Wednesday, 22 October 2014

பிழையும் திருத்தமும் - 2

பிழையும் திருத்தமும் - 2

இது வேறு பட்டியல்


 பிழை 

திருத்தம் 
 1. அருகாமையில்

 அருகில்
 2. இளைய சகோதரன்
 தம்பி

 3. எட்டிப் போ
 எட்டப் போ  (எட்டும்எட்டாதுஎட்டாக்  கனி)
 4. ஏமாந்தார்
 ஏமாறினார்

 5. ஒருக்கால்
 ஒருகால்

 6. சிகப்பு
 சிவப்பு (செக்கச்  சிவந்த  கழுநீரும்  -  கலிங்கத்துப்  பரணி)
 7. சில்லரை                           
  சில்லறை

 8. சுடு தண்ணீர்                        
 வெந்நீர்

 9. செல்வந்தர்                          
  செல்வர்

 10. திகட்டுதல்                           
 தெவிட்டுதல்

 11. துடை ( உடலுறுப்பு )                 
தொடை 

 12. தொத்து  நோய்                      
 தொற்று  நோய்

 13. நீர்வீழ்ச்சி                           
அருவி

 14. பனிரெண்டு                          
 பன்னிரண்டு

 15. (பரிசை)  வெல்லுங்கள்             
 (பரிசைப்பெறுங்கள்

 16. மனசு , மனது                       
  மனம்  (மனமார,  மனத்தில்)

 17. மாற்றாந்தாய்                         
 மாற்றான்  தாய்

 18. முயற்சிப்போம்                       
முயல்வோம்

 19. மூத்த  சகோதரர்                     
 அண்ணன் ,  தமையனார்

 20. மென்மேலும்                         
 மேன்மேலும்


இரு  விதமாக  எழுதப்படுபவை:

            1. உலாவுதல்  
உலவுதல் 
                           2.  கருப்பு 
கறுப்பு
                           3. கூடு 
கூண்டு
                           4. சலங்கை 
சதங்கை
                           5. சறுக்கல்  
சருக்கல் 
                           6. துளை
தொளை
                           7. பொருத்தவரை 
பொறுத்தவரை
                           8. மங்களம் 
மங்கலம்
                           9. மெல்ல
மெள்ள
                         10. வேர்வை 
வியர்வை


Thursday, 2 October 2014

பிழையும் திருத்தமும்

             
       தமிழைப்   பிழைகளுடன்  எழுதுவோர்  பலப்பலர்;  மெத்தப்  படித்தோரும்  விலக்கல்ல.   தவறு  இல்லாமல் எழுத  விரும்புவார்  சிலராவது  இருக்கக்  கூடும். அவர்களுக்குப்  பயன்படும்  இச்  சிறு  பட்டியல்.



 பிழை 

 திருத்தம்
 1.  அடசல்  

அடைசல்  

(அடைந்து  கிடப்பது )

 2. அடுத்தப்  பக்கம்                              

அடுத்த பக்கம்
 3. அடையார்  (ஊர் )                            

அடையாறு
 4. அட்டைக்  கரி
அட்ட  கரி  

(அட்ட = சமைத்த;  அடுதல் = சமைத்தல் -----> அடுப்பு .
 (அதிகக்  கருப்பைக்  குறிப்பது) 
 சமையல்  பாத்திரத்தின்  அடியில்  பிடித்துள்ள  கரியே   அட்ட கரி.

 5. அரசுப் பணி
அரசு பணி
  
(அரசு பள்ளி,  அரசு  பேருந்து)

 6. ஆட்சேபணை 
ஆட்சேபனை  

(கற்பனை,  யோசனை,  ரசனை  போல )

 7. ஆளுனர்   
ஆளுநர்  ( இயக்குநர் ,   ஓட்டுநர் )

 8. இட ஒதூக்கீடூ
இட ஒதுக்கல்

 9. இணைய தளம்
இணையத் தளம்

 10. உயிர்க் கொல்லி
உயிர் கொல்லி

 11. உள்ளூர  
உள்ளுற

 12. எசகு  பிசகு 
இசகு  பிசகு

 13. கட்டு கடை 
கட்டுக்  கிடை  

(கட்டுக்கு + இடை )  துணிக்   கட்டுகளுக்கு  இடையில்  விற்காமல்  கிடப்பது

 14. கவிச்சி
கவிச்சு  =  மீன் நாற்றம்

 15. குத்துச் செடி
குற்றுச்  செடி 

(குற்றெழுத்து  போல -குறுமை = சிறுமை

 16. குளுமை
குளிர்மை

 17. கோரைப் பல்
கோரப் பல் 

(கோரம் = அசிங்கம்)

 18. சில காலம்
சிறிது காலம் 

(எண்ணக்கூடிய பொருள்களுடன்தான் சில அல்லது    பல வரலாம்: சில நாள், பல மாதம்).

 19. பயண சீட்டு
பயணச் சீட்டு

 20. பிசிர்
பிசிறு



                        



Wednesday, 10 September 2014

மனைவியே மணாளனின் இயக்குநர்

நான்  இந்தியிலிருந்து  மொழிபெயர்த்து விரிவுபடுத்திய  குட்டிக்கதை)


    இளமையில்  அரியணை   ஏறிய  மன்னனொருவன்  இல்லறத்தில்  ஈடுபட   விரும்பித்  தனக்குத்  தகுதியான  அரச  குமாரியைத்  தேட  முற்பட்டபோதுமுதிய  அமைச்சர்  கூறினார்:

  "வேண்டாம்  அரசரே,    திருமணத்துக்குப்  பின்பு    நீங்கள்  சுதந்தரமாகச்   செயல்படமுடியாதுஅரசியின்   ஆலோசனைப்படி  நடக்க  வேண்டியிருக்கும்.

---  எப்படிச்  சொல்கிறீர்கள்  அமைச்சரேஇவ்வளவு  உறுதியாக?

--- அதுதானே  வழக்கம்.

---  நான்  நம்ப  மாட்டேன்.

---  ஒரு  சோதனை  செய்து  பாருங்கள்;   உண்மை   புலப்படும்.

---  அப்படியே  ஆகட்டும்."

  வேந்தன்  ஆணையிட்டவாறுநகரின்  அரச  மற்றும்   பிரபு  குடும்பத்தாருள்  திருமணம்  ஆனவர்கள்   உரிய  காலத்தில்   அரண்மனையில்   கூடினார்கள். ஏறக்குறைய  ஐம்பது   பேர்.

  " நீங்கள்  எல்லாரும்   கலியாணம்  செய்துகொண்டவர்கள்  தானே?

---  ஆம்,   அரசே.

--- சரிஉங்களில்மனைவி  சொல்லே    மந்திரம்  என  நினைத்துஅவளுடைய   பேச்சைக்   கேட்டு   நடப்பவர்கள்  அனைவரும்   என்  வலப்பக்கத்தில்  வந்து  நில்லுங்கள்;   சொந்தமாகச்  சிந்தித்து   செயல்படுபவர்கள்  எல்லாம்,   இடப் பக்கம்  நில்லுங்கள்என்னை  ஏமாற்ற  முயல்பவர்   கடுந்  தண்டனைக்கு  ஆளாவார்."

    மளமள  என்று  வலப்பக்கம்  போய்   நிற்கத்  தொடங்கினார்கள்ஒருவன்  மட்டும்சிறிது  நேரம்   தயங்கிவிட்டுஇடப்புறம்  நின்றான்.   அரசனுக்கு  வருத்தம்ஆடவர்  சொந்த  புத்தி  இல்லாமல்  வாழ்கிறார்களே!   கொஞ்சம்  ஆறுதல்ஒருவனாவது சுதந்தரமாக  இயங்குகிறானே!

  அவனிடம்    சொன்னான்:

 "உன்னைப்   பாராட்டுகிறேன்;   நீ   எதையும்   உன்  அறிவுப்படி  யோசித்துத்   தானே  செய்கிறாய்?

 ---  இல்லை   மன்னா.

--- அப்படியானால்?

---   என்  மனைவி சொல்தான்  என்  வழிகாட்டி.

---   பின்   ஏன்  அவர்களோடு  சேரவில்லை?

---  கூட்டத்தில்   நிற்கக்  கூடாது  என்று  அவள்   சொல்லியிருக்கிறாள்."

                              ======================= 

(படம்: நன்றி இணையம்)

Thursday, 17 July 2014

நம் நாட்டில் அடிமைகள்




 முன்கால எகிப்திலும் கிரேக்கத்திலும் ரோமிலும் அடிமைகள் என ஒரு மக்கட்கூட்டம் வதைபட்டது என வரலாறு தெரிவிக்கிறது. நீதிநெறிக் கதைகளை இயற்றிய ஈசாப் ஒரு கிரேக்க அடிமை.

 பழங்கால யூதரிடமும் அடிமைகள் இருந்தமைக்கு விவிலியம் சான்று பகர்கிறது:

 பழைய ஏற்பாடு - உபாகமம் - அதிகாரம் 15.

 மோசே கூறியது: "உன் சகோதரனாகிய எபிரேய ஆணாகிலும் எபிரேய பெண்ணாகிலும் உனக்கு விலைப்பட்டால், ஆறு ஆண்டு உன்னிடத்தில் சேவிக்க வேண்டும்; ஏழாம் ஆண்டு விடுதலை பண்ணி அனுப்பி விடுவாயாக.”

 அதே ஆகமம் - 21 ஆம் அதிகாரம்; இதுவும் மோசேயின் கூற்று:

 (போர்க் கைதிகளுள் ஒரு பெண்ணை விரும்பி மணந்துகொண்ட பின்பு) 

 "அவள் மேல் உனக்குப் பிரியம் இல்லாமற் போனால், நீ அவளைப் பணத்திற்கு விற்காமல், அவளைத் தன் விருப்பத்துக்குப் போக விடலாம்"

 ஆகவே மனித விற்பனை யூதர் சமுதாயத்தில் வழக்கமாய் இருந்தது.

 பண்டைய தமிழகத்திலும் அடிமைகள் இருந்தார்களா? நமக்கு வரலாறு இல்லாமையால், இலக்கியங்களைத் துருவ வேண்டியுள்ளது:

 1 -- தொல்காப்பியம் --- பொருள் 25:

   "அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்"

என்பதில் அடியோர் என்னும் சொல் அடிமைகளைக் குறிக்கக்கூடும்.

  2 --  திருக்குறள் 1080:

    "எற்றிற்கு உரியர் கயவர் ஒன்று உற்றக்கால்
  விற்றற்கு உரியர் விரைந்து"

 பொருள் - பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டால் கயவர்கள் தம்மை உடனடியாக விற்றுக்கொள்வார்கள்.

 இதிலிருந்து மனிதர் தம்மை விற்றுக்கொண்டு, வாங்கியோர்க்கு அடிமைகளானது தமிழகத்திலும் உண்டு என்பது தெரிகிறது. கயவர் விரைந்து விற்றுக்கொள்வர் என்றதால், அல்லாதார் வேறு வழி இல்லாதபோது விற்றுக்கொண்டனர் என ஊகிக்கலாம்.

 ஒருவன் தன் தட்டுமுட்டுச் சாமான்களை விற்றபின்னும் முடை தீராவிட்டால், மனைவி மக்களையும் விற்றுவிட்டுக் கடைசியாய்த் தன்னை விற்றுக்கொள்வான். அதுவே இயல்பு; அரிச்சந்திரன் அப்படித் தானே செய்தான்? இந்தக் கதையிலிருந்து வட நாட்டிலும் தன்னை விற்றல் இருந்தது என அறிகிறோம். ஆரியர்கள் தம் அடிமைகளைத் தாசர் என்று சுட்டினார்கள்.

 3 --  திருக்குறள் 220:

     "ஒப்புரவி னால்வரும் கேடுஎனின் அஃதுஒருவன்
   விற்றுக்கோள் தக்கது உடைத்து."

 இதன் விளக்கம்:  தாராளமான கொடையினால் வறுமை உண்டாகும் என்றால், தன்னை விற்றாயினும் அதை ஏற்கலாம்.

 மாந்த விற்பனை இருந்தது என்பதை இந்தப் பாடலும் உறுதி செய்கிறது.

 4 --  குறள் 608:

     "மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
   அடிமை புகுத்தி விடும்"

 இந்தச் செய்யுள், சோம்பல் வயப்பட்ட மன்னன் தன் பகைவர்க்கு அடிமையாக நேரும் என்று எச்சரிக்கிறது. வேந்தர்களும் அடிமைகளாய் உழன்றனர்.

 சுந்தரமூர்த்தி நாயனார் கதை தெரியுமல்லவா? அவர் மண மேடையில் அமர்ந்து இருந்தபோது ஒருவர் வந்து, "நீ என் அடிமை;  திருமணம் புரிந்துகொள்ள உனக்கு உரிமை இல்லை" என்று கூறி அதற்கான சான்று காட்டி அவரைத் தம்முடன் அழைத்துச் சென்றார். தாம் பார்ப்பனராதலால் அடிமை ஆவதில்லை எனச் சுந்தரர் வாதாடிப் பார்த்தார் என்பதிலிருந்து மற்ற மூன்று வருணத்தார் மட்டுமே அடிமைகளாக இயலும் என்று அறிந்துகொள்கிறோம்.

  புதுச்சேரியில் அடிமை முறை வழக்கத்தில் நிலவியது என ஒரு பழைய பிரஞ்சுக் கட்டுரை தெரிவிக்கிறது. அதன் ஆசிரியர் ஒரு வெள்ளையர். அதில் காணப்படும் முக்கிய தகவல்கள்:

  பஞ்சக் காலத்தில் பெற்றோர் தம் குழந்தைகளை விற்றனர்; 1706 -இல் இரு சிறுமிகள் 10 பகோடாவுக்கும் 1719 -இல்  ஐந்து பெண்கள் 18 பகோடாவுக்கும் விலைபோயினர். ஐரோப்பியர் அடிமைகளை வாங்கிச் சேவகம் செய்யக் கற்பித்தார்கள். சில சமயங்களில் மொரீசியஸ் தீவுக்கு அனுப்பினர் எனினும் அடிமை இனம் என ஒரு மக்கட் கூட்டம் இந்தியாவில்  ஒருபோதும் இருந்ததில்லை.

 (பகோடா பழைய நாணயம்; அதன் இன்றைய மதிப்பு தெரியவில்லை)

  இந்தியாவில் பார்ப்பனர் தவிர மற்றவர்களுள் சிலர் அடிமைகளாய் விலை போயினர் என முடிவு செய்யலாம். இப்போதும் கொத்தடிமைகள் மீட்கப்பட்டார்கள் என்று அவ்வப்பொழுது நாளேடுகளில் செய்தி வெளியாகிறது;  அடிமை முறைக்கு ஆயுள் நெடியது.

            =======================

 (படம்: நன்றி இணையம்)