Friday, 10 August 2018

செய்திகள் பலவிதம்


1.ப்ரதி என்ற வடசொல் முன்னொட்டு ஒவ்வொரு என்னும் பொருளும் எதிர் என்னும் வேறு பொருளும் உடையது:


காட்டுகள்:
ப்ரதி மாதமும் – ஒவ்வொரு மாதமும்
ப்ரதி தினமும் – ஒவ்வொரு தினமும்
ப்ரதிவாதி – எதிர்வாதஞ் செய்பவர்

ப்ரதிபலன் – ஒரு நன்மைக்கு எதிர் பலன்.

2. அமோகம் என்பதும் வடமொழிதான். மோகம் = ஆசை; மோகம் = ஆசையில்லாமை. அமோக விளைச்சல் என்றால் இன்னம் வேண்டும் என ஆசைப்படத் தேவையில்லா அளவு விளைச்சல்.

3. முருகனுக்கு வேறு பெயர் விசாகன். இந்த வடசொல்லுக்குப்பறவை மேல் பயணிப்பவன்என்று அர்த்தமாம்.


4. இந்திய மாநிலங்களுள் ஒன்று, சத்தீஸ்கர். இந்த இந்திச்சொல்அறுபது வீடுஎன்று பொருள்படும்.

5. மலையாள மொழியில் புழ என்றால் ஆறு (நதி). ஆழப்புழ, மலம்புழ, பாரத புழல கேரளத்தில் இருக்கின்றன.

6, ஒலியின் அலகு bel. தொலைபேசியை உருவாக்கிய Alexander Graham Bell–இன் நினைவைப் போற்றுவதற்காக அந்தப் பெயரைச் சூட்டியுள்ளனர்.

7. Black market என்ற சொற்றொடர் இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் புழக்கத்துக்கு வந்தது. சீனி, மண்ணெண்ணெய் முதலிய அத்தியாவசியப் பொருள்களின் விலை எக்கச்சக்கமாய் ஏறிற்று. அவற்றை வேறிடத்தில் பதுக்கிவிட்டு வணிகர்கள், ‘சீனி இல்லை, மண்ணெண்ணெய் இல்லைஎன்றெழுதிய அட்டைகளைக் கடைகளில் தொங்கவிட்டார்கள். திருமணம் முதலிய நிகழ்ச்சிகளுக்கு வாங்கித்தானே ஆகவேண்டும்? கடைக்காரரிடம் ரகசிய பேரம் பேசி விலை நிர்ணயித்து சரக்கு பெற்றனர்.


-    Black market-இல் தான் வாங்க வேண்டும்.
-    எல்லாம் black-இல் கிடைக்கிறது.

என்றெல்லாம் மக்கள் பேசிக்கொள்வது சகஜமாயிற்று.

8.   பிரான்சின் தலைநகராகிய பாரீசின் பல்கலைக் கழகங்களில் பயிலும் பிரெஞ்சு மாணவர்கள் தங்களுக்குள் உரையாட ஒரு தனிமொழியைப் பயன்படுத்துகிறார்கள். அதற்கு அர்கோ (argot) என்று பெயர். அது பிரெஞ்சிலிருந்து பெரிதும் வேறுபடுகிறது. எடுத்துக்காட்டு: வேலை: பிரெஞ்சில் தீரவாய் (travail) அர்கோவில் புலோ (boulot)
அர்கோ – பிரெஞ்சு அகராதி உண்டு.

9.   குச்சிலு என்ற தெலுங்குச் சொல் நாட்டியக்காரரைக் குறிக்கும். அவர்கள் வாழ்ந்த ஊர் குச்சேலாபுரம் விஜயவாடாவுக்கு அருகில் உள்ளது. அங்குத் தோன்றிய நடனம் குச்சிப்புடி (14-ஆம் நூற்றாண்டு)

10. தெலுங்கிலக்கியம் 11-ஆம் நூற்றாண்டில் முகிழ்த்தது. நன்னய்யா என்பவர் வடமொழி மகாபாரதத்தைத் தழுவி ஒரு பகுதி இயற்றினார். ஆதலால் அவர்ஆதிகவிஎனப் பாராட்டப் படுகிறார். 13-ஆம் நூற்றாண்டில் திக்கண்ணாவும் அடுத்த நூற்றாண்டில் எர்ரண்ணாவும் மீதியைப் பாடி முடித்தனர்.

நன்னய்யா
11. நச்சுப் பாம்பை நல்ல பாம்பு என்பது சரியா? சரிதான். நல்ல என்பதற்குக் கொடிய, கடுமையான முதலிய வேறு பொருளும் உண்டு.

நல்ல மழைபலத்த மழை
நல்ல பசிதீவிரப் பசி
நல்ல உதைசெமத்தியான உதை
நல்ல பாம்புகொடிய பாம்பு

இது போன்றே நல்லா என்ற வினையெச்சமும் பல பொருள் தரும்.

ஒடம்பு நல்லா காயுது.
நல்லா வருது வாயிலே.

12. தமிழில் சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படும் என்று எண்ணிச் சொன்ன முதலறிஞர் யார்? யாராவது ஒரு தமிழராய்த் தான் இருப்பார் என்று நினைக்கிறீர்களா? அது தவறு. அவர் ஓர் இத்தாலியர், பெயர் வீரமாமுனிவர். தம் இலக்கண நூலாகிய தொன்னூல் விளக்கத்தில் எழுதியுள்ளார்.

வீரமாமுனிவர்
13. வியப்பு மேலீட்டால் மூக்கில் விரல் வைப்பது நம் காலத்தில் இருக்கிறது. இந்த வழக்கம் தலைமுறை தலைமுறையாக, நீண்ட நெடுங்காலமாகத் தொடர்ந்து வருகிறது என்பதை நற்றிணையால் அறிகிறோம்.

தலைவிக்கும் தலைவனுக்கும் இடையே ஏற்பட்ட ரகசியத் தொடர்பு ஊருக்கு அம்பலமாகிறது. பெண்கள் சிலர் கூடி இது பற்றி மூக்கில் விரல் வைத்துக் கருத்து பரிமாறிக் கொள்கிறார்கள்.

பா. 149. அடி 2
மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி

14. எங்கள் ஊராகிய காரைக்காலுக்கு 1940-க்குப் பின்புதான் பேருந்து வந்தது. ராமலிங்கம் என்ற பெயரைத் தாங்கிய ஒரு வண்டி காரைக்காலையும் நாகூரையும் (தெற்கே ஏழு மைல்) இணைத்தது. அதற்கு முன்பு நடந்துதான் போய்வந்தனர்
மூவர்நால்வராய் இருந்தால் வாடகைக் குதிரை வண்டியில் பயணித்தனர்.

15. காரைக்காலில் எண்பத்தைந்து ஆண்டுக்கு முன்பு அரசு மகப்பேறு மருத்துவமனை இயங்கத் தொடங்கிற்று. ஒரு கர்ப்பிணி கூட வராமல் ஈயோட்டிக் கொண்டிருந்தனர். வீட்டிலேயே மருத்துவச்சியின் உதவியால் குழவியீன்ற காலம். ஆண் டாக்டர்களிடம் மருத்துவம் பார்த்துக்கொள்ளப் பெண்கள் விரும்பவில்லைஇங்கு வந்து பிரசவம்  பார்த்துக் கொள்கிறவர்களுக்கு ஒரு சேலை இனாம் என்ற அறிவிப்பு உடனடியாய்ப் பலன் தரவில்லை.


(படங்கள் உதவி - இணையம்)

Sunday, 29 July 2018

கிரேக்கத்திலிருந்து




  மிகப் பழங்காலத்திலேயே கிரேக்க நாடுதான் அறிவியல், தத்துவம், இலக்கியம், கணிதம், சிற்பக் கலை, கட்டடக் கலை எனப் பற்பல துறைகளில் சாதனை படைத்துத் தலைசிறந்து விளங்கியது. இன்றைய வெள்ளையர்களின் பண்பாடு, நாகரிகம் முதலியவற்றுக்கு அடிப்படை அந்த நாடுதான்.

  குடியரசைத் தோற்றுவித்து உலகுக்குப் புதிய ஆட்சிமுறையை அறிமுகஞ் செய்த பெருமையும் கிரேக்கத்தைச் சாரும். பொ.யு.மு. 5-ஆம் நூற்றாண்டிலேயே அங்கு சட்டப் பேரவை, சட்ட மேலவை என இரு சபைகளுடன் கூடிய மக்களாட்சி இயங்கிற்று.

  ஒலிம்பிக் விழாக்களும் மாரத்தான் ஓட்டமும் கிரேக்கர் தொடங்கி நடத்தியவை என்பது உலகறிந்த செய்தி.

  ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் நிகழும் கர்னிவல் என்னும் விழாவுக்கு மூலம் கிரேக்கர் ஆண்டுதோறும் திராட்சை அறுவடைக் காலத்தில் Bacchus என்ற சாராயக் கடவுளைப் போற்றுவதற்காக நடத்திய கொண்டாட்டம்.

  கிரேக்க ஈசாப் கதைகள் பரவாத நாடு எது? இந்திய ஆரியர் போன்றே ஏராளப் புராணக் கதைகளை கிரேக்கர் கற்பனை செய்துள்ளார்கள். அவற்றைக் கருவாய்க் கொண்டு பார்புகழ் ஓவியர்களும் சிற்பிகளும் கலைநேர்த்தி ததும்பும் மகத்தான படைப்புகளை உருவாக்கியுள்ளார்கள். அவற்றுட் பெரும்பாலானவை பாரீசின் லூவ்ரூ (Louvre) அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுப் பன்னாட்டுச் சுற்றுலாக்காரர்களின் கண்ணையுங் கருத்தையும் காலங் காலமாய்க் கவர்ந்து அவர்களை ஆனந்தப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன.

Louvre Museum

  தங்கமலை ரகசியம் படத்தில் ‘ராஜா காது கழுதைக் காது’ நினைவிருக்கிறதா? அது ஒரு கிரேக்கப் புராணக் கதையின் தழுவலே;  (மிடாஸ்) என்ற மன்னனுக்கு அப்பொல்லோ கடவுள் இட்ட சாபம் கழுதைக் காது.

  அதையவன் பெரிய தொப்பியணிந்து மறைத்திருந்தான். முடி வெட்டிய தொழிலாளி அறிந்து கொண்டான்; வெளியில் சொன்னால் மரண தண்டனையாதலால் முடிந்தவரை ரகசியங் காத்தான். இயலாத நிலைமை வந்தபோது தரையில் பள்ளந் தோண்டி சொல்லிவிட்டு மூடினான்; ஆனால் மரங்கள் பெருங்குரலில் எதிரொலித்தன!

  கிரேக்க இதிகாசங்களாகிய இலியட், ஒடிசி இரண்டும் பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்பட்டு வாசிக்கப்படுகின்றன.
  இலியட் – 24 தொகுதி
  ஒடிசி – 24 தொகுதி
   
Homer
  பொ.யு.மு. 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹோமர் அவற்றை இயற்றினார். அவர் பார்வையற்றவர் என்று கூறப்படுகிறது; ஆனால் எழுத்துச் சான்று இல்லை.

  பொ.யு.மு. 5-ஆம் நூற்றாண்டில் 4 நாடகாசிரியர் சிறந்த நாடகங்களை இயற்றிப் புகழெய்தினர். அவற்றுட் சில பகுதிகளே கிடைத்தன. அவை:
  Aristophanes – 11 (மொத்தம் 40)
  Aeschylus   - 7  (70)
  Euripides   - 18  (92)
  Sophocles   – 7  (120)

  முதல்வர் இன்பியல் நாடகமும் மற்றவர் துன்பியல் நாடகமும் எழுதினர்.

  யூரிப்பிடீசும் சொஃபுக்ளீசும் எலக்த்ரா என்னுந் தலைப்பில் ஒரே கதையை நாடகமாக்கினர்; ஏழாண்டு பிந்தியது சொஃபுக்ளீசின் நூல். இலியட் தான் எலக்த்ராவுக்கு ஆதாரம்.

  கிரேக்கத் துன்பியல் நாடகங்கள் மனிதரின் உச்சக் கட்டச் சாதனைகள் என்று திறனிகள் மதிப்பிடுகிறார்கள்.

Aristotle

  அரிஸ்டாட்டில் பழங்கால மேதைகளுள் குறிப்பிடத் தக்கவர். (பொ.யு.மு. 384 – 322) அவர் 16-ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய அறிஞர்களால் உச்சிமீது வைத்து மெச்சப்பட்டார். மாவீரர் அலக்சாந்தரின் குருவாய் விளங்கிய அவர், இயற்பியல் உயிரியல் விலங்கியல் முதலான அறிவியல் துறைகளில் மட்டுமன்றிக் கவிதை, தத்துவம், இசை ஆகிய வேறு களங்களிலும் ஆழங்கால்பட்டு அவை குறித்து நூல்கள் இயற்றியவர். “பூமியைக் காட்டிலும் சூரியன் பெரியது” என்பது முதலிய பற்பல உண்மைகளை அறிவு ஆராய்ச்சிகளால் கண்டுபிடித்து எழுதியவர். ஆகவே பிற்கால அறிவுஜீவிகளுக்கு எதைப் பற்றி ஐயந்தோன்றினாலும், தாமே ஆய்ந்து பார்க்க எண்ணாமல் அரிஸ்டாடிலின் கருத்து என்ன என்பதையறிந்து அதை வேத வாக்காய்க் கொண்டு, அப்போதைய அறிவுலகின் பொது மொழியாய்த் திகழ்ந்த லத்தீனில் Aristoteles dixit என்று சொல்லிச் சந்தேகந் தீர்த்துக் கொள்வது வழக்கமாய் இருந்தது. அந்தச் சொற்றொடருக்கு, “அரிஸ்டாட்டில் சொல்லியிருக்கிறார்” என்பது பொருள்.

  அந்த மாமேதை சில பிழைக்கருத்துகளையும் வெளியிட்டுள்ளார். காட்டு: “ஆண்களை விடப் பெண்களுக்குப் பல் எண்ணிக்கை குறைவு.”
  ஆனைக்கும் அடி சறுக்கும்!

Polybius

   Polybius பொ.யு.மு. 2-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்கர். உலகத்தின் முதல் வரலாற்றறிஞர் எனப் போற்றப்படுகின்ற அவரது நூல் “வரலாறு” என்னுந் தலைப்பில் 40 தொகுதி கொண்ட பிரம்மாண்ட படைப்பு. இதன் பெரும்பகுதி ரோமானியரின் வரலாற்றை விவரிக்கிறது.

  முதலைந்து தொகுதிகள் முழுமையாய்க் கிடைத்தன; 17,19, 37, 40 அடியோடு அழிந்தன; எஞ்சியவை அரைகுறையாய் மிஞ்சின.

Strabo

  உலகின் முதல் புவியியலறிஞரும் கிரேக்கரே. பெயர் Strabo (பொ.யு.மு. முதல் நூ.) 17 தொகுதிகளாய் விரிந்த புவியியல் நூலுக்கு அவர் ஆசிரியர்.

  தொகுதி 1, 2 : பொதுத் தகவல்கள்
         3 – 10 : ஐரோப்பா
         11 – 16 : ஆசியா, இந்திய சாமியார்கள் பற்றியும் எழுதியுள்ளாராம்.
            17  : ஆப்பிரிக்கா

  உலகம் உருண்டை என்று தெரிவித்த மேதை Strabo.

  ஊர்தி வசதிகளும் தகவல் தொடர்பு வசதிகளும் இல்லாத காலத்தில் இத்தகைய நூல்களை இயற்றுவதற்கு எவ்வளவு கடின உழைப்பு தேவைப்பட்டிருக்கும்!
 
(படங்கள் உதவி - இணையம்)

Monday, 16 July 2018

மயிலு


நூல்களிலிருந்து – 19
(கோவை சதாசிவம் 2014-இல் வெளியிட்ட 
'மயிலு' என்ற சிறு நூலிலிருந்து 
சில தகவல்களைப் பதிகிறேன்.)




1.  வடகிழக்குப் பருவ மழை தொடங்குங் காலத்தில் மயில்கள் இனச் சேர்க்கைக்கு ஆயத்தமாகின்றன. மழைப் பொழிவிற்குப் பிறகுதான் புற்களும் செடிகளும் முளைக்கின்றன; அவற்றால் புதர்கள் உருவாகும். முட்டையிடவும் பாதுகாக்கவும் புதர்கள் அரண் போல் உதவும். புற்களையும் செடிகளையும் மொய்க்கும் புழு பூச்சிகள் குஞ்சுகளுக்கு உணவாகும்.

  இனப் பெருக்கக் காலத்தில்தான் ஆணுக்கு நீண்ட தோகை வளரும். பெட்டைகளைக் கவரத் தோகை விளம்பரம் அவசியம். நான்கைந்து பெண் மயில்கள் மேயுமிடத்தில், தோகை விரித்தபடி அசைந்து கொண்டிருக்கும் ஆண், பெண்கள் பார்க்கும்வரை, தோகையை மூடாமல் முன்னும் பின்னுமாய்ச் சுற்றும். உடல் எடையைச் சமன்படுத்திக்கொள்ள அடிக்கடி தோகையைச் சிலிர்க்கும். கால்களை அங்குமிங்கும் மாற்றியபடி நகரும்.

   சில நேரங்களில், அரிதாக, மூன்று நான்கு ஆண் மயில்கள் தோகை விரிக்கும்; அப்போது ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும். வலக்காலில்தான் பலம் உள்ளது. அந்தக் காலால் கடுமையாய் உதைபட்ட மயில் பின்வாங்கிவிடும்; வென்ற ஆண் களிப்பில் பெருங்குரலில் அகவியவாறு தன் தொண்டைப் பகுதியைக் கொத்திக் கொள்வதும் உண்டு.

  எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த பெட்டை அதனருகில் செல்லும்.

   இனச் சேர்க்கைக் காலம் முடிந்ததும் ஆண் மயில்கள் வால் பகுதியின் மேலடுக்குகளில் வளரும் தோகையை ஐப்பசி கார்த்திகை மாதங்களில் உதிர்த்துவிடும். சிறகுத் தொகுதியைத் தூக்கிக் கொண்டு ஆண்டுமுழுவதும் வாழ்வது சிரமம். பறப்பதற்குப் பெருந்தடையாய் உள்ள தோகையைத் தம் அலகால் கொத்திப் பிடுங்கி எறியும். அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிதறிக் கிடக்கும் தோகைகளைச் சேகரிப்பவர்கள் அவற்றை விற்கிறார்கள்.

   பெண் மயில் முட்டையிட்டு 28 நாள் அடைகாக்கும். வெளிவருங் குஞ்சுகள் 2 மணி நேரத்தில் நடக்கவும் 9 நாளில் பறக்கவும் கற்றுக் கொள்கின்றன. ஆணா பெண்ணா என்பது இரண்டாண்டுவரை தெரியாது. குஞ்சுகள் உள்ள இடத்தில் பாம்பைக் கண்டால் மயில்கள் கூட்டாகச் சேர்ந்து விரட்டும். குஞ்சுப் பாதுகாப்புக்காகத் தான் மயிலுக்கும் பாம்புக்கும் பகையுணர்வு உண்டாகிறது. பாம்பைக் கொன்று மயில் உண்பது இல்லை, குஞ்சுகளுக்கு ஊட்டுவதுமில்லை.


2.   மயிலின் நடனத்தைக் குளிருக்கு நடுங்குவதாகப் பேகன் புரிந்துகொண்டார் என்பது அபத்தம். போர்வையை இழக்க வேண்டிய அவசியம் ஒருபோதும் பேகனுக்கு நிகழ்ந்திருக்காது. மிகக் கூச்சமுள்ள பறவைகளுள் மயிலும் ஒன்று. மனிதனின் அண்மையை அது விரும்புவதில்லை; ஆடும் மயிலுக்கு அருகில் போக முடியாது. இயற்கைச் சூழலில் மயில்கள் நடனத்தைப் பதிவு செய்ய முடியாமல் உயிரியல் பூங்காவில் படமாக்கவேண்டிய நிர்ப்பந்தம் எனக்கேற்பட்டது. பேகனும் போர்வையும் அக்காலப் புலவன் பாடிப் பரிசில் பெறக் கலந்தடித்த மிகையான கற்பனைதான்.


3.   மூதுரையில், “கான மயிலாடஎன்று குறிப்பிடும் பறவை மயிலினமன்று. இந்தியாவில் மட்டும் வாழ்ந்த கானமயிலும் பெண் பறவையைக் கவர வாலை விசிறி போல் விரித்து இறக்கைகளைப் பரப்பிக்கொண்டு ஆடும்; ஆனால் மயிலாட்டத்தோடு ஒப்பிட முடியாது. கானமயில் முற்றிலும் அழிந்துபோய்விட்டது.


4.  அலெக்சாண்டர் இந்தியாவை ஆக்ரமித்தபோது மயில்களின் அழகில் மனத்தைப் பறிகொடுத்தார். நாடு திரும்புகையில் அகப்பட்ட மயில்களைக் கூண்டில் அடைத்து கிரீசுக்குக் கொண்டுபோனார். அவரால்தான் ஐரோப்பாவில் மயில்கள் பரவின.