ஆத்திரேலியாவின்
தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி
லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழில்
பெயர்த்திருக்கிறார் கீதா
மதிவாணன் . என்றாவது
ஒரு
நாள் என்னும்
தலைப்புடன்
வெளிவந்துள்ள அந்தச் சிறுகதைத்
தொகுப்பு நூலை விரிவாய்த் திறனாய்ந்த இரு
கட்டுரைகள்
இணையத்தில்
இடம் பெற்றிருக்கின்றன.
என்
பங்குக்கு, நூல்
பற்றிய என் கருத்துகளைப் பதிகிறேன்.
ஒரு
நூற்றாண்டுக்குமுன்பு, ஆத்திரேலியாவுக்கு அனுப்பப்பட்ட
ஆங்கிலேயக்
கைதிகள், தங்களுக்குச்
சிறிதும் பழக்கமில்லாத,
புத்தம்புதிய, அடிப்படைக்
கட்டமைப்பு அறவே
இல்லாத சூழ்நிலையில் வாழ வேண்டிய கட்டாயத்துக்கு
ஆளாகி
அனுபவித்த
இன்னல்களை ஆசிரியர்
திறம்படச் சித்திரித்துள்ளார்.
கதைமாந்தர் கீழ்மட்ட
மக்கள், ஏழைகள்; ஆயினும் கடின
உழைப்பு, கடமையுணர்ச்சி, பாசம், அறைகூவல்களை
எதிர்கொள்ளும்
துணிச்சல்
முதலான நற்பண்பு
உடையவர்கள்; சிறுவர்களும்
குடும்பப் பாரத்தை
மனமுவந்து
சுமக்கிறார்கள்! ஆயினும், பொறுப்பற்ற போக்கு, தன்னலம்,
பகையுணர்வு சிலரிடம்
காணப்படுகின்றன.
தம் வாழ்வில்
ஆசிரியர் அனுபவித்த துன்பங்கள்
தந்த பட்டறிவு, கதை
மாந்தரையும் சூழ்நிலையையும் துல்லியமாய்ச் சித்திரிக்கப் பெருமளவில்
உதவியிருக்கும்.
அக்கம்பக்கம் மனித சஞ்சாரமற்ற
தனிமைச்
சூழ்நிலை, விரக்திக்கு
எளிதில் இட்டுச்
செல்லக்கூடியது; ஆயினும் இவர்களில் யாரும், "என்ன
வாழ்க்கை
இது? இப்படி உழல்வதைவிட,
இறந்து போவது மேல்" என்று எதிர்மறையாய்ச்
சிந்தியாமை போற்றற்குரியது.
லாசனின்
சுவை நிரம்பிய எழுத்துக்கு ஒரு
காட்டு: புதர்க்
காடுறை
பூனைகள்; அவருடைய
எழுத்தாற்றலைப்
பக்கம்
65 பறை
சாற்றுகிறது:
வாசகரின்
உள்ளம் நெகிழுமாறு
வறியவரின்
அவல
நிலையை அது
விவரிக்கிறது.
மொழிபெயர்ப்பு: இப்போதைய ஆத்திரேலிய ஆங்கிலம் இங்கிலாந்துக்காரர்களுக்கே விளங்குவது
கடினம் என்பர்; அப்படியிருக்க, முற்கால, ஒரு கலப்புக் கொச்சை மொழியைப் புரிந்து
மொழிபெயர்ப்பது என்பது
அறைகூவல்
நிறைந்த பணி.
மூல ஆசிரியரின் கருத்து, நடை, உத்தி ஆகிய
மூன்றையும் அப்படியே
வாசகர்க்கு வழங்குவதே சிறந்த பெயர்ப்பு
எனப்படுகிறது. அதில் பாராட்டுக்குரிய
விதத்தில் வெற்றி
பெற்றிருக்கிறார் பெயர்ப்பாளர்;
சனியன்,
புண்ணியமாய்ப் போகட்டும், பாழாய்ப்போன முதலிய சில சொற்றொடர்கள் மட்டும் தமிழ்ச் சாயலைத் தோற்றுவிக்கின்றன; மூலத்தில் இப்படி இருக்காது
எனக் கருதுகிறேன்.
கீதா மதிவாணனின் எழுத்துப் பணி மேன்மேலும் சிறக்கட்டும்!


