Monday, 14 November 2016

முதுமையிலும் இன்பம்

நூல்களிலிருந்து -- 10

மூப்பியல் மருத்துவ வல்லுநர் பேராசிரியர் வ. செ. நடராசன் இயற்றிய 'முதுமையிலும் இன்பம்' என்னும் நூல் வழங்கும் அறிவுரைகளிற் சிலவற்றைப் பகிர்கிறேன்:




  "முதுமைக் காலத் துன்பத்தைத் தள்ளிப்போட சுமார் 50 அகவையிலிருந்தே தேவையான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.

     1 -- சத்துணவு -- முதுமையில் பசியும் சுவையும் குன்றுவதால் உணவின் அளவும் குறைகிறது; உணவு சத்து உள்ளதாயின்குறைவாக உண்டு,   நிறைந்த பயனடையலாம். முதுமைக்கென்று தனியான உணவு எதுவுமில்லை.

    2 -- உடற்பயிற்சி -- வயதான காலத்தில்மருத்துவரின் ஆலோசனையைப் பெற்றுஅவர் பரிந்துரைக்கும் பயிற்சிகளைத் தவறாமலும் ஒழுங்காகவும் செய்துவந்தால், குருதி அழுத்தம் தவிர்த்து, எலும்பு வலிமை, நல்லுறக்கம் முதலிய நன்மைகளை அடையலாம்.

     3 -- மருத்துவப் பரிசோதனை -- முதுமை ஒரு நோயன்று; அது ஒரு பருவமே. வயதாக ஆக, பசி குறைதல், தூக்கக் குறைவு, நினைவாற்றல் மங்குதல்முதலிய குறிப்பிடத்தக்க சங்கடங்கள் உண்டாகும்; அவை முதுமையின் விளைவே என்றெண்ணி அலட்சியப்படுத்தாமல் தொடக்க நிலையிலேயே மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொண்டு சிகிச்சை  பெறவேண்டும்.

     4  -- மன நலம் -- முதுமையில் உடல்நலம் எவ்வளவு தேவையோ அவ்வளவு தேவை மனநலமும். வயது ஏற ஏறமூளைத் திசுக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையும். காட்டாக, 70 வயதுக்காரருக்கு மூளையின் எடை சுமார் 65% தான் இருக்கும்; அதனால், மனச்சிதைவு, மனத் தளர்ச்சி முதலான நோய்கள் வர வாய்ப்புண்டு.
    
நடுத்தர வயதிலேயே நல்ல பொழுதுபோக்குகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்: புத்தகம் வாசித்தல், தொலைக்காட்சி பார்த்தல், இசை கேட்டல், நண்பர்களுடன் அளவளாவுதல் முதலியவை நற்பலன் தரும்தியானம் மனத்தை ஒருமுகப்படுத்துவதால் அது சிறந்த டானிக். தனிமையில் முடங்கிக் கிடப்போர்க்கு மூப்பின் விளைவு ஆறு மடங்கு மிகுதியாக ஏற்படக்கூடும் என்பது ஆராய்ச்சியாளர் கருத்து. முதுமையின் எதிரியாகிய தனிமையை எப்பாடுபட்டாவது தவிர்ப்பது மிக மிக அவசியம்.
   
முதியவர் பலர் நிறைய மருந்துகளை உட்கொள்ளுகின்றனர். நோய்கள் பல இருப்பினும் எவை மிகுதியாய்த் தொல்லை தருகின்றனவோ அவற்றுக்கு முக்கியத்துவம் தந்து மருந்து தின்னலாம்; மருத்துவர் ஆலோசனைப்படியே செய்யவேண்டுமேயொழிய தாமாகவே மருந்து உட்கொள்ளக்கூடாதுஅவரைக் கேட்காமல் மாத்திரையின் அளவைக் கூட்டவோ குறைக்கவோ கூடாது; திடீரென்று நிறுத்துவதும் தவறு. முதுமையை வெல்ல முடியும் என்று பல மருந்துகள் கடைகளில் விற்பனை ஆகின்றன; அவை எல்லாமே தீமையை விளைக்கக்கூடியவை.  முதுமையை மருந்தினால் வெல்லவே முடியாது; அது இயற்கையாக அகவை அடிப்படையில் வருவது."

                                                       ***************************

 (படம் உதவி - இணையம்)


Thursday, 3 November 2016

ஏக்கம்

Du Bellay

துய் பெல்லெ (Du Bellay) ஆன்ழூ நகரை அடுத்த லிரே என்னும் சிற்றூரில் 16-ஆம் நூற்றாண்டில் பிறந்த பிரஞ்சுக் கவிஞர்;  31-ஆம் அகவையில், உறவுக்காரப் பாதிரியார் ஒருவருக்கு உதவியாளராய், ரோம் நகருக்கு சென்று, நான்கு ஆண்டுக் காலம் தங்க வேண்டியிருந்தது. தகவல் தொடர்பு வசதிகள் இல்லாக் காலமல்லவா? நாடு கடத்தப்பட்டது போல் உணர்ந்த அவர், அப்போது 191 கவிதைகள் (Sonnets) இயற்றினார். அங்கதமும் கையறுநிலையும் பாடுபொருளாய்க் கொண்ட அவற்றுள் ஒன்றை மொழிபெயர்த்துப் பகிர்கிறேன்:


                 1 --    பாக்கியவான்! யுலிசீஸ் போலவோ
          பொன்தோலை மீட்டவன் போன்றோ
          அரும்பயணம் ஒன்றனைச் செய்தபின்னர்
          அனுபவமும் பட்டறிவும் ஆர்ந்தவனாய்த் 
          திரும்பிவந்து உற்றாரின் நடுவினிலே
          எஞ்சிய தன் வாழ்நாளைக் கழிக்கிறவன்.


             2 --      எப்போது மீண்டுங் காண்பேன், அந்தோ!
           என்சிறிய கிராமத்தின் அடுப்புப்புகை எழும்புவதை?
           எக்காலம் மறுபடி பார்ப்பேன் என்எளிய
           இல்லத்தின் தோட்டத்தைஅதுஎனக்கு
           ஒருமானிலம் மட்டுமா, அதற்கும்மேலே!


            3  --      எனக்கதிகம் பிடிக்கிறது முன்னோர் எழுப்பிய வசிப்பிடம்
           மிரட்டுவதுபோல் தோன்றுகின்ற ரோமானிய மாளிகையினும்;
           முரட்டுசலவைக் கல்லைவிட மென்மைமிகு ஸ்லேட்;


             4--       லத்தீன் டைபரைப் பார்க்கிலும் பிரஞ்சு லுஆர்;
          பேலட்டைன் குன்றைவிட சின்னஞ்சிறிய லிரே;
          கடற்சூழலைக் காட்டிலும் ஆன்ழூவின் அமைதி.


விளக்கம்:
            யுலிசீஸ் -- ஹோமரின் இதிகாசமாகிய 'ஒடிசி' யின் நாயகன்; ட்ராய் போரில் வென்றபின் கப்பலில் நாடு திரும்புகையில் பல வித இன்னல்களை சமாளிக்கும் கட்டாயம் ஏற்பட்டது.

            பொன்தோல் - கிரேக்கப் புராணக் கதை: ஒரு தெய்விக செம்மறியாடு, பொன்னிறத் தோலும் பெரிய இறக்கைகளும் கொண்டிருந்தது. அது இறந்த பின்பு, ரோமம் அடர்ந்த அதன் தோலை ஒரு பூதம் காவல் காத்தது. அதை மீட்டுக் கொண்டுவர வேண்டிய பணி Jason  என்பவனுக்குக் கட்டளையாய் இடப்பட்டது; அவன் கடற்பயணம் செய்து, வினை முடித்தான்.

            சலவைக்கல் ரோமில் பயன்பட்டதுஸ்லேட் ஓடுகளால் கூரை  வேய்வது பிரான்சில் பழக்கம்.

           டைபர், லுஆர்: ஆறுகள்.

           பேலட்டைன் - ரோம் நகர் இதன்மீது நிர்மாணிக்கப்பட்டது.

---------------------
(படம் உதவி - இணையம்)
            


Thursday, 27 October 2016

சங்கச் சான்றோர்


(14-8-2016 தினமணியில் வந்தது)

மன்னர்களைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்று வாழ்ந்த சங்க காலப்  புலவர்கள்தேவைப்பட்டபோது, அவர்களுக்குத் தக்க அறிவுரை கூறி நன்னெறிப்படுத்தினர் என்பது புற நானூற்றின் மூலம் தெரிய வருகிறது.


 1  - உணவு உற்பத்தியைப் பெருக்குவதன் இன்றியமையாமை பற்றிச் சிந்தித்த குடபுலவியனார், அதற்கு அடிப்படையானவை நிலவளம், நீர்வளம் என்பதையோர்ந்து பாண்டியன் நெடுஞ்செழியனிடம் பின்வருமாறு கூறினார்:


  " நிலத்துடன் நீர் சேர்ந்தால் உணவு விளையும்;   நீரையும் நிலத்தையும்  ஒன்றாய்க் கூட்டியவர் குடிமக்களின் உடலையும் உயிரையும் காத்தவராவார். மழையை எதிர்பார்க்கும் புன்செய், எவ்வளவு அகன்றதாய் இருந்தாலும், முயற்சிக்குத் தக்க பலன் தராது;   ஆதலால் மழைநீரையும் ஆற்றுநீரையும் குளங்களில் தேக்கி வைத்து நாடு முழுவதையும் வளப்படுத்துவாயாக. இவ்வாறு செய்த மன்னர் உலக இன்பமும் நிலைத்த புகழும் அடைவர்;   செய்யாதார் அவற்றைப் பெறார்". (பாடல் 18)


  2  -  பாண்டியன் அறிவுடைநம்பிவரி பெறுவதற்குஉரிய வழியைக் கடைப்பிடிக்காமல் மக்களை வருத்தியமை கண்ட பிசிராந்தையார்,   அவனிடம்,   "ஒரு வேந்தன் அறிவுள்ளவனாய்தக்க முறையில் வரி வாங்கினால், பெரிய அளவில் பொருள் கிடைக்கும்; மக்களும் மேம்படுவார்கள்" என்று கூறியதோடுஅதை விளக்க அருமையானதோர்  எடுத்துக்காட்டும் தந்தார்: "காய்ந்த நெல்லை அறுவடை செய்து கவளங்கவளமாய் யானைக்கு ஊட்டினால், ஒரு மாவுக்குங் குறைந்த வயலின் விளைச்சலாயினும்பல நாளுக்கு வரும்மாறாகநூறு வேலி  நிலமானாலும் தானே போய் மேயும்படி யானையை விட்டால், அதன் வாயில் நுழையும் உணவைவிடக் காலில் மிதிபட்டு வீணாவதே மிகுதியாகும்". அப்பாடல்:

                            காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே
                            மாநிறைவு இல்லதும் பன்னாட்கு ஆகும்;
                            நூறுசெறு ஆயினும் தனித்துப்புக்கு உணினே
                            வாய்புகு வதனினும் கால்பெரிது கெடுக்கும்;
                            அறிவுடை வேந்தன் நெறிஅறிந்து கொளினே
                            கோடி யாத்து நாடுபெரிதும் நந்தும். (பா . 184)

  


3  -  மலையமானைப் போரில் வென்ற சோழன் கிள்ளிவளவன், அவனது சிறு பிள்ளைகளைக் கைப்பற்றிக் கொணர்ந்து, மண்ணில் கழுத்தளவு புதைத்து, யானையின் காலால் தலையை இடறச்செய்ய முற்பட்டபோது, கோவூர்கிழார் குறுக்கிட்டுத் தடுத்தார். "இந்தச் சிறுவர்கள் யானையைக் கண்டால் அஞ்சி அழ வேண்டியதை மறந்து, புதிய சூழலை நோக்கிமருண்டு, இதுவரை அறிந்திராத துன்பத்துக்கு ஆட்பட்டுள்ளார்கள்; இப்படிப்பட்ட சின்னஞ்சிறுவரைக் கொல்வது தகாது" என நல்லுரை நவின்றார்:

                            களிறுகண்டு அழூம் அழால் மறந்த
                            புன்தலைச் சிறார் மன்றுமருண்டு நோக்கி
                            விருந்தின் புன்கணோ உடையர்   (பா 46)


    புலவர்களைத் தம்மினும் மேலோராய்க் கருதி மதித்துஅவர்களால் பாடப்பெறுதலைப் பெரும்பேறாய் எண்ணிய மன்னர்கள், அவர்களுடைய அறிவுரைகளை ஏற்றுச் செயல்பட்டிருப்பார்கள் என நம்பலாம்.

 சங்க காலப் புலவர்கள் நல்லமைச்சர் போல இயங்கி, வேந்தர்களை அறவழியில் செலுத்தியமைக்குக் காரணம்,   அவர்களின் சமூக அக்கறையுள்ள சிந்தனையேயாகும். நாட்டின் முன்னேற்றம், மக்களின் மேம்பாடு ஆகியவற்றில் அக்கறை கொண்டு ஆவன செய்தமையால்தான் அவர்களைச் 'சங்கச் சான்றோர்' என்று அழைக்கிறோம்.

                                                            ------------------------------

Sunday, 16 October 2016

பிரஞ்சு இலக்கிய வரலாறு


லத்தீனிலிருந்து பொ.யு. 10-ஆம் நூற்றாண்டில் உருவாகிய பிரஞ்சுஅடுத்த ஆறாண்டுகளில், உரைநடையும் செய்யுளுமாகப் பலதுறை இலக்கியங்களை ஈன்றது.

Moliere

  16-ஆம் நூற்றாண்டுக் கவிஞர் Ronsard-இன் படைப்புகள் சுவை மிக்கவை. அதற்குப் பிந்தைய நூற்றாண்டில்துன்பியல் நாடகங்களை Corneille, Racine  என்னும் இருவர் செய்யுள் வடிவில் இயற்றினர்; இவர்களுக்குக் கருக்கள் கிரேக்க ரோமானிய வரலாறுகளிலிருந்து கிடைத்தன. இன்பியல் நாடகங்கள் Moliere -ஆல் உரைநடையிலும் எழுதப்பட்டன.

Rousseau

  அடுத்த நூற்றாண்டு, உரைநடைக் காலம்: Voltaire,  Rousseau  ஆகிய எழுத்துவல்லார் இருவர்மன்னனின் எதேச்சதிகாரத்தையும் சமுதாயத்தின்மீது மத பீடங்கள் செலுத்திய ஆதிக்கத்தையும் எதிர்த்து முழங்கிய கருத்துகள் 1789-இல் வெடித்த தீவிரமான, மக்கட் புரட்சிக்கான காரணங்களுள் குறிப்பிடத்தக்கவைமுடியாட்சி ஒழிந்து குடியரசு முகிழ்ப்பதற்கு அவை வித்திட்டன. Rousseau-வின் Le Contrat  Social (சமுதாய ஒப்பந்தம்) என்னும் நூல் மிக முக்கியமானதுஉலகம் முழுதும் மன்னனைத் தெய்வ அம்சமாய்க் கருதிப் போற்றிய காலத்தில், 'மக்களே நாட்டின் தலைவர்கள்' என்ற புதுமைக் கருத்தை அது பரப்பியது.

Maupassant

   19-ஆம் நூற்றாண்டில் தலைசிறந்த எழுத்தாளராய்த் திகழ்ந்த Victor Hugo, Balzac, Maupassant ஆகியோரைத் தமிழ் இலக்கிய உலகு அறியும். கவிஞர் Hugo  விழுமிய உரைநடையாளரும் ஆவார். அவரது Les Miserables  புதினம், 'ஏழை படும் பாடு' என்ற தலைப்பில் சுத்தானந்த பாரதியாரால் 75 ஆண்டுக்குமுன்பு பெயர்க்கப்பட்டுபிற்காலத்தில் அதே தலைப்புடன் திரைப்படமாயிற்று. Balzac,   80-க்கு மேற்பட்ட புதினங்களை எழுதிக் குவித்த கற்பனைக் களஞ்சியம். உலகச் சிறுகதை மன்னர் Maupassant   இயற்றிய 300-க்கும் அதிகமான கதைகளுள் பெரும்பாலானவை பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளனஅவரின் தாக்கம் பெற்ற புதுமைப்பித்தன் ஐந்தைப் பெயர்த்துள்ளார். அவர்களுக்கு அடுத்தபடியாக Emile Zola- வைச்  சொல்லலாம்; இவருடைய 17 புதினங்களுள் Nana   தமிழர்க்கு அறிமுகமானது.

    சிறந்த கவிஞர்களும் உதித்துக் கீர்த்தி அடைந்தார்கள்:

 Beaudelaire 

Arthur Rimbaud

   1 -- Beaudelaire -இன் Les Fleurs du mal  (துன்ப மலர்கள்) குறியீடுகளும் உருவகங்களும் நிரம்பிய படைப்பு.

     2  -- யாப்பிலக்கணத்தைப் புறக்கணித்த படைப்பாளி Arthur Rimbaud; இவர்,  Vers Libre (Free Verse) பயன்படுத்திப் பல வகை அடிகளில் புதுப்புதுப் படிமங்களை வாரி வழங்கியவர். உலகக் கவிஞர் பற்பலருக்கு வழிகாட்டிதமிழ்ப் புதுக்கவிதையிலும் அவரின் தாக்கம் காணப்படுகிறதாம்.

     இருவரும் குறியீட்டுக் கவிஞர்கள் என்று அழைக்கப்படுகின்றனர்.

    இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய படைப்பாளிகளுள் நால்வர் நோபல் பரிசு பெற்றவர்கள்:

Jean  Paul  Sartre

    ---  Jean  Paul  Sartre   புதுத் தத்துவம் ஒன்றின் தந்தை;   அது பிரஞ்சில் existentialisme  (இருத்தலியல்) எனப்படுகிறது. சிறுகதைநாடகம், புதினம், இலக்கியத் திறனாய்வு ஆகிய துறைகளில் புகழ் எய்திய அவரது La  Nausee (குமட்டல்),  Les Mains sales (கறை படிந்த கைகள்), Huis clos (மூடிய கதவு) ஆகியவை பிரபலம். புதுச்சேரிப் பிரஞ்சுப் பேராசிரியர் வெ. ராஜகோபாலனால் Les Mains Sales  'மீண்டும் ஒரு விடுதலை' என்னுந்தலைப்பில் தமிழாக்கப்பட்டுள்ளது.

Albert Camus

    ---Albert Camus  பிரஞ்சு உரைநடையைச் சிறப்பாய்க் கையாண்டு மெருகேற்றியவர். அவர் படைத்த L'Etranger (அந்நியன்), La Peste  ( Plague என்ற கொடுநோய்) ஆகிய புதினங்கள் பிரஞ்சு இலக்கிய வானில் விண்மீன்கள். புதுச்சேரிப் பிரஞ்சுப் பேராசிரியை மதனகல்யாணி La Peste- ஐத் தமிழில் பெயர்த்திருக்கிறார். 

Claude simon

   --- 20-ஆம் நூற்றாண்டின் இறுதியில் புதுப்புதினம் என்ற இலக்கிய வகை பிரான்சில் தோன்றிற்று. அது பாத்திரப் படைப்பு, கால அளவு (chronology) முதலியவற்றைப் புறக்கணிக்கிறது. Claude Simon  புதுப்புதினர்களுள் தலைசிறந்தவர். அவர் 1-9-2005-இல் காலமானார்.

    ---  Le Clesieux  வாழுகின்ற புதினப் படைப்பாளி. இவருடைய La Tempete (சூறாவளி) Femme  sans Identite (அடையாளம் தேடி அலையும் பெண்) ஆகிய நூல்கள் புதுச்சேரிப் பிரஞ்சுப் பேராசிரியரும் குறுந்தொகையைப் பிரஞ்சில் பெயர்த்தவருமான முனைவர் சு.அ. வெங்கட சுப்ராய நாயகரால் தமிழாக்கம் செய்யப்பட்டு,  16-9-16 அன்று,   புதுச்சேரித் தமிழ்ச் சங்கத்தில் வெளியிடப்பட்டன. Le Clesieux-விடம் இந்தியச் சிந்தனைத் தாக்கம் காணப்படுகிறது என்பதை விளக்கிப் புதுச்சேரிப் பிரஞ்சுப் பேராசிரியர்  இரா. கிருஷ்ணமூர்த்தி எழுதிய Impact of Indian Thought on  Le Clesieux  என்ற கட்டுரை The Hindu   நாளிதழில் 5 ஆண்டுக்குமுன் வெளிவந்த தகவல் குறிப்பிடத்தக்கது.

  இலக்கிய வளஞ்செறிந்த மொழிகளுள் பிரஞ்சு முக்கியமானது. இது ஆங்கிலத்துக்கு அடுத்தபடியாக உலகில் பரவியுள்ளது. இந்தச் சிறு கட்டுரை மிக முக்கிய படைப்பாளிகளை மட்டும் அறிமுகப்படுத்துகிறது.

                       ================================

 (படங்கள் உதவி - இணையம்)