திரைப்பட வருகைக்கு முற்பட்ட காலத்தில் தமிழர்களின்
பொழுதுபோக்குக்குப் பல நிகழ்ச்சிகள் பயன்பட்டுள்ளன;
வில்லுப்பாட்டு, பாவைக் கூத்து,
தெருக் கூத்து, காலட்சேபம், உபன்னியாசம், புராணக் கதை கேட்டல், நாடகம், சர்க்கஸ்.
கூத்து மிகப் பழமைய காலத்திலிருந்து தொடர்ந்து வந்த
நிகழ்வு;
“கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே”
(குறள்)
மேற்கண்ட நிகழ்ச்சிகளுள் பெரும்பங்கு நாடகத்துக்குண்டு.
பல நாடகக் கம்பெனிகள் உருவாகி ஊர் ஊராய்ப் போய்த்
தங்கித் தம் நாடகங்களை அரங்கேற்றி மக்களை மகிழ்வித்தன.
S.G.கிட்டப்பா, K.B.சுந்தராம்பாள் இணைந்து நடித்துப்
பெரும் புகழ் ஈட்டியிருந்தனர். செங்கோட்டை சிங்கம் எனவும் கொடுமுடிக் கோகிலம் எனவும்
அவர்கள் முறையே சிறப்புப் பெயரால் சுட்டப்பட்டனர். கிட்டப்பா மிக உரத்த குரலில் பாடுவாராம்.
அவரது இசைத் தட்டுகள் சில நான் கேட்டதுண்டு:
- காண்டீபன் மைத்துனா
காளிங்கன் நர்த்தனா
-
அன்றொரு
நாள் குட்டி
அருஞ்சிறையில்
இட்டேன்
-
கோடையிலே
இளைப்பாற
(அருட்பா)
-
தாமதமேன்
தாளை நீ திறவாய்.
-
காமி
சத்தியபாமா
கதவைத் திறவாய்
பூமி புகழும் நேயன்
புழுதி யணிந்த வாயன்
நேமி வசந்தன் நானடி
-
தசரத
ராஜகுமாரா அலங்காரா
அதி தீரா சுகுமாரா
-
எல்லோரையும்
போலவே என்னை
எண்ணலாகுமோடி போடி
அவர் இள வயதில் இறந்து போனதும் சுந்தராம்பாள் நாடகத்தைத்
துறந்தார்.
மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, கன்னையா கம்பெனி,
F.G.நடேச அய்யரின் ரசிக ரஞ்சனி சபா, சங்கர தாஸ் சுவாமிகளின் தத்துவ மீன லோசனி சபா
(முக்கிய நாடகம் குலே பகாவலி), தமிழ் நாடகத் தந்தை என்று பெயர் வாங்கிய பம்மல் சம்பந்த
முதலியாரின் சுகுண விலாச சபா என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன்.
சம்பந்த முதலியார் வழக்குரைஞராயும் நீதிபதியாயும்
பணியாற்றியவர். சொந்தமாயும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தும் ஏராள நாடகங்களை இயற்றியதுடன்
நடிக்கவுஞ் செய்திருக்கிறார். இவரது சபாபதியும் மனோகராவும் திரைப்படமாயின.
1. மதுரை தேவி பால விநோத சங்கீத
சபா.
முக்கிய நாடகங்கள்:
-
இன்ப
சாகரன்
-
பக்த
ராமதாஸ்.
இதில்
நவாபாய் நடித்த முதலாளி, “நவாப் ராஜமாணிக்கம்” என அறியப்பட்டார்.
-
அய்யப்பன்
இதுவே சபரிமலைப் பயணத்துக்குத் தூண்டுதல்
2. T.K.சங்கரன்,
T.K.முத்துசாமி, T.K.ஷண்முகம், T.K.பகவதி ஆகிய 4 உடன்பிறந்தாரின் ஷண்முகா நந்த சபா.
நால்வரும் மேனகா என்ற திரைப்படத்தில் நடித்தனர்.
T.K.ஷண்முகம் “ஓர் இரவு” படத்தின் நாயகன். பகவதி ராமாயணத்தில் ராவணன்.
இவர்களின் பிரதான படைப்புகள்:
ராஜ ராஜ சோழன்,
குமாஸ்தாவின் பெண், முள்ளில் ரோஜா, மனிதன், ஔவையார்.
மனிதன் திரைக்கு வந்தது. ஔவையாய் நடித்தவர் ஔவை
ஷண்முகம் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். இதைக் கருத்திற் கொண்டு ஒரு படத்துக்கு “ஔவை
ஷண்முகி” எனப் பெயர் சூட்டப்பட்டது.
3. சக்தி நாடக
சபா. இதன் புகழ் வாய்ந்த நாடகமாகிய கவியின் கனவில் S.V.சுப்பையா நாயகனாகவும் M.N.நம்பியார்
வில்லனாயும் நடித்தனர்.
4. M.R.ராதாவின்
கம்பனி சமூக சீர்திருத்தக் கருத்துகளைப் புரட்சிகரமாய்ப் பரப்பியது. தூக்கு மேடை, ராமாயணம்,
ரத்தக் கண்ணீர் நாடகங்கள் குறிப்பிடத் தக்கவை. பின்னது திரையில் வந்தது.
அரசின் தடையுத்தரவுகளுக்கு அடிக்கடி ஆளாகியும் மனந்
தளராமல் நாடகம் நடத்தினார் ராதா.
எல்லாக் கம்பனிகளிலும் பெண் பாத்திரங்களில் ஆண்களே
நடித்தனர். ஹீரோ, ராஜ பார்ட் எனவும் ஹீரோயின், ஸ்திரீ பார்ட் என்றும் வில்லன், கள்ளப்
பார்ட் எனவும் குறிப்பிடப்பட்டனர்.
பாட்டுகளே அதிகமாய் இடம் பெற்றன. ஒலி பெருக்கியில்லாக்
காலமாதலால் கடைசி வரிசை ரசிகர்களையும் சென்றடையக் கூடியது பாடல் அல்லவா? பின்பாட்டு
வசதியும் இருந்தது.
ஆர்மோனியம் வாசித்துக் கொண்டு பின்பாட்டுப் பாடுவதில்
வல்லவர்கள் காதர்பாட்சாவும் K.S.தேவுடு அய்யரும்.
மேடையின் ஒரு ஓரத்தில் பின்பாட்டுக்காரர் பெஞ்சில்
அமர்ந்திருப்பார்; எதிரில் ஒரு மேசை மீது ஆர்மோனியம் வீற்றிருக்கும்.
நடிகர் பாடி நிறுத்தும் போதெல்லாம் பின்பாட்டுக்காரர்
அவர் பாடியதை மீண்டும் பாடுவார்.
இருவரும் இவ்வாறு சில அடிகளைப் போட்டி போட்டுக்
கொண்டு பாடுவதைக் கேட்டு ரசிகர்கள் பரவசத்தில் ஆழ்வார்கள்.
மக்கள் பெரிதும் விரும்பிய நாடகங்களுள் ஒன்று கோவலன்.
பல கம்பெனிகள் இதை நடத்தியிருக்கின்றன. சிலப்பதிகாரத்துக்கும் இதற்கும் வேறுபாடு உண்டு.
பாண்டிய மன்னன் தனக்குப் பிள்ளை வரமருளாத காளியின்
மீது கோபங் கொண்டு வழிபாட்டுக்குத் தடை விதிக்கிறான்; இதை யறியாத ஒரு வணிகன் விளக்கேற்றிக்
கும்பிட்டான்; சிரச்சேதம் செய்யப்பட்டான். காளி சூளுரை பொழிகிறாள்: “என் பக்தனைக் கொன்ற
மன்னனைப் பழி வாங்குவேன்.”
கண்ணகியாய்ப் பிறந்து கோவலனை மணக்கிறாள். இவன் கொலையுண்டதும்
கண்ணகி காளியாய் மாறி, “பழிக்குப் பழி கொடடா, பழிகாரப் பாண்டியனே” என்று பாடி சூலாயுதத்தால்
குத்திக் கொன்று சபதத்தை நிறைவேற்றுகிறாள். காளியாய் நடித்துப் புகழ்பெற்ற நடிகர்
N.ரத்னம் “காளி ரத்னம்” எனச் சிறப்புப் பெயர் பெற்றார்.
இரு பாடல்களின் சில அடிகள் நினைவில் பதிந்துள்ளன:
1.மாதவி வீசிய
மாலை கோவலன் கழுத்தில் விழுந்தது. அதை அவள் கேட்கிறபோது கோவலன் பாடுவது:
கழுத்தில் விழுந்த மாலை
கழற்ற முடியவில்லை
காரிகையே இது யார் சூதோ?
கத்தியும் ரம்பமும்
வாள்முனை மழுங்கக்
காரண மின்ன தென்றறியேனே.
2.மாதவியிடமிருந்து
கோவலனை மீட்பதற்காகக் கண்ணகி இறந்துவிட்டதாய்க் கடிதம் வருகிறது. அதைப் படித்த கோவலன்
பாடுவது:
பத்தினி கண்ணகியும் மாண்டாள்
என்று காகிதமும் வந்ததின்று.
கண் கலங்கி நோகலானேன்.
அன்னமே நான் போகாவிட்டால்
பந்தி போஜனம் விலக்கி
என்றனையே ஏசுவார்கள்.
ஒரு முழுப் பாட்டு:
நல்வாக்கு நீ கொடடி
நான் சிலம்பு விற்று வாரேன்.
செல்வாக்குட னிருந்தோம் – அந்தத்
தேவடியாள் கடனால் நொந்தோம்.
பத்தினிப் பெண்ணே – நல்வாக்கு
நீ கொடடி.
தேங்கா யுடைந்து விடும் – இந்தத்
திருவிளக்கு நின்றுவிடும்.
மாங்கா யழுகிவிடும் – நல்ல
மல்லிகைப் பூ வாடிவிடும் –
நான் வைத்த அடையாளங்கள்
இவை மாறாமல் தானிருந்தால்
செத்து மடியாமலே
திரும்பி நான் வருவேனடி
பத்தினிப் பெண்ணே – நல்வாக்கு
நீ கொடடி.
&&&&&
(படம் உதவி இணையம்)
இவையெல்லாம் பொக்கிச நினைவுகள் ஐயா... அறிய வைத்தமைக்கு நன்றி...
ReplyDeleteஉங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி .
Deleteபோகாதே போகாதே என்கணவா பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்
ReplyDeleteநல்வக்கு நீகொடடி நாலுநாளில் நா வருவேன் போன்ற சில பாடல்கள் நினைவுக்கு வருகின்றன
கட்டுரையின் தகவலகளுள் பெரும்பாலானவை உங்களுக்குத் தெரிந்திருக்கும்
Deleteபழங்கால நாடகங்கள் குறித்து எவ்வளவு தகவல்களை நினைவிலிருந்து மீட்டியிருக்கிறீர்கள். மிகவும் வியப்பாக உள்ளது. சில திரைப்படங்களில் இப்படியான நாடகக் காட்சிகளைப் பார்த்திருக்கிறேன். பின்பாட்டு பாடுபவர்கள், கட்டியம் கூறுபவர்கள் போன்றோரையும் பார்த்திருக்கிறேன்.
ReplyDeleteஇப்பதிவை வாசிக்கும் வரை ராஜபார்ட் என்பவர் ராஜாவாக நடிப்பவர் என்றும் கள்ள பார்ட் என்பவர் திருடர் வேடம் போடுபவர் என்றும்தான் நினைத்திருந்தேன். ஹீரோ, வில்லன் வேடங்கள் என்று அறிந்து வியந்தேன்.
கோவலன் நாடகம் வித்தியாசமான கதைக்களத்துடன் நடிக்கப்பட்டிருப்பதும் அதில் இடம்பெற்ற பாடல்களைத் தாங்கள் இன்றும் மறக்காமல் பகிர்ந்திருப்பதும் வியப்பளிக்கின்றன. காளி ரத்தினம், ஔவை ஷண்முகம் போன்ற பெயர்களைக் கேள்விப்பட்டிருக்கிறேன். காரணம் இப்போதுதான் அறிகிறேன்.
பழங்காலச் செய்திகள் அனைத்தும் வெகு சுவாரசியம். மிக்க நன்றி. தொடர்ந்து தங்கள் நினைவிலிருக்கும் இதுபோன்ற பழங்காலச் செய்திகளைப் பகிர்ந்து ஆவணப்படுத்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்.
விரிவான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி. ராஜபார்ட் ரங்கதுரை என்றொரு படம் வந்தது.அண்ணாதுரை இதே தலைப்பில் தம்மைப் பற்றித் தமது திராவிடநாடு வார இதழில் ( 1948 ) பெரியாருக்கும் தமக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு குறித்து ஒரு கட்டுரை எழுதினார் .அத் தலைப்பு படத்துக்கு சூட்டப்பட்டது.(அண்ணாதுரை - ரங்கதுரை )
Deleteதிரைப்படம் வருவதற்கு முன் மக்களின் பொழுது போக்கு பற்றி விரிவாய் அறிந்து கொண்டேன். இத்தனை ஆண்டுகள் கழித்தும் பாடல்களை நினைவு வைத்திருப்பது வியப்புக்குரியது. காளி ரத்னம், ஒளவை சண்முகம் பெயர்க்காரணம் இன்று தான் அறிந்தேன். சிலப்பதிகாரக் கதை வேறுவடிவில் நாடகத்தில் புழங்கியிருக்கிறது என்பது அறிந்து வியப்பு. ஆவணப்படுத்த வேண்டிய தகவல்கள். நன்றி.
ReplyDeleteகிட்டப்பா மிக உச்ச ஸ்தாயியில் பாடுவார் என்பதை , " எட்டுக் கட்டையில் பாடுவார் " என்பார்கள். சின்னத்தம்பி படத்தில் பிரபு , " ஏழு கட்டை எட்டுக் கட்டை தெரிஞ்சா நான் படிச்சேன் ? " எனப் பாடியது நினைவிருக்கலாம் . அந்தக் கட்டைகள் பற்றி இசை வல்லுநருக்கே தெரியும் .பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.
ReplyDelete1957 ஆம் ஆண்டு வெளிவந்த "கற்புக்கரசி" என்னும் தமிழ்த் திரைப்படத்தில் இதே பாடல் சிறிது வித்தியாசங்களுடன் வந்து நெஞ்சை வருடி சென்றுள்ளன.
ReplyDelete"நல்வாக்கு நீ கொடடி கண்ணே நல்வாக்கு நீ கொடடி நான் நாலு நாளில் வந்திடுவேன் செல்வக் களஞ்சியமே"
தங்களின் பழைய நினைவுகளை பகிர்ந்துகொண்டது அருமை நன்றி !
கற்புக்கரசி படம் பற்றிய தகவலைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
Delete