“சக்கரைப் பொங்கல் சாப்பிட ஆசையாய் இருக்குது, ஆத்தா.”
“எனக்கும் ஆசைதான், செஞ்சு தர, காசு இல்லியே! இந்த வயசுலே பாடுபடவும்
என்னாலே முடியலே. ஏதோ நீ குடுக்கிறதை வச்சு வயிறு கழுவுறோம்.”
“ சரி, சரி; மனக் கஷ்டப்படாதே. நம்ப நெலமை எனக்குத்
தெரியாதா? என்னமோ வாய் தவறிக் கேட்டுட்டேன்.”
“ தப்பே இல்லை; ஆசைப்படுறதை நல்லா தின்கிற வயசுதானே? ஒன்னோட கஷ்ட காலம் ஆய் செத்துட்டா, அப்பன் இருந்தும் புண்ணியம் இல்லை.”
“அப்பாவைப் பாத்து ரொம்ப நாள் ஆவுது,
ஆத்தா.”
“ஏன் பாக்கணும் அந்தப் பாழாப் போனவனை?
பாத்து என்னா ஆவப்போவுது? என்னோட உயிர் மாதிரி நெனச்சிருந்த பொண்ணைக் குடுத்தேன். என்னா
பாடுபடுத்தினான், படுபாவி பயல்? கொஞ்ச அடியா கொறைஞ்ச அடியா? எல்லாத்தையும்
தாங்கிக்கிட்டாள் புண்ணியவதி. நாலு வருஷம் நாலு யொகமாத்தான் இருந்திச்சு அவளுக்கு.”
பாட்டி புலம்பித் தீர்த்தாள்
ஒருபாட்டம்.
“போதும், போதும். கேட்டுக் கேட்டுச் சலித்துப்போன கதை!”
“என் மனம் ஆறலியே! கட்டை வேகிற
வரைக்கும் ஆறாது.”
“நேரமாச்சு; வேலைக்குப் போயிட்டு வரேன்.”
கிளம்பினான் சின்னப்பன் தேநீர்க்
கடைக்கு.
தந்தை சிங்காரம் பக்கத்துச் சிற்றூரில்தான்
வாழ்கிறான்; எலும்புருவ மனைவியையும் மூன்று வயது
மகனையும் மாமியார் வீட்டுக்கு விரட்டியவன் அவள் இறந்தபோது வந்தவன்தான்; இந்த ஏழு ஆண்டுகளில் பிள்ளையைப் பார்க்கக்கூட அவனுக்கு ஆசை
தோன்றவில்லை; பாசம் முளைக்காத பாலையே அவன் மனம்.
துன்பம் தொடர்கதையாவது அரிதல்ல: பாதை
தவறிய அரசு வேன் அந்தக் கடையையா முட்டவேண்டும்? ஏதோ நல்ல காலம்! உயிர்ச் சேதம் ஏற்படவில்லை; காயங்களுடன் தப்பின நால்வருள் சின்னப்பன் ஒருவன்.
இழப்பீட்டுத்தொகை 2000 ரூ. பெற அவனையும் பாட்டியையும் நற்பணி மன்ற உறுப்பினர் நகரத்துக்கு
அழைத்துச் சென்றார். தகப்பன் உயிருடன் இருப்பதால் அவனுக்குத்தான் கிடைக்கும் எனத்
தெரிந்தது.
அவனது பொறுப்பற்ற போக்கையும் சிறுவனை
வளர்க்கப் பாட்டி பட்ட அல்லல்களையும் அலுவரிடம் விவரித்தனர். பொறுமையாய்க்
கேட்கும் பண்பு வாய்ந்த அந்த அபூர்வ மனிதர் இரங்கினார்தான்; ஆனால் பயன்?
சட்டம் சட்டந்தான்; அது வளைந்து கொடுக்குமோ, ஏழைக்கு?
உண்மை தான்...
ReplyDeleteபின்னூட்டத்துக்கு என் மனமார்ந்த நன்றி .
Delete
ReplyDeleteவணக்கம்!
அழகிய பின்னல் அகத்தில் நிலைக்கும்
பழமாய் இனிக்கும் பதிவு!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
வருத்தமாய் உள்ளது.
ReplyDelete