Thursday 18 December 2014

கழிவிரக்கம்


(ருசோவின் நூலிலிருந்து வேறொரு பகுதியின் மொழிபெயர்ப்பு; 15 ஆம் வயதில் அவர் ஒரு பிரபுவிடம்  ஏவலாளியாய் வேலை செய்தபோது நிகழ்ந்தது)



 மிகக்  கடினம், குடி போகும்போது  வீட்டில் கொஞ்சம் குழப்பம் ஏற்படாமலும்  பல பொருள்கள்  தொலைந்து போகாமலும் இருப்பது; எனினும்  வேலைக்காரர்களின் விஸ்வாசமும் லொரான்சி இணையரின் விழிப்புணர்வும்  எப்படி இருந்தன என்றால், பட்டியலில் எதுவும் குறையாத அளவுக்கு.

  செல்வி போந்த்தால் மட்டும் ரோஸ் நிறமும் வெண்மையும் கலந்த ஒரு  பழைய ரிப்பனை இழந்துவிட்டாள்.

  அதைவிட மேலான  எத்தனையோ பொருள்  என் கைக்கு அருகில் இருந்த போதிலும்  அந்த ரிப்பன் மாத்திரம்  என்னைக்  கவர்ந்தது. அதை நான்  திருடினேன். மறைத்து வைக்காமையால் விரைவாகவே என்னிடம் அதைக்  கண்டுபிடித்தார்கள்.  எங்கிருந்து எடுத்தேன் என்பதை  அறிய விரும்பினர்.  நான் குழம்பினேன், திக்கித்  திணறிவிட்டு மரியோன் கொடுத்ததாய் முகஞ் சிவக்கச் சொன்னேன்.

  மரியோன்  என்பவள் புதிய இளஞ்  சமையற்காரி; அழகி  மட்டுமல்ல, மலைவாசிகளிடம் மாத்திரமே காணக்கூடிய பிரகாசமான  செந்நிறம் கொண்டவள்; அவளது  அடக்கமும் மென்மையும் அவளைப் பார்க்கிற எவரையும் அவளை  நேசிக்காமலிருக்க விடமாட்டா;  அதோடு  நல்ல பெண், சாது, எந்தச் சோதனையிலும் தேறக்கூடிய விஸ்வாசி.  அதனால்தான்  எல்லார்க்கும் அதிர்ச்சி, நான் அவள்  பெயரைச் சொன்னபோது. அவள்மீது இருந்த நம்பிக்கைக்குக் குறைந்ததல்ல, என்மேலிருந்த நம்பிக்கை; ஆகையால் , இருவரில் யார்  மோசடிக்காரர் என்பதை உறுதிப் படுத்துவது முக்கியம் என முடிவாயிற்று.

  அவளை  வரவழைத்தனர்; நிறையப் பேர் இருந்தார்கள், ரோக் பிரபு உள்பட.  அவள் வந்தாள்;  அவளிடம்  ரிப்பனைக் காட்டினர். நான் அவள்மீது  குற்றம்  சாற்றினேன்; அவள் என்ன சொல்வதென்று தெரியாமல் மெளனித்து, என்மேல் ஒரு பார்வையை வீசினாள் , பேய்களையும் முறியடிக்கும் பார்வை; என் பண்பாடற்ற இதயம்  அதை எதிர்த்து நின்றது. சிறிது  நேரத்தில் அவள் மறுத்தாள், உறுதியாய் ஆனால் படபடப்புடன்;  என்னிடம் கூறினாள், யோசித்துப் பார்க்கும்படியும் எனக்குத் தீங்கிழைக்காத ஒரு  நிரபராதி பெண்ணை அகெளரவப்படுத்தாமல் இருக்கும்படியும்; நானோ  பயங்கரக்  கெட்ட எண்ணத்துடன்   என் கூற்றை வலியுறுத்தினேன், அவளது முகத்துக்கு எதிரே சொன்னேன் ரிப்பன் தந்ததாக.

  அந்தப் பரிதாபத்துக்கு உரிய பெண்  என்னிடம் இந்தச் சொற்களைத்தான் உரைத்தாள் : "ஆ, ருசோ, நீங்கள் நல்ல மனிதர் என்று  நம்பியிருந்தேன்; நீங்கள் என்னை மிகத் துர்ப்பாக்கியசாலி ஆக்குகிறீர்கள்;  உங்களின் இடத்தில் இருக்க  நான் விரும்ப மாட்டேன், அவ்வளவுதான்".  

 தொடர்ந்து  ஆர்ப்பாட்டம் இல்லாமலும்  அழுத்தமாகவும்  தற்காப்பை மேற்கொண்டாள், என்மீது  சிறு வசவும் மொழியாமலே.

  அந்த அடக்கம் என் உறுதியான நிலைப்பாட்டுடன் ஒப்பிடப்பட்டு அவளுக்கு  அநீதி இழைத்தது. ஒரு பக்கம் அமைதியான மென்மை, மறுபக்கம் அசாத்திய  துணிச்சல்   என்பது  இயல்பானதாய்ப் படவில்லை.  தீர்மானமாய்  ஓரு  முடிவுக்கு வந்தார்கள்  எனத் தோன்றவில்லை;   ஆனால்  எனக்குச் சாதகச் சூழ்நிலை.

 அப்போதைய  அலங்கோலத்தில்,  ஆழமாகப் பரிசீலிக்க  நேரம் இன்மையால்  ரோக் பிரபு  எங்களிருவரையும் வேலையிலிருந்து நீக்குகையில், "குற்றவாளியின் மனசாட்சி  நிரபராதிக்காகப் போதிய  அளவு பழி  வாங்கும்" என்று மட்டும் கூறினார்.

  அவரது  முன்னறிவிப்பு பொய்க்கவில்லை;  நிறைவேறத் தவறவில்லை, ஒரு  நாள்கூட.

  என்  புளுகு குற்றச்சாற்றுக்குப் பலியான அவள்  என்னவானாள் என்பதை நானறியேன்;  ஆனால்  ஒரு நல்ல வேலையை எளிதில் பெற்றிருப்பது சாத்தியமில்லை;  தன் கெளரவத்துக்குக் கொடிய இழுக்கொன்றை அவள் சுமந்திருந்தாள்.   திருட்டு அற்பமானதே , இருந்தாலும்  திருட்டு திருட்டுதான்;  மேலும் மோசம், ஓர் இளைஞனைக் கவர்வதற்காகச்  செய்த  திருட்டு.  இந்தக் குற்றங்களைத்  தன்னிடம் கொண்டவள் மீள்வதற்கு  என் பொய்யும் பிடிவாதமும் நம்பிக்கை தரவில்லை.

  அவளுக்கு  என்னால் ஏற்பட்ட பரிதாப  மற்றும்  ஆதரவற்ற நிலையைக்கூட  மிகப் பெரிய ஆபத்தாக  நான் கருதவில்லை; யாரறிவார், அவள் வயதில், இழிவுக்கு  ஆளான   ஒரு நிரபராதியின் மனத் தளர்ச்சி  எங்கே இட்டுச் சென்றிருக்கும் என்பதை?  அவளைத் துர்ப்பாக்கியசாலி ஆக்கியதற்கான கழிவிரக்கம் என்னால் தாங்க முடியாதது எனில், என்னைக் காட்டிலும் கீழானவளாக்கியதற்கான கழிவிரக்கம் பற்றி எண்ணிப் பாருங்கள்.

  இந்தக் கொடிய நினைவு என்னைச் சில வேளைகளில் கலக்குகிறது மற்றும்  இம்சிக்கிறது;  எந்த அளவுக்கு என்றால், தூக்கம் வராத இரவுகளில், என் குற்றம் நேற்றுதான் நிகழ்ந்தது போலவும்  அந்தப் பரிதாபப் பெண் வந்து  அதை இடித்துக் காட்டுவது போலவும் உணரும் அளவுக்கு;  என் நிம்மதியான நாள்களில், அதன் இம்சை குறைவாய் இருந்தது; ஆனால், புயல் வாழ்க்கையின்போது, "நான் தண்டிக்கப்பட்ட நிரபராதி" என்று சொல்லிக்கொள்ளும் ஆறுதலை நான் அடைய அது விடவில்லை. வளமான வாழ்வில் கழிவிரக்கம் தூங்குகிறது, துன்பச் சூழ்நிலையில் கொட்டுகிறது.

  (குறிப்பு - 1 -முதுமையில் ருசோ எத் தவறும் செய்யாதிருந்தும்  எந்த நாட்டிலும் புகலிடம் கிடைக்காமல் அலைந்தார் : ஆகவே, "புயல் வாழ்வு", "தண்டிக்கப்பட்ட நிரபராதி"  என்றார்.

              2 - மேலை நாடுகளில், ஓட்டுநர், ஏவலாள் முதலியவர்கள் புது இடத்தில் வேலை தேடும்போது, முந்தைய எஜமானர்கள் தந்த நற்சான்றிதழ்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.)

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

Thursday 4 December 2014

தாட்சண்யம்

            
(18 ஆம் நூற்றாண்டுப் பிரஞ்சு எழுத்தாளர் ருசோ பற்றித் தமிழ் வாசகர்கள் அறிந்திருப்பார்கள்; அவரது முழுப் பெயர் ழான் ழாக் ருசோ.பிரான்சில் 1789 இல் நிகழ்ந்த மாபெரும் புரட்சிக்கு அவரது எழுத்துகள் முக்கிய உந்துதல் .. அவர் தம் வரலாற்றை எழுதியுள்ளார்;  தம்முடைய தப்புத் தவறுகளையும் ஒளிவு மறைவு இன்றித் தெரிவித்திருக்கிறார். அதிலிருந்து மொழிபெயர்த்த ஒரு சிறு பகுதி.

15 ஆம் வயதில், உலோகத்தில் எழுத்து செதுக்கும் வேலையை அவர் கற்றுக்கொண்டிருந்த போது நடந்த நிகழ்ச்சி.

 எஸ்பெரேகஸ் - சமைத்து உண்ணும் ஒரு கறிகாய்)



 என் குருவுக்குத் தோழர் ஒருவர் உண்டு; பெயர் வெரா. அருகில் இருந்த அவரது வீட்டுக்கும் அதன் தோட்டத்துக்கும் கொஞ்சம் தொலைவு.அதில் மிக அழகிய எஸ்ப்பெரேகஸ் (asparagus) விளைந்தது.

 பணப் பற்றாக்குறை உள்ள வெராவுக்கு ஓர் ஆசை தோன்றியது: தம் தாயாருக்குத் தெரியாமல் எஸ்ப்பெரேகசைத் திருடி விற்றுக் கிடைக்கும் தொகையில் நல்ல உணவகச் சாப்பாடு உண்ண விழைந்தார். தமக்குச் சாமர்த்தியம் குறைவு என்பதாலும் தாம் மாட்டிக்கொள்ள விரும்பாமையாலும் அந்த வேலைக்கு என்னைத் தேர்ந்தெடுத்தார்.

 அவரது புகழுரை என்னை மயக்கிற்று; புகழ்ச்சியின் உள்நோக்கம் தெரியாமையால் எளிதில் வசப்பட்டேன். திடீர் எனத் தோன்றிய எண்ணம்போல் அதைத் தெரிவித்தார். மறுத்தேன், வற்புறுத்தினார். புகழ்ச்சிக்கு இரையாவது என் பலவீனம்: ஒப்பினேன்.

  நாள்தோறும் காலை வேளைகளில் நான் போய் நன்கு வளர்ந்த எஸ்பெரேசுகளை அறுவடை செய்து மொலார் என்ற இடத்துக்குக் கொண்டுசென்று ஒரு பெண்ணிடம் விற்றேன்; திருடியது என்பதைப் புரிந்துகொண்ட அவள், அதை என்னிடம் வெளிப்படுத்தினாள் குறைவான விலை தருவதற்காக. எனக்கேற்பட்ட அச்சத்தில் அவள் அளிக்க விரும்பியதைப் பெற்றுக்கொண்டேன்.

  வெராவிடம் கொடுத்தேன்; அது உடனடியாய்ச் சாப்பாடாக மாறியது. வழங்கியவன் நான் என்றாலும் அவருடன் உண்டவன் வேறொரு தோழன்; உணவில் சிறிதளவே எனக்குப் பெரு மகிழ்ச்சி யூட்டப் போதுமானதாய் இருந்தது. அவர்களின் சாராயத்தை நான் தொட்டதுகூட இல்லை.

 அந்தச் சிறு திருட்டு, பல நாள் தொடர்ந்தது. அவரது சொந்தச் சரக்கின் விலையை அவரிடமிருந்து வரியாக வசூலித்து, திருடரையே திருடவேண்டும் என்னும் எண்ணம்கூட உதிக்காமலே, மிக அதிக விஸ்வாசத்துடன், அந் நேர்மை யற்ற செயலைச் செய்துவந்தேன். என் ஒரே நோக்கம் அதைச் செய்யத் தூண்டியவருக்கு உதவுதல் மாத்திரமே.

  நான் ஒரு வேளை மாட்டியிருந்தால், எத்தனை அடிகள், எத்தனை வசவுகள், எவ்வளவு கொடூரமான தண்டனைகள அனுபவித்திருப்பேன்! அப்போது அந்த மோசமான ஆளைக் காட்டிக் கொடுத்திருந்தால், அவர் , மறுத்திருப்பார், அவரை முழுதும் நம்பியிருப்பார்கள்; நான் பொய்யன் ஆவதோடு, அவர்மீது குற்றம் சுமத்தியதற்கு இரட்டிப்புத் தண்டனையும் கிடைத்திருக்கும்; ஏனெனில் அவர் தோழர், நான் கற்றுக்குட்டி.

 வலுவில்லா நிரபராதி சிக்குவான், பலமுள்ள குற்றவாளி தப்புவான் என்பது நிரந்தர நியதி..
              ====================



Saturday 8 November 2014

ஒரு கருமி பற்றிய குட்டிக் கதை

 ஒரு  கருமி  பற்றிய  குட்டிக்  கதை 
நான்  சிறு  வயதில்  படித்தது  




    அடிப்படைத்  தேவைகளுக்குக்கூட   செலவு  செய்யாமல்  கஞ்சனாக  இருப்பது  தவறு.   ஆயினும்   சிலர்   அப்படித்தான்  வாழ்கின்றனர்.

    ஒரு  பேர்பெற்ற  கருமி   தற்செயலாய்ப்   பூனைக்  குட்டி யொன்றைக்  கொன்றுவிட்டான்அது  பெரும்   பாவம்  என்பது  நம்பிக்கை  யல்லவாஅதனால்    நரகத்தில்  உழல   நேருமே  என்றெண்ணிக்    கவலை  கொண்டான்.

   எல்லாப் பாவங்களுக்கும்  பரிகாரம் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்களேஇதற்கு   இல்லாமலா  போகும் என  நினைத்து   ஒரு  புரோகிதரை  அணுகி,

  "ஐயாஒரு  பூனைக்   குட்டி  சாக  நான்   காரணமாய்  இருந்துவிட்டேன்கொல்வது  என்   நோக்கமல்ல;   இருந்தாலும்    அது  பாவந்தான்  என்று  நம்புகிறேன் .   என்ன  பரிகாரம்    செய்ய  வேண்டும்     என்பதைச்  சொல்லுங்கள்”  என்று  கேட்டான்.  

அகப்பட்டான்  ஒருவன்    என்று  மகிழ்ந்த   அவர் , " பசுவைக்  கொல்வது   எவ்வளவு  பாவமோ   அவ்வளவு  பாவம்  பூனையைக்  கொல்வதும்   என்று  சாஸ்திரம்   சொல்லுகிறது ;   அதைப்  போக்குவதற்கு   வழியையும்  காட்டுகிறதுஎன்று  பதில்  அளித்தார்.  

   ---   அதைச்  சொல்லுங்கள்  என்றுதான்  கேட்கிறேன்.

   ----  தங்கத்தால்   பூனை   செய்து  எனக்குத்  தானம்  கொடுத்தாயானால் ,
பாவம்  நீங்கிவிடும்.

    ----  தங்கமாஐயோஅவ்வளவு  பணம்   என்னிடம்   இல்லையே!

   ----   அப்படி   யென்றால்வெள்ளிச்  சிலை    கொடு.

    ----  அதற்கும்  வழி  இல்லைஐயரே.

    ----  செம்புதர  முடியுமே?

    ----  ஊகூம்,   இன்னம்   குறைவான  செலவாக   இருக்க  வேண்டும்.

    ---- பெரிய   பாவத்துக்கு  உரிய  பரிகாரம்  தேவை;    நீ  என்ன  இப்படிப்  பேரம்  பேசுகிறாய்போனால்  போகிறது,    வெல்லத்தால்  கொடு.

    ----  அது  முடியும்.   அதைக்  கொடுத்தால்    பாவம்     போய்விடும்  என்பது  நிச்சயந்தானே?

     ----  அதிலென்ன  சந்தேகம்?   அந்தப்  பாவத்தை    நான்   ஏற்றுக்கொண்டுவிடுவேன்.   அதிலிருந்து  நான்   நீங்குவதற்கு   எங்கள்  மொழியில் மந்திரம்   உண்டு.

     ---   இதோ   தருகிறேன்.

   கருமி  ஒரு    கைப்பிடி  வெல்லத்தில்  பூனை   உருவாக்கிக்  கொடுத்தான் . கிடைத்தவரைக்கும்   லாபம்  என  மகிழ்ந்த   புரோகிதர்  அதைக்  கையில் வாங்கியதுதான்  தாமதம்,   கருமி   அதைத்   தட்டிப்   பறித்துக்   கொண்டான்.
  
    கைக்கு  எட்டியது   வாய்க்கு  எட்டவில்லையே    என்ற  சோகத்துடன்  புரோகிதர்,  "அடப்   பாவி!   தானத்தைப்  பிடுங்கிக்கொண்டாயே!   யாராவது   இப்படிச்  செய்வார்களா?"      எனக்   கேட்டதற்கு,   அவன்,   "பூனையைக்  கொன்ற பாவம்  உங்களுக்குவெல்லம்  பிடுங்கிய  பாவம்   எனக்கு;   போய்  வாருங்கள்என்று  விடை   தந்தான்.

                                                 +++++++++++++++++++++++++

Wednesday 22 October 2014

பிழையும் திருத்தமும் - 2

பிழையும் திருத்தமும் - 2

இது வேறு பட்டியல்


 பிழை 

திருத்தம் 
 1. அருகாமையில்

 அருகில்
 2. இளைய சகோதரன்
 தம்பி

 3. எட்டிப் போ
 எட்டப் போ  (எட்டும்எட்டாதுஎட்டாக்  கனி)
 4. ஏமாந்தார்
 ஏமாறினார்

 5. ஒருக்கால்
 ஒருகால்

 6. சிகப்பு
 சிவப்பு (செக்கச்  சிவந்த  கழுநீரும்  -  கலிங்கத்துப்  பரணி)
 7. சில்லரை                           
  சில்லறை

 8. சுடு தண்ணீர்                        
 வெந்நீர்

 9. செல்வந்தர்                          
  செல்வர்

 10. திகட்டுதல்                           
 தெவிட்டுதல்

 11. துடை ( உடலுறுப்பு )                 
தொடை 

 12. தொத்து  நோய்                      
 தொற்று  நோய்

 13. நீர்வீழ்ச்சி                           
அருவி

 14. பனிரெண்டு                          
 பன்னிரண்டு

 15. (பரிசை)  வெல்லுங்கள்             
 (பரிசைப்பெறுங்கள்

 16. மனசு , மனது                       
  மனம்  (மனமார,  மனத்தில்)

 17. மாற்றாந்தாய்                         
 மாற்றான்  தாய்

 18. முயற்சிப்போம்                       
முயல்வோம்

 19. மூத்த  சகோதரர்                     
 அண்ணன் ,  தமையனார்

 20. மென்மேலும்                         
 மேன்மேலும்


இரு  விதமாக  எழுதப்படுபவை:

            1. உலாவுதல்  
உலவுதல் 
                           2.  கருப்பு 
கறுப்பு
                           3. கூடு 
கூண்டு
                           4. சலங்கை 
சதங்கை
                           5. சறுக்கல்  
சருக்கல் 
                           6. துளை
தொளை
                           7. பொருத்தவரை 
பொறுத்தவரை
                           8. மங்களம் 
மங்கலம்
                           9. மெல்ல
மெள்ள
                         10. வேர்வை 
வியர்வை


Thursday 2 October 2014

பிழையும் திருத்தமும்

             
       தமிழைப்   பிழைகளுடன்  எழுதுவோர்  பலப்பலர்;  மெத்தப்  படித்தோரும்  விலக்கல்ல.   தவறு  இல்லாமல் எழுத  விரும்புவார்  சிலராவது  இருக்கக்  கூடும். அவர்களுக்குப்  பயன்படும்  இச்  சிறு  பட்டியல்.



 பிழை 

 திருத்தம்
 1.  அடசல்  

அடைசல்  

(அடைந்து  கிடப்பது )

 2. அடுத்தப்  பக்கம்                              

அடுத்த பக்கம்
 3. அடையார்  (ஊர் )                            

அடையாறு
 4. அட்டைக்  கரி
அட்ட  கரி  

(அட்ட = சமைத்த;  அடுதல் = சமைத்தல் -----> அடுப்பு .
 (அதிகக்  கருப்பைக்  குறிப்பது) 
 சமையல்  பாத்திரத்தின்  அடியில்  பிடித்துள்ள  கரியே   அட்ட கரி.

 5. அரசுப் பணி
அரசு பணி
  
(அரசு பள்ளி,  அரசு  பேருந்து)

 6. ஆட்சேபணை 
ஆட்சேபனை  

(கற்பனை,  யோசனை,  ரசனை  போல )

 7. ஆளுனர்   
ஆளுநர்  ( இயக்குநர் ,   ஓட்டுநர் )

 8. இட ஒதூக்கீடூ
இட ஒதுக்கல்

 9. இணைய தளம்
இணையத் தளம்

 10. உயிர்க் கொல்லி
உயிர் கொல்லி

 11. உள்ளூர  
உள்ளுற

 12. எசகு  பிசகு 
இசகு  பிசகு

 13. கட்டு கடை 
கட்டுக்  கிடை  

(கட்டுக்கு + இடை )  துணிக்   கட்டுகளுக்கு  இடையில்  விற்காமல்  கிடப்பது

 14. கவிச்சி
கவிச்சு  =  மீன் நாற்றம்

 15. குத்துச் செடி
குற்றுச்  செடி 

(குற்றெழுத்து  போல -குறுமை = சிறுமை

 16. குளுமை
குளிர்மை

 17. கோரைப் பல்
கோரப் பல் 

(கோரம் = அசிங்கம்)

 18. சில காலம்
சிறிது காலம் 

(எண்ணக்கூடிய பொருள்களுடன்தான் சில அல்லது    பல வரலாம்: சில நாள், பல மாதம்).

 19. பயண சீட்டு
பயணச் சீட்டு

 20. பிசிர்
பிசிறு