Tuesday 24 December 2019

நான் பாவியாம்!





  
கிறித்துவர்களின் பரப்புரையைப் பெரும்பாலான பிற மதத்தார் அறிந்திருப்பர்:

  விலக்கப்பட்ட கனியை ஆதாமும் ஏவாளும் உண்டமையால் பாவிகள் ஆனார்கள்; அவர்களது பாவம் அவர்தம் சந்ததியாகிய எல்லா மனிதர்களையும் பற்றிக்கொண்டது. இரக்கங்கொண்ட கர்த்தர் பாவிகளை ரட்சிக்கத் தம் மைந்தனாகிய ஏசுவை உலகுக்கு அனுப்பினார். ஏசுவின் மீது நம்பிக்கை வைக்கிறவர்கள் மட்டும் பாவம் நீங்கப் பெறுவர்; மரித்தாலும் உயிர்த்தெழுவர்.

  சில வினாக்கள் எழுகின்றன:  யாவற்றையும் படைத்த கர்த்தர் தானே பாவக்கனி மரத்தையும் படைத்தார்? அதை உண்டாக்குவானேன் அப்புறம் அதன் பழத்தைத் தின்னத் தடை விதிப்பானேன்? அவர்கள் தடை மீறுவார்கள் என்பது அவருக்குத் தெரியாதா? குற்றம் புரியக்கூடிய சூழலை உருவாக்கிவிட்டுக் குற்றஞ் செய்தவரைத் தண்டிப்பது ஒரு சதித்திட்டம் என எனக்குத் தோன்றுகிறது.

  மனிதச் சட்டம் என்ன சொல்கிறது? குற்றவாளிகளும் அவர்களுக்குத் துணை போனவர்களும் தண்டனைக்கு உரியவர்கள் என்கிறது; கடவுளின் சட்டம் இதைவிட மேலானதாக அல்லவா இருக்கவேண்டும்? ஆதி மனிதனின் தவற்றுக்கு பிள்ளைகளையும் சந்ததிகளையும் பொறுப்பாக்குவது என்ன நியாயம்?

   யாரோ எங்கோ எப்போதோ இழைத்த குற்றத்தால் நான் பாவியாம்! என்னய்யா இது வேடிக்கை! நான் அந்தப் பாவத்திற் பங்காளி அல்ல! ஆதலால் கிறித்து மீது நம்பிக்கை வைக்கவேண்டிய அவசியம் எனக்கில்லை; இதுவரை வைக்கவில்லை;  இறுதிவரை வைக்கப் போவதும் இல்லை!

Thursday 5 December 2019

தீபாவளியும் கார்த்திகை விழாவும்





  மகாவீரர் சமாதியடைந்தபோது சமணர் வரிசையாய் விளக்கேற்றி வைத்ததாகவும் அதைக் காலப்போக்கில் இந்துக்கள் தீபாவளி என்னும் பெயரில் தமது விழாவாக்கிக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்துக்களின் சொந்தப் பண்டிகையல்ல என்பதால்தான் நாடு முழுதும் தீபாவளி ஒரே மாதிரியாக அனுசரிக்கப்படவில்லை.

  தமிழர்க்கு நரகாசுரன் இறந்த நாள்; தலைமுழுகிப் புத்துடை அணிந்து மகிழ்கின்றனர்; வட நாட்டாரோ இராமன் போரில் வென்று அயோத்திக்குத் திரும்பிய நாள் எனக் கூறி இராம லீலா கொண்டாடுகின்றனர்; கர்நாடகத்தில் தசராதான் முக்கிய விழா;  வங்காளத்தில் துர்கா பூஜை; கேரளத்தில் ஓணம்; இங்குத் தீபாவளிக்கு இடமேயில்லை.

  இட்லர், இடி அமீன், போல்போட் முதலியவர்கள் மக்களைக் கொன்று குவித்த கொடியவர்கள்; அவர்கள் அழிந்த நாளில் யாரும் விழா எடுப்பதில்லை. ஒருவன் எவ்வளவுதான் பாதகனாய் இருப்பினும் அவன் ஒழிந்தமைக்கு மகிழ்ந்து விழாக் கொண்டாடுதல் பண்பாடற்ற செயல்.

  தீபாவளி எப்போது தமிழகத்தில் நுழைந்தது என்பதை அறியோம்; அது பற்றி சங்க இலக்கியங்களில் செய்தி இல்லை; ஆனால் கார்த்திகை விழா குறித்துத் தகவலுண்டு.

  அகநானூறு பா 141. அடி 7-11

“…… மதி நிறைந்து
அறுமீன் சேரும் அகலிரு நடுநாள்
மறுகுவிளக் குறுத்து மாலை தூக்கிப்
பழுவிறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய
விழவுடன் அயர வருக.”

உரை: சந்திரன் நிறைவடைந்து (பௌர்ணமி) கார்த்திகை நட்சத்திரத்தை நெருங்குகிற அன்று, இரவில், தெருக்களில் விளக்குகளை வரிசையாய் ஏற்றி வைத்துப் பூமாலைகளைத் தொங்கிவிட்டு ஊரில் பலருடன் கூடி விழாக் கொண்டாடுவதற்கு வருக.

விளக்கம்: 
அறுமீன் = ஆறு மீன்; கார்த்திகை நட்சத்திரம். உண்மையில் இது ஏழு நட்சத்திரங்களின் கூட்டம்; ஆறுதான் பிரகாசமாய்த் தெரியும். ஆங்கிலத்தில் Pleiades. 
மறுகு = தெரு; 
மூதூர் = முதுமை + ஊர். பழைய ஊர்.

பிற்கால நூலாகிய களவழி நாற்பதும் கார்த்திகை விழாப் பற்றிப் பேசுகிறது.

பா 17. அடி 3:

“கார்த்திகைச் சாற்றில் கழிவிளக்கு”

பொருள்: 
சாற்றில் = விழாவில்; 
கழி = மிகுதியான

தமிழர் தொன்றுதொட்டுக் கொண்டாடிவருகிற கார்த்திகைத் தீப விழாதான் உண்மையில் நமக்குத் தீபாவளி. (தீப + ஆவளி = தீப வரிசை)

  அது கோவில் விழாவாக எக்காலத்திலோ மாறிவிட்டது.

&&&&&
படம் உதவி - இணையம்