Monday 24 June 2019

கற்பனை மன்னர்



  வடமொழி யிலக்கியங்களில் இடம்பெற்றுள்ள திருதராட்டிரன், அரிச்சந்திரன் முதலியோர் அல்லாமல் வேறு சில மன்னர்களைப் பற்றியுங் கதைகள் உண்டு; தமிழிலும் உள்ளன.

  அவர்களுட் சிலரைப் பற்றி ஆராயலாம்:

1. சிபி என்ற அரசனின் கதை மகாபாரதம் வனபர்வம் அத்தியாயம் 200-இல் சொல்லப்பட்டிருக்கிறதாம்.

  உசீநர நாட்டை யாண்ட அவன், ஒரு புறாவைக் காப்பாற்றுவதற்காக அதைத் துரத்தி வந்த பருந்துக்குத் தன் தொடைச் சதையை அறுத்துத் தர முன்வந்தான். எவ்வளவு சதையை நிறுத்தாலும் அது புறாவின் எடைக்குச் சமமாகாததால் தானே தராசு தட்டில் ஏறினான்.

  இந்திரனும் அக்கினியுந்தான் அவனது கருணையைச் சோதிப்பதற்காகப் பருந்தும் புறாவுமாய் வந்தனர். சோதனையில் வென்ற சிபி, தேவர்களின் பாராட்டைப் பெற்று மகிழ்ந்தான்.

  இது கற்பனைக் கதையென்பது வாசிக்கும்போதே தெரிகிறது.

  அவன் தசரதனின் முன்னோர்களுள் ஒருவன் என வால்மீகி இராமாயணங் கூற அதைக் கம்பர் வழிமொழிகிறார்:

  பாலகாண்டம் - திரு அவதாரப் படலம்

     புறவொன்றின் பொருட்டாகத் துலைபுக்க
     பெருந்தகை தன் புகழில் பூத்த
     அறனொன்றுந் திருமனத்தான்; அமரர்க்கு
     இடர் இழைக்கும் அவுணர் ஆயோர்
     திறன் உண்ட வடிவேலான்; தசரதன்
     - - - - - - - - - 

     (அருஞ்சொற்பொருள்: 
     புற ஒன்றின் – புறா ஒன்றினுடைய; 
     துலை – தராசு; 
     பெருந்தகை – சிபி; 
     புகழில் பூத்த – புகழ் பெற்ற குலத்தில் தோன்றிய; 
     திறன் உண்ட – வலிமையை அழித்த)

  சிபியின் கதை அப்படிப் போகையில் சங்க காலத் தமிழ்ப் புலவர் சிலர் அவன் ஒரு சோழன் எனக்கொண்டு, “சீரை புக்க செம்பியன்” என்று அவனுக்குப் பெயர் சூட்டியிருக்கின்றனர்; (தராசில் ஏறிய செம்பியன் என்ற தமிழன் என்று பொருள்) அவனது மரபில் தோன்றியவர்கள் எனச் சில வேந்தர்களைப் புகழ்ந்திருக்கிறார்கள்.

புறம் 37: 5,6

     புள்ளுறு புன்கண் தீர்த்த வெள்வேற்
     சினங்கெழு தானைச்செம்பியன் மருக.

     (புள் உறு புன்கண் – பறவை அடைந்த துன்பம்; 
     மருக – மரபில் வந்தவனே!)

புறம் 39: 1-3

     புறவின் அல்லல் சொல்லிய கறையடி
     யானை வான்மருப்பு எறிந்த வெண்கடை
     கோனிறை துலாஅம் புக்கோன் மருக!

     (புறவின் – புறாவினுடைய, 
     அல்லல் சொல்லிய – துன்பத்தை நீக்குவதற்காக, 
     வான்மருப்பு – வெள்ளைத் தந்தத்தால், 
     எறிந்த – செய்த, 
     துலாஅம் – தராசு)

இரு பாடல்களும் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை மாறோக்கத்து நப்பசலையார் புகழ்ந்து பாடியவை.

புறம் 46: 1,2

  அதே மன்னனைக் கோவூர் கிழார் பாடியது:

     நீயே புறவின் அல்லல் அன்றியும் பிறவும்
     இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை

     (பிறவும் – பிற பறவைகளினுடைய)

  அவனை ஐயூர் முடவனாரும் “செம்பியன் மருக!” என்று விளிக்கிறார். (புறம் 228, அடி 9)

 தாமப்பல் கண்ணனார் சோழன் மாவளத்தானை அதே போலப் பாராட்டியுள்ளார்.

புறம் 43: 5-8

     கூருகிர்ப் பருந்தின் ஏறுகுறித் தொரீஇத்
     தன்னகம் புக்க குறுநடைப் புறவின்
     தபுதி அஞ்சிச் சீரை புக்க
     வரையா ஈகை உரவோன் மருக!

     (கூர் உகிர் – கூர்மையான நகங்களையுடைய, 
     ஏறுகுறித்து ஒரீஇ – தாக்குதலுக்குத் தப்பி, 
     தன் அகம் புக்க – தன்னிடம் அடைக்கலம் புகுந்த, 
     தபுதி அஞ்சி – சாவுக்குப் பயந்து, 
     உரவோன் – வலிமையுடையவனுடைய)

  இப்படி ஒரு வடநாட்டு வேந்தனைச் சோழனாக்கியிருக்கின்றனர்.

2. மனுநீதிச் சோழன்

  ஒரு பசுவுக்கு நீதி வழங்குவதற்காகத் தன் மகனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்ற நியாயவான் இவன்.

  “இது ஆராய்ச்சி மணி, இதை யடித்தால் நமக்கு நீதி கிடைக்கும்” என்று சிந்தித்துச் செயல்பட்ட அபூர்வ மாடொன்றை இக்கதையில் சந்தித்து வியக்கிறோம்.

  கண்ணகி பாண்டியனிடம் வழக்குரைத்தபோது, செம்பியனையும் மனுநீதிச் சோழனையும் பற்றிப் பெருமையுடன் பேசியதாய்ச் சிலப்பதிகாரம் தெரிவிக்கிறது.

வழக்குரை காதை: 52 – 55

     புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
     வாயிற் கடைமணி நடுநா நடுங்க
     ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
     அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன்

     (வாயில் கடைமணி – வாசலில் கட்டிய மணி, 
     ஆவின் கடைமணி – பசுவின் கடைக்கண்ணிலிருந்து, 
     உகுநீர் – ஒழுகிய நீர், 
     ஆழியின் – தேர்க்காலில்)

3. பொற்கைப் பாண்டியன்

 இவனைப் பற்றிய கதையில், தான் செய்த தவறுக்குத் தண்டனையாய்த் தனது கையை வெட்டிக்கொண்டான் எனவும் அது பொன் கையாய் வளர்ந்தது எனவும் அறிகிறோம். பொன் + கை = பொற்கை.

  கையைத் துணித்தால், குருதிச் சேதம் ஏற்பட்டு மரணம் சம்பவிப்பது இயற்கை. இவனுக்கோ பொன் கை கிடைத்துள்ளது!

4. அரிமர்த்தன பாண்டியன்

  இறைவனைப் பிரம்பால் இவன் அடித்தான் என்று திருவிளையாடற் புராணம் கூறுகிறது.

  இவ்வாறு பல தகவல்கள் உண்மை வரலாறு போல இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளன. கற்பனைகள் எல்லா மொழிப் படைப்புகளிலும் இருக்கும். அவற்றைச் சுவைக்கலாம், அப்படியே நம்பிவிடக் கூடாது. எதைப் படித்தாலும் “இது நம்பக்கூடியது, இது கற்பனை” எனப் பிரித்தறிய வேண்டும்.

  எழுத்தாளர் சிலர் தம் கருத்துகளுக்குக் கற்பனைக் கதைகளை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். இது தவறு.  

“கலை உரைத்த கற்பனையை
நிலை எனக் கொண்டாடும்
கண்மூடி வழக்க மெல்லாம்
மண்மூடிப் போக!”
             -    இராமலிங்க அடிகள்.  

Tuesday 11 June 2019

சிந்தனை மாற்றம்



  என் சிறு வயதிலும் இளமையிலும் பெரியவர்கள் அடிக்கடி சொல்லக் கேட்ட வாக்கியங்கள்:

   ஆரு காயம் ஆருக்கு நிச்சயம்?

   நீர்மேலே குமிழி நம்ப வாழ்க்கை.

   நம்ம கையிலே ஒண்ணுமில்லே.

   எல்லாம் கடவுள் செயல்.

   அவனன்றி ஒரு அணுவும் அசையாது.

   தலையெழுத்துப்படிதான் நடக்கும்.

   விதியை வெல்ல முடியாது.

   எதுக்கும் நேரங்காலம் வரவேண்டும்.

   என்ன பாடுபட்டாலும் கெடைக்கிறதுதான் கெடைக்கும்.

   எண்ணெய் தடவிக்கிட்டு மண்ணிலே புரண்டாலும் ஒட்டுறதுதான் ஒட்டும்.

  அப்போதைய பாட்டுகளும் இந்தக் கருத்துகளையே எதிரொலித்தன.

-  காயமே இது பொய்யடா வெறுங்
   காற்றடைத்த பையடா
   மாயனார் குயவன் செய்த
   மண்ணு பாண்டம் ஓடடா.

-  ஊத்தைக் குழியிலே மண்ணை யெடுத்து
   உதிரப் புனலிலே உண்டை சேர்த்து
   வாய்த்த குயவனார் பண்ணும் பாண்டம்
   வரகோட்டுக்கும் ஆகாதென்று
   ஆடு பாம்பே!

-  யாரை விட்டது காண் விதி
   எவரை விட்டது காண்?

எட்டடிக் குச்சுக்குள்ளே
   சுப்பையா எத்தனை நாளிருப்பேன்
   கந்தையா எத்தனை நாளிருப்பேன்?
(உடம்புக்குள்ளே அடைபட்டுக் கிடக்கிற உயிர் புலம்புகிறது.)

  மேற்கண்ட கருத்துகள் எல்லாவற்றுக்கும் அடிப்படை:

 1. வாழ்வு நிலையற்றது.
 2. நம் முயற்சி வீண்.

  இவை நம் நல்வாழ்வையும் நாம் தீட்டக்கூடிய எதிர்காலத் திட்டங்களையும் நம் முன்னேற்றத்துக்காக நாம் மேற்கொள்ளும் முயற்சிகளையும் கருவிலேயே அழிக்க வல்லவை. பறக்கத் துடிப்பவர்களின் சிறகுகளைத் தொடக்கத்திலேயே முறிப்பவை.

 இன்றைய சமுதாயத்தின் சிந்தனையில் வரவேற்கத்தக்க தலைகீழ் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மேற்படி எதிர்மறைக் கருத்துகள் புறக்கணிக்கப்பட்டு விட்டன. அவரவரும் கல்வி, தொழில், வாழ்க்கைத் தரம் முதலியவற்றில் மேன்மேலும் உயர்வதற்கு முயல்கின்றனர்.

  இளைஞர்களின் கனவு, நன்கு கற்று வெளிநாட்டில் மேற்படிப்பு பெற்று அங்கேயே தங்கி இன்ப வாழ்வு வாழவேண்டுமென்பது.

  பொது மக்களின் மனம் என்ன நினைக்கிறது? எல்லா வாழ்க்கை வசதிகளையும் அனுபவிக்க வேண்டும் என்றுதான். எல்லார் கையிலும் அலைபேசி, ஏராளமானோரிடம் இரு வீலர்கள், கணிசமாகக் கார்கள், உள்நாட்டிலும் பிற நாடுகளிலும் இன்பச் சுற்றுலாக்கள், உல்லாச விடுதிகள், இரவுக் கொண்டாட்டம்.

  பெண்களும் பின்தங்கவில்லை. அவர்களுக்கு ஆணாதிக்கம் விதித்திருந்த அச்சம் நாணம் முதலான தடைகளைத் தகர்த்தெறிந்துவிட்டுக் கல்வி, அலுவல் ஆகியவற்றில் பீடு நடை போடுகிறார்கள். எங்கெங்கோ போய்ப் போட்டிகளிற் பங்கேற்றுப் பதக்கம் பெற்று நாட்டுக்கும் வீட்டுக்கும் பெருமை சேர்க்கிறார்கள்.

  இப்படி ஒட்டுமொத்த சமுதாயத்தில் ஏற்பட்ட புரட்சிகரமான மாறுதல்களுக்கு என்ன காரணம் என்று சிந்தித்தால், ஆங்கில வழிக் கல்வி எனத் தோன்றுகிறது. தமிழ் நூல்களில் பத்தாம்பசலிக் கருத்துகள் ஏராளமாக இடம்பெறுகின்றன. ஆங்கிலத்திலோ தன்முன்னேற்றம், எதிர்காலக் கனவு காணல், வாழ்வின் இன்பங்களைத் துய்த்தல் முதலானவை குறித்த ஆக்கச் சிந்தனைகள் நிரம்பி வழிகின்றன. அம்மொழிப் புத்தகங்கள் ரோல் மாடலாய்க் கொள்ளக்கூடிய அருஞ்சாதனையாளர்களை அடையாளங் காட்டி அவர்களைப் போல் சாதிக்கத் தூண்டுகிற ஆர்வத்தை யேற்படுத்தி நம்மால் முடியும் என்னுந் தன்னம்பிக்கையை ஊட்டிக் கடின உழைப்பையும் விடாமுயற்சியையும் கைக்கொண்டு மேன்மேலும் உயர்வதற்கு வழி காட்டுகின்றன. ஆகையால் மக்கள் கடவுள் மேல் பாரத்தைச் சுமத்தி அவரைச் சங்கடப்படுத்தாமல் தங்கள் சிலுவையைத் தாங்களே தூக்கிக்கொண்டு முன்னே செல்ல முனைகிறார்கள்.

  இன்னொரு காரணம் தனிக்குடித்தன வாழ்க்கை. கூட்டுக் குடும்பத்தில் சில நன்மைகள் இருப்பினும், தாத்தாவும் பாட்டியும் பேரக்குழந்தைகளின் மூளையில் கதைகள் மூலமாயும், உரையாடல் மூலமாயும் காலத்துக்கொவ்வாக் கருத்துகளைத் திணித்துப் பிஞ்சு வயதிலேயே முடக்கிவிடுவார்கள். முதியோர்களுக்கும் குழந்தைகளுக்கும் இடையே தொடர்பு அறுந்துபோனமையால் அந்தத் தீமைக்கு இடமில்லாமற் போயிற்று.

  இளைய சமுதாயம்வாழ்க்கை வாழ்வதற்கே!’ என்பதைத் தாரக மந்திரமாகக் கொண்டுள்ளது.

   எண்ணிய எண்ணியாங்கு எய்தும்
   (நினைத்ததைச் செய்து முடிக்க முடியும்)

   ஊழையும் உப்பக்கங் காண்பர்
   (விதியையும் வெல்ல இயலும்)

என்ற குறட்பாக்கள் சமுதாயத்துக்கு வழிகாட்டுவது போல் தோன்றுகிறது.

  வரவேற்கத்தக்க இனிய நிலைமை!