Sunday, 22 April 2012

வாழ்க்கைப் பாடம்




(எனக்கு 10, 12 வயதிருக்கும். தெருவோரக் குடிசை ஒன்றின் முன் சிறு கூட்டம் கூடியிருக்கக் கண்டு அறியும் ஆவலுடன் ஓடிப் போய்ப் பார்த்தேன். ஓர் இளம் பெண்ணை ஒருவன் திட்டியபடியே விளக்குமாற்றால் அடிக்க, அவள் தடுத்துக் கொண்டு அங்குமிங்கும் நகர்ந்தாள். இரக்கப்பட்ட நான் இந்தக் கூட்டத்தில் யாராவது எதிர்ப்புக் குரல் கொடுக்க மாட்டார்களா என எண்ணினேன்.

என் எண்ணத்தை உணர்ந்தவர் போல் ஒருவர், “ஏன்யா இப்படி மூர்க்கத்தனமா அடிக்கிறே?” என்று கேட்ட போது என் மனம் ஆறுதல் அடைந்தது. சற்று நேரந்தான். அவன் திருப்பிக் கேட்டான்: நீ யார்யா கேக்குறதுக்கு? என் பெண்டாட்டியை நான் அடிப்பேன், கொல்லுவேன். உனக்கென்ன?”.

அதே கணம் அவள் பேசினாள்: எங்களுக்குள்ளே ஆயிரம் இருக்கும். இன்னைக்கு அடிச்சுக்குவோம், நாளைக்குக் கூடிக்குவோம். நீ என்னா கேக்குறது?” 

நான் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தேன். அந்தக் காட்சி மீண்டும் நினைவுக்கு வந்தது பல ஆண்டுகளுக்குப் பின்பு நான் ஒரு பிரெஞ்சு நாடகத்தைப் படித்த போது. தொடர்புள்ள காட்சியை மொழி பெயர்த்திருக்கிறேன்:-)  

 ***********************************************************

ஸ்கானாரேல் தன் மனைவி மர்த்தீனைக் கம்பால் அடிக்கிறான். 

ரொபேர்: அடாடா! அடாடா! சே! என்ன இது? எவ்வளவு மோசமான வேலை? மனைவியை அடிக்கிற மட்டமான ஆள் ப்ளேகில் போக! 

மர்த்தீன்:- (இடுப்பில் கைகளுடன் பேசியபடி முன்னேற, ரொபேர்
கொஞ்சங் கொஞ்சமாய்ப் பின்னால் நகர்கிறான்.)
அவர் என்னை அடிப்பதை நான் விரும்புகிறேன். 

ரொபேர்: அப்படியா? மனமார நான் ஏற்றுக் கொள்கிறேன்.

மர்த்தீன்:- உனக்கென்ன இதைப் பற்றி? 

ரொபேர்:- நான் சொன்னது தவறு தான். 

மர்த்தீன்:- இது உனக்குச் சம்பந்தப்பட்டதா? 

ரொபேர்: நீங்கள் கேட்பது சரிதான். 

மர்த்தீன்:- மனைவிகளைக் கணவன்மார் அடிப்பதைத் தடுக்க
விரும்புகிற நாகரிகம் இல்லாத ஆள். 

ரொபேர்:- நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். 

மர்த்தீன்:- இதிலே நீ தலையிட என்ன இருக்கிறது? 

ரொபேர்:- ஒன்றுமில்லை. 

மர்த்தீன்:- இதில் நீ மூக்கை நுழைக்க வேண்டுமா? 

ரொபேர்:- இல்லை. 

மர்த்தீன்:- உன் வேலையைப் பார். 

ரொபேர்:- நான் இனி வாயே திறக்கவில்லை. 

மர்த்தீன்:- அடி வாங்குவது எனக்குப் பிடிக்கிறது. 

ரொபேர்:- சரி. 

மர்த்தீன்:- உனக்கு இதில் ஒன்றும் நஷ்டமில்லை. 

ரொபேர்:- உண்மை தான். 

மர்த்தீன்:- ஜோலியில்லாத இடத்தில் நுழைகிற நீ ஒரு முட்டாள். (கன்னத்தில் அறைகிறாள்). 

ரொபேர்:- (கணவனிடம் சென்று) அன்பரே, உளமார உங்களிடம்
மன்னிப்பு கோருகிறேன். ஊம்! உதையுங்கள்! செம்மையாய்
அடியுங்கள்! நீங்கள் விரும்பினால் நானும் உதவுவேன்.  

ஸ்கானாரேல்: (இவன் முன்னேற, ரொபேர் முன்பு போலப் பின்
வாங்குகிறான்.) எனக்குப் பிடிக்கவில்லை. 

ரொபேர்:- ஆ! அது வேறு விஷயம். 

ஸ்கானாரேல்:- நான் விரும்பினால் அடிப்பேன், விரும்பாவிட்டால் அடிக்கமாட்டேன். 

ரொபேர்:- ரொம்பச் சரி. 

ஸ்கானாரேல்: அவள் என் மனைவி, உன் மனைவியல்ல. 

ரொபேர்:- சந்தேகமில்லாமல். 

ஸ்கானாரேல்: நீ எனக்கு உத்தரவு போட முடியாது. 

ரொபேர்:- சரி. 

ஸ்கானாரேல்: உன் உதவியும் எனக்குத் தேவையில்லை. 

ரொபேர்:- ரொம்ப மகிழ்ச்சி. 

ஸ்கானாரேல்:- பிறர் விஷயத்தில் தலையிடுகிற நீ நாகரிகம்
தெரியாதவன். 

(ரொபேரைக் கம்பால் அடிக்க அவன் ஓட்டம் பிடிக்கிறான்). 



(மொலியேர் (MOLIERE) இயற்றிய வலுக்கட்டாயமாய் வைத்தியன் ஆனவன்என்னும் நாடகத்தில் ஒரு காட்சி – 17 ஆம் நூற்றாண்டு)

(1987 டிசம்பர் மஞ்சரி இதழில் வெளிவந்தது)

Saturday, 14 April 2012

ஜூலியஸ் சீசர்




ரோம் வரலாற்றில் ஜூலியஸ் சீசருக்கு முக்கிய இடமுண்டு. 

அவர் மாவீரர் மட்டுமல்ல , எழுத்தாளருங்கூட . பிரான்சைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்ற அவர் , அதற்காகத் தாம்  நிகழ்த்திய போர்களை விவரித்து நூல் இயற்றியுள்ளார்;  அதன் தலைப்பு தே பெல்லோ கல்லிக்கோ (De Bello Gallico ) . 

உலகு முழுதும் பயன்படுகிற காலண்டரை உருவாக்கியவர் அவர்தான்;  12 மாதம் , 365 1/4 நாள் கொண்ட அது ஜூலியன்  காலண்டர் எனப்படுகிறது;  அதில் ஒரு மாதத்துக்குத் தமது பெயரை அவர் சூட்டினார்: அதுவே ஜூலை. 

4 ஆண்டுக்கு ஒரு லீப் ஆண்டு அதில் உண்டு.  

அந்தக் காலண்டர் நெடுங்காலத்துக்குப் பின்பு சிறுசிறு மாற்றங்கள் செய்யப்பட்டு இப்போது  கிரிகோரியன் காலண்டர் என்றழைக்கப்படுகிறது. 

தாயின் வயிற்றிலிருந்து குழந்தையை எடுப்பதற்குச் செய்யும் அறுவையை ஏன் சிசேரியன் என்கிறோம்? 

அவ்வாறு பிறந்த முதல் குழந்தை சீசர்தானாம் ; அதனால் அந்தப் பெயர். 

(Caesar - caesarian )


Tuesday, 10 April 2012

லத்தினின் வளர்ச்சியும் வீழ்ச்சியும்



(கொலோசியத்தில் காணப்படும் லத்தீன் கல்வெட்டு.
படம் உதவி : இணையம்)


பழங்காலத்திலேயே லத்தினுக்கு எழுத்து கிடைத்துவிட்டது. செய்யுள் இயற்றத் தேவையான அடி ஒன்றும் இருந்தது 

உரைநடையிலும் செய்யுளிலும் சிற் சில சிறு படைப்புகள் பிறந்தன; ஆனால் சொல்லிக்கொள்ளும்படியான சிறந்த இலக்கியம் உருவாகவில்லை. 

காரணம், ரோமானியர்க்குக் கற்பனை வளம் இல்லாமை. கிரேக்கரது தொடர்பு ஏற்பட்ட பின்பு அவர்களுடைய  இலக்கியங்களிலிருந்து உந்துதல் (Inspiration ) பெற்றுப் பலப்பல சொந்தப் படைப்புகளை எழுத்தாளர்கள் தோற்றுவித்தார்கள். 

அவற்றை அப்படியே மொழிபெயர்க்காமல் அல்லது தழுவாமல் ஒரு புது உத்தியைப் பயன்படுத்தினர். 

வெவ்வேறு மூலங்களிலிருந்து அங்கே கொஞ்சம் , இங்கே கொஞ்சம் என எடுத்து இணைத்துச் சொந்தச் சரக்கும் சேர்த்து  நூல் எழுதினர். பல்வேறு இலக்கிய வகைகள் அறிமுகமாகிச் சிறந்த புத்தகங்கள் வெளியாகி மொழிக்குச் செழுமை சேர்த்தன. 

முக்கிய படைப்பாளிகளைத் தெரிந்துகொள்வோமா? 

நாடகம்: என்னியுஸ்பிளவுத்துஸ். 

கவிதை: ஹொராசியுஸ்,  ஒவிதியுஸ். 

அங்கதக் கவிதை: யுவெனாலிஸ், லுசிலியுஸ். 

இதிகாசம்: வெர்ஜிலியுஸ். 

தத்துவம்: சிசரோ. 

வரலாறு: ஜூலியஸ் சீசர், சலுஸ்த்தியுஸ், தித்துஸ் லிவியுஸ். 

இலக்கணம்: வர்ரோ. 

ரோம் பேரரசு தென் ஐரோப்பா முழுதையும் அடிப்படுத்தியதால் பலவேறு மொழி பேசும் மக்களின் தொடர்பு ஏற்பட்டுப் பிறமொழி, சிறப்பாய் கிரேக்க மொழிச் சொற்கள் வரம்பின்றிக் கலந்து லத்தினின் தூய்மையைக் கெடுத்தன. சில எழுத்தாளர் இரு மொழியிலும் எழுதினர்வேறு சிலர், தாய்மொழியைப் புறக்கணித்துக் கிரேக்க மொழி மட்டும் பயன்படுத்தினர். 

இவ்வாறு லத்தின் சிறிது சிறிதாய்ப் புழக்கம் குறைந்து பின்பு மறைந்தே போயிற்று.

Thursday, 5 April 2012

நிபந்தனை




சில உடன்படிக்கைகளில் ஒரு மாத முன்னறிவிப்பு தரவேண்டும் என்னும் நிபந்தனை இடம் பெறுகிறது. 

இது ஆங்கில ஆட்சியால் தான் புகுத்தப்பட்டிருக்கும்; ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஒரு தமிழ் இலக்கியத்தில் காணப்படுவது வியப்பு தருகிறது. 

அசோக வனத்தில் சீதை தன்னிடம் விடை பெற்ற அனுமனிடம் கெடு விதித்தாள்:

இன்னும் ஒரு மாதம் காத்திருப்பேன்; அதற்குள் இராமன் வந்து என்னை மீட்காவிடில் உயிர் துறப்பேன் என அவனிடம் கூறு என்பது அவள் கட்டளை. 

" இன்னம் ஈண்டுஒரு திங்கள் இருப்பல்யான்
பின்னை ஆவி பிடிக்கின்றிலேன் ......." 

( இன்னம் இங்கு ஒரு மாதம் இருப்பேன் நான். பின்பு உயிர் தரிக்கமாட்டேன்) 

கம்பர் - யுத்த காண்டம் - சூடாமணிப் படலம்.