Sunday, 22 January 2012

அந்தக் காலம்


 ந்தக் காலம் என்பதற்கு வரையறை எதுவுமில்லை. 2000 ஆண்டுக்கு முற்பட்டதும் அந்தக் காலந்தான். நூறு ஆண்டிற்கு முந்தியதும் அந்தக் காலமே. நான் குறிப்பிடுவது என் 6 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்ட காலத்தை. (1932-1942)

அப்போது தமிழர்கள் சாதி வாரியாகப் பிரிந்து வாழ்ந்தார்கள். (அந்த வாழ்க்கை முறை எப்போது தொடங்கியதோ தெரியாது). ஊர்களில் அக்ரஹாரம், செட்டித்தெரு, வெள்ளாழத்தெரு (வேளாளர் தெரு), கம்மாளர் வீதி, கொசத் (குயவர்) தெரு, வலைத் (வலையர்) தெரு, எடத் (இடையர்) தெரு என்று அவரவர் வாழும் பகுதிகள் பெயர் பெற்றிருந்தன. பலரும் கலந்து வாழ்ந்த பொதுத் தெருக்களும் உண்டு.

சிறுவர்கள் தங்கள் பகுதியில்தான் விளையாட வேண்டும். பள்ளிகளில் எந்த வேறுபாடும் அறியாமல் பழகி நண்பர்களாகிக் கூடி விளையாடுகிற பிள்ளைகளுள் சிலர், விலக்கப்பட்ட கனியை உண்பதற்கு ஏவாள் ஆசைப்பட்டது போல, வேறு தெருக்கூட்டாளிகளுடன் விளையாட ஆர்வங்கொண்டு அவர்களின் தெருவுக்கு எப்போதாவது போவதுண்டு. அப்போது மிக்க எச்சரிக்கை தேவை! நமது வீதிப் பெரியவர் யாராவது கடைகண்ணிக்குப் போகவோ வேறு காரணமாகவோ அங்கு வந்தால் அவரது கூர்மையான பருந்துப் பார்வையில் சிக்காமல் ஒளிந்துகொண்டு தப்பிக்கவேண்டும். விளையாட்டு மும்முரத்தில் பெரும்பாலும் அஜாக்கிரதையாய்த்தான் இருந்துவிடுவோம். அவர் தவறாமல் நம்மைக் கவனித்து அடையாளங்கண்டு, "டேய்! நீ வீரப்பிள்ளை மகனாச்சே! இங்கே வந்திருக்கியா? ஒங்க அப்பாகிட்டே சொல்றேன்" அன்று முன்னறிவிப்பு கொடுத்து முடிக்குமுன்பே நாம் எடுக்கிற ஓட்டம் வீடு வந்துதான் நிற்கும்.

சொன்ன சொல்லைக் காப்பாற்றுபவர் என்பதை அவர் நிரூபித்தே தீர்வார். தாம் துப்பறிந்து கண்டுபிடித்த விஷயத்தை அன்றைய தினமே, சூட்டோடு சூடாய், மெனக்கெட்டு, அக்கறையுடன், மெய் வருத்தம் பாராமல், வீடு தேடிவந்து சொல்லிவிட்டுத் தான் மறுவேலை பார்ப்பார். அதன் விளைவால் செமத்தியான அடி விழும் என்பது சர்வ நிச்சயம்.

சாதிப் பெயரால்தான் மக்கள் ஒருவரையொருவர் அழைத்துக் கொண்டார்கள்.

"நமஸ்காரம், பத்தரே, சவுக்கியமா இருக்கீங்களா?"

"இருக்கேன், முதலியாரே, ஒங்க புண்ணியத்திலே."

"கடவுள் புண்ணியம்னு சொல்லுங்க"

என்பது அந்தக் காலத்து வழக்கமான நலம் விசாரிப்பு.

"செட்டியார் எப்ப கடை தொறப்பார்?", "ஒடையாரிடமிருந்து தகவலே இல்லை", "ஒங்களைத் தேடிக்கொண்டு புள்ளே வந்தார்" என்றுதான் எல்லாரும் பேசிக்கொண்டனர். "எந்தப் புள்ளே?" என்று சில சமயம் கேட்க நேரும். அப்போதுதான், "துரைசாமி பிள்ளை" என்று பெயரைச் சேர்த்துச் சொல்ல வேண்டியிருக்கும். யாவர்க்கும் மேல் சாதியாரான பிராமணர்களைப் பற்றி, "அய்யர் வந்தார், அய்யங்கார் வரவில்லை" என்று படர்க்கையில் கூறலாமே ஒழிய, நேரில் பேசும்போது, 'சாமி' என்றுதான் விளிக்க வேண்டும்.

தமிழ் நாட்டில் காங்கிரஸ் கட்சியை வளர்க்க அரும்பாடு பட்டவர்கள் நாயுடு, நாயக்கர், முதலியார் என்றுதான் பேசினார்கள், ஏடுகளில் எழுதினார்கள். பி. வரதராஜுலு, ஈ.வே.ராமசாமி, திரு.வி.கல்யாணசுந்தரம் என்று யாரும் கூறவில்லை.

முன்பின் தெரியாதவர்களின் சாதியை அறிந்துதான் பழகினார்கள். "நீங்கள் எந்த சாதி?" என்றோ "நீங்கள் எந்த வர்ணம்?" என்றோ கேட்பது அநாகரிகமாய்த் தோன்றவில்லை. நான் இன்ன சாதி எனப் பதிலளிக்கவும் கூச்சமில்லை.

திருமணம் முதலிய விசேஷங்களுக்குப் பெரும்பாலும் சொந்த சாதிக்காரர்களையும் சிற்சில மேல் வகுப்பாரையும் அழைப்பார்கள். நிகழ்ச்சிகளுக்குப் போகிற மேல் சாதியார் அங்கே உண்ணமாட்டார்கள்; எதுவும் பருகவும் மாட்டார்கள்.

எங்காவது தொலைதூரம் நடந்து வியர்த்து விறுவிறுத்துப் போன நிலைமையில் தாகத்தால் தவிக்கும்போது வழியிலுள்ள வீடுகளில் தண்ணீர் வாங்கிக் குடிக்கலாம் என்று சாதி பேதம் இன்னமும் மனத்தில் வேரூன்றாத பருவத்துச் சிறுவர்கள் சொன்னால் பெரியவர்கள் தவறாமல் சொல்லும் பதில் :

"அவங்க என்ன சாதியோ? அங்கெல்லாம் தண்ணி கேக்கக்கூடாது" என்பதுதான்.

உயிர் போனாலும் போகலாம், உயர் சாதித் தன்மைக்குக் களங்கம் வரலாமோ?!

(ஒரு நாள் அண்டை வீட்டுப் பையன் என்னிடம், "ஒங்க ஆத்தா இன்னைக்கு எங்க வூட்டுலே காப்பி குடிச்சாங்க" என்று சொன்னபோது, "இது ஒரு சேதியா? இதை வந்து சொல்கிறானே!" என்று வியந்தேன். பின்புதான் தெரிந்துகொண்டேன் நாங்கள் அவர்களை விட மேல்வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்று.)

மிக்க கீழ் சாதியார் குடிக்க நீர் கேட்டால், வாயருகே இரு கைகளையும் சேர்த்து அவர்கள் குழியாய்க் குவித்துக் கொள்ள, அந்தக் குழியில் தண்ணீரை ஊற்ற வேண்டும். அவர்களைக் காட்டிலும் ஓரளவு சாதியால் மேம்பட்டவர்களாயின் பித்தளைச் சொம்பிலே நீர் தந்து அவர்கள் எச்சில் படாமல் தூக்கிக் குடித்து விட்டுக் கீழே வைத்த பாத்திரத்தின் மீது கொஞ்சம் நீர் தெளித்துப் புனிதமாக்கித்தான் எடுத்துக் கொள்ளவேண்டும்!

உணவகம் நடத்துவது பிராமணர்களின் ஏகபோக உரிமை. (மற்ற சாதியார் நடத்தினால் யார் போவார் சாப்பிட?) நடேசய்யர் ஓட்டல், ராமய்யர் காப்பி கிளப், காளியாக்குடி அய்யர் ஓட்டல் என்று பெயர் வைத்திருப்பார்கள். பொதுவான பெயராக ஆரிய பவன், நடராஜ விலாஸ் என்றெல்லாம் இருந்தால் "பிராமணாள் ஓட்டல்" என்கிற கூடுதல் தகவலை விளம்பரப்பலகை தெரிவிக்கும். எல்லா உணவு விடுதிகளிலும் "பிராமணர்கள் சாப்பிடும் இடம்" என்றெழுதி வைத்துள்ள மறைவிடத்தில் அவர்கள் மட்டும் நுழைவார்கள். அவர்கள் சாப்பிடுவதை பிற சாதியார் பார்க்கக் கூடாது என்பது எழுதப் படாத சட்டம். (பிராமணர்-கள்-சாப்பிடுமிடம் என்று சிலர் கிண்டல் செய்வதுண்டு!)

பலகாரமோ, சோறோ வாழையிலையில் பரிமாறப்படும். பரிமாறுகிறவர்களிடம், "சாமி, எனக்கு ரெண்டு இட்லி குடுங்க!", "எனக்குக் காப்பி கொண்டாங்க, சாமி!" என்று கேட்கவேண்டும். உண்ட பின்பு எச்சில் இலையை நாமே மடக்கி எடுத்துப் போய் அதற்கான தொட்டியில் போட்டுவிட்டுக் கை கழுவிக் கொள்ளவேண்டும். வெண்கல டம்ளர்களில் வழங்கும் காப்பியை வாயிற்படாமல் தூக்கிக் குடிக்க வேண்டும் என்பது சொல்லாமலே விளங்கும்.

சாதிப் பிரிவினைகளை எதிர்த்து முற்போக்குச் சிந்தனையாளர்கள் மேடைகளில் பேசினார்கள்: ஏடுகளில் எழுதினார்கள். "நான் கவுண்டர், நான் மூப்பனார் என்றெல்லாம் சொல்லாதீர்கள். தமிழன் என்று கூறுங்கள்" என்று அவர்கள் பிரச்சாரம் செய்தார்கள்.

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம்,

தமிழனென்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா என்று பாடினார்.

"தமிழ் நாடு தமிழருக்கே" என்ற முழக்கம் ஒரு புறம் எழுந்தது. தமிழன், தமிழச்சி என்ற புதிய சொற்கள் பேச்சுப் புழக்கத்துக்கு வந்தன. மனதில் சாதியெண்ணம் நிறைந்திருந்தாலும் வெளிப்படையாய் அதைக் காட்டிக்கொள்ளும் வழக்கம் சிறிது சிறிதாய்க் குறையலாயிற்று. பெயருக்குப் பின்னால் சாதி குறிக்கும் சொல்லைச் சேர்த்து எழுதும் நடைமுறை மறையத் தொடங்கிற்று.

(நிலாச்சாரலில் 5/10/09 இல் வெளிவந்த என் கட்டுரை.)

Friday, 20 January 2012

பயனில்லா வாழ்வு



புலவர்களின் புரவலரும் பலரோடு உண்ணும் பழக்கம் உடையவருமான பாண்டியன் அறிவுடைநம்பி ஒருநாள் பகல் வேளையில் அவையிலிருந்து உள்ளே போய்த் தொட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த மகனின் பால் வடியும் முகத்தையுஞ் சின்னஞ்சிறு கைகால்களையுஞ் சற்றுநேரம் அன்புடனும் ஆசையுடனுங் கண்டுகளித்து சைகை காட்டி அழைக்க, மனைவியும் விருப்பமுடன் விரைந்து வந்து கணவனை உராய்ந்து நின்று குழந்தை தூங்கிய எழிலைக் கண்ணால் பருகிப் பெருமிதமுங் குதூகலமும் ஒருங்கே உற்றாள். பலநாள் பார்த்துப் பார்த்துப் பரவசமடைந்த காட்சிதான் எனினும் எத்தனை முறையானாலும் அலுக்காத சலிக்காத காட்சியல்லவோ?

சாப்பாட்டு நேரம் நெருங்கியதும் அவையில் காத்திருந்த புலவர் இருவரையும் அழைத்து வர ஏவலரை அனுப்பினார்.

மூவரும் வரிசையாய் அமர்ந்தனர். இலையின் ஓரத்தில் கொழுவிய துவை, சுரைக்கூட்டு, கத்தரி வதக்கல், கீரை மசியல் எனக் கறிகளும் நடுவில் எண்ணெய் மணந்த ஊண்சோறும் பரிமாறப்பட்டன.

உண்ணத் தொடங்கினர். குழந்தை கை கால்களை அசைத்து, தான் விழித்துக் கொண்ட செய்தியை ஆங், ஊங் எனக் குதலை மொழியில் அறிவிக்கவே பணியாள் ஓடிப்போய் வாஞ்சையுடன் மலர் போல் நலுங்காமல் தூக்கிக் கீழே விட்டார்.

சாப்பிடுவதை நிறுத்திய மன்னர் கண்கொட்டாமல் நோக்க, அது பொக்கைவாயைப் பெரிதாய்த் திறந்து சிரித்தவாறு தத்தக்கா புத்தக்கா என்று சிற்றடியிட்டு நடந்துவந்து தந்தையின் இலையருகே உட்கார்ந்தது. புலவர்களின் கண்களும் குழந்தையின்மீது மொய்த்தன.

அது கீரையைத் தொட்டு நாவில் தடவிக்கொண்டு ஒரு கத்தரித்துண்டை எடுத்து சுரைக்காய்க் கூட்டில் போட்டு வேறு துண்டை வாயில் கவ்விப் பின்பு துப்பிவிட்டு சோற்றைத் துழாவி அள்ளி விரல்களை விரித்தபடியே உள்ளங்கையால் வாயில் வைத்தது. சில பருக்கைகள் நாக்கில் தங்க, மற்றவை கழுத்திலும் வயிற்றிலும் கால்களிலுமாக சிதறி விழுந்து ஒட்டிக்கொண்டன. சிலை போன்று அசையாமல் ஆனந்த பரவசராய் அந்த இனிய இன்பக் காட்சியை அணு அணுவாய் சுவைத்தார் அரசர்.

குழந்தையைப் பணியாள் தூக்கிச் சென்று தூய்மை செய்தார். உண்டு முடித்தனர் மூவரும்.

அவையில் மீண்டுங் கூட்டம் கூடியபோது ஒரு புலவர் கூறினார்:

"இளவரசரிடம் வேந்தர்க்கு இருக்கிற பாசம் இவ்வளவு அவ்வளவு என்று கணிக்க முடியாது என்பதை நான் நன்கு தெரிந்துகொண்டேன்."

மற்ற புலவர், "நானுந்தான்" என வழிமொழிந்தார்.

அவர்களைப் பார்த்து மன்னர் விளக்கினார்:

"நிறைய சொத்து சேர்த்து நாள்தோறும் பலரோடு கூடியுண்ணும் அளவுக்குப் பெருஞ்செல்வராய் ஒருவர் வாழ்ந்தாலும் சின்னச் சின்ன அடி வைத்து நடந்து வந்து சிறுகை நீட்டி இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழாவியும் எண்ணெய் கலந்த சோற்றை உண்ணும்போது உடலில் அங்குமிங்கும் சிதறிக்கொண்டும் களிப்பில் மயங்கவைக்கிற குழந்தை இல்லாமற்போனால் அவரது வாழ்வு பயனற்றதே."

"உண்மை, உண்மை, முக்காலும் உண்மை" என்று ஆமோதித்தனர் இருவரும்.

(மையக் கருத்தைத் தந்தது கீழ்க்காணும் பாடல். பாடியவர் பாண்டியன் அறிவுடைநம்பி.)

படைப்புப் பலபடைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டுந் தொட்டுங் கவ்வியுந் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்ப்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம்வாழு நாளே.

(புறநானூறு.188)

Wednesday, 18 January 2012

அளந்த கோல் - நாடகம்




காட்சி 1
இடம் - வீட்டு வரவேற்பறை
காலம் - மாலை

நாளேட்டை வாசித்துக் கொண்டிருந்த எழிலன் திடீரென அலறுகிறார் ;

ஐயோ ! ஐயோ ! போயிற்று ! போயிற்று !

குழலி - ( உள்ளீருந்து ஓடி வந்து ) : என்னங்க ? என்ன போயிற்று ?

எழிலன் - எல்லாம் போய்விட்டது ! குழலி , நான் பெரிய தவறு செய்துவிட்டேன் .

குழலி - பதறாதீர்கள் , அமைதியாக இருங்கள் . என்ன ஆகிவிட்டது ? என்ன தவறு ?

எழிலன் - நன்னம்பிக்கை நல நிதியை மூடிவிட்டார்கள் என்று செய்தி போட்டிருக்கிறார்கள் ; எல்லாப் பணமும் அதில்தான் செலுத்தியிருந்தேன் ; போயிற்றே ! அடியோடு போய்விட்டதே !

குழலி - பணம் தானேங்க ? போனால் போகட்டும் ! மறுபடி சம்பாதித்துக் கொள்ளலாம் .

எழிலன் - எவ்வளவு எளிதாய்ச் சொல்லிவிட்டாய் ! ஐம்பதாயிரம் என்ன சிறு தொகையா ? உண்ணாமல் தின்னாமல் இப்படி அநியாயமாய்ப் பறிகொடுத்தேனே!

குழலி - எவ்வளவு பெரிய தொகையாய் இருந்தால் தான் என்ன ? இன்ப வாழ்வுக்கு அன்பும் ஒற்றுமையும் போதும் ; அவை நம்மிடம் நிறைய இருக்கின்றன ; ஆகையால் நீங்கள் மனந்தளர வேண்டியதில்லை.

எழிலன் - தங்கை திருமணத்துக்குப் பணமல்லவோ தேவை ? எப்படிச் சமாளிப்பது ?

குழலி - ஏங்க ? வங்கியில் தானே பணத்தைச் செலுத்தப்போவதாய்ச் சொன்னீர்கள் ; இப்போது நிதி என்கிறீர்கள் !

எழிலன் -- முதலில் அப்படித்தான் முடிவு செய்திருந்தேன் ; ஆனால் நிதியில் வட்டி அதிகம் என்பதை அறிந்து அதில் போட்டேன் .

குழலி - அப்படியா ? அதனால் ஒன்றும் குடி முழுகிவிடாது ; மனத்தை விட்டுவிடாதீர்கள் .இடுக்கண் வருங்கால் நகுக . திருமணச் செலவுக்கு வேறு வழி தேடுவோம்.

( மூவர் நுழைகின்றனர் ; குழலி உள்ளே போகிறார் )

காட்சி 2

மாரன் - என்ன எழில் ? ஏன் வாட்டமாக இருக்கிறாய் ?

எழிலன் - மோசம் போய்விட்டேன் , நண்பர்களே ! நமக்கு ஊதிய உயர்வு நிலுவைத் தொகை கிடைத்தது அல்லவா ? அவ்வளவையும் வைப்பு நிதியாய் ஒரு நல நிதியில் செலுத்தியிருந்தேன் ; அந்த நிறுவனத்தை மூடிவிட்டதாய்ச் செய்தி வந்திருக்கிறது . நான் என்ன செய்யப்போகிறேன் ?

மணிவேல் - அடாடா ! பேரிழப்புத் தான் ; நல நிதிகள் நம்புவதற்கு உரியவை அல்ல ; நாங்கள் அப்போதே உன்னை எச்சரித்தோமே ! நீ சட்டை செய்யவில்லை எனத் தெரிகிறது .

பொறையன் - நல நிதியில் போட்டுவிட்டு வங்கியில் செலுத்தியதாய்ப் பொய் வேறு சொல்லியிருக்கிறாய் ! அதிக வட்டிக்கு ஆசைப்பட்டால் இப்படித் தான் ; பேராசை பெரு நஷ்டம் .

எழிலன் - ஆமாம் ; ஆசை அறிவை மழுக்கிவிட்டது . அடுத்த மாதம் தங்கை திருமணத்துக்காக அப்பாவுக்கு அந்தத் தொகை முழுதையும் அனுப்பத் தீர்மானித்திருந்தேன் ; அப்பா என்னை நம்பிக்கொண்டிருக்கிறார் ; அவருக்குக் கொடுத்த வாக்கை எப்படிக் காப்பாற்றுவேன் ?

மணிவேல் - கடினந்தான் ; அவ்வளவு பெருந்தொகையைப் புரட்டுவது எளிதா ?

எழிலன் - நீங்கள் மனம் வைத்தால் முடியும் . நீங்கள் மூன்று பேருந்தான் என் நெருங்கிய நண்பர்கள் ; உங்களை அல்லாமல் வேறு யார் எனக்கு உதவுவார் ? ஆளுக்குப் பதினைந்தாயிரம் கடனாகத் தாருங்கள் ; சமாளித்துக்கொள்வேன் ; தருவீர்களா ?

பொறையன் - உனக்கு இல்லாமலா ? ஆனால் பார் , என் சிறிய தந்தையின் மகன் கார் வாங்கப் போகிறான் ; பணம் போதவில்லையாம் ; அவனுக்கு முழுத் தொகையையும் தரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன் .

மணிவேல் -- என்னையும் மன்னித்துவிடு , எழில் . நான் ஊரப்பாக்கத்தில் ஒரு மனை வாங்கப் போகிறேன் ; நெடு நாள் ஆசை. எனக்கே மேற்கொண்டு பணம் தேவைப்படும் போல் இருக்கிறது ; இந்த நிலையில் நான் எப்படி உனக்கு உதவ முடியும் ?

எழிலன் -- இப்படிக் கை விரிப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை . நீ என்ன சொல்லப்போகிறாய் , மாரா ?

மாரன் -- என் தந்தை தம் தொழிலை விரிவு படுத்துவதற்காகப் பணம் கேட்டிருக்கிறார் ; கொடுப்பதாகச் சொல்லியிருக்கிறேன் . ஆனால் நீ சோர்வு கொள்ளாதே ! உன் தங்கை மணத்துக்கே முதலிடம் ; அது நல்லபடி நடக்க வேண்டும் . என் ஐம்பதாயிரத்தையும் தருவேன் ; மகிழ்ச்சி தானே ?

எழிலன் - ஆனால் உன் தந்தையார் ..........

மாரன் - அதைப் பின்பு பார்த்துக் கொள்ளலாம்.

மணிவேல் - ஆமாம் , தொழிலைக் கொஞ்சங் கொஞ்சமாய் விரிவு படுத்தலாம்.

பொறையன் - இப்போது உன் கவலை தீர்ந்தது . நாம் இனி மகிழ்ச்சியாய்ச் சீட்டு ஆடலாம்.

எழிலன் - முடியாது ; இனிமேல் நான் சீட்டு ஆட மாட்டேன் . ஒவ்வொரு நொடியையும் நல்ல விதமாய்ப் பயன் படுத்திச் சிறிது சிறிதாய்ப் பணம் சேர்த்து மாரனின் கடனை அடைக்க வேண்டும் ; அதற்கு இப்போதே திட்டம் தீட்டப் போகிறேன் நீங்கள் இனி இங்கே வந்து என் நேரத்தை வீணாக்காதீர்கள் . நீங்கள் போகலாம் . மாரா , நீ மட்டும் இரு ; உன்னிடம் பேச வேண்டியிருக்கிறது.

( இருவரும் முக வாட்டத்துடன் வெளியேறுகிறார்கள் )

மாரன் - உனக்கு எப்போது பணம் தேவை ?

எழிலன் - சொல்கிறேன் . குழலீ ! நீயும் வா !

( குழலி வந்தமர்கிறார் )

காட்சி 3

எழிலன் - குழலி , இங்கே நடந்த உரையாடலை நீ கேட்டுக்கொண்டிருந்தாயா ?

குழலி - ஆமாம் , காதில் விழுந்தது .

எழிலன் - உதவி கேட்டவுடன் அவனவனும் கழன்று கொண்டான் ; எவ்வளவு நெருங்கிப் பழகிவந்தோம் ! ஆறுதலாய்க் கூடப் பேசவில்லை . மாரன் மட்டுமே உற்ற நண்பன் எனத் தெரிந்துகொண்டேன் .

மாரன் - அதிருக்கட்டும் . திட்டம் தீட்டப் போவதாய்ச் சொன்னாயே ! நான் ஒரு யோசனை சொல்கிறேன் : மாணவர்களுக்கு வீட்டில் தனிப் பாடங் கற்பி .

எழிலன் - தேவையில்லை .

மாரன் - பின்னே ?

எழிலன் - இருவரும் கேளுங்கள் : எந்த நல நிதி மூடப்பட்டாலும் எனக்குக் கவலை இல்லை ; பணம் பத்திரமாய் வங்கியில் இருக்கிறது .

குழலி - அப்படியானால் , எதற்காக ................

எழிலன் - சொல்கிறேன் . " கேட்டினும் உண்டோர் உறுதி கிளைஞரை நீட்டி யளப்பதோர் கோல் " என்று குறள் கூறுகிறது அல்லவா? அது பற்றி நான் பல மூறை எண்ணிப் பார்த்திருக்கீறேன். கேடு வந்த பின்பு நண்பர்களின் போக்கை அறிந்து என்ன பயன் ? முன்னாலேயே தெரிந்து வைத்துக்கொள்வது நல்லது என முடிவு செய்தேன ;. அப்போது தான், " கொள்ளற்க அல்லற்கண் ஆற்றறுப்பார் நட்பு " என்ற திருவள்ளுவரின் அறிவுரையைப் பின்பற்றுவது எளிது என எனக்குத் தோன்றிற்று. அதற்கு வழி தேடிக்கொண்டிருந்தேன் . நல நிதிச் செய்தியைப் பயன்படுத்தி ஒரு நாடகம் ஆடினேன் . என் நோக்கம் நிறைவேறிற்று ; நண்பர்களை அளந்து விட்டேன் ; இனி மாரனுடன் மட்டுமே எனது நட்பு நீடிக்கும்.

மாரன் - எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி : உன் சோதனையில் தேறிவிட்டேன் ; என் தகப்பனார்க்கும் உதவ முடியும் .

குழலி - பிரமாதமான நடிப்புத் திறமை உங்களிடம் இருக்கிறது என்பதை நான் இன்றுதான் தெரிந்து கொண்டேன் ; முழுக்க முழுக்க நம்பிவிட்டேன் .

எழிலன் - நம்பினாலும் என்னை இடித்துரைக்காமல் அன்பாய் , ஆறுதலாய்த் தெம்பூட்டும் வகையில் பேசினாயே ! மெய்யாகவே நீ என் வாழ்க்கைத் துணை தான் என்பது மீண்டும் ஒரு தடவை உறுதியாயிற்று.

வாழ்த்த வயது




வாழ்த்த வயதில்லையே என ஏங்குபவரா , நீங்கள் ? ஏக்கத்தை நீக்குங்கள் : உங்களுக்கு ஓர் இனிய செய்தி : யாரும் யாரையும் வாழ்த்தலாம் :

ஞானசம்பந்தர் , " வாழ்க அந்தணர் , வானவர் ... " என்று தேவரை வாழ்த்தினாரே !

பாரதியார் , தம்மினும் 13 வயது மூத்தவரான காந்தியடிகளை வாழ்த்தவில்லையா ? ஒரு பாடலை " வாழ்க நீ எம்மான் " எனத் தொடங்கி , " மகாத்மா நீ வாழ்க வாழ்க ! " என்று முடித்துள்ளார் .

ஆகையால் வாட்டம் விடுக , வாழ்த்தி மகிழ்க !