இன்றியமையாத் தேவையாகிய தீயை வேண்டியபோது உண்டாக்குவதற்குப்
பழங்காலத்தில் சக்கிமுக்கி என்ற கற்களை ஒன்றோடொன்று பலமாய்த் தட்டி அப்போது பறக்கிற
பொறிகளைப் பஞ்சு, துணி முதலான பொருள்களிற் பிடித்து அவற்றை ஊதி ஊதிப் பெரிதாக்கினர்
எனப் படித்திருக்கிறோம். மரத்துடன் மரம் உராய்ந்து காடுகளில் நெருப்புப் பிடிக்கிறது
அல்லவா? அதைப் பார்த்து அது குறித்து சிந்தித்து அம்முறையைக் கடைப்பிடித்ததும் உண்டு.
2002 இல் நான் ஆஸ்திரேலியாவுக்கு முதன்முறை போயிருந்தபோது
அங்கத்திய பூர்வ குடிகள் மத்து போன்ற ஒரு மரக்கட்டையால் மரத்தட்டு ஒன்றின்மீது தயிர்
கடைவது போல் அழுத்தியும் மிக விரைவாகவும் கடைந்து தீயுண்டாக்கியதைப் பார்த்தேன்; ஒருவர்
கடைய இன்னொருவர் தேங்காய் நார் போன்ற பொருளில் தீப்பொறிகளைப் பிடித்தார்.
சங்க காலத் தமிழர்க்கு இந்த உத்தி தெரிந்திருந்தது
என்பதை அகநானூற்றால் அறிகிறோம்:
பா 274, அடி
5:
கடைகோல் இறு தீ
அடைய மாட்டி
உரை – கடையுங்
கோலிலிருந்து எழுந்த சிறு தீயை அது வளர்வதற்கு விறகில் சேர்த்து.
அந்தக் கோல் “தீக்கடைக்
கோல்” எனப்பட்டது.
சிரமத்தைக் குறைக்க எண்ணிய பிற்காலத் தமிழ்ச் செல்வர்
ஒரு தடவை பிறப்பித்த தீயை உமியிற் சேகரித்து நிரந்தரமாக வைத்திருந்தனர்; மேலே மேலே
உமியைப் போட்டு நெருப்பு அவியாமல் பாதுகாத்தனர். இப்பழக்கம் சுமார் 200 ஆண்டுக்கு முன்பு
வரை நீடித்தது. ஏழை எளியவர்கள் அவர்களை யண்டித் தீப் பெற்றுக் கொண்டார்கள். செல்வர்கள்
தம் அதிருப்திக்கு ஆளாகிறவர்களுக்குத் தண்டனையாய், “யாரும் இவர்களுக்கு நெருப்புத்
தரக்கூடாது” என்று ஆணையிடுவார்கள். மீறுகிறவர்களுக்கும் அது கிடைக்காமற் போய்விடுமாதலால்
யாவரும் அடங்கியே வாழ்வர்.
இந்த அடிமைத் தனத்திலிருந்து மக்கள் மீள்வதற்குக்
காரணமாக இருந்தவர்கள் தீக்குச்சியை உருவாக்கியவர்களும் அதை எல்லார்க்கும் எளிதில் கிடைக்கச்
செய்தவர்களுமே.
தீக் கடைதல் கஷ்டமாய் இருந்தபோது பிணத்தை எரியூட்டுவதற்கான
நெருப்பை வீட்டிலேயே பற்றவைத்து ஒரு சட்டியில் சுடுகாட்டுக்குத் தூக்கிச் செல்ல வேண்டியிருந்தது.
ஒரு நொடியில் கொளுத்த முடிகிற இந்தக் காலத்திலும் கொள்ளிச்சட்டி கொண்டு போகிற வேலையைத்
தவிர்க்கலாமே!



