Sunday 29 July 2018

கிரேக்கத்திலிருந்து




  மிகப் பழங்காலத்திலேயே கிரேக்க நாடுதான் அறிவியல், தத்துவம், இலக்கியம், கணிதம், சிற்பக் கலை, கட்டடக் கலை எனப் பற்பல துறைகளில் சாதனை படைத்துத் தலைசிறந்து விளங்கியது. இன்றைய வெள்ளையர்களின் பண்பாடு, நாகரிகம் முதலியவற்றுக்கு அடிப்படை அந்த நாடுதான்.

  குடியரசைத் தோற்றுவித்து உலகுக்குப் புதிய ஆட்சிமுறையை அறிமுகஞ் செய்த பெருமையும் கிரேக்கத்தைச் சாரும். பொ.யு.மு. 5-ஆம் நூற்றாண்டிலேயே அங்கு சட்டப் பேரவை, சட்ட மேலவை என இரு சபைகளுடன் கூடிய மக்களாட்சி இயங்கிற்று.

  ஒலிம்பிக் விழாக்களும் மாரத்தான் ஓட்டமும் கிரேக்கர் தொடங்கி நடத்தியவை என்பது உலகறிந்த செய்தி.

  ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் நிகழும் கர்னிவல் என்னும் விழாவுக்கு மூலம் கிரேக்கர் ஆண்டுதோறும் திராட்சை அறுவடைக் காலத்தில் Bacchus என்ற சாராயக் கடவுளைப் போற்றுவதற்காக நடத்திய கொண்டாட்டம்.

  கிரேக்க ஈசாப் கதைகள் பரவாத நாடு எது? இந்திய ஆரியர் போன்றே ஏராளப் புராணக் கதைகளை கிரேக்கர் கற்பனை செய்துள்ளார்கள். அவற்றைக் கருவாய்க் கொண்டு பார்புகழ் ஓவியர்களும் சிற்பிகளும் கலைநேர்த்தி ததும்பும் மகத்தான படைப்புகளை உருவாக்கியுள்ளார்கள். அவற்றுட் பெரும்பாலானவை பாரீசின் லூவ்ரூ (Louvre) அருங்காட்சியகத்தில் இடம் பெற்றுப் பன்னாட்டுச் சுற்றுலாக்காரர்களின் கண்ணையுங் கருத்தையும் காலங் காலமாய்க் கவர்ந்து அவர்களை ஆனந்தப் பரவசத்தில் ஆழ்த்துகின்றன.

Louvre Museum

  தங்கமலை ரகசியம் படத்தில் ‘ராஜா காது கழுதைக் காது’ நினைவிருக்கிறதா? அது ஒரு கிரேக்கப் புராணக் கதையின் தழுவலே;  (மிடாஸ்) என்ற மன்னனுக்கு அப்பொல்லோ கடவுள் இட்ட சாபம் கழுதைக் காது.

  அதையவன் பெரிய தொப்பியணிந்து மறைத்திருந்தான். முடி வெட்டிய தொழிலாளி அறிந்து கொண்டான்; வெளியில் சொன்னால் மரண தண்டனையாதலால் முடிந்தவரை ரகசியங் காத்தான். இயலாத நிலைமை வந்தபோது தரையில் பள்ளந் தோண்டி சொல்லிவிட்டு மூடினான்; ஆனால் மரங்கள் பெருங்குரலில் எதிரொலித்தன!

  கிரேக்க இதிகாசங்களாகிய இலியட், ஒடிசி இரண்டும் பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்பட்டு வாசிக்கப்படுகின்றன.
  இலியட் – 24 தொகுதி
  ஒடிசி – 24 தொகுதி
   
Homer
  பொ.யு.மு. 9-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹோமர் அவற்றை இயற்றினார். அவர் பார்வையற்றவர் என்று கூறப்படுகிறது; ஆனால் எழுத்துச் சான்று இல்லை.

  பொ.யு.மு. 5-ஆம் நூற்றாண்டில் 4 நாடகாசிரியர் சிறந்த நாடகங்களை இயற்றிப் புகழெய்தினர். அவற்றுட் சில பகுதிகளே கிடைத்தன. அவை:
  Aristophanes – 11 (மொத்தம் 40)
  Aeschylus   - 7  (70)
  Euripides   - 18  (92)
  Sophocles   – 7  (120)

  முதல்வர் இன்பியல் நாடகமும் மற்றவர் துன்பியல் நாடகமும் எழுதினர்.

  யூரிப்பிடீசும் சொஃபுக்ளீசும் எலக்த்ரா என்னுந் தலைப்பில் ஒரே கதையை நாடகமாக்கினர்; ஏழாண்டு பிந்தியது சொஃபுக்ளீசின் நூல். இலியட் தான் எலக்த்ராவுக்கு ஆதாரம்.

  கிரேக்கத் துன்பியல் நாடகங்கள் மனிதரின் உச்சக் கட்டச் சாதனைகள் என்று திறனிகள் மதிப்பிடுகிறார்கள்.

Aristotle

  அரிஸ்டாட்டில் பழங்கால மேதைகளுள் குறிப்பிடத் தக்கவர். (பொ.யு.மு. 384 – 322) அவர் 16-ஆம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய அறிஞர்களால் உச்சிமீது வைத்து மெச்சப்பட்டார். மாவீரர் அலக்சாந்தரின் குருவாய் விளங்கிய அவர், இயற்பியல் உயிரியல் விலங்கியல் முதலான அறிவியல் துறைகளில் மட்டுமன்றிக் கவிதை, தத்துவம், இசை ஆகிய வேறு களங்களிலும் ஆழங்கால்பட்டு அவை குறித்து நூல்கள் இயற்றியவர். “பூமியைக் காட்டிலும் சூரியன் பெரியது” என்பது முதலிய பற்பல உண்மைகளை அறிவு ஆராய்ச்சிகளால் கண்டுபிடித்து எழுதியவர். ஆகவே பிற்கால அறிவுஜீவிகளுக்கு எதைப் பற்றி ஐயந்தோன்றினாலும், தாமே ஆய்ந்து பார்க்க எண்ணாமல் அரிஸ்டாடிலின் கருத்து என்ன என்பதையறிந்து அதை வேத வாக்காய்க் கொண்டு, அப்போதைய அறிவுலகின் பொது மொழியாய்த் திகழ்ந்த லத்தீனில் Aristoteles dixit என்று சொல்லிச் சந்தேகந் தீர்த்துக் கொள்வது வழக்கமாய் இருந்தது. அந்தச் சொற்றொடருக்கு, “அரிஸ்டாட்டில் சொல்லியிருக்கிறார்” என்பது பொருள்.

  அந்த மாமேதை சில பிழைக்கருத்துகளையும் வெளியிட்டுள்ளார். காட்டு: “ஆண்களை விடப் பெண்களுக்குப் பல் எண்ணிக்கை குறைவு.”
  ஆனைக்கும் அடி சறுக்கும்!

Polybius

   Polybius பொ.யு.மு. 2-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்கர். உலகத்தின் முதல் வரலாற்றறிஞர் எனப் போற்றப்படுகின்ற அவரது நூல் “வரலாறு” என்னுந் தலைப்பில் 40 தொகுதி கொண்ட பிரம்மாண்ட படைப்பு. இதன் பெரும்பகுதி ரோமானியரின் வரலாற்றை விவரிக்கிறது.

  முதலைந்து தொகுதிகள் முழுமையாய்க் கிடைத்தன; 17,19, 37, 40 அடியோடு அழிந்தன; எஞ்சியவை அரைகுறையாய் மிஞ்சின.

Strabo

  உலகின் முதல் புவியியலறிஞரும் கிரேக்கரே. பெயர் Strabo (பொ.யு.மு. முதல் நூ.) 17 தொகுதிகளாய் விரிந்த புவியியல் நூலுக்கு அவர் ஆசிரியர்.

  தொகுதி 1, 2 : பொதுத் தகவல்கள்
         3 – 10 : ஐரோப்பா
         11 – 16 : ஆசியா, இந்திய சாமியார்கள் பற்றியும் எழுதியுள்ளாராம்.
            17  : ஆப்பிரிக்கா

  உலகம் உருண்டை என்று தெரிவித்த மேதை Strabo.

  ஊர்தி வசதிகளும் தகவல் தொடர்பு வசதிகளும் இல்லாத காலத்தில் இத்தகைய நூல்களை இயற்றுவதற்கு எவ்வளவு கடின உழைப்பு தேவைப்பட்டிருக்கும்!
 
(படங்கள் உதவி - இணையம்)

Monday 16 July 2018

மயிலு


நூல்களிலிருந்து – 19
(கோவை சதாசிவம் 2014-இல் வெளியிட்ட 
'மயிலு' என்ற சிறு நூலிலிருந்து 
சில தகவல்களைப் பதிகிறேன்.)




1.  வடகிழக்குப் பருவ மழை தொடங்குங் காலத்தில் மயில்கள் இனச் சேர்க்கைக்கு ஆயத்தமாகின்றன. மழைப் பொழிவிற்குப் பிறகுதான் புற்களும் செடிகளும் முளைக்கின்றன; அவற்றால் புதர்கள் உருவாகும். முட்டையிடவும் பாதுகாக்கவும் புதர்கள் அரண் போல் உதவும். புற்களையும் செடிகளையும் மொய்க்கும் புழு பூச்சிகள் குஞ்சுகளுக்கு உணவாகும்.

  இனப் பெருக்கக் காலத்தில்தான் ஆணுக்கு நீண்ட தோகை வளரும். பெட்டைகளைக் கவரத் தோகை விளம்பரம் அவசியம். நான்கைந்து பெண் மயில்கள் மேயுமிடத்தில், தோகை விரித்தபடி அசைந்து கொண்டிருக்கும் ஆண், பெண்கள் பார்க்கும்வரை, தோகையை மூடாமல் முன்னும் பின்னுமாய்ச் சுற்றும். உடல் எடையைச் சமன்படுத்திக்கொள்ள அடிக்கடி தோகையைச் சிலிர்க்கும். கால்களை அங்குமிங்கும் மாற்றியபடி நகரும்.

   சில நேரங்களில், அரிதாக, மூன்று நான்கு ஆண் மயில்கள் தோகை விரிக்கும்; அப்போது ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்ளும். வலக்காலில்தான் பலம் உள்ளது. அந்தக் காலால் கடுமையாய் உதைபட்ட மயில் பின்வாங்கிவிடும்; வென்ற ஆண் களிப்பில் பெருங்குரலில் அகவியவாறு தன் தொண்டைப் பகுதியைக் கொத்திக் கொள்வதும் உண்டு.

  எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருந்த பெட்டை அதனருகில் செல்லும்.

   இனச் சேர்க்கைக் காலம் முடிந்ததும் ஆண் மயில்கள் வால் பகுதியின் மேலடுக்குகளில் வளரும் தோகையை ஐப்பசி கார்த்திகை மாதங்களில் உதிர்த்துவிடும். சிறகுத் தொகுதியைத் தூக்கிக் கொண்டு ஆண்டுமுழுவதும் வாழ்வது சிரமம். பறப்பதற்குப் பெருந்தடையாய் உள்ள தோகையைத் தம் அலகால் கொத்திப் பிடுங்கி எறியும். அங்கொன்றும் இங்கொன்றுமாய்ச் சிதறிக் கிடக்கும் தோகைகளைச் சேகரிப்பவர்கள் அவற்றை விற்கிறார்கள்.

   பெண் மயில் முட்டையிட்டு 28 நாள் அடைகாக்கும். வெளிவருங் குஞ்சுகள் 2 மணி நேரத்தில் நடக்கவும் 9 நாளில் பறக்கவும் கற்றுக் கொள்கின்றன. ஆணா பெண்ணா என்பது இரண்டாண்டுவரை தெரியாது. குஞ்சுகள் உள்ள இடத்தில் பாம்பைக் கண்டால் மயில்கள் கூட்டாகச் சேர்ந்து விரட்டும். குஞ்சுப் பாதுகாப்புக்காகத் தான் மயிலுக்கும் பாம்புக்கும் பகையுணர்வு உண்டாகிறது. பாம்பைக் கொன்று மயில் உண்பது இல்லை, குஞ்சுகளுக்கு ஊட்டுவதுமில்லை.


2.   மயிலின் நடனத்தைக் குளிருக்கு நடுங்குவதாகப் பேகன் புரிந்துகொண்டார் என்பது அபத்தம். போர்வையை இழக்க வேண்டிய அவசியம் ஒருபோதும் பேகனுக்கு நிகழ்ந்திருக்காது. மிகக் கூச்சமுள்ள பறவைகளுள் மயிலும் ஒன்று. மனிதனின் அண்மையை அது விரும்புவதில்லை; ஆடும் மயிலுக்கு அருகில் போக முடியாது. இயற்கைச் சூழலில் மயில்கள் நடனத்தைப் பதிவு செய்ய முடியாமல் உயிரியல் பூங்காவில் படமாக்கவேண்டிய நிர்ப்பந்தம் எனக்கேற்பட்டது. பேகனும் போர்வையும் அக்காலப் புலவன் பாடிப் பரிசில் பெறக் கலந்தடித்த மிகையான கற்பனைதான்.


3.   மூதுரையில், “கான மயிலாடஎன்று குறிப்பிடும் பறவை மயிலினமன்று. இந்தியாவில் மட்டும் வாழ்ந்த கானமயிலும் பெண் பறவையைக் கவர வாலை விசிறி போல் விரித்து இறக்கைகளைப் பரப்பிக்கொண்டு ஆடும்; ஆனால் மயிலாட்டத்தோடு ஒப்பிட முடியாது. கானமயில் முற்றிலும் அழிந்துபோய்விட்டது.


4.  அலெக்சாண்டர் இந்தியாவை ஆக்ரமித்தபோது மயில்களின் அழகில் மனத்தைப் பறிகொடுத்தார். நாடு திரும்புகையில் அகப்பட்ட மயில்களைக் கூண்டில் அடைத்து கிரீசுக்குக் கொண்டுபோனார். அவரால்தான் ஐரோப்பாவில் மயில்கள் பரவின.

Thursday 5 July 2018

மறைந்த தங்கப்பா

ம.இலெ.தங்கப்பா



   புதுச்சேரித் தமிழறிஞர் .இலெ. தங்கப்பா தம் 84-ஆம் அகவையில் மே 31-ஆம் நாள் காலமானார். ஜனவரியிறுதியில் இதய நோய்க்கு ஆளான அவர், தக்க சிகிச்சை மேற்கொண்டு வந்தும், பலனின்றிப் போயிற்று. கவிஞர், முற்போக்கு சிந்தனையாளர், மொழிபயெர்ப்பாளர் ஆகப் பல துறைகளில் புகழெய்திய அவர், ‘தெளிதமிழ்என்ற தனித்தமிழ் இலக்கிய மாதச் சிற்றிதழின் ஆசிரியராயும் பணியாற்றினார். புதுச்சேரித் தாகூர் கலைக்கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராய்த் திறம்படக் கற்பித்த அவர், ஆங்கிலத்திலும் நிறையறிவு பெற்றிருந்தார்.

   சாகித்ய அகாதெமியின் விருதை இருமுறை பெற்றமை அவரது திறமையைப் பறைசாற்றப் போதுமானது:

1.   தமிழ் அகப் பாடல்களைத் தேர்ந்து மொழிபெயர்த்து Love Stands Alone என்னுந் தலைப்பில் வெளியிட்ட நூலும்
2.   குழந்தைகளுக்கான தமிழ்ப் பாட்டுகள் என்ற படைப்பும்

   அவ்விருதுகளைப் பெற்றுத் தந்தன.

   அவரது எழுத்துப்பணி அவ்வளவோடு நின்றுவிடவில்லை.
  
-    முத்தொள்ளாயிரத்தின் மொழிபெயர்ப்பு நூல் Penguin வெளியீடாக Red Lilies and Frightened birds என்னுந் தலைப்பில் வந்தது.
-    நாலடியார், புறநானூற்றுப் பாக்கள், திருமந்திரப் பாடல்கள் முதலியவற்றையும் ஆங்கிலத்தில் பெயர்த்திருக்கிறார்.
-    20-ஆம் நூற்றாண்டின் பிரபல பிரஞ்சு எழுத்தாளர் Andre Gide இயற்றிய Les Nourritures Terrestres என்ற படைப்பை ஆங்கில வழித் தமிழில்மண்ணின் கனிகள்என்ற தலைப்பில் நூலாக்கியுள்ளார்.
   
கொஞ்சம் sample தருகிறேன்:

1.   புறம் 221. கோப்பெருஞ்சோழன் இறந்தபோது மனம் வருந்திப் பொத்தியார் பாடியது:

பாடுநர்க் கீத்த பல்புக ழன்னே
ஆடுநர்க் கீத்த பேரன் பினனே
அறவோர் புகழ்ந்த ஆய்கோ என்னே
திறவோர் புகழ்ந்த திண்நண் பினனே
மகளிர் சாயல் மைந்தர்க்கு மைந்து
துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்
அனையன் என்னாது அத்தக் கோனை
நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்தன்று
பைதல் ஒக்கல் தழீஇ யதனை
வைகம் வம்மோ வாய்மொழிப் புலவீர்
நனந்தனை யுலகம் அரந்தை தூங்கக்
கெடுவில் நல்லிசை சூடி
நடுகல் ஆயினன் புரவலன் எனவே.

He gave to the singers
  And won much fame.
He gave to the dancers
  And gained many a heart.
Men of virtue paid him homage.
  His sceptre was never bent.
Men of wisdom paid him tributes.
  His friendship was constant.
Gentle and sweet to women,
  And tough before his men
He was a sanctuary
  To the noble.
Reckoning nothing of this
  Thoughtless Death
Has claimed this worthy soul.
   Let us come together
   In our sorrow
O poets of thoughtful words
And condemn Death.
  For, alas,
Plunging this world in sorrow
  Our great patron
  In all his glory
Has become
  A monument of stone.


2.   புறம் 248. ஒரு கைம்பெண்ணின் அவலத்தை ஒக்கூர் மாசாத்தியார் எடுத்துரைக்கிறார்.

அளிய தாமே சிறுவெள் ளாம்பல்
இளையம் ஆகத் தழையா யினவே இனியே
பெருவளக் கொழுநன் மாய்ந்தெனப் பொழுதுமறுத்து
இன்னா வைகல் உண்ணும்
அல்லிப் படூஉம் புல்லாயினவே.

Woe unto me!
When I was young
This lily supplied me with leaves
Now that my husband is dead
It provides me with seeds
Which I must cook and eat
At an untimely hour
Denying myself regular meals.

3.   15.8.2017 தெளிதமிழில் வந்தது:

    கொள்ளையரை ஒழிப்போம்

பன்னாட்டு வாணிகரும் உள்நாட்டுக்
  கொள்ளையரும் பழிசேர் வாழ்க்கைப்
புன்னோக்கின் ஆட்சிசெய்யும் புல்லியரும்
  உள்ளுளவாய்ப் புரிந்துகூடி
இந்நாட்டின் வளம்முழுதும் தின்கின்றார்;
  எளியவரின் நிலம் பறித்தே
அன்னார்தம் வாழ்வுரிமை அழிக்கின்றார்.
  இதன் பெயர்தான் ஆட்சியாமே!
குடியாட்சி நாடிதென்று கூறுவதோ?
  ஆள்பவராம் கொள்ளைக் காரர்
முடியாட்சி மன்னரினும் முப்பகட்டாய்
  வாழ்கின்றார்; முடியா மக்கள்
அடிவயிற்றில் அடிக்கின்றார்; ஐயகோ!
  சான்றோரே, அறஞ்சார்ந் தோரே!
இடியேறாய் முழக்கமிட்டே எழுந்திடுவோம்
  கொள்ளையரை ஒழிப்போம், வாரீர்!

பின்குறிப்புதம் சடலத்தைப் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்குத் தானமாக வழங்கவேண்டும் என்ற அவரது கோரிக்கை நிறைவேற்றப்பட்டது.