Friday, 20 March 2020

நண்பர் மூவர்



  பிரஞ்சு ஆட்சியிலிருந்த திருநள்ளாறு அரசு தொடக்கப்பள்ளியில் நான் பிரஞ்சாசிரியராக 20-12-1952 இல் பணியேற்றேன்.

  பிரஞ்சிந்தியா என அழைக்கப்பட்டு வந்த புதுச்சேரி மாநிலத்தின் நிர்வாகத்தைப் பிரஞ்சுக்காரர்கள் இந்தியாவிடம் 1.11.54 இல் ஒப்படைத்துவிட்டு வெளியேறினர்.
 
  ஆட்சிமுறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. கல்வித்துறை முக்கிய சுற்றறிக்கை யொன்றை வெளியிட்டது;
 
  55-56 ஆம் கல்வியாண்டிலிருந்து பிரஞ்சுக்குப் பதிலாக ஆங்கிலம் கற்பிக்கப்படும்; அதற்கான ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். தமிழகத்தின் SSLC முறை பின்பற்றப்படும்.

  இந்த அறிக்கை ஒரு வினாவை எழுப்பிற்று:

  என்னைப் போன்ற பிரஞ்சாசிரியர்களின் கதி என்ன? நாங்கள் முதல் வகுப்பிலிருந்து எல்லாப் பாடங்களையும் பிரஞ்சைப் பயிற்றுமொழியாய்க் கொண்டு பயின்றவர்கள்; தமிழறிவு மிகக் குறைவு. நிரந்தரமாகிவிட்ட எங்களை வீட்டுக்கனுப்ப முடியாது; தமிழ்தான் கற்பிக்க வேண்டியிருக்கும் என ஊகித்தோம்: அதுதான் நடந்தது. அரைகுறைத் தமிழை வைத்துக்கொண்டு எப்படிக் கற்பிக்கப் போகிறோம் என்னுங் கவலை மூண்டது.

  பெரும்பாலோர் நோட்ஸ் உதவி கொண்டு சமாளிக்க வேண்டியதுதான் என முடிவு செய்தார்கள். வயதிற் குறைந்த என் போலுஞ் சிலர் புலவர்க்குத் தனிப்பட்ட முறையிற் படிக்கக் கருதினோம். 

  சேந்த்தான்ழ் (Saint Ange), ரெ.நா.சீனிவாசன், நான் ஆகிய மூவரும் ஒரே நாளில் விண்ணப்பம் அனுப்பிப் பாட நூல்களை வரவழைத்தோம்.

  நூலில் புறநானூற்றுப் பாடல் ஏழும் மனோன்மணீயப் பா ஒன்றும் இடம் பெற்றிருந்தன.

முதற் பா
முரசுகடிப் பிகுப்பவும் வால்வளை துவைப்பவு
மரசுடன் பொருத வண்ண னெடுவரை

எனத் தொடங்கிற்று. முரசு, வால் என்ற சொற்களைத் தவிர மற்றவை புதிர்.

  இதை எப்படிப் படிக்கப் போகிறோம் என்ற மலைப்பு ஏற்பட்டது. இயலாத காரியம் என சேந்த்தான்ழ் சொன்னார். சீனிவாசனும் நானும் என்ன ஆனாலுஞ் சரி, கற்றே தீர்வது எனக் கங்கணங் கட்டிக் கொண்டோம். எங்கள் பள்ளித் தமிழாசிரியர் புலவர் .அருணகிரி தைரியங் கொடுத்தார், உதவுவதாகக் கூறினார்; ஆனால் எங்கள் தீய பேறு! தம் சொந்த வூராகிய புதுச்சேரிக்கு மாற்றலாகி விட்டார்.

(அங்கே கம்பன் கழகத்தில் மும்முரமாய்ப் பணியாற்றிக் கம்பன் விழா நடத்திக் கம்பவாணர் என்ற விருதைக் காரைக்குடி சா.கணேசனிடமிருந்து பெற்றார்.)

  சீனிவாசன், “நாமிருவரும் சேர்ந்து படிக்கலாம்என்று யோசனை சொன்னபோது எனக்குப் பகீர் என்றது! காரணம், மிக நல்லவரான அவரிடமிருந்த ஒரு கெட்ட பழக்கம்: பேச்சு, பேச்சு, பேச்சு! பேசத் தொடங்கினால் லேசில் முடிக்கவே மாட்டார்! நான் ஏதாவது பொதுக் கூட்டம் முதலிய பொதுநிகழ்ச்சிக்குப் போனால் சீனிவாசன் எங்கே அமர்ந்திருக்கிறார் என்பதைக் கவனித்துக் கூடுமானவரை எட்டப் போய் உட்காருவேன்: அவர் உடனிருந்தால் பேச்சாளர் சொல்வதை அல்லது நடைபெறுகிற நிகழ்ச்சியை நான் கேட்க நோக்க விடமாட்டார்; இவர் பேசத் தொடங்கிவிடுவார்!

  இப்படிப் பட்டவருடன் சேர்ந்து படிக்க இயலுமோ? ஆதலால், “ஒருவர்க்கு நேரங் கிடைக்கும்போது மற்றவருக்குக் கிடைக்காது; ஆகையால் சேர்ந்து படிப்பது சாத்தியமில்லைஎன்று கூறித் தட்டிக் கழித்துவிட்டேன்.

  தனித்தனியே படிக்கத் தொடங்கினோம்; அவ்வப்போது ஐயங்களை எழுப்பி, முடிந்தால் தீர்த்துக் கொள்வோம்; முடியாதபோது விட்டுவிடுவோம். எங்களைப் பார்த்து சேந்த்தான்ழும் கற்க ஆரம்பித்தார்.

  ஒரு நாள் நான் படித்துக் கொண்டிருந்தபோது அவர், “புலவர் பட்டத்துக்கு அதிக மதிப்பு கிடையாது; இதற்காக இவ்வளவு கஷ்டப்படுவது தேவையற்றதுஎன்றார்; நான், “பரவாயில்லை, தாய்மொழியை அறிந்துகொள்ள முடியுமல்லவா?” என்று மறுமொழி சொன்னேன். வேறொரு தடவையும் அதே கருத்தை அவர் முன்வைக்கவே, எனக்குக் கோபம் வந்தது; வெளிக்காட்டாமல், “உங்களை யார் படிக்கச் சொல்கிறார்கள்? விரும்பாவிட்டால் விட்டுவிடுங்களேன்என்றேன். பின்பு அவர் தலையிடவில்லை.

  சில நாள் கழித்துச் சொன்னார், “நான் நேரடியாக முதனிலைத் தேர்வுக்குப் படிக்கலாம் என முடிவு செய்திருக்கிறேன்.”

  (புலவர் பட்டம் பெற மூன்று தேர்வுகளில் தேறவேண்டும்: புகுமுகம் (entrance), முதனிலை (preliminary), இறுதிநிலை (final). SSLC அல்லது அதற்கு நிகரான சான்றிதழ் வைத்திருப்போர் (பிரஞ்சாசிரியர்களின் case இதுவே) புகுமுகம் எழுதத் தேவையில்லை. எங்களுக்கு அடிப்படைத் தமிழறிவு தேவை என்பதைத் தெரிந்து நாங்கள் புகுமுகத்துக்குப் படித்தோம்.)

  சேந்த்தான்ழ் சொன்ன புதுத் தகவலைக் கேட்டபோதுதான் அவரது வஞ்சக எண்ணத்தைப் புரிந்துகொண்டேன். இந்தப் படிப்பு வீண் என்றவர் அல்லவா? இப்போது புலவர் பட்டத்துக்கு மதிப்பு வந்துவிட்டதா? படிக்க விடாமல் தடுப்பதுதான் அவரது நோக்கமாய் இருந்திருக்கிறது; தம்மால் முடியாததை வேறொருவர் செய்துவிடக் கூடாது!

    அவர் முதனிலைத் தேர்வுக்குப் படிக்கவே யில்லை; விரைவிலேயே பிரஞ்சுக் குடியுரிமை பெற்று வேலையை ராஜிநாமா செய்துவிட்டுத் தம் சொந்த ஊராகிய புதுச்சேரி போய்விட்டார்.

  சீனிவாசனும் நானும் ஒரே முயற்சியில் புலவர் ஆனோம்; உயர்நிலைப் பள்ளிக்கு உயர்ந்தோம். பத்தாம் வகுப்புக்குத் தமிழ் பயிற்றுந் தகுதி யடைந்து மகிழ்ந்தோம்.

  தாய்மொழியின் சிறந்த இலக்கியங்களைப் படித்துச் சுவைக்கக் கிடைத்துள்ள வாய்ப்பு எவ்வளவு விழுமியது!

  மூன்று நண்பர்களும் காலமாகிவிட்டார்கள். 

  "நெருநல் உளனொருவன் இன்றில்லை"!

&&&&&




Tuesday, 10 March 2020

கண்டம்



  சோதிடர்கள் பயன்படுத்தும் கலைச் சொற்களுள் கண்டம் என்பதும் ஒன்று.

  உங்களுக்குத் தண்ணியிலே கண்டமிருக்கு. பரிகாரம் செய்யணும்

  இந்த ஜாதகருக்கு 52 வயசுலே ஒரு கண்டம் இருக்கு; அதத் தாண்டிட்டா அப்பறம் கவலையில்லை

என்றெல்லாம் சோதிடர் சொல்லக் கேட்டிருக்கிறோம்.

  உயிரைப் பறிக்கக்கூடிய ஆபத்துதான் கண்டம் எனப்படுகிறது.

  அடிக்கடி நோய் நொடிக் காளாகி நொந்து மீள்பவரைக் குறித்துப் பேசுகையில், “அவருக்கு நித்ய கண்டம் பூர்ணாயுசுஎன்று கூறுவார்கள். 

  சோதிடத்தில் நம்பிக்கை இன்மையால் நான் ஜாதகம் பார்த்ததே யில்லை. எனக்கொரு கண்டம் இருந்தது என்பது அனுபவத்தில் தெரிந்தது.

  1965 இல் என் மைத்துனர் (மனைவியின் தமையனார்) வீட்டுக்குக் குடும்பத்தோடு சென்று சில நாள் தங்கியிருந்தேன். மே மாதம், பள்ளி விடுமுறைக் காலம்.

  நாகூர் நாணயக்காரத் தெருவில் நடமாட்டம் குறைவு. ஒரு மாலைநேரம்; ஆறு மணி யிருக்கலாம். வீட்டருகில், வீதியோரமாய், நாற்காலி போட்டுத் தெற்கு நோக்கி அமர்ந்து காற்று வாங்கிக் கொண்டிருந்தேன். என் மூத்த மகன் (3 வயது) இடப் பக்கம் என்மீது லேசாய்ச் சாய்ந்தவாறு நின்றிருந்தான்.

  திடீரென, “அப்பா, பூச்சி வருதுஎன்றான். வலப்பக்கம் தெருவில் பார்வையைச் செலுத்தினேன்; பாம்பொன்று ஒரு முழத் தொலைவில் வந்துகொண்டிருந்தது. நான் சிலையானேன்; “அசையாமல் நில்லு!” என்று மகனிடஞ் சொன்னேன்.

  காலைச் சுற்றின பாம்பு கடிக்காமல் விடாதுஎன்பது அனுபவ மொழி.

  அது, தரையில் ஊன்றியிருந்த என் வலக்காலைச் சுற்றவில்லை; காலில் முட்டிவிட்டுத் தெற்கே திரும்பிப் பின்பு மீண்டும் கிழக்குப் பக்கமாய்ப் பயணித்து வீட்டின் மூன்று படிகளிலும் ஏறி சுவரை யொட்டிய ஒரு மூலையில் நின்று படமெடுத்தது.

  ஆகா! நல்ல பாம்பு!

  என் பார்வை அதன் மீதே பதிந்திருந்தது. சற்று நேரத்தில் அது தலை தாழ்த்தி ஊர்ந்து நிலையைத் தாண்டி உள்ளே போயிற்று. எங்கே போகிறது என்பதை யறிய எழுந்து சென்று கவனித்தேன். முற்றத்தின் ஓரத்தில் இருந்த சாக்கடைப் பள்ளத்தில் இறங்கி அதில் ஊர்ந்து, tunnel இல் புகுவது போல், மூடப்பட்டிருந்த பகுதியில் நுழைந்து விட்டது.

  எதிர்த்த வீட்டு சந்திர சேகரனைக் கூப்பிட்டு செய்தி சொன்னேன்; அவரும் இன்னொருவரும் வந்தனர். ஒருவர் நீளமான மூங்கில் கம்பொன்றைத் தெருப்பக்கத்திலிருந்து சாக்கடையில் செலுத்திக் குத்தினார்; பாம்பு முற்றம் வழியாக வெளியேறுகையில் அடிப்பதற்கு ஒரு கம்புடன் மற்றவர் தயாராய் நின்றார். எதிர்பார்த்தபடி எல்லாம் நடந்தது.

  தக்க நேரத்தில் பாம்பு என் மகனது கண்ணிற் படாமலிருந்தாலோ, அவன் உடனே எச்சரிக்காவிட்டாலோ, நான் காலை ஆட்டியிருக்கக்கூடும்; அது கொத்தியிருக்கலாம்.

  பாம்புக்கும் எனக்கும் ஒரே சமயத்தில், ஒரே இடத்தில் கண்டம்: நான் மீண்டேன், அது மாண்டது.

&&&&&

Sunday, 1 March 2020

ஊஞ்சல்




  
  எண்பது ஆண்டுக்கு முன்பு வரை திருமணத்தன்று மாலையில் ஊஞ்சல் என்றொரு நிகழ்ச்சி நடந்தது.

  இணையர் இருவரையும் ஊஞ்சலில் அமர்த்தி மாப்பிள்ளையைப் பழித்துக் கொழுந்தியும் பெண்ணைக் கிண்டலடித்து நாத்தியும் கேலிப் பாட்டுப் பாடக் குடும்பத்தாரும் உறவினரும் கேட்டு விமர்சித்துக் களித்தார்கள்.

  என் நினைவில் படிந்துள்ள சில அடிகள்:

அ) மாப்பிள்ளை சமர்த்தரடி
    சாப்பிடுவதில்
    மாப்பிள்ளை சமர்த்தரடி
    யானைமேல் ஏறென்றால்
    பானைமேல் ஏறுவார்.

ஆ) எலுமிச்சம்பழம் போல
    எங்க பொண்ணு அழகு
    எலி மூஞ்சி மாப்பிள்ளைக்கு

இ) மாமியார் வீடு போக
   எங்க அண்ணனுக்குப் பிடிக்காது
   மாமியார் வீடு போனால்
   மானங்கூடக் கெட்டுப் போகும்
   முதல் நாள் வாழையிலை
   ரெண்டாம் நாள் தையல் இலை
   மூணாம் நாள் கையிலே

ஈ) கோண மூஞ்சி மாப்பிள்ளைக்குக்
   கோட்டு சூட்டு வேணுமா
   சொர்ணத் தங்கம் போல ஒரு
   பொண்ணு கூட வேணுமா

  சிரித்து மகிழ்வதன்றிக் கோபம் யாருங் கொள்ளார். காரணம்: ஒண்ணுக்குள்ளே ஒண்ணு! அதாவது முறைப்பிள்ளைகள். சிறு வயதிலிருந்தே அடிக்கடி சந்தித்து அளவளாவிப் பரிகசித்து இன்புற்று வளர்ந்தவர்கள்.

  முறைப்பிள்ளை மணம் சிறிது சிறிதாய் வழக்கொழிந்தது.

&&&&&
(படம் உதவி இணையம்)