Sunday, 18 August 2013

கருமி (தொடர்ச்சி 3)

  
அங்கம் - 1  காட்சி - 4  (தொடர்ச்சி)

பாத்திரங்கள் :
அர்ப்பாகோன் - பெருஞ் செல்வர்கடைந்தெடுத்த கருமி.  
எலீஸ் - மகள் 
(மகனும் மரியானும் காதலர்; எலீஸ் வலேரை விரும்புகிறாள். இருகாதலும் அர்ப்பாகோனுக்குத் தெரியாது)


அர்ப்பாகோன் வலேர், நீ சொல்லு. எனக்கும் மகளுக்கும் ஒரு தகராறு. யார் பக்கம் நியாயம் என்று சொல்வாயா?

வலேர்  நிச்சயமாக உங்கள் பக்கந்தான் நியாயம்.

அர்ப்பாகோன்- எதைப் பற்றிப் பேசுகிறோம் என்பதை நீ நன்றாக அறிவாயா?

வலேர்  இல்லை, ஆனால் நீங்கள் தவறு செய்ய மாட்டீர்கள்.

அர்ப்பாகோன்இன்று மாலை இவளுக்கு ஒரு நல்ல மற்றும் பணக்கார மனிதரைக் கணவராக்க விரும்புகிறேன். இவளோ, மாட்டேன் என்று என் முகத்துக்கு எதிராகச் சொல்லுகிறாள். நீ என்ன சொல்கிறாய்?

வலேர்  நான் சொல்வதா?

அர்ப்பாகோன்ஆமாம்.

வலேர்  -  பொதுவாக உங்கள் கருத்தோடு உடன்படுகிறேன். நீங்கள் சொல்வது எப்போதும் சரியானது என்றும் சொல்கிறேன். ஆனாலும் அவள் கருத்து  அடியோடு தவறல்ல...

அர்ப்பாகோன்-என்னது? ஆன்சேல்ம் பிரபு பெருந்தன்மை உள்ளவர், உயர்வானவர், பணக்காரர். முதல் கல்யாணத்துப் பிள்ளைகளை இழந்தவர். அவரைவிட மேலானவர் கிடைப்பாரா?

வலேர்  அது மெய்தான். இவள் உங்களிடம் கூறக்கூடும் இது கொஞ்சம் அவசரப்படுவதுசிறிது காலம் வேண்டும் தன்னால் ஒத்துப்போக முடியுமா என்று யோசிக்க ...

அர்ப்பாகோன்உடனே பிடித்துக்கொள்ள வேண்டிய வாய்ப்பு இது . வேறெங்கும் காணமுடியாத ஒரு சாதக அம்சத்தை இதில் காண்கிறேன். வரதட்சணை இல்லாமல் கல்யாணத்துக்கு ஒத்துக்கொள்கிறார்.

வலேர்  -  வரதட்சணை இல்லாமல்!

அர்ப்பாகோன்ஆமாம்.

வலேர்  ! இனி நான் சொல்ல ஒன்றுமில்லை. இது மிக வலுவான காரணம்.     இதை ஏற்க வேண்டியதுதான்.

அர்ப்பாகோன்எனக்கு இது கணிசமான சேமிப்பு.

வலேர்  -  கண்டிப்பாக; எதிர்க் கருத்துக்கு இடமில்லை. உஙகள் மகள் உங்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடும், கல்யாணம் என்பது மிக முக்கியமான விவகாரம், வாழ்க்கை முழுதும் இன்பம் அல்லது  துயரம் தருவது, வாழ்நாள் முழுவதுக்குமான ஓர் ஏற்பாட்டை ஆழ்ந்த முன்னெச்சரிக்கையுடன் தீர்மானிக்க  வேண்டும் என்று.

அர்ப்பாகோன்வரதட்சணை இல்லை!

வலேர்  -  நீங்கள் சொல்வது சரிஇது எல்லாவற்றையும் முடிவு செய்கிறது.   சிலர் இருக்கிறார்கள், அவர்கள் உங்களிடம் சொல்லலாம், இந்த மாதிரி விஷயத்தில் பெண்ணின் விருப்பம் மதிக்கப்பட வேண்டும் என்றும் வயது, விருப்பு வெறுப்பு, உணர்ச்சிகள் ஆகியவற்றில் இருவர்க்கும் இடையே உள்ள பெருத்த வேறுபாடு இந்த மணத்தில் வருந்தத்தக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்றும்.

அர்ப்பாகோன்வரதட்சணை இல்லையே!

வலேர்  -  ! இதற்கு மாற்றுக் கருத்து இல்லை. இது  எல்லார்க்கும் நன்றாகத் தெரியும்; இதை ஏற்காதவர் யார் இருப்பார்? என்றாலும் நிறையத் தந்தைமார்கள் பணத்தைக் காட்டிலும் புதல்விகளின் திருப்தியே மேலானது எனக் கருதுகிறார்கள்; தன்னலத்துக்காகப் பெண்களைப் பலி கொடுக்க விரும்பாத அவர்கள், ஒரு கல்யாணத்தில்மற்ற எல்லாவற்றையும்விட, மனப்  பொருத்தத்தைத் தேடுகிறார்கள்இந்தப் பொருத்தந்தான் மகிழ்ச்சி நிம்மதி கெளரவம் முதலானவற்றை நிரந்தரமாகத் தரும் என்பது அவர்களின் முடிவு. மேலும்  ...

அர்ப்பாகோன்-  (தோட்டத்துப் பக்கம் பார்த்து) தமக்குள்: அங்கே ஒரு நாய் குரைப்பது என் காதில் விழுவதாகத் தோன்றுகிறது. என் பணத்தைக் குறி வைக்கிறார்களோ?

   வலேரிடம் : இங்கேயே இரு. இதோ வந்துவிடுகிறேன்.

                        (போகிறார்)
                                                                           (முடிந்தது)
                                     +++++++++++++++++++++++

.



Monday, 12 August 2013

கருமி (தொடர்ச்சி 2)

                   

பாத்திரங்கள் :
அர்ப்பாகோன்பெருஞ் செல்வர், கடைந்தெடுத்த கருமி.  
கிளையாந்த்து - மகன்
எலீஸ் - மகள் 
(மகனும் மரியானும் காதலர்; எலீஸ் வலேரை விரும்புகிறாள். இருகாதலும் அர்ப்பாகோனுக்குத் தெரியாது)

 அங்கம் - 1   காட்சி - 4    ( தொடர்ச்சி)

அர்ப்பாகோன்- வேறு விஷயம் பேசுவோம்.

   ( மக்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மறைவாகச் சைகை காட்டுவதைப் பார்த்துவிடுகிறார். தம் பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுவதாக நினைக்கிறார். உரத்த குரலில்):

என்ன அர்த்தம் இந்தச் சைகைகளுக்கு?

எலீஸ்- உங்களிடம் யார் முதலில் பேசுவது என்று விவாதிக்கிறோம். சொல்லுவதற்கு இருவரிடமும் சேதி இருக்கிறது.

அர்ப்பாகோன்- உங்களிடம் சொல்ல என்னிடமும் சேதி உண்டு.

கிளையாந்த்து- கல்யாணம் பற்றித்தான்,   அப்பா,  பேசவிரும்புகிறோம்.

அர்ப்பாகோன்- நானும் மணம் பற்றித்தான் உங்களிடம் பேச விரும்புகிறேன். நான் தொடங்குகிறேன். நம் வீட்டுக்கு அதிகத் தொலைவில் அல்லாமல் வசிக்கிற  மரியான் என்ற இளம் பெண்ணைப் பார்த்திருக்கிறாயா?

  (அண்ணனும் தங்கையும் கண் சாடை செய்துகொள்கிறார்கள்)

கிளையாந்த்து- பார்த்திருக்கிறேன்அப்பா.

அர்ப்பாகோன்- நீ?

எலீஸ்- அவளைப் பற்றிப் பேசக் கேட்டிருக்கிறேன்.

அர்ப்பாகோன்- அவளைக் குறித்து என்ன நினைக்கிறாய்,  மகனே?

கிளையாந்த்து- மிக அழகானவள்.

அர்ப்பாகோன்-- முகம்?

கிளையாந்த்து- நேர்மையையும் புத்திக்கூர்மையையும் காட்டுகிறது.

அர்ப்பாகோன்- இந்த மாதிரியான ஒரு பெண்,    பிறரால் நினைக்கப்படத் தக்கவள் என்று நீ கருதவில்லையா?

கிளையாந்த்து- கருதுகிறேன்அப்பா.

அர்ப்பாகோன்- விரும்பத்தக்க மனைவி என்று?

கிளையாந்த்து- மிக விரும்பத்தக்கவள்.

அர்ப்பாகோன்- நல்ல குடும்பம் நடத்துவாள்  என்பதற்கு எல்லா அறிகுறிகளும் கொண்டவள் என்று?

கிளையாந்த்து- சந்தேகம் இல்லாமல்.

அர்ப்பாகோன்- அவளால் கணவன் திருப்தி அடைவான் என்று?

கிளையாந்த்து- நிச்சயமாக.

அர்ப்பாகோன்- அதிலே ஒரு சின்ன சங்கடம். எதிர்பார்க்கிற அளவுக்கு அவளுடன் பணம் வராமற் போகலாம்.

கிளையாந்த்து- ஆஅப்பா,   பொருட்படுத்துவதற்கான தகுதி பணத்துக்கு இல்லை, ஒரு நல்ல பெண்ணை மணப்பது பற்றிய பிரச்சினையில்.

அர்ப்பாகோன்- நல்லதுநல்லதுஎன் கருத்தோடு நீ ஒத்துப் போவது கண்டு நான் அதிக மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால்,   அவளுடைய ஒழுக்கமும் சாதுத் தனமும் என் மனத்தைக் கவர்ந்துவிட்டன. ஓரளவாவது பணம் கிடைக்குமானால் அவளைக் கல்யாணம் செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறேன்.

கிளையாந்த்து- என்னது?

அர்ப்பாகோன்- என்னதுன்னா?

கிளையாந்த்து- முடிவு செய்ததாய் சொல்கிறீர்கள்.

அர்ப்பாகோன்- ஆமாம்மரியானை மணந்துகொள்ள.

கிளையாந்த்து- யார்நீங்கள்நீங்களா?

அர்ப்பாகோன்- ஆம். நான்நான்நான். என்ன அர்த்தம் உன் கேள்விக்கு?

கிளையாந்த்து- திடீரென்று எனக்கு மயக்கம் வருகிறது,   நான் போகிறேன்.

அர்ப்பாகோன்- ஒன்றும் ஆகாது. ஒரு பெரிய கிளாஸ் தெளிந்த நீரைக் குடி. என்ன  இளைஞர்கள்! கோழிகளைவிட அதிக சக்தி இல்லாதவர்கள்.
இதுதான்மகளே,    நான் எனக்குச் செய்த முடிவு. உன் சகோதரனுக்கு ஒரு  கைம்பெண்ணைத் தேர்ந்திருக்கிறேன். உனக்கும் சேதி இருக்கிறது.  உன்னை ஆன்செல்ம் பிரபுவுக்குக் கொடுக்கிறேன்.

எலீஸ்- ஆன்செல்ம் பிரபுவுக்கா?

அர்ப்பாகோன்- அறிவு முதிர்ச்சியும் விழிப்புணர்வும் நல்ல குணங்களும் கொண்ட மனிதர். ஐம்பது வயதுக்குமேல் ஆகவில்லை. பெருஞ் சொத்துக்கு அதிபதி என்று பெயர் வாங்கியவர்.

எலீஸ்- எனக்குக் கல்யாணமே வேண்டாம்,   அப்பாதயவு செய்யுங்கள்.

அர்ப்பாகோன்- நானோ,   அருமை மகளேமணக்கோலத்தில் உன்னைப் பார்க்க விரும்புகிறேன்,   தயவு செய்.

எலீஸ்- ஆன்செல்ம் பிரபுவை நான் மதிக்கிறேன்,  ஆனால் மணக்கமாட்டேன்.

அர்ப்பாகோன்- மணப்பாய்,  இன்று மாலையே.

எலீஸ்- இன்று மாலையா?

அர்ப்பாகோன்- இன்று மாலைதான்.

எலீஸ்- நடக்காதுஅப்பா.

அர்ப்பாகோன்- நடக்கும்மகளே.

எலீஸ்- இப்படிப்பட்டவரை மணப்பதைக் காட்டிலும் நான் தற்கொலை செய்துகொள்வேன்.

அர்ப்பாகோன்- எதிர்த்துப் பேசுகிறாயா?   இதோவலேர். இவனிடம் கேட்போம்.

                                                                          (தொடரும்)

                                  -----------------------------------------

Saturday, 3 August 2013

கருமி (தொடர்ச்சி)

     
அங்கம்  1  காட்சி  4
                                          
பாத்திரங்கள் :
அர்ப்பாகோன் - பெருஞ்செல்வர், கடைந்தெடுத்த கருமி.
கிளையாந்த்து- மகன்
எலீஸ் - மகள்

மகனும்  மரியானும்  காதலர்;   எலீஸ்  வலேரை  விரும்புகிறாள்.  இரு  காதலும்  அர்ப்பாகோனுக்குத்  தெரியாது)

அர்ப்பாகோன்:  (தனிமொழி):

ஒரு பெருந்தொகையை வீட்டில் வைத்துக் காப்பதென்பது மெய்யாகவே கொஞ்ச நஞ்சக் கஷ்டமல்ல. பாக்கியவான், தன் பணத்தை நல்ல முதலீட்டில் செலுத்திவிட்டு அன்றாடச் செலவுக்கு மட்டும் சிறு தொகையை வைத்திருப்பவன். நம்பிக்கையான ஒரு மறைவிடத்தை வீட்டில் உண்டாக்குவது சங்கடமான வேலை. இரும்புப் பெட்டிகள் சந்தேகத்துக்கு உரியவை. அவற்றை நம்ப நான் ஒருபொழுதும் விரும்பமாட்டேன். திருடர்களைக் கவர்பவை அவை என்று சரியாகக் கருதுகிறேன். அவைதான் முதல் தாக்குதலுக்கு உள்ளாகும். நேற்றுத் திரும்பப் பெற்ற முப்பதாயிரம் பிரானைத் தோட்டத்தில் புதைத்து வைத்திருப்பது சரிதானா என்பது தெரியவில்லை.

( மகனும் மகளும் நுழைகிறார்கள். தந்தையின் பார்வையில் அவர்கள்  படவில்லை. அர்ப்பாகோன் தொடர்கிறார்).

முப்பதாயிரம் பொற் காசுகள். அது ஒரு பெரிய  ...

மக்களைப்  பார்த்துவிட்டுதனக்குள்) :

ஓ கடவுளே! என்னை நானே காட்டிக்கொடுத்தேனா?   என் கோபம் என்னை உரக்கப் பேச வைத்துவிட்டது.

(அவர்களிடம்):  என்ன?

கிளையாந்த்து- ஒன்றுமில்லை,   அப்பா.

அர்ப்பாகோன்- நீங்கள் வந்து நேரமாயிற்றா?

எலீஸ்-  இப்போதுதான் வருகிறோம்.

அர்ப்பாகோன்-  உங்கள் காதில் விழுந்ததா ...

கிளையாந்த்து-  எதுஅப்பா?

அர்ப்பாகோன்-  அதுதான்.

எலீஸ்-   எது?

அர்ப்பாகோன்-  நான் கடைசியாய்ச் சொன்னது.

கிளையாந்த்து-  இல்லை.

அர்ப்பாகோன்-  கேட்டிருக்கும்கேட்டிருக்கும்.

எலீஸ்-  எங்களை மன்னியுங்கள்.

அர்ப்பாகோன்-  தெரிகிறது,   சில வார்த்தைகள் கேட்டீர்கள் என்று. நான் சொன்னது என்னவென்றால்,  பணம் சம்பாதிப்பது கஷ்டம். யாராவது தன்னிடம் முப்பதாயிரம் பிரான் வைத்திருந்தால் அவர் பாக்கியசாலி என்பதுதான்.

கிளையாந்த்து-  உங்கள் பேச்சைத் தடைப்படுத்தக் கூடாது என்பதற்காக  நாங்கள்  தயங்கினோம்.

அர்ப்பாகோன்- நான் விளக்கிச் சொன்னது நல்லது. ஏனென்றால் நான்தான் முப்பதாயிரம் பிரான் வைத்திருக்கிறேன் என்று நீங்கள் தவறாக நினைத்துவிடக் கூடாது.

கிளையாந்த்து- உங்கள் விவகாரத்தில் நாங்கள் தலையிடவில்லை.

அர்ப்பாகோன்-  நான் முப்பதாயிரம் பிரான் வைத்திருந்தால் எவ்வளவு நல்ல காரியம்!

கிளையாந்த்து-  அதெல்லாம்  ....

அர்ப்பாகோன்-  எனக்கு அது உதவும்.

எலீஸ்-  நான் நினைப்பது ...

அர்ப்பாகோன்- அதிக சவுகரியமாக இருக்கும்.

கிளையாந்த்து-  நீங்கள் ...

அர்ப்பாகோன்- நான் அடிக்கடி சொல்வது போல் பணக் கஷ்டம் என்று  சொல்லி நொந்துகொள்ள மாட்டேன்.

கிளையாந்த்து-  அப்பா,    நீங்கள் நொந்துகொள்ள வேண்டியதே இல்லை. உங்களிடம் போதுமான பணம் இருக்கிறது என்பது தெரிந்த விஷயம்.

அர்ப்பாகோன் (கத்துகிறார்): என்னது?  போதுமான பணம் வைத்திருக்கிறேனா?  இப்படி சொல்பவர்கள் பொய்யர்கள்;   இதைவிடத் தப்பு வேறில்லை. இப்படிப்பட்ட வதந்திகளைக் கயவர்கள்தான் பரப்புவார்கள்.

எலீஸ்- கோபப்படாதீர்கள்.

அர்ப்பாகோன்-  எவ்வளவு விசித்திரம்,   என் பிள்ளைகளே என்னைக் காட்டிக் கொடுப்பதும் என் எதிரிகள் ஆவதும்!

கிளையாந்த்து- உங்களிடம் போதிய செல்வம் இருக்கிறது என்று நாங்கள் சொன்னால் உங்கள்  பகைவரா?

அர்ப்பாகோன் -  ஆமாம். இந்த மாதிரி பேச்சும் நீங்கள் செய்கிற செலவுகளும் சேர்ந்து நான் பெரிய பணக்காரன் என்ற கருத்தை உண்டாக்குவதால் ஒரு நாள் என் தொண்டையை அறுக்க வருவார்கள்.

கிளையாந்த்து- நான் என்ன பெரிய செலவு செய்கிறேன்?

அர்ப்பாகோன்-  என்னவா?    இப்படி ஆடம்பர உடை உடுத்துக்கொண்டு ஊர் சுற்றுவதைவிட அதிக முறைகேடு என்ன இருக்கிறது?   நேற்று உன் சகோதரியைக் கண்டித்தேன். அவளும் மோசம். உங்கள் இருவருடைய கால்முதல் தலைவரை பார்த்தால் ஒரு கணிசமான தொகை தெரியும். மகனே,   உன்னிடம் நான் இருபது தடவை சொல்லியிருக்கிறேன்: உன்  எல்லா நடவடிக்கைகளும் எனக்கு மிக்க அதிருப்தியை உண்டாக்குகின்றன. ஒரு பிரபு போலக் காட்டிக்கொள்கிறாய்;  இப்படிப்பட்ட ஆடை அணிவதற்கு நீ என்னிடம் திருடினால்தான் முடியும். சரி விடுவோம்வேறு விஷயம் பேசுவோம்.

  (தொடரும்)