Sunday 17 June 2018

தகவல் திரட்டு


           
 1. “சைவர்களுக்குச் சாணிலை” என்பது பழமொழி. சிலர் பொருள் கொள்வர், சைவ உணவு பரிமாறுவதற்குச் சாண் வாழையிலை போதும் என்று. அது பொருந்தாது. சைவ உணவு என்பது அவ்வளவு கொஞ்சமாகவா இருக்கும்?

       உண்மைப் பொருள் இதுதான்: சிவனைப் பூசிக்கையில் சைவர்கள் பன்னீர் இலையைக் கிள்ளிப் போடுவார்கள். அது சாண் நீளம் இருக்கும்.
(புலவர் கி.வா.ஜகந்நாதனின் விளக்கம்).


2. “தில்லைவாழ் அந்தணர், தம் அடியார்க்கும் அடியேன்” என்று தொடங்கும் திருத்தொண்டத் தொகையைப் பாடிய சுந்தரமூர்த்தி நாயனார், அதில் அறுபது தொண்டர்களைக் குறிப்பிட்டார். ‘சடையன் இசைஞானி காதலன்’ என்று தம் பெற்றோரின் பேரைச் சொல்லி அவர்களின் அன்பு மகன் என்று தம்மைச் சுட்டினார். இந்த மூன்று பேர்களையும் யாரோ தவறுதலாய்ச் சேர்த்து 63 நாயன்மார் என்றார். இது வழக்கத்துக்கு வந்துவிட்டது.

3. வால்மீகி இராமாயணத்தில் ஏழு காண்டங்கள் இப்போது இருக்கின்றன. இவற்றுள் 2 முதல் 6 வரை உள்ள 5 தான் அசல். இவை இராமனை மனிதனாகச் சித்திரிக்கின்றன. மற்ற காண்டங்கள் யாரோ எழுதிச் சேர்த்தவை. இவை அவனைத் திருமாலின் அவதாரமாகக் காட்டுகின்றன. இராமனது காலத்தில் வால்மீகி வாழ்ந்ததாயும் கூறுகின்றன.

(நவாலியூர் நடராஜன் இயற்றிய ‘வடமொழி இலக்கிய வரலாறு’ பக். 27)

4. சென்ற நூற்றாண்டுவரை, குழந்தையைத் தவிட்டுக்கு வாங்கும் வழக்கம் தமிழகத்தில் பரவலாகக் காணப்பட்டது. ஒரு தாயின் முதலிரு குழவிகள் அகால மரணம் அடைந்தால் மூன்றாவதாய்ப் பிறந்ததை உடனடியாய்த் தாய்மாமனின் கைகளில் தந்து, அவனிடம் கொஞ்சந் தவிட்டைத் தந்துவிட்டுத் திரும்ப வாங்கிக் கொள்வர். இப்படிச் செய்தால் அது நீண்ட ஆயுள் பெறும் என்பது நம்பிக்கை.

  ஆண் எனில் தவிடன் எனவும் பெண் எனில் தவிட்டம்மாள் எனவும் பட்டப்பெயர் சூட்டுவர். நகராட்சியில் வேறு பெயர் பதியப்படும்.

5. திரைப்படத் தொடக்கக் காலத்தில் மக்களிடம் சினிமா மோகம் ஏற்படவில்லை. பார வண்டியில் அமர்ந்துகொண்டு வாத்தியம் வாசித்துக் கொண்டு ஊரை வலம் வந்து துண்டு நோட்டீஸ் வழங்கிக் கூட்டஞ் சேர்த்தனர்.

  கொட்டகை வாசலில் பாண்டு இசை பரப்பி ஆள் இழுத்தனர்.

6. எங்கள் ஊராகிய காரைக்காலிலும் சுற்று வட்டாரங்களிலும் கிட்டத்தட்ட 1935 வரை கொசு இல்லை; 80 கி.மீ. மேற்கேயுள்ள கும்பகோணத்தில் இருந்தது.

கும்பகோணம் கொசுவுகளா
கோணமூக்குப் பவிசுகளா
கடிக்கலாகுமோ ரத்தம்
குடிக்கலாகுமோ?

எனத் தொடங்கிய இசைத்தட்டுப் பாடலொன்று அப்போது பிரசித்தம்.


 7. திருமணத்தில் அரசாணிக்கல் நடுகிறார்கள். அறிஞர் சிலர் அது பற்றி விளக்கியுள்ளனர்; அது அரசு ஆணைக் கால் என்றும் திருமணம் நிகழ்த்துவதற்கு அரசனது ஆணையைப் பெற்றதற்கு அது சான்று என்றும் அவர்கள் எழுதியுள்ளார்கள்.

        அது சரியல்ல என்பது என் கருத்து. இருவர் மணம் புரிந்துகொள்வதற்கு பெற்றோர் உற்றோர் சம்மதம் கோருவோம். எங்கோ இருக்கிற அரசனது ஆணை எதற்கு? அது தேவைதான் என்றாலும் அதைப் பெறுவதென்பது ஊர்தி வசதி, தகவல் தொடர்பு வசதி அறவே இல்லாத காலத்தில் லேசுப்பட்ட காரியமா?

   நான் நினைக்கிறேன், மரக்கிளையை நடுவதால் அரசு என்பது அரச மரத்தைக் குறிக்கும் என்று. ஒரு காலத்தில் அரச மரத்துக் கிளையை நட்டிருப்பார்கள்.

   ‘அரசனை நம்பிப் புருஷனைக் கைவிடாதே’ என்னும் பழமொழியில் அரசனை என்பது அரச மரத்தை எனப் பொருள்படுகிறதல்லவா?

8. “சங்க கால மன்னன் கரிகால் சோழன் கல்லணை கட்டினான், 2000 ஆண்டுக்கு முன்பே தமிழர் பொறியியல் வல்லுநராய்த் திகழ்ந்தனர்!”

          இவ்வாறு சிலர் பெருமிதத்துடன் கூறுவதுண்டு; அது உண்மையாயின் பெருமைப்படலாம்தான்; ஆனால் அவனது அரண்மனையோ பிற வேந்தர்களின் மாளிகைகளோ நிலைக்காதது ஏன்? எல்லாம் மண்ணால் எழுப்பப்பட்டவையாதலால் சுவடின்றி அழிந்துபோயின. அணை கட்ட அறிந்தவர் உறுதியான வீடு நிர்மாணிக்க அறியாதவரா? பழங்காலக் கோயில்களே மண்ணால் ஆனவைதானாம். அவை ‘மண்தளி’ எனப்பட்டன. 7-ஆம் நூற்றாண்டுக்குப் பின்பு பல்லவர் கற்கோயில்கள் உருவாக்கினர். அவை ‘கல்தளி’ (கற்றளி) எனப் பெயர் பெற்றன.

   கரிகாலன் மீது பாடப்பட்ட பட்டினப்பாலையும் பொருநராற்றுப்படையும் அவன் அணை கட்டிய மிக முக்கியமாக செய்தியைக் கூறவில்லை.

   11-ஆம் நூற்றாண்டில் கல்லணை கட்டிய வீர ராசேந்திர சோழனுக்குக் கரிகால் சோழன் என்ற பெயரும் உண்டு.
 
(படங்கள் உதவி இணையம்)