
அந்நிய மொழிக்கு உரியோராகிய பாதிரிமார்கள் அகராதி இயற்றப் புகுந்தது ஒரு நல்ல அதிருஷ்டம் என்றேதான் கூறவேண்டும்; ஏனெனில் சில நன்மைகள் இதனால் விளைந்தன. முதலாவது, பிற மொழிகளில் அகராதிகள் செப்பமாக அமைந்துள்ள முறையைத் தமிழ் அகராதிகளிலும் கையாள முடிந்தது; இரண்டாவது, பாதிரிகளுக்குத் தமிழ் புதிய மொழி ஆகையினாலே இவர்கள் தமிழிலுள்ள எல்லாச் சொற்களுக்கும் பொருளுணர வேண்டியவர்களாயிருந்தனர். ஆகவே கடின பதம் எளிய பதம் என்ற வேற்றுமையின்றி எளிய பதங்களுக்கும்கூடப் பொருள் விளங்க வேண்டுவது அவசிமாயிற்று: உதாரணமாக, நான், அது, வீடு முதலிய சொற்களையும் அகராதியில் விளக்கவேண்டியதாயிற்று; மூன்றாவது, நூல் வழக்கிலன்றி, சாதாரண மக்கள் பல பிராந்தியங்களிலும் வழங்கி வந்த சொற்களும் அகராதியில் இடம் பெற்றன. தமிழ் கற்ற பண்டிதர்கள் இவ்வழக்குச் சொற்களிற் பலவற்றை, இழிசனவழக்கு என்றேனும், வழுச்சொல் என்றேனும் ஒதுக்கி விடுவார்கள்; ஆனால் அந்நிய நாட்டுப் பாதிரியார்கள் இவ்வாறு ஒதுக்க முடியாது; அவர்கள் சாதாரண மக்களோடு, அதுவும் கல்வி பெறாத கீழ்த்தட்டு மக்களோடு, பழகி வந்தார்கள்; அம்மக்கள் பேசுவதை உணர்வதும் அவர்கள் வழங்கும் சொற்களை உணர்வதும் அவசியம். எனவே அவ்வழக்குச் சொற்களும் அகராதியில் இடம் பெற்றன; இவ்வாறாக, தமிழ் மக்களுள் பல இனத்தாரும் வழங்கும் சொற்கள் எல்லாம் அகராதிகளில் அமைவதற்கு இப்பாதிரிகளே வழிகாட்டியாய் இருந்தார்கள்.
1679 இல் தமிழ்ப் போர்த்துகீசிய அகராதி ஒன்று ப்ரொ இன்ஸா என்ற பாதிரியாரால் இயற்றப்பட்டது; ஆனால் இப்போது இது மறைந்துவிட்டது. இதனையடுத்துத் தோன்றியது பிரசித்தி பெற்ற சதுரகராதியாகும்; இதுவே தமிழில் முதன்முதலில் பிறந்த அகராதி என்று சொல்லலாம்; இதனை இயற்றியவர் தைரியநாதஸ்வாமி என்றும் வீரமாமுனிவர் என்றும் பெயர் வழங்கிய பெஸ்கி (Father Beschi) யாவர்.
----------------------------------------------
(படம் உதவி: இணையம்)