Saturday, 17 March 2012

அவன்? - பிரெஞ்சுச் சிறுகதை






(பிரெஞ்சுச் சிறுகதை மன்னர் கீத மொப்பசான் (Guy de Mauppasant) (1850-1893) அகாலத்தில் இறந்தமைக்குக் காரணம் மனநோய். இதன் அறிகுறிகள் அவருடைய பிற்கால கதைகளில் தென்படலாயின. அப்படிப்பட்ட கதைகளுள் ஒன்று 'லுயீ? (lui?- அவன்?) . இது 1883 ல் வெளிவந்தது. அதன் நேரடி மொழிபெயர்ப்பு இது.)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&



என் அருமை நண்பா, 

உனக்கு ஒன்றும் புரியவில்லையா? உன் நிலைமை எனக்குப் புரிகிறது. 

நான் பித்தன் ஆகிவிட்டதாய் நம்புகிறாயோ? நான் கொஞ்சம் பித்தனாய் இருக்கக் கூடும், ஆனால் நீ நினைக்கிற காரியங்களுக்காக அல்ல. 

ஆம், நான் மணஞ் செய்து கொள்கிறேன். அவ்வளவு தான். 

இருந்தாலும் என் கருத்துகளும் நம்பிக்கைகளும் மாறிவிடவில்லை. சட்ட பூர்வ மணம் ஒரு மடமை என்று நான் கருதுகிறேன். அந்த மடச்செயலைச் செய்வதற்கு என்னைத் தூண்டுகிற விபரீத, நம்ப இயலாக் காரணத்தை உன்னிடஞ் சொல்லத் தயங்குகிறேன். 

நான் மணம் புரிவது தனிமையைத் தவிர்ப்பதற்காக! 

அதை எப்படிச் சொல்வது, எவ்வாறு புரிய வைப்பது எனத் தெரியவில்லை. நீ என்மீது இரக்கப்படுவாய், அதே சமயம் என்னை இகழ்வாய். அந்த அளவு என் மனநிலை பரிதாபத்துக்குரியதாக இருக்கிறது. 

இரவில் இனிமேல் தனியாக இருக்க நான் விரும்பவில்லை. பேசக் கூடிய, எதையாவது சொல்லக் கூடிய ஒருவர் என்னருகில் நெருக்கமாக இருப்பதை நான் உணர விழைகிறேன். அவரது தூக்கத்தைக் கலைக்க என்னால் முடிய வேண்டும் என விரும்புகிறேன். திடீரென அவரிடம் நான் ஏதேனும் ஒரு கேள்வியை, முட்டாள்தனமான கேள்வியானாலும் சரி, வினவ வேண்டும், ஒரு குரலை நான் கேட்பதற்காக, என் வீட்டில் ஆள் உண்டு என்று உணர்வதற்காக, ஒருவர் விழிப்புடன் இருக்கிறார், சிந்திக்கிறார் என்பதை அறிவதற்காக, ஒரு மெழுகுவர்த்தியைத் திடீரென்று கொளுத்தி என்னருகில் மனித உருவம் ஒன்றைப் பார்ப்பதற்காக..... 

ஏனென்றால்.... ஏனெனில்.....(ஒப்புக் கொள்ள வெட்கமாக இருக்கிறது) தனியாக இருக்க அஞ்சுகிறேன். 

ஆபத்து எதையும் பற்றிப் பயமில்லை. எவனாவது நுழைந்தால் கொன்று விடுவேன் நடுக்கம் இன்றி. பேய் பிசாசு பற்றிப் பீதி கிடையாது. இயற்கைக்கு மாறான எதையும் நான் நம்பாதவன். இறந்தவர்களின் ஆவி குறித்த கிலியில்லை. சாகிறவர் அனைவரும் மிச்சம் மீதியின்றி அடியோடு அழிந்து விடுகிறார் என்பது என் திட முடிவு. 

அப்படியானால்! ஆமாம், அப்படியென்றால்?

எனக்கு அச்சம் என்னைப் பற்றியே தான். பயத்தைப் பற்றிப் பயம்; குழம்புகிற என் மூளையின் ஒழுங்கற்ற செயல்பாடு பற்றி உதறல். புரிந்து கொள்ள இயலாத ஒரு திகிலின் பயங்கர அனுபவம் பற்றி அரட்டி. 

எள்ளி நகையாடு, நீ விரும்பினால். இது வெறுப்புக்கு உரியது; சிகிச்சையற்றது. சுவர்கள், தட்டுமுட்டு சாமான்கள் அன்றாடம் கையாளும் பொருட்கள் எல்லாம் விலங்குகள் போல இயங்குவதாக எனக்குத் தோன்றுகிறது. யாவற்றுக்கும் மேலாக என் எண்ணங்களில் ஏற்படும் பயங்கரக் குழப்பம் பற்றியும், என் அறிவு கலங்கி இனம்புரியாத் தவிப்புக்கு ஆளாவதைப் பற்றியும் பீதியுறுகிறேன்.  

நான் பேசுகிறேன்! என் குரல் அச்சுறுத்துகிறது; நடக்கிறேன்! கதவுக்குப் பின்புறம், திரை மறைவில், அலமாரிக்குள், கட்டிலுக்குக் கீழே இங்கெல்லாம் இருக்கிற அறியாத ஒன்றைக் குறித்து அஞ்சுகிறேன். எங்கும் எதுவும் இல்லை என்பது எனக்குத் தெரியும் தான். 

கலவரம் அடைகிறேன், என் பெருங் குழப்பம் அதிகரிப்பதை உணர்கிறேன். எனவே அறைக்குள் முடங்குகிறேன். கட்டிலில் படுத்து மெத்தை விரிப்புக்குள் பதுங்குகிறேன். உடலைக் குறுக்கி உருண்டை போல் சுருண்டு நம்பிக்கையிழந்த நிலையில் கண்மூடிக் கிடக்கிறேன், நீண்ட நேரம். மேசைமேல் வர்த்தி எரிகிறது, அதை அணைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியும் அதற்கான துணிவில்லை. 

இந்த என் நிலைமை படுமோசம் அல்லவா 

முன்பெல்லாம் இந்த மாதிரி அனுபவம் சிறிதும் ஏற்பட்டதில்லை. வீட்டுக்கு நிம்மதியாக வருவேன். என் மனத்தெளிவை எதுவும் கெடுக்காத நிலையில் செயல்படுவேன். யாராவது நம்ப முடியாத, மடத்தனமான, கொடூர அச்சம் என்னைப் பிடித்தாட்டும் என்று அப்போது சொல்லியிருந்தால் பெரிதாய் சிரித்திருப்பேன். இருட்டில் கதவுகளைத் துணிவுடன் திறப்பேன், தாழ் போடாமலே கவலையின்றிப் படுப்பேன். எல்லாம் சாத்தியிருக்கிறதா என்று சரிபார்க்கப் பாதியிரவில் எழுந்ததேயில்லை. 

இந்தத் தொல்லை சென்ற ஆண்டு விசித்திரமான முறையில் தொடங்கிற்று. 

இலையுதிர் காலத்து ஈரமான மாலை வேளை. இரவு சாப்பிட்ட பின்பு, வேலைக்காரி போனதும், என்ன செய்யலாம் என்று யோசித்தேன். அறையில் குறுக்கும் நெடுக்கும் சற்று உலாவினேன். வேலை செய்ய இயலாமல், வாசிக்கக் கூட ஆற்றலற்றுக் காரணமின்றிச் சோர்வாய் இருந்தேன். சன்னல் கண்ணாடிகளை மழையின் சன்னமான துளிகள் நனைத்தன. உள்ளத்தில் துயரம், நம்மை அழத் தூண்டுகிற மனச்சுமையை இறக்கி வைக்க யாரிடமாவது பேச வேண்டும் என்று நம்மை உந்துகிற காரணமற்ற துயரங்களுள் ஒன்றில் ஆழ்ந்திருந்தேன். 

தனியனாய் என்னை உணர்ந்தேன். என்றுமில்லா அளவு வீடு சூனியமாய்க் காட்சியளித்தது. முடிவற்றதும் இதயத்தைப் பிசைகிறதுமான தனிமை என்னைச் சூழ்ந்தது. என்ன செய்யலாம்? அமர்ந்தேன். கால்களில் ஒருவிதப் படப்படப்பு உண்டாயிற்று. மறுபடி நடந்தேன். குளிரால் உடல் திடீரென நடுங்கியது. வெளியீரம் உள்ளே வந்துவிட்டது எனக்கருதிக் கணப்பை மூட்டினேன். சுவாலைகளைப் பார்த்தபடி உட்கார்ந்தேன். வெளியே போய் நண்பன் எவனையாவது பார்க்க முடிவு செய்து மூன்று பேர் வீட்டுக்குப் போனேன். ஒருவனையும் சந்திக்க இயலாமல் தெருவில் நடந்தேன், தெரிந்தவர் யாரையாவது பார்த்து விடுவது என்ற முடிவோடு. 

எங்கும் சோகச் சூழ்நிலை. நனைந்த நடைப்பாதைகள் ஒளி வீசின. நீரின் மித வெப்பம், திடீர் நடுக்கங்கள் உண்டாகும் படி குளிர் தரும் வெப்பம், மிக நுண்ணிய மழைத்துளிகளின் கனமான வெப்பம் சாலையை ஆக்கிரமித்துத் தெரு விளக்கின் ஒளியை மங்கச் செய்தது போலிருந்தது. 

லேசான அடியிட்டு நடந்தேன்; திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டேன்:"பேசுவதற்கு ஒருவனையும் காணமாட்டேன்". 

மதலேன் தேவாலயத்திலிருந்து புவாசோன்னியர் தெரு வரை பார்களைப் பலதடவை துருவினேன். சோக மனிதர்கள் மேசைகளின் எதிரில் அமர்ந்திருந்த கிளாஸ்களைக் காலி செய்வதற்குக் கூட சக்தியற்றவர்கள் போல் காணப்பட்டார்கள். 

நீண்ட நேரம் அலைந்து விட்டு நள்ளிரவில் இல்லத்துக்குத் திரும்பினேன்.

வீட்டில் நுழைந்தபோது நெருப்பு எரிந்து கொண்டிருந்தது. ஒரு மெழுகுவர்த்தியைப் பற்ற வைப்பதற்காக எடுத்தேன். நேரே பார்த்தபோது என் நாற்காலியில் யாரோ, முதுகு என்பக்கம் இருக்க அமர்ந்து தீயருகில் கால்களை நீட்டிச் சூடுபடுத்திக் கொண்டிருந்ததைக் கண்டேன். 

எனக்குப் பயம் ஏற்படவில்லை. என்ன நடந்திருக்கிறது என்பது பற்றிய எண்ணம் என் மூளையில் தோன்றிற்று. நண்பன் எவனோ என்னைக் காண வந்திருக்கிறான். காவலாளியிடம் சாவியை வாங்கிக் கொண்டு உள்ளே நுழைந்திருக்கிறான். 

அவனுடைய முடி என் பார்வையில் பட்டது. எனக்காகக் காத்திருந்தவன் தூங்கிவிட்டான். அவனை இரு கண்களாலும் தெளிவாய்ப் பார்த்தேன். எழுப்புவதற்கு நெருங்கினேன். வலக்கை தொங்கிக் கொண்டிருக்கக் கால் மேல் கால் போட்டிருந்தான். இடப்பக்கம் சற்றே சாய்ந்திருந்த தலை அவனது உறக்கத்தை நன்கு புலப்படுத்திற்று. 

"யாராக இருக்கும்?" எனக் கேட்டுக் கொண்டேன். அறையில் கொஞ்சந்தான் ஒளியிருந்தது. கையை நீட்டினேன் தோளைத் தொடுவதற்கு! கையில் பட்டது நாற்காலி! அதில் யாருமில்லை! வெற்று நாற்காலி! 

தூக்கி வாரிப் போட்டது! 

முதலில் பின்வாங்கினேன் பயங்கர ஆபத்தைக் கண்டது போல். பின்பு திரும்பிப் பார்த்தேன். முதுகுக்குப் பின்னால் யாரோ இருப்பதாய் உணர்ந்து. உடனே நாற்காலியை மறுபடியும் நோக்க வேண்டும் என்ற ஆழ்ந்த விருப்பம் என்னை மீண்டும் திரும்ப வைத்தது. பெருந் திகிலுக்கு ஆளாகி எந்தச் சிந்தனையும் இல்லா அளவுக்குப் பதற்றத்துடன் நின்றுகொண்டிருந்தேன், விழுந்து விடக் கூடிய நிலைமையில். 

ஆனால் நான் துணிச்சல் நிரம்பியவன். உடனடியாய் சிந்தனை மீண்டது.  

"உருவெளித் தோற்ற மொன்றைக் கண்டிருக்கிறேன். அவ்வளவே" என்று எண்ணினேன். உருவெளித் தோற்றந்தான். மறுக்க இயலா நிகழ்ச்சி. என் அறிவு ஒரு நொடியும் மங்கவேயில்லை. அதுபாட்டுக்கு ஒழுங்காயும் சரியாயும் இயங்கிக் கொண்டிருந்தது. ஆகவே மூளையில் கோளாறு இல்லை. கண்கள் மட்டுமே தவறு செய்து என்னை ஏமாற்றிவிட்டன.

அவை ஒரு காட்சியைக் கண்டுள்ளன. எதையும் நம்பக்கூடியவர்கள் அற்புதம் என்று கருதக் கூடிய ஒரு காட்சியை. பார்வை நரம்பில் சிக்கல், அவ்வளவு தான்; ரத்தக் கட்டாக இருக்கலாம். 

வர்த்தியை ஏற்றினேன், அதைக் கொளுத்துவதற்குக் கணப்பை நோக்கிக் குனிந்த போது உடல் உதறலை உணர்ந்தேன். பின்னாலிருந்து யாரோ தொட்டது போலிருக்கவே அதிர்ந்து நிமிர்ந்தேன்.

நான் நிம்மதியாக இல்லை நிச்சயமாய். 

சில அடிகள் எடுத்து வைத்தேன். உரத்த குரலில் பேசினேன். மெல்லிய குரலில் பாடினேன். கதவை இரட்டைப் பூட்டுப் பூட்டினேன். தெம்பு உண்டாயிற்று. இனி யாரும் உள்ளே வர இயலாது. உட்கார்ந்து நெடுநேரம் அந்தக் காட்சி பற்றி யோசித்து விட்டுப் படுத்து வர்த்தியை அணைத்தேன். மல்லாந்த நிலையில் சில நிமிடம் அமைதியாய்க் கிடந்த பின்பு நெருப்புப் பக்கம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் அரும்பவே ஒருக்களித்தேன். 

நாற்காலியின் கால்களுக்கு மட்டுமே ஒளி தரக்கூடிய அளவு தீ மங்கியிருந்தது. நாற்காலியில் அவன் அமர்ந்திருப்பது போல் தோன்றியது. தீக்குச்சியைச் சடாரெனக் கொளுத்திப் பார்த்தேன். யாருமில்லை. 

தூங்க முயன்றேன். கண்ணை மூடிய சிறிது நேரத்தில் அந்தக் காட்சி கனவாய் வந்தது. பதற்றத்துடன் எழுந்து வெளிச்சம் உண்டாக்கிக் கொண்டு கட்டிலில் குந்தியிருந்தேன். படுக்கத் துணிவில்லை. என்னை மீறி இருதடவை கண்ணயர்ந்தேன். இரண்டு தடவையும் அதே கனவு. பைத்தியம் பிடித்து விட்டதோ என நினைத்தேன்.

விடிந்த பின்பு நலம் ஏற்பட்டதாய்த் தெரிந்தது. நண்பகல் வரை நிம்மதியாய் உறங்கினேன். எல்லாம் முடிந்து விட்டது, முழுதும் முடிந்து போனது. எனக்கு வந்தது காய்ச்சலா, பயங்கரக் கனவா? தெரியவில்லை.

ஆக நோய்வாய்ப்பட்டு இருந்திருக்கிறேன். எனினும் அடி முட்டாளாய் இருந்தேன் என எண்ணுகிறேன். 

அன்று மகிழ்ச்சியாய் இருந்தேன். உணவகத்தில் சாப்பிட்டு விட்டு நாடகத்துக்குச் சென்றேன். பின்பு திரும்பி வந்து கொண்டிருந்தேன். ஆனால் வீட்டை நெருங்கிய போது ஓர் அசாதாரண பதற்றம் என்னைப் பீடித்தது. மீண்டும் அந்த அவனைப் பார்ப்பேனோ என்ற பயம். அவனைப் பற்றியல்ல, அதைத் தான் நான் சிறிதும் நம்பவில்லையே! ஆனால்

கண்களுக்கு மறுபடியும் ஏற்படக்கூடிய குழப்பம் பற்றி, உருவெளித் தோற்றம் பற்றி, அதனால் நான் அடையக் கூடிய கலவரம் பற்றிப் பயம். 

ஒரு மணி நேரத்துக்கு மேலாக, ஆளோடியில் இங்குமங்கும் நடந்தேன்; வடிகட்டிய மடமை என்று கடைசியில் தெரியவே உள்ளே நுழைந்தேன். மாடிப்படியேற முடியாதபடி நெஞ்சு படபடத்தது. ஒருவாறு ஏறிக் கதவின் எதிரில் பத்து நிமிடத்துக்கு மேல் தயங்கி நின்ற பின்பு திடீரெனத் துணிச்சலும் மனத்திண்மையும் உண்டாயின. 

சாவியை நுழைத்துத் திறந்தேன். வேகமாய் முன்னேறினேன், கையில் மெழுகுவர்த்தியுடன். கதவை ஓர் உதையால் சாத்திவிட்டுக் கலக்கத்தோடு கணப்பை நோட்டமிட்டேன். ஒன்றுமில்லை. "அப்பாடா".

எவ்வளவு ஆறுதல்! எத்தகைய பரவசம்! எப்படிப்பட்ட விடுதலை! உற்சாகத்துடன் நடமாடினேன். இருப்பினும் முழு நம்பிக்கை ஏற்படவில்லை. திடீர் திடீரெனத் திரும்பித் திரும்பிப் பார்க்க வேண்டியிருந்தது. மூலை நிழல்கள் சஞ்சலந் தந்தன. 

நல்லுறக்கமில்லை. கற்பனை ஒலிகள் கேட்டு அவ்வப்போது விழித்துக் கொண்டேன். ஆனால் அவனைக் காணோம். முடிந்தது!

அன்றிலிருந்து இரவில் தனிமை அச்சுறுத்துகிறது. அந்தத் தோற்றம் அங்கே, இங்கே, சுற்றுமுற்றும் இருப்பதாக உணர்கிறேன். மறுபடி காணவில்லை எனினும் அதைப் பற்றிய நினைப்பு என்னை வாட்டிக் கொண்டேயிருக்கிறது. 

யார் அவன்? உண்மையில் அவன் இல்லை என்பது தெரியும். என்னுடைய பயத்தில், என்னுடைய கலக்கத்தில் தான் அவன் இருக்கிறான். இப்படியெல்லாம் நான் சமாதானப்படுத்திக் கொண்டாலும் வீட்டில் தனியாக இருக்கப் பயம்தான்.  

இனி அவனை நான் காணமாட்டேன் என்பது தெரியும். அவன் மறுபடி தென்பட மாட்டான், இருப்பினும் அவன் இருக்கிறானே என் மனத்தில். கண்ணுக்குத் தெரியாவிட்டாலும் இருக்கிறான். கதவுகளின் பின்னால், மூடியிருக்கிற அலமாரியினுள்ளே, கட்டிலுக்கு அடியில், எல்லா இருண்ட மூலைகளிலும், எல்லா நிழல்களிலும். 

இது மடத்தனம், இது கொடுமை. தவிர்க்கவோ முடியவில்லை. 

வீட்டில் இருவராக இருந்தால் அவன் ஒழிந்து விடுவான். இது சர்வ நிச்சயம். ஏனென்றால் அவன் இங்கே இருப்பது நான் தனியாள் என்ற ஒரே காரணத்தால் தான்!

Tuesday, 13 March 2012

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்....



எந்த ஆட்சியிலும் தங்களுக்கு நன்மை விளையவில்லை எனக் கருதுகிற ஏழை எளியவர்கள்,  " ராமன் ஆண்டால் என்ன?  ராவணன் ஆண்டால் என்ன? " என்ற பழமொழியைச் சொல்லித் தங்களின் விரக்தியை வெளிப்படுத்துவார்கள். 

இந்தப் பழமொழிக்கு மூலம் கம்ப ராமாயணம்.
யுத்த காண்டம் - மூல பல வதைப் படலம். 

அரக்கரின் பென்னம்பெரிய படையைப் போர்க்களத்தில் பார்த்த மாத்திரத்தில் திகிலடைந்து தலை தெறிக்க ஓட்டம் பிடித்தது  இராமனின் வானரச் சேனை. அவனது கட்டளைப்படி அங்கதன் சென்று வானரர்களை அழைத்தபோது அவர்கள் வர மறுத்து

" அனுமன் , சுக்ரீவன்,  இராமன்,  இலக்குவன் ஆகியோரின் வலிமை தற்காப்புக்கே போதாதுஅவர்கள் எங்களை எப்படிக்  காப்பாற்றுவார்கள்ஆளை விடுங்கள். எங்களுக்கு உண்ணக் காய் கனிகள் உண்டுவாழக் குகைகள் உள்ளன.  உலகத்தை மனிதர் ஆண்டால் எங்களுக்கு என்ன?  அரக்கர் ஆண்டால் என்ன? " என்று வினவினார்கள். 

" மனிதர் ஆளின் என் இராக்கதர் ஆளின் என் வையம்?"
( வையம் - உலகம்) 

இதுவே சிறிது மாற்றம் பெற்றுப் பழமொழியாய்ப் புழங்குகிறது.

Tuesday, 6 March 2012

இயால்மாரின் இதயம்


  

ஸ்வீடன் நாட்டுத் தொன்மக் கதையில் ஒரு கட்டம்: 

இல்மேர் என்னும் மன்னனின் மகளும் இயால்மார் என்பவனுங் காதலர்கள். அரசனின் எதிர்ப்பு இருவரையும் இணைய விடவில்லை. வீரத்தால் காதலியை அடைந்துவிடலாம் என்ற முடிவுடன் சிறுபடை திரட்டிச் சென்றான் காதலன். முழுத் தோல்விதான் போர்க்களத்தில் கிட்டியது. அதன் பின் 

19 ஆம் நூற்றாண்டுப் பிரெஞ்சுக் கவிஞர் லெக்கோன்த் தலில் (Leconte de Lisle ) அந்தக் கட்டத்தை இயல்மாரின் இதயம் என்ற தலைப்பில் கவிதையாய்த் தீட்டியுள்ளார்.  

பிரெஞ்சு மூலத்திலிருந்து தமிழில் தருகிறேன். படித்துப் பாருங்கள்.



தெளிந்த இரவு, நடுக்குங் காற்று,

சிவந்த பனித்தரை,

ஆயிரம் மறவரங்கே ஆழ்துயில் கொள்ளுகின்றார்

கல்லறை இல்லாமலே.

வாளுண்டு கையிலே, ஒளியில்லை கண்ணிலே,

அசைவில்லை மெய்யிலே.

தண்மதி பொழிகிறது மங்கிய நிலவினை.



இயல்மார் சற்றே நிமிர்கிறான் ரத்தம்

உறைந்த உடல்களின்

இடையே வாள்மீது இருகையும் ஊன்றி.

"அடர்ந்த தோப்பிலே பறவைகள் போலவே

விடியலில் வையகம் அதிரவே பாடிச்

சிரித்துக் களித்த அத்தனைத் திண்டோள்

இளைஞரின் நடுவே

ஏன்'பா மூச்சுண்டா யாருக் கேனும்?"



இல்லை விடை. "என் தொப்பி உடைந்து நொறுங்கிற்று.

கவசமோ துளைபட்டு அதிலிருந்த ஆணிகளைச்

சுக்குநூ றாக்கிற்றுக் கோடரி. என்கண்கள்

சிந்துவது நீரா? செங்குருதி யன்றோ?

வா இங்கே, காக்கையே, மனிதர் தின்னி!

திறவுன்றன் இரும்பலகால் என்னெஞ் சத்தை.

எடுத்துச்செல் இதயத்தை இல்மேரின் புதல்வியிடம்,

சூட்டோடு சூடாக!



உப்சாலா வூரிலே உயர்தர மதுபருகிப்

பொற்கிண்ணம் உராய்ந்து பாடுகின்ற கும்பலில்

தேடென்றன் காதலியை.

புறாக்கூட்டம் உறைகின்ற கோபுரத்தின் உச்சியிலே

பால்வெண் உடலும் நீள்கருங் குழலுமாய்க்

காண்பாய் அவள் நிற்க.

வெள்ளி வளையங்கள் ஊசலிடுங் காதுகளில்.

அந்தி வெள்ளிக் கோளினும் அவள்விழிகள் மிகச்சுடரும்.



ஏகுவாய்! கருந்தூதா! யானந்தக் காரிகையைக்

காதலிக் கின்றேன் கழறுவாய் கன்னியிடம்.

இதோபார் இதயம் என்றே கொடுத்திடு.

அடையாளங் காண்பாள்; அதுசெக்கச் செவேலென்று

திண்ணியதாய்த் திகழ்கிறது, நடுங்கவில்லை,

வெண்ணிறமாய் மாறவில்லை என்பதனை நோக்கிப்

புன்னகைப்பாள் இல்மேரின் பொன்மகள் பறவையே!

Thursday, 1 March 2012

வாதம்



வாதநோய் பற்றி எழுதப்போகிறேன் எனத் தவறாய் நினைத்து மருந்தை எதிர்பார்த்து ஆர்வமுடன் வாசித்து ஏமாறாதீர்கள். 

விவாதம், தருக்கம் என்ற பொருளில் வாதம் என்னுஞ்சொல்லை ஆள்கிறேன். தமிழில் சொற்போர் எனப்படும். தொலைக்காட்சிப் பட்டிமன்றங்கேட்டிருப்பீர்கள். அவை மக்களைச் சிரிக்கவைக்கவேண்டும் என்ற நோக்கத்தில் ஒரு குழுவால் (இசைக்குழு போல) நடத்தப்படுகிற பொழுதுபோக்கு நிகழ்ச்சி. நகைச்சுவைத் துணுக்குகள் குட்டிக்கதைகள் சொல்லி (சில சமயம் தலைப்புக்குச் சிறிதுத் தொடர்பற்றவை)யும் ஒருவரையொருவர் கிண்டல் செய்துகொண்டும் காலம் போக்குவர். நல்ல கருத்துகள் அரிதாகவே தலைகாட்டும். பட்டிமன்றத்தை வாதத்தில் சேர்க்கலாகாது. 

முன்காலத்தில் காமன் பண்டிகை மாசி மாதத்தில் 15 நாள் கொண்டாடப்பட்டபோது, மன்மதனைச் சிவன் எரித்தார் என்றப் புராணக்கதையை அடிப்படையாகக் கொண்ட வாதம் அநேகமாய் நாடோறும் மாலை வேளையில் நிகழ்ந்தது. மன்மதன் எரிந்தானா இல்லையா என்பது கேள்வி. எரிந்த கட்சி, எரியாத கட்சி என்ற பெயரில் இருவர் டேப் கொட்டியபடி மாறிமாறிப் பாட்டுப்பாடி வாதிட்டனர். அதன் பெயர் லாவணி. அதையும் தருக்கத்தில் சேர்க்கக்கூடாது. யார் யாரோ எழுதிய புத்தகங்களில் உள்ள பாடல்களை மனப்பாடஞ்செய்து பாடுவார்கள். கருத்து, எதிர்க்கருத்து என்பதை எதிர்பார்க்க முடியாது. 

இருவர் ஒரு கருத்தைத் தலைப்பாக வைத்து ஒட்டியும், வெட்டியும் பேசுவது வாதம். அதில் நான்கு வகையுண்டு.


1.சம்வாதம் 

எதிரி சொல்வதையெல்லாம் கண்மூடித்தனமாக எதிர்க்காமல் ஏற்கத் தக்கவற்றை ஏற்று மேலே விவாதிப்பது அறிவுத் தெளிவுக்கு வழிவகுக்குமாதலால் இதை நல்லவாதம் என்கிறார்கள். 

1939 இல் கம்பராமாயணத்தை எரிக்கவேண்டும் என்று அண்ணாதுரையும், கூடாது என்று சொல்லின் செல்வர் சேதுப்பிள்ளையும் சேலத்தில் சொற்போரிட்டனர். பின்பொரு தடவை இரண்டாஞ்சொற்போர் அண்ணாதுரைக்கும், நாவலர் சோமசுந்தர பாரதியார்க்கும் (காலம், இடம் நினைவில்லை) இடையே நிகழ்ந்தது. இருவாத விவரங்களும் 'தீ பரவட்டும்' என்ற நூலில் உள்ளன. சம்வாதத்துக்கு அவை எடுத்துக்காட்டு. 

கற்றோரிடை நிகழ் குழு விவாதமும் (group discussion) சம்வாதமே.


2. கபிவாதம்


காட்டு:1 

வாதி: குடி குடியைக் கெடுக்கும்.

பிரதிவாதி: பிரம்மச்சாரியைக் கெடுக்காதா?  

(குடும்பத்தை விட்டு பிரம்மச்சாரிக்குத் தாவல்)



காட்டு:2 

வாதி: ஒளவை பாட்டில் குற்றம் இருக்கிறது.

பிரதிவாதி: சங்கப் பாடலிலும் உண்டு. 

(இங்கேயும் தாவல்தான்) 

கபி (குரங்கு) கிளைக்குக் கிளை, மரத்துக்கு மரம் தாவிச் செல்வது போல ஒருவர் ஒன்றைப் பற்றிப் பேசினால் மற்றவர் அதை விடுத்து வேறொன்றுக்குப் போவதால் இது கபிவாதம் எனப்படுகிறது. சாதாரண மக்கள் கபிவாதியை, 'ஏணின்னா கோணி என்கிறவன்' என்பார்கள். 

தாவித் தாவிக் கும்மாளம் போட கபிவாதிக்கு நிறையவே இடமுண்டு.  

பாருங்கள்: 'வண்டியிழுக்கும் நல்ல குதிரை' என்ற பாரதியாரின் பாடலைப் படித்ததும் கபிவாதிக்கு ஒரே குஷி! அவரைப் பிடித்துக் கொள்கிறார்: 

ஏன்'யா பாரதி!

1.கெட்ட குதிரை வண்டியிழுக்காதா?

2.குதிரை ஏர் உழாதா?

3.மாடுந்தான் வண்டியிழுக்கும்.

4.சில நாடுகளில் வண்டியைக் கழுதை இழுக்கிறது.

4.பனிப் பகுதிகளில் குதிரை இழுக்குமா? நாய்தான் இழுக்கும். 

பாவம், பாரதியார்!



3. சல்ப்பவாதம்

அ. தான் பேசுவது, மற்றவரைப் பேசவிடாமல் குறுக்கிடுவது.

ஆ. பிறர் சொல்வதற்குக் காது கொடுக்காமல் பேசுவது.

இரண்டும் சல்ப்பவாதம். 

இயல்பானதை (normal)ப் பேசாமல் இயல்பற்றதை(abnormal)ப் பேசுதலும் இதிற்சேரும். 

காட்டு:

1.முயலுக்கு 4 கால் என்றால்

நான் பிடித்த முயலுக்கு 3 கால் என்பது.

2.ஒரு கை விரல் 5 என்பதற்கு மறுப்பாகப்

பக்கத்து வீட்டுப் பையன் கையில் 6 என்பது.



4.விதண்டாவாதம் 

வாதி: விலைவாசி உயர்ந்துகொண்டே போகிறது.

பிரதிவாதி: இல்லை, குறைகிறது. 


வாதி: இதோ, நாளேடு; விலைவாசி விஷம் போல் ஏறுகிறது. எட்டுக்காலத் தலைப்பு.

பிரதிவாதி: பத்திரிகையில் வருவதெல்லாம் உண்மையல்ல.


வாதி: நேற்றுத் தொலைக்காட்சியில் விலைவாசி உயர்வு பற்றி ஒருவர் உரை நிகழ்த்தினாரே!

பிரதிவாதி: எவரோ பேசியதை ஏற்கவேண்டுமா?


வாதி: விலையேற்றத்தைக் கண்டித்து எதிர்க்கட்சி நாளை ஆர்ப்பாட்டம் நடத்தவிருப்பது தெரியுமா?

பிரதிவாதி: எதிர்க்கட்சிக்கு என்ன வேலை? வோட்டு வாங்குவதற்குத்தான் ஆர்ப்பாட்டமெல்லாம். அதற்கு ஏதாவது சாக்கு வேண்டுமே! அதான் விலைவாசி.


வாதி: இதோ பாருங்கள், போன மாதமும், இந்த மாதமும் வாங்கிய மளிகைப் பொருள் பட்டியல். இரண்டையும் ஒப்பிடுங்கள். உண்மை புலப்படும்.

பிரதிவாதி: நீங்கள் யாரோ கொள்ளைக்காரன் கடையில் வாங்கியிருப்பீர்கள்.


வாதி: சரி, விலை குறைகிறது என்று நீங்கள் சொல்வதற்கு என்ன ஆதாரம்?

பிரதிவாதி: என்னிடம் ஆதாரமில்லாததால் விலைவாசி குறையவில்லை என்று ஆகிவிடாது.


இவ்வாறு பிறருடைய ஆதாரங்களை ஏற்காமலும், தான் எந்த ஆதாரமும் காட்டாமலும் தன் கருத்தை வலியுறுத்துவது விதண்டாவாதம் என்னும் பிடிவாதம். 

சம்வாதம் ஒன்றுதான் நற்பயன் விளைக்கும். 


சரி, இழிவு செய்வது, உள்நோக்கங்கற்பிப்பது, திட்டுவது இவையெல்லாம் எதிற்சேரும்? 

அவை ஆள் தாக்கு (personal attack). கருத்து எதுவும் முன்வைக்க வக்கில்லாதவர்கள் கையாளும் உத்தி. வாத வகையில் சேரா. 

ஓர் ஐயம். கருத்தை விளக்கக் குட்டிக்கதை சொல்லலாமா? தாராளமாக. ஆனால் நாட்டெலியும், நகரத்தெலியும், எருதுகளும் சிங்கமும் போன்ற அறிவுபூர்வமான கதைகளாக இருக்கவேண்டும். 

கொக்குக் கதை ஒன்றுண்டு. பால் எப்படியிருக்கும் என்று பார்வையில்லாதவர் கேட்டால் தண்ணீர் போல என்று சாதாரண அறிவுடையோரும் சொல்வார். வெள்ளையாக இருக்கும் என்பவனை என்னென்பது? கண் தெரியாதவர் நிறம் அறியார். அவர் தவறாகப் புரிந்துகொண்டார் என்று முடிவு சொல்வது சரியன்று. தவறாய்ப் புரிந்துகொள்ள வைக்கப்பட்டார் என்பதே சரி. இப்படிப்பட்ட அறிவுக்கொவ்வாக் கதை ஆதாரமாக அமையாது.