Thursday, 7 March 2013

முற்காலப் பயணம்


 

பேருந்து தோன்றாத, மிதிவண்டிகூட அரிதாய்த் தென்பட்ட, எண்பது ஆண்டுக்கு முந்தைய காலத்தில், அன்றாட வேலைகளுக்கு மக்கள் நடந்தே சென்றார்கள்; பத்து கிலோமீட்டருக்குள் அலுவல் முடிந்துவிடும். 

( சாலை விபத்து நிகழ இயலாத காலம்!) 

செல்வர்கள் தத்தம் தரத்துக்கு ஏற்ப, சொந்த ஒற்றைமாட்டு வண்டி, இரட்டைமாட்டு வண்டி, குதிரை வண்டி பயன்படுத்தினர். 

வாடகைக்கு மாட்டு வண்டி அல்லது குதிரை வண்டி கிடைத்தது; அவசரத் தேவைக்கும் நோயாளிகளையோ இயலாதவர்களையோ ஏற்றிச் செல்லவும் அது உதவிற்று. சுற்றுலா , அலுவல் நிமித்தப் பயணம் முதலியவை பற்றிய கற்பனைகூட யார்க்கும் உதிக்கவில்லை. நீண்ட தொலை போகவேண்டிய கட்டாயம் எப்போதாவது ஏற்பட்டால் தொடர்வண்டி (ரயில்) கைகொடுத்தது. 

புனிதத் தலங்களுக்குக் கூட்டமாய்க் கூடிப் பாத யாத்திரை செய்தனர். 

அக்கம்பக்க ஊரில் பெண் அல்லது மாப்பிள்ளை பார்க்க முதியோர், சிறுவர் உட்படச் சில குடும்பங்கள் சேர்ந்து பயணிப்பது எப்படி? மாட்டு வண்டிகளை ஏற்பாடு செய்துகொள்வர். 

( இப்போதுபோல் இரண்டொருவர் போய்ப் பார்த்தோ, யாரும் பார்க்காமலோ, திருமண முடிவு செய்தால் உறவினர்களின் பகை உண்டாகும்) 

வண்டிப் பயணம் வசதி அற்றது: கால்களை மடக்கி முடக்கி உட்காரவேண்டும். சாலை உணவகம் முளைக்காத காலம் ஆகையால் உணவும் குடிநீரும் வாழையிலை ஏடுகளும் கொண்டு செல்வார்கள்; புளிச் சோறும் தயிர்ச் சோறும் தான் மெனு, மாறாத மெனு. வண்டிகள் வரிசையாகப் போகும்; உரையாடிக் கொண்டே பயணிப்பார்கள். 

சாப்பாட்டு நேரம் வந்துவிட்டதா? குளம் அல்லது ஆறு கண்ட இடத்தில் இறங்குவார்கள். (அப்போதெல்லாம் ஏராள நீர்நிலைகள் மக்களின் தேவையை நிறைவு செய்தன; நாளடைவில் அவை கட்டடங்களாய்ப் புதுப் பிறவி எடுத்துவிட்டன) 

ஆளுக்கொரு இலையைக் கையில் தாங்கிக்கொண்டு அதில் பரிமாறும் உணவை நின்றபடியே உண்பர். (கையேந்தி பவன் அப்போது தோன்றியதுதான்) 

எச்சில் இலைகளை எங்கே வேண்டுமானாலும் எறிந்துவிட்டுக் குளத்து / ஆற்று நீரில் கை அலம்பிக்கொள்வர். இது அக்காலப் பிக்நிக்; இதற்கெனத் தனியாய்த் திட்டமிடல் இல்லை; பயணத்தின் இடையே இடம்பெறும். 

( தாள், ப்லாஸ்டிக் முதலியவற்றைக் கண்ட இடத்தில் வீசும் தற்காலப் பழக்கம் வாழையடி வாழையாய்த் தொடர்கிறது. குறை கூறக் கூடாது, நாம் திருந்தவில்லை, முன்னேறவில்லை என்று; முன்னோர்க்கு மதிப்பளித்து அவர்களின் வழியைப் பின்பற்றுகிறோம்.)

Friday, 1 March 2013

புதுச்சேரி மாநிலம்


 
என் மாநிலம் பற்றிய சில செய்திகளை இங்கே பதிகிறேன். 

மாநிலம் என்கிறோமே தவிர அதிகார பூர்வப் பெயர் யூனியன் பிரதேசம் (Union Territory )  இந்தியாவின் ஏழு யூனியன் பிரதேசங்களுள் புதுச்சேரியும் ஒன்று. யூனியன் பிரதேசத் தலைவர் துணைநிலை ஆளுநர் எனப்படுகிறார்.  

யூ. பிரதேசங்களில் சட்டப் பேரவை, சட்ட மன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் உள்ளனர்; ஆனால் சட்டம் இயற்றும் அதிகாரம் இல்லை. பேரவை கூடி விவாதித்துத் தீர்மானம் நிறைவேற்றி நடுவண் அரசுக்கு அனுப்பவேண்டும்:  

நாடாளுமன்றம் ஏற்றால் சட்டமாகும். என் மாநிலத்தில் 30 சட்ட மன்ற உறுப்பினர்கள், 5 அமைச்சர்கள் இருக்கின்றனர்; தில்லி மக்களவைக்கும் மாநிலங்கள் அவைக்குமாக 2 உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். 

புதுச்சேரி யூனியன் பிரதேசம் ஒன்றற்கொன்று தொலைவில் உள்ள நான்கு பகுதிகளாய்ச் சிதறிக் கிடக்கிறது. 

1. புதுச்சேரிப் பகுதி -- கடலூர்க்கு வடக்கில், திண்டிவனத்துக்குத் தெற்கில், விழுப்புரத்திற்கு மேற்கில், கடலை ஒட்டி அமைந்துள்ள இதன் மக்கள் தொகை: 9 ½  லட்சம். இப் பகுதி தொன்மைச் சிறப்பு வாய்ந்தது. அரியாங்குப்பத்துக்கு அருகில் அரிக்கமேடு என்ற இடத்தில் நிகழ்ந்த அகழ்வாய்வுகள் பொ. யு. மு. முதல் நூற்றாண்டில் ரோமானியருடன் வாணிகத் தொடர்பு இருந்ததை வெளிப்படுத்தின; அங்குக் கிடைத்தவை ரோமானிய மாமன்னன் அகஸ்டசின் உருவம் பொறித்த நாணயங்கள், மதுச் சாடிகள் முதலியவை.
 
வரலாறு எழுதாத தமிழினத்தில் தோன்றி, 1736 முதல் 1961 வரைக்குமான 25 ஆண்டுக்கு, தம் நாட்குறிப்பில் பலப்பல வரலாற்று நிகழ்ச்சிகளை ஆவணப்படுத்திய ஆனந்த ரங்கப் பிள்ளை ( 1709 - 1761 ) யைப் பெற்ற பெருமை இப் பகுதிக்கு உண்டு; நகரின் மையப் பகுதியில் அவரது இல்லம் இருக்கிற தெரு அவருடைய பெயரைத் தாங்கி நிற்கிறது. அவருடைய நாட்குறிப்பு 12 தொகுதிகளாய் அச்சிடப்பட்டிருக்கிறது; தமிழ், தெலுங்கு, மலையாளம், வடமொழி, பிரஞ்சு, போர்த்துகீசியம் எனப் பலமொழி அறிந்த அவர் பெருஞ் செல்வராயும் வாணிகராயும் விளங்கியதோடு பிரஞ்சுக்காரர்க்கு மொழிபெயர்ப்பாளர் பணியும் ஆற்றினார். 

கவிஞர் சுப்பிரமணிய பாரதியார் குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய தம் முப்பெரும் பாடல்களை இயற்றுவதற்கு ஏற்ற சூழ்நிலையைப் பெற்றமை ஆங்கிலேயரின் கைக்கு எட்டாமல் இங்கே நிம்மதியாய்த் தங்கியிருந்த பத்தாண்டு காலத்தில் தான் ( 1908 - 1918 ) . இந்திய சுதந்தரப் போராட்ட வீரர் அரவிந்தர், வெள்ளையரின் அடக்குமுறைக்குத் தப்பி, வங்கத்திலிருந்து இங்கு அடைக்கலம் புகுந்து (1910 ) காலப் போக்கில் ஆன்மிகத்தில் ஆர்வமுற்று ஆஸ்ரமம் அமைத்து நிரந்தரமாய் வாழ்ந்து மறைந்தார். 

இந்தியாவில் வேறெங்கும் காண முடியாத, ஆறு மொழி கொண்ட அறிவிப்புப் பலகையை நகரின் சில இடங்களில் பார்க்கலாம்: தமிழ், தெலுங்கு (ஏனாம் மொழி), மலையாளம் (மாயே), இந்தி, ஆங்கிலம், பிரஞ்சு (இங்கு வாழும் பிரஞ்சுக் குடிகளின் மொழி) 

2 - காரைக்கால் பகுதி - புதுச்சேரி நகரத்திற்குத் தெற்கே, 150 கி. மீ. தொலைவில் இருக்கிற இதன் நான்கு எல்லைகள்: வடக்கில் தரங்கம்பாடி, தெற்கில் நாகூர், மேற்கில் பேரளம், கிழக்கில் கடல். 

ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த புனிதவதி என்ற காரைக்காலம்மையார், முதல் பக்தி நூல்களான மூத்த திருப்பதிகம், அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை ஆகியவற்றை இயற்றியவர். அவை சைவ சமயத் திருமுறைகளில் இடம் பெற்றுள்ளன. காரைக்கால் நகருக்கு மேற்கே 5 கி. மீ. தொலைவில் எழுப்பப்பட்டிருக்கும் தெர்ப்பாரண்யேஸ்வரர் (தமிழில் நள்ளாறன்) கோவில் அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய தேவார மூவராலும் பாடப்பெற்ற பெருமை கொண்டது. 

இந்த ஆலயத்தின் சனீஸ்வரன் தொடர்பான சனிப்பெயர்ச்சி விழா 2 ½  ஆண்டுக்கு ஒரு தடவை நிகழும்போது தமிழகம் முழுதிலிருமிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். காரை நகரின் வடக்கெல்லையாகிய கோவில்பத்து என்னும் சிற்றூரில் உள்ள பார்வதீஸ்வரன் கோயில் சம்பந்தரால் பாடப்பட்ட சிறப்புப் பெற்றது. 

3 - ஏனாம் பகுதி ( Yanam ) - 55 000 பேர் வாழும் இது ஆந்திரத்தில் காக்கினாடாவுக்குத் தெற்கே, புதுச்சேரிக்கு 900 கி. மீ. அப்பால் இருக்கிறது.

4 - மாயே பகுதி ( Mahe ) - கேரளத்தின் கோழிக்கோட்டுக்கு வடக்கில் 42 000 மக்களைக் கொண்ட இதற்கும் புதுச்சேரிக்கும் இடையே 500 கி. மீ. தொலைவு. 

இவையன்றி வங்கத்தில் கொல்கொத்தாவுக்கு 30 கி . மீ. தூரத்தில் உள்ள சந்தன் நகர் என்னும் பகுதியும் சேர்ந்து பிரஞ்சிந்தியா என்ற பெயரில் பிரெஞ்சுக்காரரிடம் அடிமைப்பட்டுக்கிடந்தன. தமிழில் சந்திர நாகூர் எனச் சுட்டப்பட்ட அப் பகுதி விடுதலைப் போராட்டத்தில் மிகத்தீவிரமாய் ஈடுபட்டமையால் ஆட்சியாளர் வாக்கெடுப்பு நடத்தவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டனர். பெருவாரி மக்கள் சுதந்தரத்துக்கு ஆதரவாய் வாக்களித்ததால் 1955 இல் இந்தியாவுடன் இணைந்தது. 

மற்ற 4 பகுதிகளும் 1962 இல் விடுதலை பெற்றன. 
 
(படம் உதவி; இணையம்)
============================================

Thursday, 7 February 2013

பழமொழிகளில் ஊர்கள்



ஊர்ப் பெயர் தாங்கிய தமிழ்ப் பழமொழிகளுள் எனக்குத் தெரிந்த சிலவற்றைப் பதிகிறேன்:

 

1 - ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகாது .

 

2 - காசிக்குப் போனாலும் கர்மம் தொலையாது.

 

3 - காஞ்சிக்குப் போனால் காலாட்டிப் பிழைக்கலாம்.

 

4 - தங்கச்சி தாராளம் இஞ்சிக்குடி பேராளம்.

 

5 - தென்காசி ஆசாரம் திருநெல்வேலி உபசாரம்.

 

6 - தில்லைப் பெண் எல்லை தாண்டாள்.

 

7 - தில்லிக்கு ராஜா ஆனாலும் தல்லிக்குப் பிள்ளைதான்.

 

8 - திருநெல்வேலியான் தேர் பாரான் திருச்செந்தூரான் கடலாடான்.

 

9 - காரைக்கால் ரோட்டைப் பார் காதர்சுல்த்தான் வீட்டைப் பார்.

 

10 - காஞ்சியில் பிறக்க முக்தி காசியில் இறக்க முக்தி.

 

11 - தன்னைப் பெற்ற தாய் கிண்ணிப் பிச்சை எடுக்கிறாள்,

தம்பி கும்பகோணத்தில் கோதானம் செய்கிறான்.

Friday, 14 December 2012

சங்கச் சான்றோர்


 மன்னர்களைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்த சங்கப் புலவர்களுள் சிலர்,  தேவைப்பட்டபோது அவர்களுக்குத் தக்க அறிவுரை புகன்று நன்னெறியில் செலுத்தினர் என்பது புற நானூற்றால் தெரிகிறது.  

1 - உணவு உற்பத்தியைப் பெருக்குவதன் இன்றியமையாமை குறித்துச் சிந்தித்த குடபுலவியனார் அதற்கு அடிப்படை நில வளம்நீர் வளம் என்பதை ஓர்ந்து, பாண்டியன் நெடுஞ்செழியனிடம் கூறினார்:
 
 

நிலத்துடன் நீர் சேர்ந்தால் உணவு விளையும்; நீரையும் நிலத்தையும் ஒன்றாய்க் கூட்டியவர்கள் குடிமக்களின் உடலையும் உயிரையும் காத்தவர் ஆவார்கள். மழையை  எதிர்பார்க்கும் புன்செய் எவ்வளவு அகன்றதாயினும் முயற்சிக்குத் தக்க பலன் தராது. ஆதலால் மழைநீர், ஆற்றுநீரைக் குளங்களில் தேக்கி வைத்து நாடு முழுதையும் வளப்படுத்து. இவ்வாறு  செய்த வேந்தர்கள் உலக இன்பமும் நிலைத்த புகழும் எய்துவார்கள்; செய்யாதார் அவற்றைப் பெறார்.
 
 
நீர்இன்று அமையா யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே;
உண்டி முதற்றே உணவின் பிண்டம்;
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே;
நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசி னோரே;
வித்திவான் நோக்கும் புன்புலம் கண்ணகன்
வைப்புற்று ஆயினும், நண்ணி ஆளும்
இறைவன் தாட்குஉத வாதே; அதனால்,
அடுபோர்ச் செழிய! இகழாது வல்லே
நிலன்நெளி மருங்கின் நீர்நிலை பெருகத்
தட்டோர் அம்ம, இவண்தட் டோரே;
தள்ளா தோர்இவண் தள்ளா தோரே.
( பா 18 ). 

2 - பிசிராந்தையார் பற்றிப் பலரும் அறிந்திருப்பர். பாண்டியன் அறிவுடைநம்பி வரி வசூலிப்பதற்கு உரிய நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் மக்களை வருத்தியமை கண்ட பிசிராந்தையார் அவனிடம், "அரசனொருவன் அறிவுள்ளவனாய் ஏற்ற வழியில் வரி வாங்கினால் பெரிய அளவில் பொருள் சேரும்; மக்களும் மேம்படுவார்கள்" என்று சொல்லி அதை விளக்குவதற்கு அருமையான எடுத்துக்காட்டும் தந்தார்:
 

" முற்றிய நெல்லை அறுவடை செய்து கவளங் கவளமாய் யானைக்கு ஊட்டினால் ஒரு மாவுக்கும் குறைந்த வயலின் விளைச்சலாயினும் பல நாளுக்கு வரும்மாறாக நூறு வேலி நிலமானாலும் தானே போய் மேயும்படி அதை விட்டால் அதன் வாயில் நுழையும் உணவைவிடக் காலால் மிதிபட்டு வீணாவதே மிகுதியாகும்" என்பது அந்தக் காட்டு.
 
காய் நெல் அறுத்துக் கவளங் கொளினே,
மா நிறைவு இல்லதும், பன் நாட்கு ஆகும்;
நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே,
வாய்புகு வதனினும் கால் பெரிது கெடுக்கும்;
அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே,
கோடி யாத்து, நாடு பெரிது நந்தும்;
மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு,
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்,
யானை புக்க புலம் போலத்,
தானும் உண்ணான், உலகமும் கெடுமே.
 ( புறம் 184 ) 

சங்கப் புலவர்கள் நல்லமைச்சர்போல் மன்னர்களை அறவழியில் செலுத்தியமைக்கு அவர்களின் சமூக அக்கறையுள்ள சிந்தனையே காரணம்;   நாட்டின் முன்னேற்றம் , மக்களின் மேம்பாடு ஆகியவற்றில் அக்கறை கொண்டு ஆவன செய்தமையால் அவர்களைச் சங்கச் சான்றோர் என அழைக்கிறோம்.
 
(படங்கள் உதவி; இணையம்)