Sunday 7 March 2021

இரங்கல் செய்தி

இலக்கியச்சாரலில் இதுகாறும் பல்சுவையிலான பதிவுகளைப் பதிந்து உலகளாவிய வாசகர்களைப் பெற்ற திரு.சொ.ஞானசம்பந்தன் ஐயா இன்று நம்மை மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டு மறைந்துவிட்டார். உடலால் மறைந்தாலும் பதிவுகளால் என்றென்றும் எண்ணற்ற மனங்களில் நிலைத்திருப்பார். 

வருத்தத்துடன் இத்தகவலைப் பகிர்வோர்

ஊஞ்சல் ஞா.கலையரசி (மகள்)

கீதமஞ்சரி கீதா மதிவாணன் (மருமகள்)




Thursday 11 February 2021

இன்னொரு பிறந்த நாள்

 


  எனது 96-ஆம் வயது இன்று (11-02-2021) தொடங்குகிறது.

  12-ஆம் அகவையில் என்னைப் பிடித்த வாசிப்புப் பழக்கம் இன்னமும் தொய்வின்றித் தொடர்ந்து கொண்டிருப்பதால் பல முதியோர்களைப் போல் பொழுது போகவில்லை என்று நான் புலம்பத் தேவை  யேற்படவில்லை. இது என் நற்பேறு.

  சென்ற ஆண்டு நின்றுவிட்ட இலக்கியச் சாரல் இனிப் பெய்யும்; பருவ நிலை சாதகமாக அமையும் காலங்களில் மட்டுமே.

****


Saturday 25 April 2020

பழங்காலச் செய்திகள் – 3 (முடிவு)



  திரைப்பட வருகைக்கு முற்பட்ட காலத்தில் தமிழர்களின் பொழுதுபோக்குக்குப் பல நிகழ்ச்சிகள் பயன்பட்டுள்ளன; 
வில்லுப்பாட்டு, பாவைக் கூத்து, தெருக் கூத்து, காலட்சேபம், உபன்னியாசம், புராணக் கதை கேட்டல், நாடகம், சர்க்கஸ்.

  கூத்து மிகப் பழமைய காலத்திலிருந்து தொடர்ந்து வந்த நிகழ்வு;
 “கூத்தாட்டு அவைக் குழாத் தற்றே”
(குறள்)

  மேற்கண்ட நிகழ்ச்சிகளுள் பெரும்பங்கு நாடகத்துக்குண்டு.

  பல நாடகக் கம்பெனிகள் உருவாகி ஊர் ஊராய்ப் போய்த் தங்கித் தம் நாடகங்களை அரங்கேற்றி மக்களை மகிழ்வித்தன.



  S.G.கிட்டப்பா, K.B.சுந்தராம்பாள் இணைந்து நடித்துப் பெரும் புகழ் ஈட்டியிருந்தனர். செங்கோட்டை சிங்கம் எனவும் கொடுமுடிக் கோகிலம் எனவும் அவர்கள் முறையே சிறப்புப் பெயரால் சுட்டப்பட்டனர். கிட்டப்பா மிக உரத்த குரலில் பாடுவாராம்.

  அவரது இசைத் தட்டுகள் சில நான் கேட்டதுண்டு:

- காண்டீபன் மைத்துனா
       காளிங்கன் நர்த்தனா
-    அன்றொரு நாள் குட்டி
    அருஞ்சிறையில் இட்டேன்
-    கோடையிலே இளைப்பாற
    (அருட்பா)
-    தாமதமேன் தாளை நீ திறவாய்.
-    காமி சத்தியபாமா
   கதவைத் திறவாய்
பூமி புகழும் நேயன்
   புழுதி யணிந்த வாயன்
நேமி வசந்தன் நானடி
-    தசரத ராஜகுமாரா அலங்காரா
   அதி தீரா சுகுமாரா
-    எல்லோரையும் போலவே என்னை
    எண்ணலாகுமோடி போடி
  
 அவர் இள வயதில் இறந்து போனதும் சுந்தராம்பாள் நாடகத்தைத் துறந்தார்.

  மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனி, கன்னையா கம்பெனி, F.G.நடேச அய்யரின் ரசிக ரஞ்சனி சபா, சங்கர தாஸ் சுவாமிகளின் தத்துவ மீன லோசனி சபா (முக்கிய நாடகம் குலே பகாவலி), தமிழ் நாடகத் தந்தை என்று பெயர் வாங்கிய பம்மல் சம்பந்த முதலியாரின் சுகுண விலாச சபா என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன்.

  சம்பந்த முதலியார் வழக்குரைஞராயும் நீதிபதியாயும் பணியாற்றியவர். சொந்தமாயும் ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தும் ஏராள நாடகங்களை இயற்றியதுடன் நடிக்கவுஞ் செய்திருக்கிறார். இவரது சபாபதியும் மனோகராவும் திரைப்படமாயின.

    நான் நேரடியாய் அறிந்த சபாக்கள் நான்கு:


1. மதுரை தேவி பால விநோத சங்கீத சபா.

முக்கிய நாடகங்கள்:

-    இன்ப சாகரன்

-    பக்த ராமதாஸ்.
 இதில் நவாபாய் நடித்த முதலாளி, “நவாப் ராஜமாணிக்கம்என அறியப்பட்டார்.


-    அய்யப்பன்
  இதுவே சபரிமலைப் பயணத்துக்குத் தூண்டுதல்

2. T.K.சங்கரன், T.K.முத்துசாமி, T.K.ஷண்முகம், T.K.பகவதி ஆகிய 4 உடன்பிறந்தாரின் ஷண்முகா நந்த சபா.

  நால்வரும் மேனகா என்ற திரைப்படத்தில் நடித்தனர். T.K.ஷண்முகம் “ஓர் இரவு” படத்தின் நாயகன். பகவதி ராமாயணத்தில் ராவணன்.

  இவர்களின் பிரதான படைப்புகள்:
  ராஜ ராஜ சோழன், குமாஸ்தாவின் பெண், முள்ளில் ரோஜா, மனிதன், ஔவையார்.

  மனிதன் திரைக்கு வந்தது. ஔவையாய் நடித்தவர் ஔவை ஷண்முகம் என்ற சிறப்புப் பெயர் பெற்றார். இதைக் கருத்திற் கொண்டு ஒரு படத்துக்கு “ஔவை ஷண்முகி” எனப் பெயர் சூட்டப்பட்டது.

3. சக்தி நாடக சபா. இதன் புகழ் வாய்ந்த நாடகமாகிய கவியின் கனவில் S.V.சுப்பையா நாயகனாகவும் M.N.நம்பியார் வில்லனாயும் நடித்தனர்.

4. M.R.ராதாவின் கம்பனி சமூக சீர்திருத்தக் கருத்துகளைப் புரட்சிகரமாய்ப் பரப்பியது. தூக்கு மேடை, ராமாயணம், ரத்தக் கண்ணீர் நாடகங்கள் குறிப்பிடத் தக்கவை. பின்னது திரையில் வந்தது.

  அரசின் தடையுத்தரவுகளுக்கு அடிக்கடி ஆளாகியும் மனந் தளராமல் நாடகம் நடத்தினார் ராதா.

  எல்லாக் கம்பனிகளிலும் பெண் பாத்திரங்களில் ஆண்களே நடித்தனர். ஹீரோ, ராஜ பார்ட் எனவும் ஹீரோயின், ஸ்திரீ பார்ட் என்றும் வில்லன், கள்ளப் பார்ட் எனவும் குறிப்பிடப்பட்டனர்.

   பாட்டுகளே அதிகமாய் இடம் பெற்றன. ஒலி பெருக்கியில்லாக் காலமாதலால் கடைசி வரிசை ரசிகர்களையும் சென்றடையக் கூடியது பாடல் அல்லவா? பின்பாட்டு வசதியும் இருந்தது.

  ஆர்மோனியம் வாசித்துக் கொண்டு பின்பாட்டுப் பாடுவதில் வல்லவர்கள் காதர்பாட்சாவும் K.S.தேவுடு அய்யரும்.

  மேடையின் ஒரு ஓரத்தில் பின்பாட்டுக்காரர் பெஞ்சில் அமர்ந்திருப்பார்; எதிரில் ஒரு மேசை மீது ஆர்மோனியம் வீற்றிருக்கும்.

  நடிகர் பாடி நிறுத்தும் போதெல்லாம் பின்பாட்டுக்காரர் அவர் பாடியதை மீண்டும் பாடுவார்.

  இருவரும் இவ்வாறு சில அடிகளைப் போட்டி போட்டுக் கொண்டு பாடுவதைக் கேட்டு ரசிகர்கள் பரவசத்தில் ஆழ்வார்கள்.

  மக்கள் பெரிதும் விரும்பிய நாடகங்களுள் ஒன்று கோவலன். பல கம்பெனிகள் இதை நடத்தியிருக்கின்றன. சிலப்பதிகாரத்துக்கும் இதற்கும் வேறுபாடு உண்டு.

  பாண்டிய மன்னன் தனக்குப் பிள்ளை வரமருளாத காளியின் மீது கோபங் கொண்டு வழிபாட்டுக்குத் தடை விதிக்கிறான்; இதை யறியாத ஒரு வணிகன் விளக்கேற்றிக் கும்பிட்டான்; சிரச்சேதம் செய்யப்பட்டான். காளி சூளுரை பொழிகிறாள்: “என் பக்தனைக் கொன்ற மன்னனைப் பழி வாங்குவேன்.”

  கண்ணகியாய்ப் பிறந்து கோவலனை மணக்கிறாள். இவன் கொலையுண்டதும் கண்ணகி காளியாய் மாறி, “பழிக்குப் பழி கொடடா, பழிகாரப் பாண்டியனே” என்று பாடி சூலாயுதத்தால் குத்திக் கொன்று சபதத்தை நிறைவேற்றுகிறாள். காளியாய் நடித்துப் புகழ்பெற்ற நடிகர் N.ரத்னம் “காளி ரத்னம்” எனச் சிறப்புப் பெயர் பெற்றார்.

  இரு பாடல்களின் சில அடிகள் நினைவில் பதிந்துள்ளன:

1.மாதவி வீசிய மாலை கோவலன் கழுத்தில் விழுந்தது. அதை அவள் கேட்கிறபோது கோவலன் பாடுவது:

  கழுத்தில் விழுந்த மாலை
  கழற்ற முடியவில்லை
  காரிகையே இது யார் சூதோ?
  கத்தியும் ரம்பமும்
  வாள்முனை மழுங்கக்
  காரண மின்ன தென்றறியேனே.

2.மாதவியிடமிருந்து கோவலனை மீட்பதற்காகக் கண்ணகி இறந்துவிட்டதாய்க் கடிதம் வருகிறது. அதைப் படித்த கோவலன் பாடுவது:

  பத்தினி கண்ணகியும் மாண்டாள்
  என்று காகிதமும் வந்ததின்று.
  கண் கலங்கி நோகலானேன்.
  அன்னமே நான் போகாவிட்டால்
  பந்தி போஜனம் விலக்கி
  என்றனையே ஏசுவார்கள்.

ஒரு முழுப் பாட்டு:

  நல்வாக்கு நீ கொடடி
  நான் சிலம்பு விற்று வாரேன்.
  செல்வாக்குட னிருந்தோம் – அந்தத்
  தேவடியாள் கடனால் நொந்தோம்.
  பத்தினிப் பெண்ணே – நல்வாக்கு
  நீ கொடடி.
  தேங்கா யுடைந்து விடும் – இந்தத்
  திருவிளக்கு நின்றுவிடும்.
  மாங்கா யழுகிவிடும் – நல்ல
  மல்லிகைப் பூ வாடிவிடும் –
  நான் வைத்த அடையாளங்கள்
  இவை மாறாமல் தானிருந்தால்
  செத்து மடியாமலே
  திரும்பி நான் வருவேனடி
  பத்தினிப் பெண்ணே – நல்வாக்கு
  நீ கொடடி.

&&&&&
(படம் உதவி இணையம்)


Monday 13 April 2020

பழங்காலச் செய்திகள் – 2




  எனக்கு வினாத் தெரியாக் காலத்திலிருந்தே இந்தியாவில் ரயில் பயணம் நடந்துகொண்டிருந்தது. காரைக்காலையும் மேற்கில் 25 கி.மீட்டர் தொலைவிலுள்ள பேரளத்தையும் இணைக்கிற தொடர்வண்டி ஓடிக் கொண்டிருந்தது. ஒரு நாளைக்கு இரு தடவை மட்டும் வரும், போகும். மயிலாடுதுறைக்கோ திருவாரூர்க்கோ செல்பவர்கள் பேரளத்தில் ரயில் மாறுவார்கள்.

  மற்றபடி எல்லாரும் நடந்தே பயணித்தனர்.

  காரைக்காலிருந்து தெற்கே பத்துக் கி.மீ. தூரமுள்ள நாகூரில் ஆண்டவர் தர்கா பிரசித்தி பெற்றது; ஏராள இந்து பக்தர்கள் வியாழன் மாலையில் நடைப்பயணமாய்ப் போய் அங்குப் படுத்திருந்து வைகறையில் திரும்புவதை வழக்கமாய்க் கொண்டிருந்தார்கள்.

  புண்ணியத் தலங்களைத் தரிசிக்கப் பத்துப் பதினைந்து பேர் சேர்ந்து பயணித்தனர்: அது பாத யாத்திரை எனப்பட்டது. ஒருவர்க் கொருவர் உதவிக் கொள்ளவும் வழிப்பறிக் கொள்ளையரை எதிர்த்து சமாளிக்கவும் கூட்டமாக இருப்பது அவசியம் அல்லவா? உரையாடியவாறும் பக்திப் பாக்களைப் பாடியபடியும் நடத்தலால் களைப்புத் தெரியாதென்பது கூடுதல் நன்மை.

  வழியில் உணவு அளிப்பதற்கு சத்திரங்களும் இரவில் பாதுகாப்பாய்த் தங்குவதற்கு சாவடிகளும் இலவச சேவை செய்தன. அவை யிருந்த இடங்கள் பின்னாளில் ஊர்ப் பெயர்களாய் மாறின: ஒட்டன் சத்திரம், அம்மாள் சத்திரம், சுங்குவார் சத்திரம், குயவன் சாவடி, மானம்பு சாவடி…

  விரைவூர்திகள் காலத்திலும் பாத யாத்திரைகள் தொடர்கின்றன. கஷ்டப்பட்டு வருகிற பக்தர்களைப் பார்த்துப் பரிதாபப்பட்டு பகவான் கண்திறப்பான் என்பது நம்பிக்கை.

  அந்தக் காலத்தில் மிதி வண்டிகளே அபூர்வம்; இரு வீலரோ அரிதினுமரிது. எப்போதாவது ஏதோவொரு புல்லட் வெளியூரிலிருந்து வந்து எங்கள் தெருவில் ஓடும். “யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே” என்பது போலக் கிடுகிடுப் பேரொலி முன்னாடி முழங்கிவந்து வண்டியின் வருகைக்குக் கட்டியங்கூறும்; ஒலி கேட்டதுதான் தாமதம்: அனைவரும், கிடுகிடு மோட்டார்! கிடுகிடு மோட்டார்! எனக் கூவிக்கொண்டு வெளியில் ஓடிவந்து ஊர்தி விரைவதை அகன்ற விழிகளாற் கண்டு ஆனந்த முறுவர்.

  செல்வர்கள் இரட்டை மாட்டுவண்டி வைத்திருந்தார்கள். “மாப்பிள்ளை வந்தார், மாப்பிள்ளை வந்தார், மாட்டு வண்டியிலே” என்ற பாட்டுக் கேட்டிருப்பீர்கள்.

  அக்கம்பக்க ஊர்களுக்கு செல்லக் குதிரை வண்டிகள் அல்லது ஒற்றை மாட்டு வண்டிகள் அல்லது கை ரிக்ஷா வாடகைக்குக் கிடைத்தன.

  நெல் மூட்டைகளைப் பார வண்டிகள் ஏற்றிச் சென்றன.

  காரைக்காலையும் நாகூரையும் இணைத்த முதல் பேருந்த 1940 இல் தோன்றிற்று; ராமலிங்கம் என்பது பெயர்; ஒரே யொரு வண்டிதான். சில ஆண்டுகளில் பொறையாற்றைத் தலைமை யிடமாய்க் கொண்டு சத்திவிலாஸ் பஸ் சர்வீசை வீரப்பிள்ளை என்பவர் தொடங்கிப் பொறையாறு – நாகப்பட்டினம் (வழி காரைக்கால், நாகூர்), காரைக்கால் – கும்பகோணம் தடங்களில் வண்டிகளைக் காலக் கிரமப்படி ஓட்டினார். ராமலிங்கம் காணாமற் போனார்.

  தொடக்கக் காலங்களில் பயணிகள் அதிகமில்லாமையால் (வெளியூர்களில் ஜோலியில்லாக் காலம்!) நிறுத்தத்தை விட்டுக் கிளம்பிய பேருந்து சிறிது தொலைவுக் கொரு தடவை நிற்கும்; நடத்துநர் ஊர்ப் பெயர்களை உரத்துக் கூவிக் கொஞ்ச நேரம் காத்திருந்து பார்ப்பார். காலி யிருக்கைகளே மிகுதி என்ற நிலையில் விசிலூதுவார்!
&&&&&
(படம் உதவி இணையம்)