பேருந்து தோன்றாத, மிதிவண்டிகூட அரிதாய்த் தென்பட்ட, எண்பது ஆண்டுக்கு முந்தைய காலத்தில், அன்றாட வேலைகளுக்கு மக்கள் நடந்தே சென்றார்கள்; பத்து கிலோமீட்டருக்குள் அலுவல் முடிந்துவிடும்.
( சாலை விபத்து நிகழ இயலாத காலம்!)
செல்வர்கள் தத்தம் தரத்துக்கு ஏற்ப,
சொந்த ஒற்றைமாட்டு வண்டி, இரட்டைமாட்டு வண்டி, குதிரை வண்டி பயன்படுத்தினர்.
வாடகைக்கு மாட்டு வண்டி அல்லது குதிரை
வண்டி கிடைத்தது; அவசரத் தேவைக்கும் நோயாளிகளையோ
இயலாதவர்களையோ ஏற்றிச் செல்லவும் அது உதவிற்று. சுற்றுலா , அலுவல் நிமித்தப் பயணம் முதலியவை பற்றிய கற்பனைகூட யார்க்கும்
உதிக்கவில்லை. நீண்ட தொலை போகவேண்டிய கட்டாயம் எப்போதாவது ஏற்பட்டால் தொடர்வண்டி (ரயில்) கைகொடுத்தது.
புனிதத் தலங்களுக்குக் கூட்டமாய்க்
கூடிப் பாத யாத்திரை செய்தனர்.
அக்கம்பக்க ஊரில் பெண் அல்லது
மாப்பிள்ளை பார்க்க முதியோர், சிறுவர் உட்படச் சில குடும்பங்கள்
சேர்ந்து பயணிப்பது எப்படி? மாட்டு வண்டிகளை ஏற்பாடு
செய்துகொள்வர்.
( இப்போதுபோல் இரண்டொருவர் போய்ப்
பார்த்தோ, யாரும் பார்க்காமலோ, திருமண முடிவு செய்தால் உறவினர்களின் பகை உண்டாகும்)
வண்டிப் பயணம் வசதி அற்றது: கால்களை
மடக்கி முடக்கி உட்காரவேண்டும். சாலை உணவகம் முளைக்காத காலம் ஆகையால் உணவும்
குடிநீரும் வாழையிலை ஏடுகளும் கொண்டு செல்வார்கள்; புளிச் சோறும் தயிர்ச் சோறும் தான் மெனு, மாறாத மெனு. வண்டிகள் வரிசையாகப் போகும்; உரையாடிக் கொண்டே பயணிப்பார்கள்.
சாப்பாட்டு நேரம் வந்துவிட்டதா?
குளம் அல்லது ஆறு கண்ட இடத்தில் இறங்குவார்கள்.
(அப்போதெல்லாம் ஏராள நீர்நிலைகள் மக்களின் தேவையை நிறைவு செய்தன; நாளடைவில் அவை கட்டடங்களாய்ப் புதுப் பிறவி எடுத்துவிட்டன)
ஆளுக்கொரு இலையைக் கையில்
தாங்கிக்கொண்டு அதில் பரிமாறும் உணவை நின்றபடியே உண்பர். (கையேந்தி பவன் அப்போது
தோன்றியதுதான்)
எச்சில் இலைகளை எங்கே வேண்டுமானாலும்
எறிந்துவிட்டுக் குளத்து / ஆற்று நீரில் கை அலம்பிக்கொள்வர். இது அக்காலப்
பிக்நிக்; இதற்கெனத் தனியாய்த் திட்டமிடல் இல்லை;
பயணத்தின் இடையே இடம்பெறும்.
( தாள், ப்லாஸ்டிக் முதலியவற்றைக் கண்ட இடத்தில் வீசும் தற்காலப் பழக்கம்
வாழையடி வாழையாய்த் தொடர்கிறது. குறை கூறக் கூடாது, நாம் திருந்தவில்லை, முன்னேறவில்லை என்று; முன்னோர்க்கு மதிப்பளித்து அவர்களின் வழியைப் பின்பற்றுகிறோம்.)
வித்தியாசமான சிந்தனை... ஆனால் உண்மை...
ReplyDeleteபின்னூட்டத்திற்கு மிகுந்த நன்றி .
ReplyDelete