Sunday 26 January 2020

அளவைகள் (measures)




  அளவைகள் பலவகை. மனிதர் முதன்முதலில் தம் உடலுறுப்புகளைத் தான் எண்ணவும் அளக்கவும் பயன்படுத்தினர்; இது இயல்பு.

  எண்ணுவதற்குக் கைவிரல்கள் வசதியாய் இருந்தன: பத்து விரல் இருப்பதால் முதல் பத்தெண்களுக்கு ஒன்று இரண்டு எனப் பெயர் இட்டனர்; அதற்கு மேல் புதுப் பேர்கள் படைக்கவில்லை; பத்தை அடிப்படையாய்க் கொண்டே பதினொன்று (பத்து + ஒன்று), பதினாறு (10+6), பத்தொன்பது (10+9) எனவும் இருபது (இரு பத்து), முப்பது (மூன்று பத்து) எனவும் சொற்களை உருவாக்கினர்.

  வடமொழியிலும் தசம் = பத்து. ஏகாதசம் = 11. (ஏகம் + தசம்); துவாதசம் = 12 (துவா, 2; தசம், 10) எனப் போகிறது. ஆங்கிலத்தில், பிரஞ்சில், லத்தீனில் அப்படித்தான்.

  இவை எண்ணலளவை; இனி நீட்டலளவை:

  ஒரு விரற்கிடை (விரல்க்கு இடை) என்பது ஓர் அளவை; ஒரு விரலின் தடிமன், ஒரு விரற்கிடை. நான்கு விரல்களைச் சேர்த்து நீட்டினால் சுட்டுவிரலுக்கு இப்புறமிருந்து சுண்டுவிரலுக்கு அப்புறம் வரை உள்ள தொலைவு, நான்கு விரற்கிடை.

  ஐந்து விரல்களையும் அகல விரிப்போம்: கட்டை விரலின் நுனியிலிருந்து சுட்டுவிரலின் முனைவரை உள்ள தூரம் ஓர் ட்டை. கட்டை விரல் முனைக்கும் சுண்டுவிரல் முனைக்கும் இடையே உள்ள தொலைவு ஒரு சாண். உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை மனித வுடலின் அளவு எட்டு சாண், அவரவர் கையால். “எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்என்பது பழமொழி; “எறும்புந் தன் கையால் எண் சாண்என்றார் ஒரு புலவர்.

  முழம்: யாவரும் அறிவர்; இரு கைகளையும் விரித்தால், அதாவது முடிந்தவரை அகற்றினால், இடக்கையின் நடுவிரல் நுனியிலிருந்து வலக்கை நடுவிரலின் முனைவரை உள்ள தூரம், ஒரு பாகம். காலைத் தரையில் ஊன்றினால் விரல்களுக்கும் குதிகாலுக்கும் இடையில் இருக்கிற தொலைவு ஓர் அடி. ஆங்கிலத்திலும் foot ஒரு நீட்டலளவை.

  கையும் அளவையே. நாட்டு மருத்துவர்கள் தங்கள் செந்தூரம் முதலான தூள் மருந்துகளை ஒரு சிட்டிகை, அல்லது இரு சிட்டிகை (நோய்க்குத் தக்கவாறு) எடுத்துத் தேனில் குழைத்து நக்கச் சொல்வார்கள்; கட்டை விரல் நுனி, சுட்டுவிரல் நுனி இரண்டையும் இணைத்து அள்ளினால் கிடைக்கிற அளவு ஒரு சிட்டிகை மருந்து. நெல் முதலியவற்றைக் கையால் அள்ளினால் வருவது ஒரு கைப்பிடி; இதைத் திருக்குறள், ‘பிடித்துஎன்கிறது.

பிடித் தெருவும்” (1037)
பிடித்து + எருவும்: ஒரு பிடியில் அடங்கிய உரமும்.
கற்றது கைம்மண் அளவு” – நாலடியார்

  உடலில் பாதி பாகம் இடுப்பு: ஆதலால் அதற்கு அரை என்ற பெயர் கிடைத்தது. அரைஞாண்: இடுப்பில் ஆண்கள் கட்டிக் கொள்கிற கயிறு; பேச்சு வழக்கில் அரணா (அரணாக் கொடி); இடுப்பிலிருந்து முழங்கால் வரை உடலில் கால் பாகம், எனவே கால் என்பது உறுப்பின் பெயராயிற்று.

  இவ்வாறு பல அளவைகளாய் உடல் பயன்பட்டுள்ளது; இனித் தமிழரின் வேறு வகை அளவைகளைக் காண்போம்;

  தொலைவை அளக்கும் அளவையின் அலகு, காதம். அது சுமார் 10 மைல். “நாகைக்கும் காரைக்கும் காதம், காரைக்கும் கடையூருக்கும் காதம், கடையூருக்கும் காழிக்குங் காதம்என்று தஞ்சாவூர் மாவட்டத்தார் சொல்வது வழக்கம். (நாகைநாகப்பட்டினம், காரைகாரைக்கால், கடையூர்திருக்கடையூர், காழிசீர்காழி)

  விகடராமன் குதிரை மாதம் போம் காத வழிஎன்று கிண்டலடித்துள்ளார் காளமேகப் புலவர்.

  அறிவு முதிர்ந்த பின்பு ஒன்றுக்குக் கீழும் எண்ணினர் (பின்னம்). அதற்குக் கீழ்வாய் இலக்கம் என்று பெயர். தொல்காப்பியருக்கு முந்தியே தமிழர்களுக்கு பின்னங்கள் தெரியும்.

  சில பின்னங்களுக்குப் பெயர் சூட்டிய பெருமை நம் முன்னோர்க்குண்டு:

 1/80 = காணி
 1/16 = வீசம் அல்லது மாகாணி
 1/8 = அரைக்கால் (காலில் பாதி)
 3/8 = காலே அரைக்கால் (காலும் அரைக்காலும்)
 3/16 = மூன்று வீசம்
 5/8 = அரையே அரைக்கால்
 3/4 = முக்கால்

இவை சில எடுத்துக்காட்டு.

  என் சிறு வயதில் திண்ணைப் பள்ளிக்கூடம் பார்த்திருக்கிறேன். அங்கு மனக்கணக்கு மட்டுமே கற்பிக்கப்பட்டது. பின்ன வாய்பாடு புத்தகங்கள் இருந்தன; அந்த வாய்பாடுகளை மனனம் செய்தல் வேண்டும்.

  ஒரு மாகாணி மாகாணி
  பத்து மாகாணி அரையே அரைக்கால்
  நூற்று மாகாணி ஆறே கால்
  இரு மாகாணி அரைக்கால்
  - - - - - -
என்று வாய்விட்டுச் சொல்லிக் கற்க வேண்டும்.
வகுத்தலையும் பெருக்கல் வாய்பாடு கொண்டே செய்தனர்.

  காட்டு: “139 ரூபாயை 3 பேருக்குக் கொடுஎன்பது கணக்கு.
(3 ஆல் வகு என்று சொல்தில்லை, வகுத்தல் என்பதே தெரியாது.)
3 பேருக்கு 139 ரூபாயை எப்படிப் பங்கிடுவது? ஆளுக்கு எவ்வளவு?

  முந்நான்கு பன்னண்டு
  மூணு நாப்பது நூத்திருபது
  மூவாறு (மூன்று ஆறு) பதினெட்டு
ரூபாயில் மூன்றிலொரு பங்கு 33 காசு

எனவே விடை: 46 ரூ. 33 காசு

  இந்த விதமாகக் கணக்குப் போட்டுப் போட்டுப் பயிற்சி பெறுவதால் மாணவர்கள் எந்தக் கணக்கின் விடையையும் நொடிகளில் சொல்லிவிடுவார்கள்.

  ஆங்கிலேயர் காலத்திய நாணயங்கள் ரூபாய், அணா, காசு.

1 ரூபாய்க்கு 16 அணா;
1 அணாவுக்கு 12 காசு.

அடிக்கடி ரூபாய் அணா காசு கணக்குப் போட வேண்டிய தேவை ஏற்பட்டது; ஆகவே எல்லா வகைப் பள்ளிகளிலும் பெருக்கல் வாய்பாடுகளை 16 வரை கற்க வேண்டியிருந்தது.

  13 ரூபாய்க்கு எத்தனை அணா? 13 x 16 = 208 அணா;
  9 அணாவுக்கு எத்தனை காசு? 9 x 12 = 108 காசு;
  ரூபாய்க்கு காசு எத்தனை? 16 x 12 = 192

300 ரூபாய்க்கு மேல் கணக்கிட வேண்டிய அவசியம் நேராது. 100 ரூபாய் என்பதே பெருந்தொகை. அந்த நோட்டை என் வாழ்நாளில் பார்த்ததில்லை; அது பச்சை நிறத்தில் இருந்தது போலும். ஏதாவது பெருஞ் செலவு பற்றிய பேச்செழுந்தால், “அதுக்கெல்லாம் ஒரு பச்சை நோட்டு வேணும்என்று சொல்வார்கள்.

1936 ஆம் ஆண்டளவில் விலைவாசி:

2 போண்டா அரையணா (இப்போதைய 3 பைசா)
அஞ்சலட்டை முக்காலணா (5 பைசா)
கவர் (envelope) ஒன்றே காலணா (8 பைசா)
சினிமா தரை டிக்கட் 2 அணா (12 பைசா)
ஒரு பெரிய பாட்டில் மண்ணெண்ணெய் 2 ½ அணா (15 பைசா)
நல்ல குடை 12 அணா (75 பைசா)
ஒரு பவுன் – 22 ரூபாய்

1942 இல் புதுச்சேரி அம்மணி வாசம் என்ற விடுதியில் ஒரு நாள் தங்க அறை வாடகை 75 காசு.

  பெரும்பாலும் காசும் அணாவுமே புழக்கத்தில் இருந்தன. காசு என்பது சில பகுதிகளில் தம்பிடி என்றும் துட்டு என்றும் சல்லி என்றும் அழைக்கப்பட்டது. “கையில் சல்லிக்காசு இல்லைஎன்ற சொற்றொடர் அடிக்கடி காதில் விழுந்தது. (சல்லி ஆகிய காசு) முக்கால் துட்டு என்றொரு நாணயம் இருந்ததாக முதுபெரும் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் எழுதியுள்ளார்.

  வாடி என் கப்பக்கிழங்கே
  என் அக்கா பெத்த முக்காத் துட்டே
  பாடாதே வாயத் தொறந்தே
என்ற பாடலடிகள் நினைவுக்கு வருகின்றனவா?
(தொடரும்)
(படம் உதவி இணையம்)

11 comments:

  1. அரிதான பல புதிய செய்திகள் அறிந்தேன் ஐயா.
    இப்போது இரண்டையும் மூன்றையும் கூட்டுவதற்கே கல்குலேட்டர் பயன்படுத்தும் காலம்.
    இங்கு (சுவிஸ்) முதலாம் வகுப்பில் பிள்ளைகளுக்கு எண்களை கற்பிக்க ஆறு பக்கங்கள் கொண்ட தாயக்கட்டைகளை உபயோகிக்கின்றார்கள். எண்களை படமாக மனதில் பதிய வைக்கும் முயற்சி. எண்ணுவதற்கு விரல்களை பயன்படுத்த அநுமதிப்பதில்லை.
    தொடரும் என குறிப்பிட்டுள்ளீர்கள், அறிய ஆவலாக உள்ளேன்.

    ReplyDelete
    Replies
    1. வருக; பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி ; தாயக்கட்டை மூலம் கற்பித்தலறிந்தேன் ; நன்றி.

      Delete
  2. அறிந்த கொள்ள வேண்டிய பல தகவல்கள் ஐயா...

    மிக்க நன்றி...

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

      Delete
  3. அந்நாளைய அளவைகள் குறித்த பதிவுக்கு மிகவும் நன்றி. நிச்சயம் ஆவணப்படுத்த வேண்டிய பதிவு. சிறுவயதிலிருந்தே வீசம், அரைக்காப்படி, அரையரைக்காப்படி போன்ற அளவுகள் எப்போதும் என்னைக் குழப்புபவை. இட்லிக்கு உளுந்து ஊறவைக்க அம்மா இப்படியான அளவுகள்தான் சொல்வாங்க. படியைக் காட்டிக்காட்டி இதுவா இதுவா என்று கேட்டு அளப்பேன். இன்று தங்கள் பதிவு மூலம் அவற்றின் பின்ன அளவு பற்றிய புரிதல் கிடைத்துள்ளது.

    1936,42 ஆம் ஆண்டுகளில் விலைவாசி இப்போது பார்த்தால் வேடிக்கையாக உள்ளது. அதுவும் அணா கணக்கில். ஓட்டைக்காலணா என்று கூட ஒரு நாணயம் புழக்கத்தில் இருந்ததாக கேள்விப்பட்டிருக்கிறேன். அணா-பைசா மாற்றுக்கணக்கை இந்தக் காலத்தில் கால்குலேட்டர் இல்லாமல் யாராலும் போடமுடியாது என்றே தோன்றுகிறது.

    விரற்கடை, சாண், முழம் இதெல்லாம் தெரியும். ஒட்டை, பாகம் இதெல்லாம் புதிது. கால், அரை காரணப்பெயர்கள் என்பதை இப்போதுதான் அறிகிறேன். தொடர்ந்து பகிரவிருக்கும் தகவல்களுக்காய்க் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் , ஓட்டைக் காலணா இருந்தது ; நடு ஓட்டையில் சுண்டு விரலை நுழைக்கலாம் .ரூபாய் நாணயம் வட்டமாய் வெள்ளியால் செய்யப்பட்டிருந்தது ; '' வெள்ளைக்காரன் பணம் வெள்ளிப் பணம் வேடிக்கைக் காட்டுது சின்னப் பணம் ' எனச் சொல்வதுண்டு,( சின்னம் உடைய பணம் ) பள்ளிகளில் ரூபாய் அணா பைசா வகுத்தல் கணக்குக் கற்றோம் , மிகச் சிக்கலானது .விரிவான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

      Delete
  4. கட்டை விரலின் நுனியிலிருந்து சுட்டுவிரலின் முனைவரை உள்ள தூரம் ஓர் ஒட்டை; அது போல் பாகம் என்ற அளவும்; கால், அரை என்பவை காரணப்பெயர்கள் என்பதும் எனக்குப் புதுச்செய்தி. பெருக்கல் மட்டும் தான்; வகுத்தல் கிடையாது என்பதும். ஆவணப்படுத்த வேண்டிய பதிவு. நிறைய புதுச்செய்திகள் அறிந்து கொண்டேன். மிகவும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி; இளைய தலைமுறைக்குத் தெரியாத தகவல்களைப் பதிவதே என் நோக்கம். பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றி.

      Delete
  5. வலுகாலேஅரைக்கால் என்பது குறிக்கும் அளவு என்ன என்று பதிவிடுங்கள்.
    மிகவும் உதவியாக இருக்கும் தெரிந்து கொள்வதற்க்கு
    நன்றி வணக்கம்

    ReplyDelete
  6. வலுகாலேஅரைக்கால் என்பது குறிக்கும் அளவு என்ன என்று பதிவிடுங்கள்

    ReplyDelete
  7. வலுகாலேஅரைக்கால் என்பது 1912ம் வருடம் எங்கள் முப்பாட்டன் எழுதி வைத்த அளவு தற்போது அது எவ்வளவு என்று தற்போதைய தலைமுறை சந்ததிகள் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும். ஆகவே தாங்கள் இதனை பதிவிடவேண்டி கேட்டு கொள்கிறேன்

    ReplyDelete