கிறித்துவர்களின்
பரப்புரையைப் பெரும்பாலான பிற மதத்தார் அறிந்திருப்பர்:
விலக்கப்பட்ட கனியை
ஆதாமும் ஏவாளும் உண்டமையால் பாவிகள் ஆனார்கள்; அவர்களது பாவம் அவர்தம் சந்ததியாகிய
எல்லா மனிதர்களையும் பற்றிக்கொண்டது. இரக்கங்கொண்ட கர்த்தர் பாவிகளை ரட்சிக்கத் தம்
மைந்தனாகிய ஏசுவை உலகுக்கு அனுப்பினார். ஏசுவின் மீது நம்பிக்கை வைக்கிறவர்கள் மட்டும்
பாவம் நீங்கப் பெறுவர்; மரித்தாலும் உயிர்த்தெழுவர்.
சில வினாக்கள் எழுகின்றன: யாவற்றையும் படைத்த கர்த்தர் தானே பாவக்கனி மரத்தையும்
படைத்தார்? அதை உண்டாக்குவானேன் அப்புறம் அதன் பழத்தைத் தின்னத் தடை விதிப்பானேன்?
அவர்கள் தடை மீறுவார்கள் என்பது அவருக்குத் தெரியாதா? குற்றம் புரியக்கூடிய சூழலை
உருவாக்கிவிட்டுக் குற்றஞ் செய்தவரைத் தண்டிப்பது ஒரு சதித்திட்டம் என எனக்குத் தோன்றுகிறது.
மனிதச் சட்டம் என்ன
சொல்கிறது? குற்றவாளிகளும் அவர்களுக்குத் துணை போனவர்களும் தண்டனைக்கு உரியவர்கள் என்கிறது;
கடவுளின் சட்டம் இதைவிட மேலானதாக அல்லவா இருக்கவேண்டும்? ஆதி மனிதனின் தவற்றுக்கு பிள்ளைகளையும்
சந்ததிகளையும் பொறுப்பாக்குவது என்ன நியாயம்?
யாரோ எங்கோ எப்போதோ
இழைத்த குற்றத்தால் நான் பாவியாம்! என்னய்யா இது வேடிக்கை! நான் அந்தப் பாவத்திற் பங்காளி
அல்ல! ஆதலால் கிறித்து மீது நம்பிக்கை வைக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை; இதுவரை வைக்கவில்லை;
இறுதிவரை வைக்கப் போவதும் இல்லை!