Thursday, 14 June 2012

பத்துக் குற்றம்



ஒரு நூலில் தவிர்க்க வேண்டிய குற்றங்கள் பத்து என நன்னூல் 12 ஆம் பா தெரிவிக்கிறது. அவை: 


1 - குன்றக் கூறல் - விரிவாகக் கூற வேண்டியதைக் குறைவாகக் கூறுதல். 

2 - மிகைபடக் கூறல் - துரும்பைத் தூண் எனல். 

3- கூறியது கூறல் - முன் சொன்னதையே மீண்டும் சொல்லுதல். 

4 - மாறுகொளக் கூறல் - முன்னுக்குப் பின் முரணாகக் கூறுதல். 

5 - வழூஉச் சொற் புணர்த்தல் - பிழையாக எழுதுதல். 

6 --மயங்க வைத்தல் - இதுவா அதுவா என வாசகர் அய்யுறும்படி எழுதுதல். 

7 - வெற்றெனத் தொடுத்தல் - இலக்கிய நயமில்லாத, பொருத்தமற்ற , சாதாரணச் சொற்களைப் பயன்படுத்தல். 

8 - மற்றொன்று விரித்தல் - ஒரு பொருள் பற்றி எழுதுகையில் இடையே வேறு பொருளுக்குத் தாவி அதை விவரித்தல். 

9 - சென்று தேய்ந்து இறுதல் - விரிவாய்த் தொடங்கியது போகப் போகக் குறுகிக் கடைசியில் சப்பென முடிதல். 

10 - நின்று பயன் இன்மை - ஆழ்ந்த கருத்தின்றி. வாசகர்க்குப் பயனற்றதை எழுதுதல்.

நன்னூலார் காலத்தில் இல்லாமல் பிற்காலத்தில் தோன்றிய இலக்கிய வகைகளான கதை,  கவிதை,  கட்டுரை முதலிய சிறு படைப்புகளுக்கும் இவ்விதி பொருந்தும். 

இக்காலத் தமிழ் நூல்களிலும் ஏடுகளிலும் குற்றங்கள் நிறையவே காணப்படுகின்றன;  இது மொழியைச் சீரழிக்கும் நிலை;  

ஆனால் இது பற்றிக் கவலைப்படாமல் தமிழை எப்படி வேண்டுமாயினும் எழுதலாம் எனக் கருதுகிற, "சுதந்தர", மனப்பான்மை உடையோர்க்குப் பஞ்சமில்லை. 

ஒரே யோர் காட்டுத் தருகிறேன்: 

14-8-11 தினமணி - பக். 8  " நான்மணிக் கடிகை - ஓர் அறிமுகம்" என்பது தலைப்பு. 

பத்தி 2 - வரி 1 :  நான்கு மணிகள் உள்ள ஆபரணம் என்று பொருள். 

அடுத்த பத்தி - வரி 2 :  நான்கு மணிகளால் ஆன ஆபரணம் என்று பொருள்படும்.

Friday, 8 June 2012

ஏமாளி இருக்கும்வரை ....


  

முத்துசாமி பெருஞ் செல்வரல்ல என்றாலும் கணிசமானோர் வறுமைக் கோட்டிலும் அதை ஒட்டியும் வதைபடும் இந் நாட்டில் அவரது சொத்தும் வருமானமும் தேவைக்கு மிஞ்சியவையே. 

அவருக்கு ஒரே மகன் கண்ணுசாமி. பட்டதாரி. வட்டாட்சியர் அலுவலகத்தில் மேல்நிலை எழுத்தர். தந்தையைப் போலவே உழைக்கும் மக்களின் நிறம். 

மகனுக்குப் பெண் பார்க்கத் திட்டமிட்டார் முத்துசாமி. மருமகளுக்கு இருக்க வேண்டிய தகுதிகளை நிர்ணயித்துக் கொண்டார்: சிவப்பு நிறம், பத்தாவதற்குக் குறையாத படிப்பு, அழகு, நல்ல குணம், எல்லாவற்றுக்கும் மேலாகப் பெருஞ் செல்வக் குடும்பத்து ஒரே பெண். மற்றவை குறைந்தாலும் பாதகம் இல்லை. இத் தகுதிதான் மிக முக்கியம். அப்போதுதானே நிறைய வரதட்சிணை, சீர், சொத்து முதலியன கிடைக்கும்? 

சட்ட விரோதமாயிற்றே வரதட்சணை வாங்குவது? ஆமாம், சட்ட விரோதந்தான். அது மட்டுந்தான் சட்ட விரோதமா? கொடுப்பதுந்தான். வாங்குவதும் குற்றம், தருவதும் குற்றம் என்று சட்டம் கூறும்போது அளிப்பவனும் வெளியே சொல்லமாட்டான், பெறுபவனும் சொல்லமாட்டான். இரு சாராரும் சட்டத்தை மீறி நடக்கட்டும். வரதட்சணை நீடூழி வாழட்டும் என்னும் நோக்கத்தில் நிறைவேறியது தான் அந்த சட்டமே யொழிய அதை ஒழிப்பதற்காக அல்ல என்பது முத்துசாமிக்கு நன்றாகவே தெரியும். 

சோதிடர் உறுதியாய் சொல்லியிருந்தார்: 

முத்துசாமி, நீங்கள் விரும்புகிறபடி மருமகள் கிடைப்பதற்கு ஆனி 18 கடைசி நாள். அதற்குள் மணவுறுதியாவது செய்துவிடவேண்டும்என்று. 

நாலரை மாத அவகாசமே இருந்தமையால் முத்துசாமி மிகத் தீவிரமாய் செயல்பட்டார். திருமண அமைப்பாளர்கள் மூலமும் தமிழ், ஆங்கில ஏடுகளில் விளம்பரம் வெளியிட்டும் பரபரப்பாய் முயன்றார். 

கெடு நெருங்கிக்கொண்டிருந்தது; ஆனால் பெண் அமைந்தபாடாய் இல்லை. ஓரம்சம் பிடித்திருந்தால் ஈரம்சம் சரியில்லை. எல்லாம் ஒத்திருந்தாலோ, பெண் வீட்டார்க்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை! 

விடாமல் பாடுபட்டும் தோற்றுப்போன முத்துசாமி ஒரு வழியாய்ப் பெண்ணொருத்தியை உறுதி செய்து திருமணத்தை நடத்த செய்தார். உறவினர், நண்பர்க் கெல்லாம் ஒரே வியப்பு! பெண் ஏழையாம்! முத்துசாமி ஏன் தம் குறிக்கோளைக் கைவிட்டார்? 

இதோ அவரே தம் நண்பரிடம் விளக்குகிறார்: 

"எத்தனையோ பெண் பார்த்தேன். அலைந்தலைந்து அலுத்துப் போனேன். சோதிடர் வைத்த கெடுவும் முடிந்துவிட்டது. அவரிடம் முறையிட்டேன். 

அவர், குரு பெயர்ந்துவிட்டதால் கண்ணையன் சாதகப்படி பணக்கார மனைவி கிடைக்க இனிமேல் வாய்ப்பு இல்லை. கூடுவாஞ்சேரியில் தான் உங்கள் மருமகள் இருக்கிறாள். செக்கடித் தெருவில் மேற்குப் பார்த்த ஓட்டு வீடு; பக்கத்தில் மின் கம்பம்; எதிரே இரட்டை வேப்பமரம். இந்த அடையாளங் கொண்ட வீட்டுப் பெண்தான் முடியும். நீங்கள் எதையும் யோசிக்காமல் ஏழை என்று தயங்காமல் அந்தப் பெண்ணை முடியுங்கள்என்று சொன்னார். அவர் வாக்கு அப்படியே பலித்துவிட்டது. சும்மா சொல்லக்கூடாது. அவர் மிகக் கெட்டிக்காரர் 

இதை சாடையாய்க் கேட்டுக்கொண்டிருந்த சம்பந்தி உள்ளூரச் சிரித்துக்கொண்டார். தம் மகளுக்கு நல்ல வரன் கிட்டாமல் கவன்றுகொண்டிருந்த அவர் கண்ணயன்மீது குறி வைத்தார். முத்துசாமியின் நிபந்தனைகளை அறிந்தார். அவரது சோதிடருக்குக் கொடுக்கவேண்டியதைக் கொடுத்து சரிக்கட்டித் தம் பெண்ணுக்கு மணம் முடித்தார்.  

முத்துசாமி சொன்னதைக் கேட்டபோது அவருக்கு சிரிப்பு வராதா?

Tuesday, 5 June 2012

சொஃபுக்ளீசின் எலெக்த்ரா - 3 & 4






எலெக்த்ராவின் தனிமொழி: 

ஒரேஸ்த்தஸ், என்னன்பே, மறைந்தாய்நீ.
வாழ்வ தெப்படி யினிநான்?
உன் இறப்பு என் இதயத் தினின்று
நம்பிக்கையின் இறுதி இழையையும் கிழித்தது.
நம்பினேன் மறுபடிநீ வருவாய் என்று.
தந்தைக்குப் பழிவாங்க  அபாக்கிய சகோதரியைக் காக்க.
எங்கே போவேன் இப்போது?
தகப்ப னில்லை, சகோதர னில்லை, தனியானேன்.

********************************************************************
இளைஞர் இருவர் ஒரேஸ்த்தசின் அஸ்தி என்று சொல்லி வெண்கலப் பாத்திரம் ஒன்றைத் தருகின்றனர். கையில் வாங்கிய எலெக்த்ரா,
இதுதானா மிச்சம் என்வாஞ்சைக் குரிய
ஒரேஸ்த்தசில் இருந்து; இதுமட்டுந் தானுலகில்
எனக்குக் கூரருமையாய் இருந்தவனை நினைவூட்ட.
இப்படி உன்னை வரவேற்பேன் என்று எண்ணினேனா
இறுதியாய் உன்னைப் பிரிந்தபோது - இப்படி
ஒருகைப்பிடி வெறுமை? இதுவாநான்
விடைதந்த பிரியமான குழந்தை?
உயிர்பிழைக்க வெளியூர்க்கு அனுப்பி உன்னைக்
காப்பாற்ற முயன்ற தற்குப் பதிலாய்
நான்செத் திருந்தால் இருந்திருக்கும் எவ்வளவோ மேலாய்.
அன்றே நீயும் மாய்ந்திருப்பாய். இடம்பெற்று
இருப்பாய் தந்தையின் கல்லறையில். அதற்கு மாறாய்
வெளியூரில், இக்கொடிய இறப்பு, இல்லுக்குத் தூரமாய்,
சகோதரிக்குத் தொலைவில். உடம்பைக் கழுவி
ஈமக் கடனுக்காய் உடையணி விக்கவோ
துயர்தரும் மீதியைப் பாசமிகு கைகளால்
சேகரிக்கும் கடமைதனைச் செம்மையாய்ச் செய்யவோ
நானங் கில்லை. அன்புக்கு உரியவனே,
உனக்காகச் செய்ய வேண்டிய தெல்லாம் அந்நியர்
வேலைஆயிற்று. இங்கே வீட்டுக்கு எங்களிடம்
சிறுதூசிப் பாத்திரமாய் நீவரும் வரையில்.
உன்னை வளர்த்தேன் வழக்கமாய்க் கடந்த நாள்களில்.
அன்னையின் குழந்தை என்பதைக் காட்டிலும் அதிகமாய்
என்மகவாய் நீயிருந்தாய்; வேறுயாரும் இல்லையுன்னைக்
கவனித்துக் கொள்ள நானன்றி ; சகோதரியென்
றழைப்பாய் என்னை, வேறுசகோதரி இல்லாததுபோல்.
நீஇல்லை இப்போது, முடிந்தது எல்லாம் ஒருநாளில்;
போயின யாவும் காற்றில் தூசிபோல்;
மாய்ந்தார் தந்தை, மாண்டாய்நீ , பிணமன்றி
நான்வேறு என்ன எல்லாரும் போனபின் என்னைவிட்டு? 
( தூதராய் வந்தவர் ஒரேஸ்த்தசை வளர்த்தவர்; இளைஞர் இருவரும் ஒரேஸ்த்தசும் நண்பனும். மாறுவேடம் நீக்கிய அவர்களைக் கண்டு களிகூர்ந்தாள் எலெக்த்ரா. அரண்மனையுள் சென்ற ஒரேஸ்த்தஸ் தாயையும் புதுக் கணவனையும் கொன்றான்.)
**********************************************************************



Sunday, 3 June 2012

சொஃபுக்ளீசின் எலெக்த்ரா - 2




( க்ளித்தெம்நேஸ்த்ராவின் நண்பர் அனுப்பிய தூதர் எனத் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்ட ஒருவர், தேர்ப் பந்தய விபத்தில் ஒரேஸ்த்தஸ் மாண்டுவிட்டதாய்த் தெரிவித்தார்.)



க்ளித்தெம்நேஸ்த்ரா --  

அன்றுமுதல்

 அவனென் முகத்தைப் பார்த்தறியான் என்றாலும்

 தந்தையின் சாவுக்கு என்மீது பழிசுமத்தி

 சூளுரைத் திருந்தான் என்னைத் தண்டிக்க.

 இங்கே யதனால் இரவும் பகலும்

 கிடந்தேன் உறங்காமல் காலத்தின் கைதியாய்

 மெல்ல நெருங்கும் இறப்பை எதிர்நோக்கி.

 விடுதலை என்றனுக்கு இப்போது; விடுதலை

 அவனைப் பற்றிய அச்சத்தில் இருந்து.

 என்னமைதியை அதிகமாய்க் கெடுக்கின் றவள்,

 என்னித யத்தின் செம்மதுவை உறிஞ்சும்

 பாம்பாம் இவளிடம் இருந்து மேதான்.

 இவளது மிரட்டலுக் கிடமின்றிப் போயிற்று.

 இனிநான் வாழலாம் அமைதியாய்.



எலெக்த்ரா - நீதி யாகுமா இது?



க்ளித்தெம்நேஸ்த்ரா - நீதி, வழங்கி யாயிற்று அவனுக்கு.

இன்னம் இல்லை உனக்கு.



எலெக்த்ரா - பழிக்கான தேவதையே! கேள்.

பேசு மடிந்தவனுக்காக.



க்ளித்தெம்நேஸ்த்ரா -- அதுமிக விஸ்வாசமாய்க் கேட்டுவிட்டது;

நன்றாயும் பேசிவிட்டது.