Tuesday, 29 May 2012

சொஃபுக்ளீசின் எலெக்த்ரா -1 (ஆங்கில மூலத்திலிருந்து)





( கன்னி எலெக்த்ரா தன்னைத் துன்புறுத்தும் தாயிடம் )



தாயா ! சிறைக் காவலர் என்பது பொருந்தும், 

என்மீது நீதிணிக்கும் அடிமைத் தனத்தையும் 

உன்னிட மிருந்தும் உன்துணைவ ரிடமிருந்தும் 

நான்கேட்க வேண்டியுள்ள வசவுகளையும் நினைத்தால். 

ஏசலாம் என்னை எண்ணப் படியெலாம். 

இழிந்தவள், கொடூரி, நாண மில்லாள், 

இவ்வா றெல்லாம் இருக்கிறேன் என்றால் 

இதுவே சான்று உன்மகள் எனற்கு. 

( என்ற்கு - எனல் + கு = என்பதற்கு )

(படம் உதவி; இணையம்)

Friday, 25 May 2012

யூரிப்பிடீசின் எலெக்த்ரா





( எலெக்த்ரா அவல வாழ்க்கையில் அல்லல் உற வேண்டும் என்ற தீய நோக்கத்தில் அவளை ஒரு பரம ஏழைக்கு மணம்  முடித்தாள் தாய்; எனினும் ஊருக்கு வெளியே, குடிசையில், நல்ல மனைவியாய் வாழ்ந்தாள் அவள். ஒரு நாள்  ஒரேஸ்த்தஸ் வந்து, தமக்கையுடன் கலந்தாலோசித்து, தெய்வத்தை வழிபட எகிஸ்த்தஸ் வருவதை அறிந்துதிட்டமிட்டுக் கொன்று, தூக்கிக் கொணர்ந்த பிணத்தை நோக்கி எலெக்த்ரா  கூறியது)



என்தாயில் ஒழுக்கமுள்ள ஒரு மனைவியை அடையலாம் 

என்று கற்பனை செய்தநீ ஒருமுட்டாள். 

ஆ ! பிறனுடைய துணைவிமேல் கண்வைத்து  

அவளை வசப்படுத்தி மணந்தவன், 

தனக்கு விசுவாசமாக இருப்பாள் 

முதல் கணவனுக்கு விசுவாசமாய் இல்லாதவள் 

என நம்பினால் அவனொரு மடையன். 

பரிதாப வாழ்வு வாழ்ந்தாய்நீ, அதை உணராமலே. 

பழிகாரியை மணந்தாய் என்பது உனக்குத் தெரியும்; 

மோசக்காரன் நீ என்பது அவளுக்குத் தெரியும். 

இருவரும் குற்றவாளிகள், ஒருவரால் மற்றவர் கெட்டீர்.


**************************************************************


யூரிபிடீசின் எலெக்த்ரா (தொடர்ச்சி)


( க்ளித்தெம்நேஸ்த்ராவைத் தந்திரமாய் வரச் செய்தனர். அவள் வருவது தெரிகிறது)


ஒரேஸ்தஸ் - அன்னை..நாம் என்ன செய்யவேண்டும்? கொல்வது? 

எலெக்த்ரா - தளர்கிறாயா உள்ளம் தாயைப் பார்த்து 

ஒரேஸ்தஸ் - இல்லை, ஆனால் கொல்வதா பாலூட்டி வளர்த்தவளை? 

எலெக்த்ரா  - நம் தந்தையைப் படுகொலை செய்தவளை. 

ஒரேஸ்தஸ்- அப்பொல்லோ, எத்தகைய தவறு இழைத்தார் உன் அருள்வாக்குக்காரர் 

எலெக்த்ரா  - அப்பொல்லோ பிழை புரிந்தால் வேறு யார் ஞானி? 

ஒரேஸ்தஸ் - ஆனால் பெற்றவளைக் கொல்லச் செய்வது , இயற்கைக்கு மாறாக? 

எலெக்த்ரா  - எப்படி அது தடை யாகும் சொந்தத் தந்தைக்குப் பழி வாங்க? 

ஒரேஸ்தஸ் - தாயைக் கொன்றவன் என்ற வசை வரும் , நிரபராதி எனக்கு. 

எலெக்த்ரா  - தெய்வக் குற்றம் ஆகும், தந்தைக்கு உதவாவிட்டால். 

ஒரேஸ்தஸ்- அன்னையின் குருதிக்கு நான் விலை கொடுக்க நேரும். 

எலெக்த்ரா  - என்ன விலை தந்தைக்கு, பழி தீர்க்காவிடில்? 

ஒரேஸ்தஸ் - கொல்லச் சொன்னது ஒரு பிசாசு, கடவுளின் பெயரில். 

எலெக்த்ரா  - புனித முக்காலியில் அமர்ந்தா?  

ஒரேஸ்தஸ் - ஒரு நாளும் ஒப்பமாட்டேன், அந்த அருள்வாக்குக்காரர் அறம் விரும்பி என்பதை. 

எலெக்த்ரா  - ஆக, கோழையாக மாறுவாய் , வீரனாக நீடிக்கப்போவதில்லை. 

ஒரேஸ்தஸ் (நீண்ட யோசனைக்குப் பின்பு) - அப்படியானால் சரி, எப்படிச் செய்வேன்? இவளுக்கும் அதே பொறியை வைப்பதா? 

( அவள் வந்ததும் இருவரும் சேர்ந்து மாய்க்கின்றனர்.)

(படம் உதவி: இணையம்)

எலெக்த்ரா




கிரேக்க இதிகாசம், இலியட், எலெக்த்ரா நாடகத்துக்கு அடிப்படை. 

அதன் சுருக்கம்:

மன்னர் அகமெம்நோனுக்கு எலெக்த்ரா , கிரிசேர்த்தமிஸ் என்ற இரு புதல்விகளும் ஒரேஸ்த்தஸ் என்னும் மகனும் இருக்கின்றனர்.

( இஃபிஜெனியா என்ற மகள் தெய்வத்துக்குப் பலி கொடுக்கப்பட்டுவிட்டாள் )

அரசரது தலைமையில் கிரேக்கப் படை ட்ரோய் நகரத்தாரை எதிர்த்துப் போரில் ஈடுபட்டிருந்தது;

அது நெடுங்காலம் நீடிக்கவே, அவரது மனைவி க்ளித்தெம்நேஸ்த்ரா, எகிஸ்த்தஸ் என்பவனை  மணந்துகொண்டாள். வெற்றிக் கனி கொய்து அவர் திரும்பி வந்தபோது,  மனைவியும் புதுக்கணவனும், முன் திட்டப்படி அவரைக் கொன்றுவிட்டனர்.

தம்பி பழி வாங்க வேண்டும் என்பது எலெக்த்ராவின் விருப்பம். சிறுவனாகிய அவனது உயிருக்கு அன்னையால் நேரக்கூடிய ஆபத்தைத் தவிர்ப்பதற்காக அவன் வேறு ஊரில் பத்திரமாய் வளர்வதற்கு அவள் கமுக்கமாய் ஏற்பாடு செய்தாள். தக்க வயதில் அவன் வந்து வினை முடிக்க வேண்டும்.

இரு நாடகங்களிலிருந்தும் சில காட்சிகளை, ஆங்கில வழி, மொழி பெயர்த்து வழங்குவேன்.

Monday, 21 May 2012

கிரேக்கத் தொன்மம்




உன்னத தொன்மம் ( புராணம் ) கிரேக்கர்க்கு உண்டு. கிறித்துவம் பரவுவதற்கு முன்பு அவர்கள் எண்ணற்ற தெய்வங்களைத் தொழுதுவந்தனர். தலைமைக் கடவுள் சீயஸ்; இவரது மனைவி ஹீரா, மகன் அப்பொல்லோ ( சூரியன் ). இவர்களுக்கும் வேறு முக்கிய சாமிகளுக்கும் இருப்பிடம் ஒலிம்ப்பியா மலை, சிவன் குடும்பத்துக்குக் கைலாய மலை போல. 

கடவுள்களுக்கு இடையே நட்பு, போட்டி, பூசல், பொறாமை இருந்தன; மனிதர்களின் நடவடிக்கைகளில் தலையிட்டு உதவதும் உண்டு, உபத்திரவம் புரிவதும் உண்டு. 

தெய்வங்களின் செயல்களை அடிப்படையாய்க் கொண்டு கதைகள் எழுதினார்கள்; ஒவ்வொரு பிரதான கடவுளின் சாகசங்களையும் விவரிக்கிற சுவையான கதைகள் பிறந்தன. 

கர்ணன் போன்று தெய்வ - மனித உறவில் உதித்த அசகாயசூரர் சிலரது வாழ்க்கையும் அவரது மகத்தான சாதனைகளும் தொன்மத்தில் இடம் பெற்றன. அவருள் ஒருவனான ஹெர்குலிஸ் சீயசுக்கும் மானிடப் பெண் அல்க்மெனுக்கும் புதல்வனாய்த் தோன்றி அரும் பெரும் செய்கைகளுக்குக் கர்த்தா ஆனான். புகழ் மேம்பட்ட அவனைப் பற்றிப் பலர் படித்திருக்கலாம். 

கிரேக்கரின் ஒப்புயர்வற்ற கற்பனைச் செழுமை விளைவித்த ருசிகரத் தொன்மப் படைப்புகள் தலைமுறை தலைமுறையாய், ஐரோப்பியக் கலைஞர்களின் உள்ளம்கவர் கருக்களாகி விழுமிய வண்ண ஓவியங்கள் தீட்டப்படக் காரணமாய் இருந்துள்ளன. 

அவை பல நாட்டு அருங் காட்சியகங்களை அணி செய்கின்றன. பாரிசிலுள்ள லூவ்ர் ( Louvre ) அகத்தில் காட்சி அளிப்பவற்றுள் சில:


ஒலிம்ப்பியா, அப்பொல்லோவும் கவிஞனும், பர்னாஸ் மலை, வீனசின் குளியல், பக்குசின் வெற்றி, அப்பொல்லோவும் மர்சியாசும், ஆண்ட்ரோமீடாவின் மீட்பு. 

தெய்வங்களையும் தொன்ம நிகழ்ச்சிகளையும் கிரேக்கச் சிற்பிகள் சிலைகளாய்ச் செதுக்கினார்கள். வெண் சலவைக் கல்லால் ஆன அந்த அற்புத, வியக்கவைக்கும், தத்ரூப உருவங்கள் மாதிரி, வேறெந்த நாட்டினரும் புனையவில்லை என்பது மிகையல்ல. 

லூவ்ரின் ஒரு தனிப் பகுதியில் கண்ணுக்கு விருந்து அளிக்கும் அந்தக் கலைநேர்த்தி மிக்க அழகுப் பதுமைகளைப் பார்ப்பவர்கள் 

கண்டோம் கண்டோம் கண்டோம்

கண்ணுக்கு இனியன கண்டோம்

கண்டறி யாதன கண்டோம்

என்றெண்ணிக் களிப்பது திண்ணம். 

(ஒலிம்பியாவில் இருந்த சீயஸ் சலவைக்கல் சிலையும் ரோட்ஸ் தீவில் 30 அடி உயரமாய் எழுப்பப்பட்டுக் கம்பீரமாய் வீற்றிருந்த அப்பொல்லோவின் வெண்கலச் சிலையும் கால தேவனால் சிதைக்கப்பட்டுவிட்டன.)