Saturday 21 September 2019

ஏதேதோ – 3



1. தொட்ட பெட்ட என்பது கர்நாடகத்திலுள்ள ஒரு மலை: பெரிய மலை என்பது பொருள்.

2. திருக்குறளை லத்தீனில் மொழிபெயர்த்த வீரமாமுனிவர் காமத்துப்பாலை விட்டுவிட்டார்; தாம் துறவி ஆதலால் அதைப் புறக்கணித்தார்.

3. பார்வையற்றவர் யானை கண்ட கதை நமக்குத் தெரியும். அதை முதன் முதலில் கவிதையாய் இயற்றியவர் ஆங்கிலக் கவிஞர் John Godfrey Saxe (19 ஆம் நூ.) தலைப்பு: The blindmen and the elephant.

4. ஆவின் பால், தயிர், நெய், சாணி, சிறுநீர் ஆகிய ஐந்தன் கலவை வட மொழியில் பஞ்ச கவ்யம் எனவும் தமிழில் ஆனஞ்சு எனவுஞ் சொல்லப்படுகின்றன. (ஆன்+அஞ்சு)

சிவன்: “ஆனஞ்சு ஆடும் மெய்யன்
(அப்பர் தேவாரம் திருமுறை 6:10)

திருமால்: “ஆனின் மேய ஐந்தும் நீ
(திருமழிசையாழ்வார் திருச்சந்த விருத்தம் 94)

5. இதழகல் பா என்பது உதடுகள் அசையாமல் பாடக்கூடிய பாட்டு. வடமொழியில் நிரோட்டகம்.

திருக்குறளில் 489 மட்டுமே இதழகல் பா:
எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே
செய்தற் கரிய செயல்.

வாய்விட்டு சொல்லிப் பாருங்கள். உதடுகளுக்கு வேலையே இல்லை!

6. சில ஆறுகளுக்கு ராசிகள் பொருத்தப்பட்டுள்ளன:

  கங்கைக்கு மேஷம், யமுனைக்குக் கடகம், காவேரிக்குத் துலா.

  குரு என்னுங் கோள் ஒவ்வொரு ராசியிலும் ஓராண்டு தங்கும். அது ஒரு ராசியை விட்டு அடுத்த ராசியில் நுழையும்போது (குருபெயர்ச்சி) இந்த ராசிக்குரிய ஆற்றில் குளித்தால் புண்ணியஞ் சேரும் என்பது நம்பிக்கை. அந்தக் குளியலுக்குப் பெயர் புஷ்கரம். மயிலாடுதுறைக் காவேரியில் துலா முழுக்கு (துலாஸ்நானம்) பேர் பெற்றது.

7. முதன்முதலாக உலகப் படத்தை (world map) வரைந்தவர் Gerardus Mercator என்ற டச்சுப் புவியலறிஞர் (1569 இல்). அதை Atlas க்குக் காணிக்கை ஆக்கினார்.

  கிரேக்கத் தலைமைக் கடவுளை எதிர்த்து Titans என்னுந் தேவர்கள் போரிட்டுத் தோற்றார்கள். Atlas ஒரு Titan. வானத்தைத் தோள்களில் சுமக்கும்படி அவனுக்கு Zeus தண்டனை வழங்கினார்; இக்கதை பிற்காலத்தில் சிறிது மாறி Atlas உலகத்தைச் சுமப்பதாய்க் கூறப்பட்டது. இதை மனத்திற் கொண்டுதான் Mercator தம் படத்துக்கு அப்பெயரைச் சூட்டினார். நாளடைவில் தேசப் படங்களின் தொகுப்பு atlas என அழைக்கப்படலாயிற்று.

8. கணபதியை முழுமுதற் கடவுளாய்க் கொண்ட மதம் காணாபத்யம். அது மகாராட்டிரத்தில் செல்வாக்கு பெற்றிருந்தது; அங்கிருந்து 7 ஆம் நூற்றாண்டில் தமிழகத்துள் நுழைந்தது.

  மராட்டியரின் நம்பிக்கைப்படி விநாயகரின் ஊர்தி மயில்; அவர்களது மொழியில் “மோர்”; ஆகவே பிள்ளையார்க்கு மோரேயா, மோரேஸ்வர், மயூரேஸ்வர் என்ற பெயர்கள் உண்டு. புனே நகருக்கு 60 கி.மீ. தொலைவிலுள்ள ஒரு சிற்றூரில் புகழ் வாய்ந்த மோரேஸ்வர் கோயில் உள்ளது; அதனால் அவ்வூர் மோரேகான் எனப்படுகிறது.

  பிற்காலத்தில் தம்பிக்குத் தம் ஊர்தியை அண்ணன் அன்பளித்துவிட்டார்.

  புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் சுதைச் சிற்பத்தில் பிள்ளையார் மயில் வாகனத்தில் காட்சி தருகிறார்.

9. நாட்டை அரசன் காக்காவிடில் என்னென்ன நேரும்?

  சட்டம் ஒழுங்கு சீர்குலையும், தடியெடுத்தவன் தண்டல்காரன் என்றாகி ஏழை எளியவர்கள் சொல்லொணாத் துன்பங்களிற் சிக்கி ஆற்றாது அழுது புலம்புவார்கள் என்று நாம் விடையளிப்போம்; ஆனால் பழங்காலத்துச் சிந்தனை வேறு.

“ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்
காவலன் காவான் எனின்.”
(குறள் 560)

  பசும்பாலின் உற்பத்தி குறையும்; பார்ப்பனர் மறையோதார். இவையே திருவள்ளுவர் காலத்துக் கவலை.

  ஆப்பால் இல்லாவிடில் எருமைப்பால் உண்டே? வேதம் ஓதாமையால் என்ன கெட்டுவிடப் போகிறது? என்றெல்லாம் நமக்குத் தோன்றும்.

  மறை யோதுவதால்தான் உலகம் நிலைபெற்றிருக்கிறது என்று முன்காலத்தார் நம்பியுள்ளனர்; அறிவியல் எவ்வளவோ வளர்ந்திருக்கிற இக்காலத்திலும் யாகம் நடத்தினால் உலக அமைதி ஏற்படும் என்றெண்ணுவோர் இருக்கிறார்களே!

  வேதம் ஓதுகிறவர்களுக்குப் புனிதமான பசும்பால்தான் தேவை.

10. கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு
முன்தோன்றி மூத்த குடி.

என்னும் அடிகளை மேற்கோளாகக் காட்டி “உலகின் மூத்த குடி தமிழ்க்குடி” என ஆணித்தரமாக முழங்குவோர் உண்டு.

  அவை புறப்பொருள் வெண்பா மாலை என்ற இலக்கண நூலில் இடம்பெற்றுள்ள ஒரு வெண்பாவின் ஈற்றடிகள்.

  நூலின் ஆசிரியர் பற்பல ஆய்வுகளைச் செய்து அந்த முடிவுக்கு வந்து அதை எடுத்துரைத்திருக்கிறாரா? இல்லையில்லை. அது ஓர் எடுத்துக்காட்டுச் செய்யுள் (example):

  போர் தொடங்குவதற்கு முன்பு ஒரு வீரன் தன் பகைவனை நோக்கித் தன் குடும்பப் பெருமையை இவ்வாறு சொல்கிறான். “நெடுங்காலத்துக்கு முன்பே என் குடும்பம் முதன் முதலாக வாள் போரிட்டு அனுபவப்பட்டது” என்கிறான். யாரிடம்? இன்னொரு தமிழனிடம். இருவருந் தமிழ்க் குடியே. செய்யுளில் மூத்த குடி என்பது ஒரு மறவனின் சொந்தக் குடியைக் குறிக்கிறது.

  இக்காலத்திலும் தகராறு செய்கிற இருவரில் ஒருவர் மற்றவரைப் பார்த்து “என்னை யார்னு நெனச்சே? என் தாத்தா தாசில்தார்; அப்பா காவல் ஆய்வாளர்; என் கிட்டே மோதினா அதோகதி ஆய்டுவே!” என்று எச்சரிக்கக் கேட்கிறோம் அல்லவா?

இதைக் "குடிநிலையுரைத்தல்” என்று இலக்கணங் கூறுகிறது.

இலக்கண விதி:
மண்டிணி ஞாலத்துத் தொன்மையும் மறனும்
கொண்டு பிறரறியும் குடியுரைத்தன்று.

பொருள்: ஞாலத்து – உலகில், தொன்மை – பழைமை, மறன் – வீரம், பிறரறியும் குடியுரைத்தன்று – பிறர்க்குத் தெரியும்படி எடுத்துக் கூறல்.

  இதற்கு எடுத்துக்காட்டாக அந்த அடிகள் வந்தன.

  இது போல எத்தனையோ விதமாகக் குடிப்பெருமை கூறலாம்.

&&&&&&&&&&


Wednesday 11 September 2019

குற்றப் பரம்பரைச் சட்டம்


நூல்களிலிருந்து – 24




(இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுள் ஒருவராகிய தா.பாண்டியன் “ஜீவாவும் நானும்” என்னுந் தலைப்பில் இயற்றிய நூல் 2015 இல் வெளிவந்தது. அதிலிருந்து ஒரு சிறு பகுதி இது.)

குற்றப் பரம்பரைச் சட்டம்

  இந்தச் சட்டம் ஆங்கிலத்தில் சுருக்கமாக C.T.Act எனவும் Criminal Tribes Act விரிவாக எனவும் அழைக்கப்பட்டது. Criminal Tribes என்றால் குற்றம் புரிவதையே இயல்பாகக் கொண்ட பரம்பரையினர் என்று அர்த்தம். குற்றம் இழைப்பது அவர்களது குலக் குணம் என்று பட்டஞ் சூட்டினான் வெள்ளையன். செக்காணுராணி முதல் கூடலூர் வரையுள்ள பிரமலைக் கள்ளர்களுக்கு மட்டுந்தான் இந்தச் சட்டம் இடியாக விழுந்தது. சாதியின் பெயரே கள்ளர் என அமைந்துவிட்டதே! விடுவானா வெள்ளையன்? இவர்களை ஒடுக்கக் கடுமையான சட்டத்தைப் போட்டுவிட்டான்.

  மதுரை மாவட்டத்தில் பிறந்த பிரமலைக் கள்ளர் யாராக இருந்தாலும் 16 வயது முடிந்தவுடன் காவல் நிலையத்தில் கைவிரல்கள் அனைத்தின் ரேகைகளையும் பதிவு செய்ய வேண்டும். பெயரும் ரேகையும் ஒரு பெரிய ரிஜிஸ்தரில் வைத்திருப்பார்கள்.

  மாலை 6 மணிக்கு மேல் எந்த நேரத்திலும், நள்ளிரவோ அதிகாலையோ, ஒரு அரிக்கேன் விளக்கோடு ஒரு ஏட்டும் ஒரு போலீசும் துப்பாக்கியுடன் வந்து விசிலடிப்பார்கள். ஆண்கள் பூராவும் திரண்டு வரிசையாகக் காலை மடக்கி உட்காரவேண்டும்.

  ரேகை பதித்த ரிஜிஸ்தர்படி பெயர்களைக் கூப்பிடுகையில், “ஆஜர் ஏட்டையா” எனச் சொல்லவேண்டும்.

  வெளியூர்க்குப் போவதானால் கிராம அதிகாரியிடம் அனுமதிச் சீட்டு எழுதி வாங்கிச் செல்லவேண்டும்; இது ராதாரிச் சீட்டு எனப்பட்டது; அனுமதிச் சீட்டுப் பெற்றுத்தான் திரும்பவேண்டும். இரண்டு அதிகாரிகளுக்கும் லஞ்சம் தர வேண்டியிருந்தது. லஞ்ச ரேட் அரைக்கால் ரூபாய், அதாவது இப்போதைய 12 காசு. இந்தப் பணத்துக்கும் கோழியை விற்றுத்தான் சமாளிக்கவேண்டும்.

  ராதாரிச் சீட்டு இல்லாமல் எங்காவது காணப்பட்டால் சந்தேகக் கேஸ் போட்டு ஆறு மாதத் தண்டனை தருவார்கள்.

  பல தீய விளைவுகள் ஏற்பட்டன. போலீசின் வேட்டையால் விவசாய வேலை கெட்டு வறுமை வளர்ந்த்து. பொய் வழக்குகளால் கோர்ட்டுக்கு அலைந்து இருந்த சொற்ப நிலங்களையும் பலர் இழந்தனர். கிராம அதிகாரிகளாகப் பெரும்பாலும் வேறு சாதிக்காரர்கள்தான் இருந்தனர். அவர்கள் லஞ்சம் வாங்குவதும் தங்களது நிலத்தில் காசு தராமல் வேலை வாங்கியதும் பகைமையை வளர்த்துவிட்டது. இது பிரமலைக் கள்ளர்கள் பிற சாதியினர்மீது வெறுப்புக் கொள்ளக் காரணமாயிற்று.

  இன்னொரு தவற்றையும் வேண்டுமென்றே போலீஸ் செய்தது. சிலரைத் தண்டிப்பதற்காக ஊரில் உள்ள முக்கியமான ஓரிருவர் முதுகில் தாழ்த்தப்பட்ட இளைஞர்களை ஏற்றிச் சுமக்க வைப்பார்கள். ஏற மறுப்பவர்களை அடிப்பார்கள்; ஏறினால் அடுத்த நாள் என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. கள்ளர்கள் மகா ரோசக்காரர்கள். இவற்றை எதிர்த்துப் போராடிப் போலீசை வெட்டி வீழ்த்தியதும் உண்டு. ஊரையே வளைத்துப் போலீஸ் சுட்டபோது பெருங்காமநல்லூரில் 12 பேர் இறந்தனர்; கல் எறிந்தே பெரும் போலீஸ் படையைத் துரத்தியடித்தனர்.

  இந்த நிகழ்ச்சிகள் மாறாத பெரும் வடுவைப் பதித்துவிட்டன. தாழ்த்தப்பட்டோர் இயற்கையில் எதிரிகள் அல்லர்; சேர்ந்து வாழ வேண்டியவர்கள்; ஆனால் வெள்ளையர்க்கு ஏவல் புரிந்த காவல்துறை இந்தச் சட்ட அமலின்போது பகைமையை விதைத்துவிட்டது. அதன் விளைவுதான் தேவர் – தாழ்த்தப்பட்டோர் பகைமையாக இன்றும் நீடிப்பது.

  இந்தச் சட்டத்தை எதிர்த்து பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப், முத்துராமலிங்கத் தேவர், கம்யூனிஸ்ட் தலைவர்களாகிய ப.ஜீவானந்தம், பி.ராமமூர்த்தி முதலியோர் இயக்கம் நடத்தினர். மக்களிடம் பரப்புரை செய்ய சாலையே இல்லாத வயல்களிலும் வரப்புகளிலும் நடந்து சென்று கூட்டம் போட்டுப் பேசினார்கள்.

  கொடுமையான இந்தச் சட்டத்தை ரத்து செய்வோம் என்று 1937 தேர்தலில் காங்கிரஸ் வாக்குறுதி கொடுத்தது. வென்று ராஜாஜி தலைமையில் மந்திரிசபை அமைந்தது. பல மாதங்களாகியும் சட்டம் ரத்து ஆகாமையால் தேவர் போராட்டம் தொடங்கிக் கைதானார்; காங்கிரஸ் ஆட்சியில் கைதான முதல் காங்கிரஸ் தலைவர் தேவர்தான்; அவரது விடுதலைக்காக ராமமூர்த்தியும் ஜீவாவும் தொடர்ந்து போராடினார்கள்.

  நாட்டுக்கு சுதந்தரம் கிடைத்த பின்பு சட்டம் காலாவதி ஆனது.

**************************
(படம் உதவி இணையம்)