Tuesday, 21 July 2015

மாந்தர் வரலாறு - தொடர்ச்சி 1


        
கிபன்கள்

  டச்சு  உடற்கூற்றியலார்   எழேன்  துய்புவா   (Eugene  Dubois),   1887-இல்  அந்நாட்டு   மருத்துவக்  குழுவில்   இடம்  பெற்று   டச்சுக்    காலனியாய்   இருந்த   சுமத்ராவுக்கும்   பின்பு  ஜாவாவுக்கும்   சென்றார்.   ஹெக்கேலின்  ஆதரவாளரான   அவர் ,   ஆசியாவில்   கிபனிலிருந்து மனிதன்  வந்தான்   என   உறுதியாய்  நம்பியவர்.  சுமத்ராவில்   கிபன்ஒராங் உட்டான்    இரண்டும்   வாழஜாவாவில்  கிபன்  மாத்திரமே  வசித்தது .   கிபனின்  பழைய  எலும்புக் கூடுகள்   அகப்படும்  என்னும்   எதிர்பார்ப்புடன்  அவர்   பல மாதம்   இடைவிடாமல்  அகழ்ந்ததில்ஒரு   மானிட உருவத்தின்   எலும்புகளை    ஜாவாவில்  எடுத்தார்   (1891);   அவைமுகவாய்க்கட்டையின்    ஒரு  பகுதி ,   மண்டை யோட்டின்   மேல் மூடி,   இரண்டு  தனிப்  பற்கள்,   ஒரு  தொடையெலும்பு.     இவை,    நிமிர்ந்து   நடந்த    ஒரு    விலங்கினுடையவை     என்பது சர்வ நிச்சயம்மண்டை ஓட்டின் கொள்ளளவு  பெருங்குரங்கினுடையதைவிடப்  பெரியதாய்   இருந்தது;   ஆகவே  அந்த  மிருகம்பெருங்குரங்குக்கும்  மனிதனுக்கும்  இடைப்பட்டது   என  முடிவு  கட்டிய  அவர்பிதிக்காந்த்ரப்பெஸ்   இரேக்டஸ்  (pithecanthropus  erectus )   என்ற  பெயரை   சூட்டினார்;   அதன் பொருள்:   நிமிர்ந்த  குரங்கு-மனிதன்.   பிற்காலத்தில்    'ஜாவா  மனிதன்'   எனப்  பெயர்   மாறிற்று.

     1929-இல்,   சீனாவின்  பீக்கிங்  பிரதேசத்தில்   கிடைத்த  கூடு   'பீக்கிங்  மனிதன்'   எனப்பட்டது;   இதற்கும்  ஜாவா மனிதனுக்கும் இடையே  மறுக்க  இயலா  ஒற்றுமைகள்  தென்பட்டன.   அடுத்த  வருடம்    ரால்ஃப்  வான்  கேனிக்ஸ்வால்ட்   (Ralph  von  Koenigswald ) --  ஜெர்மன்   புதை படிவ  ஆய்வாளர் --ஜாவாவில் மேற்கொண்டும் எலும்புகளைத்  தோண்டியெடுத்தார்.  இவையும்  பீக்கிங்  எலும்புகளும்  மனிதனுடையவை என்பதை   ஆராய்ச்சிகள்  நிரூபித்தனஹொமோ  இரேக்டஸ்  (Homo erectus)  -  நிமிர்ந்த  மனிதன் --  என்றழைத்தனர்.   லத்தீன்ஹொமோ = மனிதன்.

     நிமிர்ந்த  மனிதனில்   இரு  வகை  இருப்பதாய்க்  கண்டறியப்பட்டது:

  1  --  ஹொமோ    இரேக்டஸ்  இரேக்டஸ்  --  ஜாவா மனிதன்;

   2 --  ஹொமோ  இரேக்டஸ்  பெக்கினென்சிஸ் --  பீக்கிங்  மனிதன்.

     பேராசிரியர்  ரேமன்ட்  டர்ட்   (Raymond Dart)   ஆஸ்ட்ரேலியாவில்  பிரிஸ்பேன்  நகரில்   பிறந்தவர்   (1893 - 1988);    உடற்கூற்றியலர்தென்னாப்ரிக்காவில்  பணியாற்றியபோது  அங்குக்  கிட்டிய  எலும்புக்  கூட்டை    ஆராய்ந்து,    ஆஸ்ட்ராலொப்பிதேக்கஸ்   ஆஃப்ரிக்கானுஸ்   (Australopithecus  africanus)  என்று  பெயர்  வைத்து,   மனிதர்களுக்கும் பெருங்குரங்குகளுக்கும்    இடைப்பட்ட  மற்றும்  அதுவரை   அகப்படாத  இனம்  எனத்  தெரிவித்தார்.

      ஆஸ்ட்ராலொ = தெற்கத்தியபிதேக்கஸ் = குரங்குதென்குரங்கன்   என்று  இதை  மொழிபெயர்த்தார்   தேவநேயப்  பாவாணர்.

         அதுவரைக்கும்  அகப்படாதது  என்ற   டர்ட்டினுடைய   கருத்து  சரி;   ஆனால்   அது  மனிதனின்  மிகப்  பழைய  மூதாதையுடையது  என்பது  பின்   கண்டுபிடிப்புகளால்  தெரிந்தது.   ஆஸ்ட்ராலொப்பிதேசைன்   ( Australopithecine )   என  அதன்    பெயர்   மாற்றப்பட்டதுசுருக்கமாக  ஆசைன்  என்போம்.   கிழக்காப்ரிக்காவில்  50  //மு  அல்லது   அதற்கும்  முந்தி  வாழ்ந்தது  அந்த   இனம்.  (கிழக்காப்ரிக்கா   என்பது  எத்தியோப்பியா , கென்யாடான்சானியா  ஆகிய  மூன்று  நாடுகள்  அடங்கிய பிரதேசம்).

           அங்கு,   பல்வேறு  பகுதிகளில்  கண்டெடுத்த    ஆசைன்கள்   இரு  பிரிவு   கொண்டவை:

           ஒன்றுவலுமிக்கது;    மற்றதுபலங்குறைந்தது

          இரண்டுக்கும்  பொதுவான  அம்சங்கள்  புலப்பட்டனமுன்துருத்திய  முகம், அதிகம்  வளராத  புருவம், கண்ணுக்குமேல்   உப்பிய  எலும்பு , முகவாய்க்கட்டை  இல்லாமைபெரிய  கடைவாய்ப்  பற்கள்.   மூளை   சுமார் 500   கன செ. மீ. அளவு;  (இக்கால  மனிதனுக்கு  சராசரி 1400  கன  செ.மீ. ). மூளையளவும்  உடல் வீதங்களும்  (proportions)  அவை  பெருங்குரங்கு  எனக்  காட்டினநிமிர்ந்த  நிலையில்  இரண்டு   கால்களால்   நடந்த போதிலும்  மரந்தொற்றும்   பழக்கத்தை  அவை   கைவிடவில்லை.

        முதற் பிரிவுசைவம் ;   அது   10 //மு   அற்றுப்போய்விட்டது.

      மற்ற  பிரிவு  ஆசைன்கள்   ஊனும்  உண்டன;   இவற்றுள்  ஒரு   பகுதி, காட்டினின்று  வெளியேறி,   ஆற்றோரமாய் நடந்து,    புல்வெளிகளை  அடைந்ததுகல்லாயுதங்களை   உருவாக்கிய   முதலினம்    இதுவே .     கல்  கருவிகள்  ஆப்ரிக்காவில்  மூன்று  இடங்களில்  கிடைத்தன:

              1 --  எத்தியோப்பியாவில்  கடா கோனா (Kada  Gona)  எனுமிடம்;

.             2  -- அந்  நாட்டிலேயே   ஒமோ (Omo)   என்ற  வேறிடம்;

              3 --  கென்யாவில்  ட்டூர்க்கானா  (Turkana ) எரியின்   கிழக்குப்   பகுதி.

          இவை   20 //மு  பயன்பட்டவையாம்.    இன்னமும்   மனிதராகிவிடாத  பெருங்குரங்குகளுக்கு   சிந்தனை வளர்ச்சி  ஏற்பட்டமைக்கு   இந்த ஆயுதங்கள்  தக்க   சான்றுகள்.

     டான்சானியா  நாட்டில்   ஒல்டுவாய்  (Olduvai )   என்ற  பிரதேசத்தில்  உள்ள  ஆழமான   மற்றும்  ஒடுங்கிய  பள்ளத்தாக்கு,   வரலாற்றுக்கு    முற்பட்ட  இனங்களின்  எலும்புக் கூடுகள்  பலவற்றை  வழங்கிப்  புகழுற்றது.   லூய் லீக்கி  (Louis Leakey ) -  1903-1972 - அவருடைய   மனைவி   மேரி  -1913-1996 - ஆகிய    இரு  பிரபல  ஆங்கில  மானிடவியலார்கள்   அங்கு  அகழ்ந்து   ஆசைன்  கூடுகள்  சிலவற்றை   வெளிக்கொணர்ந்தனர்.   இவை    இரண்டாம்  வகையைச்   சேர்ந்தவை.

      அதே  இடத்தில்    மேரி,   ஒரு   புது மனித  இனத்தின்    கூட்டைக்  கண்டுபிடித்தார்   (1961);  இதற்கு    ஹொமோ   ஹெபிலிஸ்   (Homo  habilis) என்பது   அவர்   தேர்ந்தெடுத்த  பெயர் .   ஹெபிலிஸ்திறமைசாலிஅதன்  கைகளுக்குக்   கல்லை   அழுத்தமாய்ப்  பற்றும்   திறமை  இருந்தது .  மேரியின்   மகன்   ரிச்சர்ட்   (Richard)  அந்த  இனத்தின்   மேலும்  முழுமையான   கூட்டை  அகழ்ந்தெடுத்தார்  (1972 ).   18 //   முந்தியது    என  மதிப்பிட்டனர்.

       ஹொமோ  ஹெபிலிஸ்   20  லட்சத்திலிருந்து  15 //மு    மறைந்தது.

     டொனால்ட்   ஜொகான்சனும்  (Donald  Johanson )  அவரது   பிரஞ்சியர்  மற்றும்  அமெரிக்கர்  அடங்கிய    குழுவினரும்   எத்தியோப்பியாவில்   நிகழ்த்திய  அகழ்வில்,   40%  பூர்த்தியான  கூடொன்றை    1974 இல்   தோண்டியெடுத்தனர்ஆசைன்களின்   வலிமை  குறைந்த   இரண்டாம்   வகைப்  பெண்ணின்   மிச்சம்  என்பதறிந்து   வைத்த  பெயர்  லூசி  (Lucy).   இந்தக்   கண்டுபிடிப்பால்இருகால்  நடைவரலாற்றுக்குப்   பெரிதும்  முற்பட்ட  காலத்திலேயே பழகிவிட்டது   என்று    ஐயமின்றித்  தீர்மானித்தனர்.        

     ஈராண்டுக்குப்  பிற்பாடுடான்சானியாவில்,   லேட்டோலி   (Laetoli )  எனுமிடத்தில், (ஒல்டுவாய்க்கு  30 மைல்  தொலைவுஎரிமலைச்   சாம்பலில்மனிதனுடையவை  போன்ற  காலடிச்  சுவடுகள்  பதிந்திருந்தமை  தெரியவந்ததுஅவை  36 /  பழமை  வாய்ந்தவை . 1978-இல்மேரி  லீக்கி   ஒரே  இடத்தில்   இரண்டு  பேரின்   அடிச் சுவடுகளைக்   கண்டார்;   ஆராய்ச்சி   அளித்த  தகவல்கள்:

  1 ---  இருவர்   சேர்ந்து   நடந்திருக்கின்றனர்ஒருவர்  140 செ.மீ.  உயரம், மற்றவர் 120;

     2 -- 50 /  முன்பே  இரு   காலால்  நடந்துள்ளனர்.

     ட்டூர்க்கானாவின்  கீழைக்   கரையில்   இரு  மண்டை  ஓடுகளும்  (1970)  மேலைக்  கரையில்   நேரியோக்கொட்டொம்   (Nariokotome)  என்ற  இடத்தில்  ஒரு   முழுக்  கூடும் (1984)  கிடைத்து,   நிமிர்ந்த   மனிதர்    ஆப்ரிக்காவில்  உருப்பெற்றனர்  என்பதை  உறுதிப்படுத்தின.

   நிமிர்ந்த  மனிதர்கள்   இப்போதைய  மனிதர்களுக்கு   மிக  நெருக்கமானவர்கள்அவர்களுள்  சிலர்    1.7 மீஉயரம்   வளர்ந்தார்கள்;     மூளை  775 .செ.மீட்டருக்கும் 1250  . செ. மீட்டருக்கும்  இடைப்பட்ட  அளவுடையது;   உறுதியான முகவாய்க்கட்டைபெரும்   பற்கள்சூரிய  ஒளிக்குத்  தடுப்புப்போல   அடர்ந்த  புருவ  அரண்    ஆகியவை   அவர்களின்   சில  உறுப்புகள்.

   பல   நூறாயிரம் ஆண்டு   தாங்கள்  வசித்த  சஹாராவின்  தெற்குப்   பாகத்தினின்று    அவர்கள்   புலம் பெயர்ந்து  வட  ஆப்ரிக்காஆசியாஐரோப்பா   என  வேறு  பிரதேசங்களுக்குப்  பரவினார்கள்ஹொமோ  ஹெபிலிசைக்  காட்டிலும்  மேம்பட்ட  தோற்றங்  கொண்டிருந்த  அவர்கள்  நிச்சயமாக  ஹெபிலிஸ்  இனத்தின்  வழித் தோன்றல்கள்தான்.   16  லட்ச  ஆண்டிலிருந்து  2 // முன்வரை அவர்கள்  வாழ்ந்திருக்கிறார்கள் .


 ( தொடரும் )

Sunday, 5 July 2015

மாந்தர் வரலாறு


    

      (மிகப்  பழங்காலத்தில்  உலகம்  காடுகள்  மயமாய்  இருந்ததாம்;  மனிதர் அல்லாத,  கணக்கு வழக்கு   இல்லாத   உயிர்களுக்கு   அவை   சொந்தமாய்  விளங்கின.  மாந்தன்  வந்தான்,  பிடித்தது   சனி  இயற்கைக்கு!   எப்போது,  எவ்வாறு,   எங்கே   அவன்  உண்டானான்?   அதைச்  சொல்வது  இந்தக்  கட்டுரை;  தமிழில்   இப்படிப்பட்ட   அறிவு,  ஆராய்ச்சி  நூல்கள்  பிரசுரமாவதில்லை. யார்  வாங்குவார்?  அறிவுப்  பசி  குறைந்தவர்   தமிழர்;  அவர்களுக்குக்  கதை,  சினிமாத்  தகவல்கள்,  ஆன்மிகம்   போதும்!    சிற்சிலர்    அக்கறை  கொண்டவர்  உண்டு;  விரும்பினால்  அவர்கள்  வாசிக்கலாம்.

    ஆங்கில  நூல்களிலிருந்து  திரட்டித்  தொகுத்த  தகவல்கள்  இதில்  உள்ளன. பிரஞ்சுச்  சொற்களைச்  சரியான  உச்சரிப்புடன்  எழுதி இருக்கிறேன்).

      யூதர்கள், கிறித்துவர்கள், முசுலிம்கள்  ஆகிய  மிகப்  பெரும்பாலான  உலகினர்  விவிலியத்தின்  கூற்றுப்படி,  ஆதாம்  ஏவாள்  இணையரைக்    கடவுள்  படைத்ததாயும்   இவர்களிடமிருந்து  மனிதச்  சந்ததி  உருவானதாயும்  நீண்டநெடுங்காலமாக  நம்பிவருகின்றனர்.   இந்த  நம்பிக்கைக்கு  மாறாய்,   லுசிலிஓ  வனினி   (Lucilio   Vanini) என்னும்  இத்தாலிய  தத்துவ   அறிஞர்,   தமது  ஆராய்வின்  விளைவாய்,  குரங்கிலிருந்து  மனிதன்  வந்தான்    என்ற  புரட்சிக்  கருத்தை  1616 இல்  கூறினார்.  மறை நூலுக்கு  எதிர்ப்பா? சகிப்பதுண்டோ  இந்த  அக்கிரமத்தை?   வெகுண்டெழுந்த  கிறித்துவ  வெறியர்கள்  அவரை  உயிருடன்   எரித்துக்  கொன்றார்கள்.  முன்காலத்தில்  மட்டுமா  மத வெறி   கொடூரமாய்த்   தலைவிரித்துத்   தாண்டவமாடிற்று?

      இரண்டு  நூற்றாண்டுக்குப்  பிற்பாடு, கருத்து  சுதந்தரத்தின்  முக்கியத்துவம்  உணர்ந்து,   அதற்கு  சட்டப்   பாதுகாப்பைப்  பல்வேறு   நாடுகள்  உறுதி   செய்தமையால்,  மாந்தர்  வரலாறு  குறித்த  வனினியின்  ஆய்வை  அச்சமின்றித்   தொடர்ந்தனர் அறிஞர்.

        பார் புகழ்  பிரஞ்சு  இயற்கையியலார்  (naturalist)  ழோர்ழ்   குய்விஏ  (George Cuvier)    'புதையெலும்பு   ஆய்வின்   தந்தை'   என்று  போற்றப்படுபவர். பூமியுள்   அமிழ்ந்து கிடக்கிற   தொல்  விலங்கெலும்புகளைப்  பற்றிய   ஆராய்ச்சி  அவருடையது;    அகப்பட்ட   சில  எலும்புகளைக்  கொண்டு  முழு  எலும்புக்  கூட்டையும்,  உறுப்புகளையும்கூட,  உருவாக்குவதற்கான  அடிப்படை   வழிமுறைகளைத்  தம்  நூலொன்றில் விவரித்தார்   (1812).  அதன்  தலைப்பு: "ரெஷேர்ஷ்  சுய்ர்லேசோஸ்மான்  ஃபொசீல் தே கத்ருய்ப்பேது"  (Recherches  sur  les  ossements   fossiles  des  quadrupedes). பொருள்:  நான்கு  கால்  விலங்குகளின்  புதைபடிவங்களைக்  குறித்த  ஆராய்ச்சிகள்.  அந்த  நூல்   பிற்காலத்தார்க்குத்  தலைசிறந்த  வழிகாட்டி  ஆயிற்று.

     வேல்ஸ்    நாட்டுப்  பாதிரியார்   வில்லியம் பக்லேன்ட்  (William Buckland), 1822 இல்,  அந்த  நாட்டின்  குகையொன்றை அகழ்ந்து   ஓர்  எலும்புக்  கூட்டை எடுத்தார்;   மஞ்சள்  களிமண்ணில்  புதைந்திருந்த  அதற்கு,   'ரெட்  லேடி'  (செம்மடந்தை)  என்று  பெயர்  சூட்டினார்.  அது   க்ரோ மஞ்ஞோன்  (Cro  Magnon)  மனித  இனத்தின்  முதலாம்   'மாதிரிச்  சான்று' (specimen)  என்று  நெடுங்காலத்துக்குப்  பின்பு புரிந்தது. (க்ரோ   மஞ்ஞோன்  -- தென்   மேற்கு   பிரான்சில்  ஒரு  குகை).

      பெல்ஜிய இயற்கையியலர்    டாக்டர்    ஃபிலிப்  ஷார்ல்   ஸ்க்மெர்லிங்          (Philippe  Charles  Schmerling)  அந்  நாட்டு   லிஏழ்  (Liege)  என்னும்  ஊருக்குப்   பக்கத்தில்  ஒரு  குழந்தையின்  எலும்புக்  கூட்டு  மிச்சங்களை, 1829 இல்  தோண்டி  எடுத்தார்.

       ஜெர்மனியில்  நீயெண்டர்  பள்ளத்தாக்கு  உள்ளது; அந்நாட்டு  மொழியில்  நீயெண்டர்த்தால். அங்கொரு  குகையில்   பள்ளந்  தோண்டிய  தொழிலாளர்கள் களிமண்ணுக்குள்  தற்செயலாய்ப்  பார்த்தது  ஒரு  மனித  எலும்புக் கூடு  (1856). மண்டையோட்டின்   மேல்தட்டு, ஒரு  காறையெலும்பு (clavicle), மேல்கை எலும்புகள், கீழ்க்கை எலும்புகள், தோள்பட்டை   எலும்பு (shoulderblade),  இரு  தொடையெலும்புகள், சில  விலா  எலும்புகள், பாதி  இடுப்பெலும்பு   என  உடலின்  பல  பகுதிகள்  அதில்   இருந்தன.   இவை   டாக்டர்  ஃபிலிப் எடுத்த எலும்புகளை    ஒத்திருந்தன.  ஆய்வில்  தெரிந்தது,   இவை   வேறு  வகை மனிதனுடையவை என்று.  "நீயெண்டர்த்தால்  மனிதன்"  என்ற  பெயரை   வைத்தார்கள்;   இதன் முதல்  மாதிரிச் சான்று  தான்   மேற்படி   குழந்தை.

        குய்விஏவுக்கு  அடுத்தபடியாகப்  புதை படிவ  ஆய்வில்  புகழெய்திய  பிரஞ்சு  அறிஞர்   எதுஆர்   லர்த்தே  ( Edouard  Lartet)  தம்    நாட்டில்  மேற்கொண்ட   பற்பல  அகழ்வுகள்   தந்தவற்றுள்  ஒரு பெருங்குரங்கின்  (ape)  கீழ்த்தாடையும்   இருந்தது  (1837).  அதுவே  முதல்  குரங்கெலும்பு;  (கிபன், ஒராங் உட்டான்,  கொரில்லா,  சிம்பன்சி  ஆகிய  குரங்குகளைப்  பெருங்குரங்கு  என்கிறார்கள்).  அதற்கும்  தென்கிழக்காசியாவில்  வாழ்கிற  கிபன்  (gibbon)  என்னும்  குரங்குக்கும்  இடையே  அதிசயிக்கத்தக்க  ஒற்றுமையுண்டு   என்பதை  ஆராய்ச்சி தெரிவித்தது.  1852 இல்,  அவரிடம்    மற்றொரு  குரங்கின்  கீழ்த் தாடை  அகப்பட்டது;  இதன்  பற்கள்  மனிதப்  பற்கள்  போல்  இருந்தன. ஜெர்மன்  உடற்கூற்றியலர்   (anatomist) பேராசிரியர்   ஹெர்மன்  ஷாஃபவுசன்   (Herman  Schaffausen)  அந்த  மிச்சங்கள்   மனித  இனத்துக்குக்  குரங்குதான்  மூலம்   என்பதை   நிரூபிப்பதாக    உறுதியாய்க்  கூறினார்.

        க்ரோ  மஞ்ஞோன்  குகை பற்றி    முன்பே  அறிந்தோம்.    அங்கு,   எதுஆர்  லர்த்தேயின்   புதல்வர்   லூய்  லர்த்தே  (Louis Lartet)   பிரஞ்சு  அரசால்   நியமிக்கப்பட்டுச்   செய்த  ஆராய்ச்சியில்,    ஐந்து   எலும்புக்   கூடுகளைக்   கண்டெடுத்தார்  (1868);   அவை   கிடந்த  நிலையும்  அருகில்  எலும்புத்   துண்டுகளின்   பரவலும்    "இறந்தவர்கள்  புதைக்கப்பட்டார்கள்"    என்கிற  தகவலைப்   புலப்படுத்துவதாய்   அவர்  சொன்னார்.

   நீயெண்டர்த்தால்கள்,  க்ரோ மஞ்ஞோன்  மனிதர்களுக்கு  முன்பு  தோன்றியவர்கள்;   ஐரோப்பாவிலும்  தென் மேற்கு  ஆசியாவிலும்  250 000  ஆண்டிலிருந்து  35 000  ஆண்டு  வரைக்குமான  காலக்  கட்டத்தில்  வாழ்ந்தார்கள்;  சுமார்  10 000  வருடம்  அல்லது  அதற்கு  மேற்பட்டு,   க்ரோ மஞ்ஞோன்களுடன்   ஐரோப்பாவில்   ஒரே  சமயத்தில்  வசித்திருக்கிறார்கள்;   குரங்கு - மனிதர்கள்  என்று   அவர்களைச்  சொல்லலாம்;   க்ரோ மஞ்ஞோன்களோ  மேம்பட்ட  தோற்றமும்  ஓரளவு  எழிலும்  வாய்ந்தவர்கள்.

     க்ரோ மஞ்ஞோன்   என்பதற்குப்  பதிலாக,  இப்போது,   "ஐரோப்பிய  முற்பட்ட  நவீன   மனிதர்"  (European  Early Modern   Humans)   அல்லது  "முற்பட்ட  ஹொமோ  செப்பியன்ஸ் செப்பியன்ஸ்" (Early Homo sapiens  sapiens) என்கிறார்கள். இவர்கள்  கிழக்கு  ஆப்ரிக்காவில்  உதித்து,   1 லட்சம் -  2  லட்சம்  ஆண்டுக்கு முன்  (சுருக்கம்  ல/ஆ/மு)   அங்கிருந்து   வெளியேறியவர்கள்.

   எர்ன்ஸ்ட்   ஹெய்க்கல்   (Ernst  Haeckel) -  ஜெர்மன் உயிரியல், விலங்கியல்    வல்லுநர் -   பழங்கால  மனிதர்களுக்கும்   இக்காலப்   பப்புஆ    (ஆஸ்ட்ரேலியாவுக்கு    வடக்கில்  உள்ளது  பப்புஆ  நாடு)   மற்றும் பசிபிக்  தீவு  மக்களுக்கும்  மிக   நெருக்கமான  தொடர்பு  இருக்கிறது  என  1868 இல்  கூறினார்;  கிபன்களுடைய   கருக்களுக்கும்    மனிதக்   கருக்களுக்கும்  இடையே  கண்ட   வியப்பூட்டும்    ஒற்றுமையால்  கவரப்பட்ட   அவர்,   இந்தியப்  பெருங்  கடலில்  மூழ்கிய  லெமூரியா  கண்டத்தில்,   "சொர்க்கத்தின்  தோட்டங்கள் "    இருந்ததாகவும்    நம்   தொல்  மூதாதையர்,    கிபன்களைப்  போன்றவர்  எனவும்  கருத்து  தெரிவித்தார்.   விவிலியம்  ஆதியாகமம்  அதிகாரம்  2,   வசனம் 8:    "தேவனாகிய  கர்த்தர்   கிழக்கே   ஏதேன்  என்னும்  ஒரு  தோட்டத்தை  உண்டாக்கி,  தாம்  உருவாக்கின  மனுஷனை  அதிலே  வைத்தார்".  இத்தோட்டத்தைத்தான்  அவர்  சொர்க்கத்தின்  தோட்டங்கள்  என்றார்.

     லெமூரியாவில்  மனிதக்  குரங்குகள்   வாழ்ந்தன,  அது  மூழ்கிவிட்டது  என்பது   அவர்  முடிவு;   அங்கு  நாகரிக    மானிடர்  வசித்ததாய்   அவர்  சொல்லவில்லை.

      அவருடைய  கூற்றை  மறுத்தது   ஆங்கில  ஆய்வர்  சார்லஸ்  டார்வினின்    நூல்: (1871):  மனிதனின்  பூர்விகம்  (The Descent of Man).

                  அதில்   அவர்   குறிப்பிட்டது:

            உலகின்  ஒவ்வொரு  பகுதியிலும்  வாழ்கிற    பாலூட்டிகள்   ( mammals) அதே  இடத்தில்  முன்னதாய்   வசித்து  அழிந்த   வர்க்கத்துடன்   நெருங்கிய  உறவு    கொண்டவை;    ஆகையால்,   கொரில்லாவுக்கும்   சிம்பன்சிக்கும்  முந்தி, அவற்றைப்  போன்ற  பெருங்குரங்குகள்  ஆப்ரிக்காவில்  உறைந்திருக்க  சாத்தியமுண்டு;  இந்த  இரண்டு  வர்க்கங்களும்   மனிதர்க்கு   மிக   நெருங்கியவை;  எனவே   நமது  மிகத்  தொன்மைக்  கால  மூதாதையர்    அந்தக்  கண்டத்தில்   வாழ்ந்தனர்  என்பது   அதைவிட  சாத்தியம்.

       அவரது    ஊகம்  பின்னாளில்  நிரூபணமாயிற்று.

(தொடரும்)
(படம் உதவி: இணையம்)
                                                               ----------------



Sunday, 21 June 2015

வாமன ஐரோப்பா (Mini Europe)


   


2008-இல்  நான், பெல்ஜியத்  தலைநகர்  பிரசல்சில்,   "மினி  யூரப்என்னும்  காட்சிச் சாலையைப்  போய்ப்  பார்த்தேன்;   கட்டணஞ் செலுத்திய  சீட்டுடன்  நுழைய  வேண்டும்.   ஐரோப்பிய  ஒன்றியத்தில்  சேர்ந்துள்ள  நாடுகளின்  முக்கிய  கட்டடங்களை   1/25 என்ற  அளவில்அச்சு  அசல்  அதே  மாதிரிஅதே  வண்ணங்களில்ஒரு  மிக  விசாலமான  நிலப் பரப்பில்  உருவாக்கி  வைத்திருக்கிறார்கள் .   நாட்டுக்கு  நாடுகட்டடங்களின்  எண்ணிக்கை  வேறுபடுகிறது;  (ஒன்று  முதல் பதினாறு வரை). விலங்ககத்தில்  பகுதி  பகுதியாய்ப்  பார்த்துக்கொண்டு  போவது போலப்  போக  வேண்டும்.

     பிரஞ்சு  மொழியில்  64  பக்கங்  கொண்ட ஒரு  கையேடு  தந்தார்கள். (வேறு மொழியிலும் உண்டு)அதில்   கட்டடங்களின்  படங்கள்ஒரிஜினல்  நிறங்களில்  விளங்குகின்றன.  அவற்றின்  பெயர்கள், சிறப்பம்சங்கள், வரலாற்றுக்  குறிப்புகள்,   நாடு  மற்றும்   மக்கள்  பற்றிய  முக்கிய  தகவல்கள்  கொண்ட   அந்தக்  கையேட்டின்  உதவியால்   நாம்  ஒவ்வொன்றையும்  நுணுக்கமாகப்  பார்த்தறியலாம்ஒரு  பொத்தானை  அழுத்தினால்  அந்தந்த  நாட்டின்   தேசியப்   பண்  ஒலிக்கும்.

   ஜூலைஆகஸ்ட்  மாத  இரவில்பிரகாசமான  ஓளியில்  மூழ்கியுள்ள  அந்தக்  கட்டடங்களைப்  புதுக்  கோணத்தில்  கண்டு  மகிழலாமாம்.

    கையேட்டின்  சில முக்கிய  தகவல்களை  இங்குப்  பதிகிறேன்:

    யூரப் என்பது   பினீசிய மொழிச்  சொல்லான    எரேப் (ereb) பிலிருந்து வந்ததுஅதன் பொருள்: மேற்கு

     பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, ஹாலந்து, இத்தாலிலக்சம்பர்க்   ஆகிய ஆறு  நாடுகள்  கூடி,   9-5-1957 இல்,   ஐரோப்பிய ஒன்றியம்   என்னும்  அமைப்பைத்   தோற்றுவித்தனபிற  நாடுகள்  அவ்வப்போது  சேர்ந்து  சேர்ந்துஅது  2007 இல்  இருபத்தேழு  தேசங் கொண்டதாய்ப்  பரிணமித்தது. அதன்  தலைநகரம்  பிரசல்ஸ்கொடிகருநீலநிற  நீள்சதுரப்  பின்னணியில்  அகன்ற வட்டமாய்ப்  பொறித்த  பன்னிரண்டு  விண்மீன்கள்  கொண்டது.  இவை  செம்மைக்கு (perfection)  அடையாளமாம்.   நாணயம், யூரோ.

     இனிச்    சில  நாடுகளைப்    பற்றி:

   1 - பெல்ஜியம் – (16 கட்டடம்) - உலக   வைர  உற்பத்தியில்  70%  இந்  நாட்டினுடையது.

    2 --செக்  குடியரசு --(1)  --மக்களுள்   40% மேல்  நாத்திகர்.

    3 --டென்மார்க் -(3) -  406  தீவுகளால்  ஆன   நாடு;  97 இல்  மட்டும்  மக்கள்  வாழ்கிறார்கள்.

     4 -- எஸ்த்தோனியா -  (1) --அதிக  அளவில்    காளான்   உண்கிறார்கள்; கிட்டத்  தட்ட  அறுபது  வகை.

      5 -- பின்லாந்து --(1) -- 70%  பிரதேசம்  காடு.

      6 -- ஜெர்மனி -- (10) --ஐரோப்பியருள்  ரொட்டியை  மிகுதியாக  உண்பவர்கள்.

      7 -- ஹாலந்து - (15) -  பத்துப்  பேரில்   எட்டுப்  பேர்  மிதிவண்டி  வைத்திருக்கின்றனர் .   உலகஞ்  சுற்றுபவர்களுள்    இவர்களே  அதிகம்

      8 -- இத்தாலி - (10) -  உடைக்காக  எக்கச்சக்கமாய்ச்  செலவு  செய்பவர்கள்.

      9 -- லித்துவேனியா - (1) -   மொழி,   சமற்கிருதத்துடன்  மிக  நெருங்கிய  உறவு  உடையது

     10 -- போலந்து - (1) -- 97 %   பரப்பளவுகடல்  மட்டத்திலிருந்து   500  மீட்டருக்குமேல்  இல்லை.

      11 -- ஸ்பெயின் --(5) --ஆரஞ்சு  விளைச்சல்  அமோகம்.

       12 -- ஸ்வீடன் -- (1) --சொந்தப்  பெயர் ,   ஸ்வெரிட்ஜ். (ஸ்வேர்களின்  நாடு) . 8  ஆம்  நூற்றாண்டில்  இங்கு  வாழ்ந்த  மக்கள்  ஸ்வேர்.

       13 -- ஐக்கிய  அரசு , (U.K .) --(10) - லண்டன்  நாடாளுமன்றக்  கட்டடத்தின்  கடிகாரம்  பெஞ்சமின்  ஹால்  (Benjamin Hall) என்ற  ஒப்பந்தக்காரரால்  அமைக்கப்பட்டதுஅவர்  பருத்தவர்  ஆதலால்,  'பிக்  பெஞ்சமின்'  (Big  Benjamin)  எனப்பட்டார்; சுருக்கமாய்  பிக் பென்அதுவே  கடிகாரத்தின்  பெயராயிற்று.

                                                =================================

Sunday, 7 June 2015

ரோமானியரின் இன்னொரு கொடை

       


 இப்போதைய இராக்கில் மிகப் பழங் காலத்தில் வாழ்ந்த சுமேரியர்களின் மன்னன் அம்முராபி (Hammurabi) -- பொ.யு.மு. 21 ஆம் நூற்றாண்டு -- உலகில் முதன்முதலாய்ச் சட்டங்கள் இயற்றியவன்; 282 ஷரத்து கொண்ட அவை எவ்வாறு அமல்படுத்தப்பட்டனவோ,தெரியாது; அரசனே நீதிபதியாய் இருந்திருப்பான்.

  அடுத்ததாக, சட்டம் பிறப்பித்தவர்கள் யூதர்கள்; அவர்களின் சட்டங்கள் விவிலியம் லேவியராகமம் அதிகாரம் 19, 20 இல் எழுதப்பட்டுள்ளன; இவற்றின் காலம் பொ.யு.மு. 13 ஆம் நூற்றாண்டு; இங்கும் வேந்தனே நீதிபதி. அரசன் சாலமன் சிறந்த முறையில் நீதி வழங்கினதாய் அறிகிறோம். இருந்தாலும் விசாரணை, சாட்சிகள் முதலியவை குறித்துத் தகவல் கிடைப்பதால் யூதரின் நடைமுறை சுமேரியருடையதைக் காட்டிலும் மேம்பட்டது எனத் தெரிகிறது.

 இக்காலத்தில் நீதித் துறை என ஒன்று, உலகின் எல்லா ஜனநாயக நாடுகளிலும் இயங்குகிறது; எழுதப்பட்டுள்ள சட்டங்களின் அடிப்படையில் குற்றப் பத்திரிகை, விசாரணை, வாதப் பிரதிவாதம் முடிந்து தீர்ப்பு வழங்கப்படுகிறது. இந்த முன்னேற்ற நடைமுறையானது பாருக்கு எழுத்தறிவித்த ரோமானியரின் இரண்டாம் கொடை.

 ரோமானியரின் ஆட்சியில், மேலவை (செனேட்) என்ற சபை, சட்டங்களை உருவாக்கிற்று; சட்டம் பயின்றவர்கள் வழக்குரைஞர் ஆயினர். ஆரம்பத்தில் எழுத்து வடிவம் பெறாதிருந்த சட்டங்கள் யாவும், பொ.யு.மு. 451 இல், பன்னிரண்டு வெண்கல ஏடுகளில் பொறிக்கப்பட்டுப் பாதுகாக்கப்பட்டன; அவை பல நூற்றாண்டுக் காலம் அமலில் இருந்தன. சிவில் சட்டம்,குற்றவியல் (க்ரிமினல்) சட்டம் எனப் பின்னர் பிரித்தார்கள்.

  பொ.யு.மு. 2 ஆம் நூற்றாண்டில், குற்றவியல் மன்றங்கள் தனியே அமைந்தன. நாட்டுக்கு எதிரான துரோகம், அதிகார முறைகேடு, பொதுப் பணம் கையாடல், கள்ள நாணயத் தயாரிப்பு, ஆவண மோசடி முதலியவற்றைக் க்ரிமினல் குற்றங்களாய்க் கொண்டு அவற்றுக்குத் தண்டனையாய், சவுக்கடி, நாடு கடத்தல், கைகால் வெட்டல், கொலைத் தண்டனை பெற்றவர்களை சிலுவையில் அறைதல் அல்லது சிங்கத்துக்கு இரையாக்கல் ஆகியவை விதிக்கப்பட்டன.

 கொலைத் தண்டனை அல்லது நாடுகடத்தல் தண்டனை விதிக்கப்பட்டோர் மேல் முறையீடு செய்யலாம்.

 நீதிபதிகளை மேலவை நியமித்தது; இவர்களுக்கு முக்கிய வழக்குகளில் உதவுவதற்கு  ஜூரிகள் சீட்டுக் குலுக்கல் முறையில் தேர்வானார்கள். சிறைக் கண்காணிப்புப் பணியைப் பட்டாளத்தாரிடம் ஒப்படைத்தனர்.

   பொ.யு. முதல் நூற்றாண்டில் முக்கிய சிவில் சட்டங்கள் அடங்கிய நூலொன்று வெளிவந்தது; அடுத்து விவரமான நூல்கள் தோன்றின. தேவைக்குத் தக்கவாறு புதுச் சட்டங்கள் பிறந்தன; பழையன நீங்கின அல்லது திருந்தின.

 சக்கரவர்த்தி ஜஸ்டினியன் (ஆறாம் நூ.) பதினாறு வழக்குரைஞர் கொண்ட குழுவொன்றை அமைத்துச் சட்டங்களைச் சீராக்கப் பணித்தார்; அது 11 ஆண்டு உழைத்துச் சுமார் 30 லட்சம் வரிகளில் விரிந்திருந்த சட்டங்களை ஒன்றரை லட்சமாய்த் தொகுத்தது. 'ரோமானிய சட்டத் தொகுப்பு' ( Digest Of Roman Law) என்கிற அது, உலகக் குடியரசு நாடுகள் யாவற்றுக்கும் நீதித் துறைக்கான வழிகாட்டி.

   ரோமானிய சட்டங்களுக்கு முக்கிய அடிப்படை இரண்டு:

   1 -- சட்டத்தின்முன் யாவரும் சமம்.

   2 -- குற்றவாளி தப்பிக்கலாம், நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது.

  இன்றைக்கும் இந்த அடிப்படை நீடிக்கிறது.

 1100 இலிருந்து பன்னாட்டு சட்ட வல்லுநர்கள் சட்டங்களைத் திருத்தியும் விரிவாக்கியும் மேம்படுத்தினர். அவை தொடக்கத்தில் ஐரோப்பா முழுதிலும் பின்பு அமெரிக்காவிலும் படிப்படியாய் அமலுக்கு வந்தன.

   ஆங்கிலேயர், பிரஞ்சியர் முதலானோர் ரோமானிய சட்டங்களைத் தத்தம் மொழியில் பெயர்த்தபோது, பற்பல லத்தீன் சொற்களையும் சொற்றொடர்களையும் மாற்றாமல் அப்படியப்படியே சேர்த்துக்கொண்டார்கள்.

    சிலவற்றின் பொருள்:

   -- அலிபி (alibi) - குற்றம் நிகழ்ந்த இடத்தில் தான் இல்லை என்பதற்கான சான்று.

   -- ஹேபியஸ் கார்ப்பஸ் (habeas corpus) - ஆள் கொணர் மனு.

   -- இன் கமேரா (in camera) - நீதி மன்றத்தில் அல்லாமல் தனியிடத்தில்.

   -- மலா ஃபிடே (mala fide) - கெட்ட நோக்கத்துடன்.

   -- போஸ்ட் மார்ட்டேம் (post mortem) - பிரேதப் பரிசோதனை.

   -- சப் ஜ்யூடிசி (sub judice) - கேஸ் விசாரணையில் இருக்கிறது.

   -- அல்ட்ரா வைரேஸ் (ultra vires) - உரிமை வரம்புக்கு அப்பாற்பட்ட.

     (பட்டியல் நீளமானது:  ad hoc, amicus curiae, bona fide, cui bono, de facto, de jure, interim, mutatis mutandi, persona non grata, prima facie, referundum, sine die, sine qua non, suo moto, veto)

     மரண வாக்குமூலம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். கண்ணால் கண்ட சாட்சி இல்லாவிட்டால், பாதிக்கப்பட்டவர் தமது சாவுப் படுக்கையில் வாக்குமூலமாகச் சொல்கிற எல்லாம் உண்மை என முழுமையாக ஏற்று அதை வழக்குக்கு முக்கிய ஆவணமாகக் கொள்வர். சாகப்போகிறவர் பொய் பேசமாட்டாரா? மாட்டாராம். ரோமானிய சட்ட வாக்கியம் கூறுகிறது:

   Nemo moriturus praesumitur mentire (யாரும் தமது உதட்டில் பொய்யோடு கடவுளைச் சந்திக்கமாட்டார்).

    இறுதியில் ஒரு லத்தீன் துணுக்கு:

  பொதுப்பணத்தைச் சுருட்டிய ஓரதிகாரி குற்றவாளிக் கூண்டில் நிற்கையில், அரசு வழக்குரைஞர் அவரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டுமெனத் தீவிரமாய் வாதாடினார். அவரது பெயர் கத்துலுஸ். (இதற்கு நாய்க்குட்டி என்றும் அர்த்தமுண்டு)

    ஒரு கட்டத்தில் எரிச்சலுற்ற அதிகாரி அவரை நோக்கி,

  "கத்துலுசே, ஏன் குரைக்கிறாய்?"

 என்று இரு பொருள்பட வினவிய  அடுத்த கணம் அவர் பதில் இறுத்தார்:

   "ஏனென்றால் திருடனைக் கண்முன் காண்கிறேன்" 

 (Catulle, quare latras?
 Quod prae me furem video).


               +++++++++++++++++++++++++