Monday, 14 May 2012

மன்னரின் கவிதை




( பிரான்சில் 17 ஆம் நூற்றாண்டில் பதினான்காம் லூய் மன்னன் ஆண்டபோது நிகழ்ந்த சுவையான நிகழ்ச்சிகள் சிலவற்றை மதாம் த செவிஞே என்ற பெண்மணி பதிந்திருக்கிறார். கீழ் காணும் செய்தி 1- 12 -1664 இல் எழுதப்பட்டது. இனி மொழிபெயர்ப்பு)



கொஞ்ச காலமாய் அரசர் கவிதைகள் இயற்றுவதற்குக் கடுமையாய் முயல்கிறார். 

ஒரு நாள் சிறு கவியொன்றை எழுதினார்; அது அவருக்கே பிடிக்கவில்லை. 

மார்ஷல் கிராமோனிடம் அதைக் காட்டி, " மார்ஷல், இதை வாசியுங்கள்; இவ்வளவு மட்டமான கவிதை யொன்றை நீங்கள் கண்டதுண்டா என்று பாருங்கள். அண்மைக் காலமாக நான் கவிகளை விரும்புகிறேன் என்பதால் பல தரப்பட்ட கவிகளைக் கொண்டுவருகிறார்கள்" என்றார். 

அதை வாசித்துப் பார்த்த மார்ஷல், " நீங்கள் எல்லாவற்றையும் மிகச் செம்மையாய் மதிப்பிடுகிறீர்கள்; உண்மையிலேயே இதைப் போன்ற மடத்தனமான, ஏளனத்துக்கு உரிய ஒரு கவிதையை நான் இதுவரை படித்ததே இல்லை" என்றார். 

மன்னர் சிரித்துக்கொண்டே, " இதை இயற்றியவர் ஒரு தற்பெருமை கொண்ட முட்டாள் என்பது மெய்யல்லவா?" என்று கேட்டார். 

"அவரை வேறு விதமாய் அழைத்தல் பொருந்தாது" 

" நன்று, இவ்வளவு வெளிப்படையாய் நீங்கள் அதைப் பற்றி என்னிடம் கூறியதற்கு மகிழ்ச்சி; அதை எழுதியவன் நான் தான். 

"ஆ! அவசரப்பட்டுவிட்டேன். அதைத் திருப்பித் தாருங்கள்; நான் சரியாய்ப் படிக்கவில்லை" 

" வேண்டாம், மார்ஷல், முதல் உணர்ச்சியே எப்பொழுதும் இயற்கையானது"  

மார்ஷலின் நிலையை எண்ணி அரசர் பெரிதாய்ச் சிரித்தார். வயதான ஓர் அதிகாரிக்குச் செய்யக்கூடிய மிக மோசமான கொடுமை இதுவே என்பது அனைவருடைய கருத்துமாகும். 

சிந்திப்பதை எப்போதும் விரும்புகிற நானோ, வேந்தர் இதுபற்றி எண்ணிப் பார்க்க வேண்டும் என்றும் உண்மையைத் தெரிந்து கொள்ளமுடியாத எவ்வளவு நெடுந்தொலைவில் அவர் இருக்கிறார் என்பதை அவர் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன்.

Thursday, 10 May 2012

அரசனை நம்பி.....


 

நாம் தவறாகப் புரிந்து கொண்டுள்ள பழமொழி, ''அரசனை நம்பி புருஷனைக் கைவிடாதே'' என்பது. 

ஒரு மனைவிக்கு அறிவுரை சொல்வதாக அமைந்துள்ள இதன் விரிவான அர்த்தமாகக் கொள்ளப்படுவது என்ன? 

''ஏ பெண்ணே! அரசன் எல்லா வளங்களும் நிரம்பியவன்; அதிகாரமும், ஆர்ப்பாட்டமும், ஆடம்பரமும் உடையவனாய்ப் பரிவாரங்கள் புடைசூழப் பெருமிதத்துடன் வாழ்கிறான். அவனோடு ஒப்பிட்டுப் பார்த்தால், உன் கணவன் வசதிக் குறைவுடன் எளிய வாழ்வு வாழ வேண்டிய கட்டாயத்தில் இருப்பவனாய்த் தோன்றும். ஆகையால், நீ ஏக்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டு சோகத்துடன் காலம் தள்ளாதே. அரசனை அணுகும் வாய்ப்புக் கிட்டினால் அவனுடைய ஆசை வார்த்தைகளை நம்பிப் புருஷனைப் புறக்கணித்து விடாதே!'' 

இப்படி அர்த்தப்படுத்திக் கொண்டுதான் ஒரு கவிஞர் பழைய திரைப்படம் ஒன்றில் பாடல் புனைந்திருந்தார்.


"அரசனைப் பாத்த கண்ணுக்குப்

புருசனைப் பாத்தா புடிக்காது

அரசனைப் பத்தித் தெரிஞ்சுக்கிட்டா

புருசனை நெஞ்சம் மறக்காது."

என்பவை அந்தப் பாட்டின் சில அடிகள். 

இப்படிப் பொருள் கொள்வது, பெண்ணை இழிவுபடுத்துகிறது; அவளின் கற்பை ஐயப்பட வைக்கிறது; கணவனுக்குத் துரோகம் செய்யக் கூடியவள் அவள் என்ற கருத்தைத் தருகிறது. 

ஆனால், பழமொழியின் உண்மைப் பொருள் தெரிந்தால் மேற்கண்ட இழி கருத்து நீங்கும். என்ன ஐயா.. அந்த மெய்ப்பொருள் என்றுதானே கேட்கிறீர்கள்? இதோ சொல்கிறேன். 

இங்கே அரசன் என்பது மன்னனைக் குறிக்கவில்லை; மரத்தைச் சுட்டுகிறது. சில ஊர்களின் பெயர்களை (நாகப்பட்டினம்-நாகை, கோயம்புத்தூர்-கோவை ) என்று சுருக்கிச் சொல்வது போல மரப் பெயர்களையும் சுருக்குவது மரபு. 

ஆல மரம் - ஆல்

வேல மரம் - வேல் (ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி)

வேப்ப மரம் - வேம்பு

புங்க மரம் - புங்கன்

ஒதிய மரம் - ஒதியன் (ஒதியன் பெருத்தாலும் உத்தரத்துக்கு ஆகாது)

அரச மரம் - அரசன்


குழந்தைப்பேறு இல்லாத மனைவி, அரச மரத்தைப் பல நாள் சுற்றினால் கருத்தரிக்கும் என்பது நம்பிக்கை. 

''அரச மரத்தைச் சுற்றியவுடன் அடி வயிற்றைத் தொட்டுப் பார்த்துக் கொண்டாளாம்'' என்ற பழமொழி அவசரக்காரி ஒருத்தியைக் கிண்டல் செய்கிறது. 

இப்போது உண்மைப் பொருளை ஊகித்திருப்பீர்களே! உங்கள் ஊகம் சரி. அரச மரத்தைச் சுற்றினால் போதும், குழந்தை உண்டாகிவிடும் என்று நம்பிக் கணவனின் அருகாமையை தவிர்த்து விடக்கூடாது என்றுதான் பழமொழி எச்சரிக்கிறது.


(நிலாச்சாரலில் வெளிவந்த என் கட்டுரை)
(படம் உதவி : இணையம்)

Thursday, 3 May 2012

எகிப்திய கல்வெட்டு ஒன்றிலிருந்து...




ஒரு முதிய அலுவலர் தம் மகனுக்கு அறிவுரை கூறுவதாக அமைந்துள்ள

கல்வெட்டொன்று அக்கால எகிப்திய  தொழில்களையும், தொழிலாளர்களின்

 நிலைமையையும் அறிய  உதவுகிறது: 

"உழவரது நிலையை எண்ணிப் பார்த்ததில்லையா நீ? விளைச்சல் வரியை

வசூலிப்பவர் கருமமே கண்ணாய்ச் செயல்படுவார். அவருக்கு

உதவியாளராய்க் கையில் கம்புடன் சிலர், பனங்கருக்குடன் வேறு

சிலர். "கொடு, கொடு. தானியங் கொடு!" என்று அவர்கள் அதட்டுவார்கள்.

உழவரால் தரமுடியவில்லையெனில் அவரைக் கீழே தள்ளிக் கை

கால்களைக் கட்டி வாய்க்காலுக்கு இழுத்துப் போய்த் தலைகீழாய் நீரில்

அமிழ்த்துவார்கள். 

கைத்தொழிலாளர் பாடும் மேம்பட்டதல்ல. தீயின் அருகில் உழைக்குங்

கொல்லரின் கைகள் முதலைத் தோலால் பண்ணப்பட்ட பொருள்கள்

போலக் கரடு முரடாக இருக்கின்றன. கல் உடைப்பவர் விடியலிலேயே

குந்திவிடுகிறார் வேலை தொடங்க; அவருடைய முழங்கால்களும்

முதுகெலும்புகளுஞ் சீர்கெடுகின்றன. முடி வெட்டுபவர் நாள் முழுதும்

மழிக்கிறார்; சாப்பிடும் நேரம் மட்டுந்தான் ஓய்வு. கொத்தரோ வெட்ட

வெளியில் நின்றும் தூண்களிலும் உத்தரங்களிலும் தொற்றிக்கொண்டும்

வேலை செய்வதால் கைகள் காய்ப்பு ஏறிவிடுகின்றன; உடைகள்

அலங்கோலம் அடைகின்றன; ஒரு நாளில் ஒரு தடவை மட்டுமே

குளிக்கிறார். நெசவாளி வீட்டை விட்டு நகர்வதில்லை. அவருடைய

முழங் கால்கள் வயிற்றில் முட்டுகின்றன. செய்தித் தூதர்

வெளிநாடுகளுக்குப் புறப்படுகிறபோது உயில் எழுதிவிட வேண்டியதுதான். 

காட்டு விலங்குகளும் பகைவர்களும் எதிர்ப்படுவார்களே! எகிப்துக்குத்

திரும்பி வந்தால்கூட அடுத்த கணமே மறு பயணங் கிளம்ப வேண்டி

வரும். சாயந்தோய்ப்பவரின் கைகள் அழுகிய மீனின் வாசனை வீசுகின்றன;

அவருடய கண்கள் களைப்பால் குழி விழுந்து விடுகின்றன. ரொட்டி

சுடுபவர் ரொட்டிகளை அடுப்புக்குள் வைக்கும்போது தலையை உள்ளே

நுழைக்கிறார்; அவருடைய கால்களைப் பிடித்திருக்கிற மகன் கொஞ்சம்

பிடியைத் தளர்த்தினால் தந்தை தீயில் விழுந்து விடுவார். 

ஆதலால் கல்வியைக் கற்றுக்கொள். எல்லாத் தொழில்களையும் நான்

சீர்தூக்கிப் பார்த்துவிட்டேன். படிப்பைவிட மேலானது எதுவுமில்லை."

***********************************************************************************************

ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்வியின் பெருமையை உணர்த்தும் வரிகள். ('மறைந்த நாகரிகங்கள்' நூலிலிருந்து)

சமீபத்தில் வெளிவந்த என்னுடைய ஆறாவது நூலாகிய 'மறைந்த நாகரிகங்கள்' புத்தகத்தைத்  தரவிறக்கம் செய்து படிக்க விரும்புபவர்கள் இங்கே சொடுக்கவும்.

Tuesday, 1 May 2012

அதிர்ச்சி வைத்தியம் - பிரஞ்சு நகைச்சுவை நாடகம்




( 17 ஆம் நூற்றாண்டு பிரஞ்சு நகைச் சுவை நாடக ஆசிரியர் மொலியேர் இயற்றிய " கற்பனை நோயாளி " என்னும் நாடகத்தில் ஒரு காட்சி; தமிழ் மன்றத்துக்காக நான் மொழி பெயர்த்தது )


திரு. அர்கான் தம்மை நோயாளியாக நம்பிக்கொண்டு டாக்டர் புயிர்கோனிடம் மருத்துவம் செய்துகொள்கிறார். அந்த டாக்டர்மீதும் பொதுவாய் மருத்துவத்தின்மேலும் அர்கானுக்கு வெறுப்பு ஏற்படுத்துவதற்காக அவருடைய வேலைக்காரி துவானேத் ஒரு மருத்துவர் போல் வேடமிட்டு அவரிடம் வருகிறாள். இருவரும் உரையாடுகின்றனர்.


துவானேத் - ஒரு புகழ் மிக்க நோயாளியாகிய உங்களைப் பார்ப்பதற்கு எனக்கு ஏற்பட்ட ஆர்வத்தை நீங்கள் தவறாகக் கருத மாட்டீர்கள்; எங்கும் பரவி யுள்ள உங்களது கீர்த்தி தான் எனக்கிந்த உரிமையைத் தந்தது. 

அர்கான் - மிக்க நன்றி.  

துவானேத் -- என்னை உற்றுப் பார்க்கிறீர்கள் என்பது தெரிகிறது. எனக்கு என்ன வயது இருக்கும் என்று நினைக்கிறீர்கள் 

அர்கான் - மிஞ்சி மிஞ்சிப் போனால் 26 அல்லது 27 . 

துவானேத் --அஹஹஹா! எனக்கு வயது 90 . 

அர்கான் - 90? 

துவானேத் - இவ்வளவு இளமையும் வலிமையும் என் மருத்துவக் கமுக்கங்களின் ஒரு விளைவு தான். 

அர்கான் - மெய்யாகவே 90 வயதுக்கு நீங்கள் அழகிய இளங்கிழவர் தான். 

துவானேத் -- நான் ஒரு மருத்துவப் பயணி. என் திறமைக்கு ஏற்ற மற்றும் பேர் பெற்ற சிக்கல்களை நாடிஎன்னை வேலை வாங்கத் தகுதி வாய்ந்த நோயாளிகளைத் தேடி,  மருத்துவத்தில் நான் கண்டுபிடித்துள்ள அரும் பெரும் கமுக்கங்களைச் சோதித்துப் பார்ப்பதற்காக,  ஊர் ஊராகநாடு நாடாகச் செல்பவன். சாதாரண அற்ப நோய்கள்ஒன்றுமில்லாத கீல்வாதம்ஒற்றைத் தலை வலிகளோடு நான் விளையாட விரும்புவதில்லை;  மூளையைத் தாக்கும் தொடர் காய்ச்சல், கடுமையான வாந்தி பேதி கொடிய மகோதரம்நெஞ்சு வீக்கத்துடன் கூடிய,  சிக்கல் மிக்க நுரையீரல் பிணிஇவையே எனக்குப் பிடித்தவைஇவற்றையே நான் முறியடிக்க முனைபவன்.  

அதனால்ஐயா,  நான் விரும்புவது என்ன வென்றால்நான் சொன்ன அந்த எல்லா நோய்களும் உங்களைப் பீடித்திருக்க வேண்டும் என்பதும் நீங்கள் சகல மருத்துவர்களாலும் கை விடப்பட்டு சாவுப் படுக்கையில் இருக்க வேண்டும் என்பதும் தான்: அப்போது தானே என் மருந்துகளின் அருமையையும் உங்களைக் குணப்படுத்த எனக்குள்ள ஆர்வத்தையும் நான் உங்களுக்குப் புலப்படுத்த முடியும்? 

அர்கான் - என்மீது உங்களுக்குள்ள நல்லெண்ணங்களுக்கு நான் உங்களுக்குக் கடமைப் பட்டுள்ளேன்,  டாக்டர்.

துவானேத் - நாடியைக் காட்டுங்கள். உம்! ஒழுங்காய்த் துடி! சரியான முறையில் உன்னை நான் துடிக்க வைப்பேன்! இந்த நாடி முரண்டு பண்ணுகிறதே! உனக்கு இன்னம் என்னைத் தெரியவில்லை என்பது எனக்குப் புரிகிறது. உங்கள் மருத்துவர் யார்? 


அர்கான் - டாக்டர் புயிர்கோன். 

துவானேத்- பெரிய மருத்துவர்கள் பற்றிய என் பட்டியலில் அவர் பெயர் இல்லை. உங்களுக்கு என்ன நோய் என்றார்? 


அர்கான் - கல்லீரல் கோளாறு என்றார்; சிலர் மண்ணீரல் பாதிப்பு என்றனர். 

துவானேத் - எல்லாரும் முட்டாள்கள். உங்களுக்கு நுரையீரல் நோய். 

அர்கான் - நுரையீரலா?

துவானேத் - உங்களுக்கு என்னென்ன செய்கிறது? 

அர்கான் - அடிக்கடி தலை வலி.

துவானேத் - சரிதான்; நுரையீரல்!  

அர்கான் - கண்ணை ஒரு திரை மறைப்பது போல் சில சமயம் தோன்றுகிறது.  

துவானேத் - நுரையீரல்! 

அர்கான் - அவ்வப்போது நெஞ்சு வலி. 

துவானேத் - நுரையீரல்! 

அர்கான் - ஒரே களைப்பு!  

துவானேத் - நுரையீரல்! 

அர்கான் - எப்போதாவது குடல் வலி போல வயிற்றில் வலி. 

துவானேத் - நுரையீரல்! உணவை விருப்பத்துடன் உண்கிறீர்களா 

அர்கான் - ஆம், டாக்டர்.  

துவானேத் - நுரையீரல்! மது பருகுவது உங்களுக்குப் பிடிக்கிறதா? 

அர்கான் -- ஆமாம், டாக்டர். 

துவானேத் - நுரையீரல்! சாப்பாட்டுக்குப் பின்பு லேசான தூக்கம் வருமா? 

அர்கான்- வரும், டாக்டர். 

துவானேத் - நுரையீரல், நுரையீரல் ! உங்கள் டாக்டர் என்ன உணவு உண்ணச் சொன்னார்? 

அர்கான் - கஞ்சி. 

துவானேத் - மண்டு! 

அர்கான் - பறவைக் கறி, கன்றுக் கறி. 

துவானேத் - மண்டு! 

அர்கான் - சூப்புமுட்டை,  பிளம் பழம். 

துவானேத்- மண்டு! 

அர்கான் - முக்கியமாக திராட்சை மதுவில் நிறைய நீர் கலந்து குடிக்கச் சொன்னார். 

துவானேத் -- மண்டு, மக்கு, முண்டம்! திராட்சை மதுவை நீங்கள் சுயமாகப் பருக வேண்டும். நீர்த்துப் போயிருக்கிற உங்கள் ரத்தத்தைக் கெட்டிப்படுத்த நிறைய மாட்டுக் கறி, பன்றிக் கறி, கோதுமை, அரிசி உண்ண வேண்டும். ரத்தத்தில் பசை உண்டாக்க முந்திரிப் பருப்பும் பிஸ்கட்டும் தின்னுங்கள். இந்த ஊரில் நான் இருக்கிற வரை அடிக்கடி வந்து பார்ப்பேன். 

அர்கான் - மிக்க நன்றி, டாக்டர். 

துவானேத் - என்ன இது? அந்தக் கையை வைத்துக்கொண்டு இருக்கிறீர்களே! 

அர்கான் - என்ன சொல்கிறீர்கள்? 

துவானேத் - நீங்கள் நானாய் இருந்தால் அந்தக் கையை உடனே வெட்டச் செய்திருப்பேன். 

அர்கான் - ஏன்? எதற்காக 

துவானேத் - எலலா உணவுகளையும் அது தன் பக்கமே இழுத்துக்கொள்கிறது, இந்தப் பக்கத்துக்குப் பயன் ஏற்படுவதைத் தடுக்கிறது. 

அர்கான் - ஆனால் என் கை எனக்குத் தேவை. 

துவானேத் - உங்கள் வலக் கண்கூடச் சரியில்லை; அதைத் தோண்டிவிட வேண்டும். 

அர்கான் - கண்ணைத் தோண்டுவதா 

துவானேத் - அது மற்ற கண்ணுக்கு இடையூறாக இருக்கிறது. 

அர்கான் - இருந்துவிட்டுப் போகட்டும். 

துவானேத் - போய் வருகிறேன்.  

( டாக்டர் போன பின்பு )  

அர்கான் - நல்ல சிகிச்சை! ஒற்றைக் கண்ணனாயும் முடவனாயும் மாற்றும் அறுவை! 

****************************************************************