குமரி முனைக்குத் தெற்கில் பெருநிலப் பரப்பு இருந்ததாயும்
அதன் பெயர் தமிழில் குமரி கண்டம் எனவும் ஆங்கிலத்தில் லெமுரியா எனவும் அதைக் கடல் விழுங்கிவிட்டது
என்றும் சிலர் கூறி அதற்கு ஆதாரங்களுள் ஒன்றாக சிலப்பதிகாரத்தின் சில அடிகளைக் காட்டுவர்:
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மனை யடுக்கத்துக்
குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள
(சிலம்பு 11 : அடி 18-20)
இதன் பொருள்:
கூரிய வேலைத் தன்
மேல் (பாண்டியன்) எறிந்தமையால் கடலானது அவன் மீது பகைமை கொண்டு அவனது நாட்டில் இருந்த
பஃறுளி ஆற்றையும் குமரி மலையையும் மூழ்கடித்தது.
(பல துளி = பல்துளி
= பஃறுளி)
அது தவறான தகவல். குமரி கண்டம் மறைந்த பின்பு தோன்றியது
மூன்றாம் தமிழ்ச் சங்கம் என்பர். அப்போது அந்த ஆறு இருந்தது என்பது புறம் 9 ஆம் பாட்டால்
தெரிகிறது. அதில் புலவர் நெட்டிமையார், பாண்டியன் பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதியைக்
கீழ்க்காணுமாறு வாழ்த்துகிறார்:
வாழிய குடுமி
நன்னீர்ப் பஃறுளி
மணலினும் பலவே.
கருத்து – பஃறுளி
ஆற்றிலுள்ள மணலின் எண்ணிக்கையைக் காட்டிலும் அதிக எண்ணிக்கை கொண்ட ஆண்டுக்காலம் வாழ்க!
தம் காலத்தில் இருந்த ஓர் ஆற்றைத்தானே புலவர் வாழ்த்துவதற்குப்
பயன்படுத்தியிருப்பார்?
சரி, இப்போது இருக்கிறதா? இருக்கிறது. தற்காலப்
பெயர் பறளியாறு. கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாற்றுக்கு அருகிலுள்ள மகேந்திர மலையில்
உற்பத்தியாகி இறங்கி வருகிறது. மாத்தூர் தொட்டிப் பாலத்தின் கீழ்ப் பகுதி வழியாக வரும்
அந்த ஆறு அருவிக்கரை வழியே திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் வளாகத்தைத் தொட்டபடி
மூவாற்றுமுகத்தில் கோதையாற்றுடன் இணைகிறது.
தொட்டிப் பாலம் என்பது மாத்தூர் பகுதியிலுள்ள கணியான்பாறை
என்ற மலையையும் கூட்டுவாயுப் பாறை என்னும் குன்றையும் இணைத்துப் பறளியாற்று நீரைக்
கொண்டு செல்வதற்காக இரு மலைகளுக்கும் நடுவில் 1971-இல் கட்டப்பட்ட பாலம்.
பஃறுளியாறு இன்று வரை மக்களுக்கு நீர் வழங்கிக்கொண்டிருக்கிறது.
அதைக் கடல் கொள்ளவில்லை. சிலப்பதிகார ஆசிரியர் தம் காலத்து நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
இலக்கியம் கூறுவது சான்றாகக் கொள்ளத்தக்கதல்ல.
&&&&&&&