Thursday 26 December 2013

விசித்திர மாற்றங்கள்


தமிழகத்தின் இரண்டு ஊர்களின் பெயர்கள் வேடிக்கையான முறையில் மாற்றம் பெற்றுள்ளன:

1 -  விருத்தாசலம் -- கடலூர்க்கு அண்மையில் இருக்கிற இதன் முந்தைய தமிழ்ப் பெயர் பழ மலை; கனி மரங்கள் நிறைந்த மலை என்று பொருள். ஒரு கால கட்டத்தில் இது சமற்கிருதத்தில் தவறாய் மொழிபெயர்க்கப்பட்டு விருத்தாசலம் ஆனது;  பழ மலையைப் பழைய மலை என்று பிழையாய் அர்த்தப்படுத்திக்கொண்டு அந்தப் பெயரை இட்டனர்

 விருத்த + அசலம் = முதிய மலை அதாவது கிழ மலை!

வள்ளலார் ஒரு பாட்டில், "பழமலையைக் கிழமலை என்று ஓதுகின்றீர் எனச் சாடியுள்ளார்.

தமிழர்களில் சிலர்உண்மைப் பெயர் பழ மலை என்பதை அறியாமல்விருத்தாசலத்தை முதுகுன்றம் எனப் பெயர்த்தனர்;  சமற்கிருதக் கிழமலை தமிழிலும் கிழமலையாய் நீடித்தது.

முதுமை + குன்றம் = முதுகுன்றம் = கிழ மலை! 

பாடல் பெற்ற தலம் ஆகையால்,  திரு என்ற சிறப்பு டைமொழி சேர்ந்துதிருமுதுகுன்றம் எனப்பட்டது;  ஆனால் சமற்கிருத மோகம்  வென்றதால் விருத்தாசலமாகவே நிலைபெற்றுவிட்டது.

  2 - வேதாரண்யம் -- திருத்துறைப்பூண்டிக்கு அருகில் உள்ள சிறு காடு மரைக்காடு என இனிய தமிழில் பெயர் சூட்டப்பட்டது. மரை என்றால் மான்; மான்கள் நிறைந்த காடு ஆதலால் அது மிகப் பொருத்தமான பெயர். தாமரை என்னும் சொல்லை, தா + மரை ஆகப் பிரித்துத் தாவுகின்ற மான்  என்று பொருள் கொள்ளலாம் என இலக்கணத்தில் படித்திருக்கிறோம்.
தமிழ் சரியாய் அறியாத பார்ப்பனர், அதை மறைக்காடு (மறை = வேதம்) எனத் தவறாய்ப் புரிந்துகொண்டு, வேதாரண்யம் என்று மாற்றினர்;  

வேதம் + ஆரண்யம் = வேதக் காடு! 

வேதம் என்ன புலியா சிங்கமா,  அதற்கு ஒரு காடு ஒதுக்க? கொஞ்சங்கூடப் பகுத்தறிவு இன்றிச் செய்த மொழிபெயர்ப்பு அது! ஆரியரின் வேதத்துக்கும் தமிழரின் காட்டுக்கும் என்ன தொடர்பு? அடிமை மனப்பான்மை மிக்க தமிழர் அதை எதிர்ப்பின்றி ஏற்றனர்சிலர் மட்டும் தமிழ்ப் படுத்தியும் திரு சேர்த்தும் "திருமறைக்காடு" என்றனர்; ஆனால் அது அற்ப ஆயுளில் மறைந்து சமற்கிருதப் பெயரே புழக்கத்தில் இருக்கிறது.

இந்த விசித்திர மாற்றங்களுக்கு ஒரு பாலமும் உள்ளானது: சென்னையில் திருவல்லிக்கேணியையும் மய்லாப்பூரையும் இணைக்கிற பாலம் ஹமில்ட்டன் பிரிட்ஜ் என யாரோ ஒரு வெள்ளைக்காரரின் பெயரைக் கொண்டிருந்தது;  பாமரர்கள் அதை அமில்ட்டன் வாராவதி என்று அழைத்தார்கள்காலப் போக்கில் அது அம்பட்டன் வாராவதி ஆயிற்று. ஆங்கில மோகம் உடையோர், பார்பர்ஸ் ப்ரிட்ஜ் என மொழிபெயர்த்தார்கள். ஹமில்ட்டன், பார்பர் ஆனார்! இப்போது பிபி எனச் சுருக்கமாகச் சுட்டப்படுகிறது.

  ===============================

Thursday 19 December 2013

சிலப்பதிகாரக் காலம்





  எஸ். வையாபுரி பிள்ளை,  தம் 'காவிய காலம்'  என்னும் நூலின் 86 ஆம் பக்கம் முதல் 119 ஆம் பக்கம்வரை, சிலப்பதிகாரத்தின் காலம் பற்றி ஆராய்ந்துள்ளார். அவர் தரும் சான்றுகளுள்  நான்கை மட்டும் எடுத்து எழுதுகிறேன்;  விரிவஞ்சிப் பிறவற்றை விட்டுவிட்டேன்.
 "சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகள் சேரன் செங்குட்டுவனது தம்பி எனக் கூறப்படுதலால் செங்குட்டுவன் காலமாகிய கி. பி. 2 ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் இக் காவியம் தோன்றியிருக்க வேண்டும் என்று பேராசிரியர் சுந்தரம் பிள்ளை,  வி. கனகசபை பிள்ளை முதலியோர் கருதுவராயினர்.

 சேரன் செங்குட்டுவன் காலமும் சிலப்பதிகாரத்தின் காலமும் கி. பி. 5 ஆம் நூற்றாண்டு என முதன்முதல் துணிந்து எழுதியவர் தமிழ்ப் பேராசிரியர் மு. இராகவய்யங்கார் அவர்களே; செங்குட்டுவன் காலத்தில் தோன்றியதே சிலப்பதிகாரம் என்பது இவர்களுக்கும் முற்றும் உடம்பாடே. சம காலம் அன்று என்று எழுதியவர் கே. வி. சுப்பிரமணிய ஐயர்.  8 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இக் காவியம் தோன்றியிருக்க வேண்டும் என்றனர் எல். டி. சுவாமிக்கண்ணு பிள்ளை.

 காவியத்தின் காலம் பிற்பட்டதுதான்:

 1 -- மனுநீதிச் சோழன் கதையைச் சிலப்பதிகாரம் கூறுகிறது:

     வாயிற் கடைமணி நடுநா நடுங்க
     ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
     அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்
               ( வழக். காதை - 53-55 )

இக் கதை முதல்முறையாக 5 ஆம் நூற்றாண்டின் இறுதியில் இயற்றப்பட்ட மஹாவம்சத்தில் வருகிறது;  ஏலாரா என்ற சிங்கள அரசன் இவ்வாறு செய்தான் என அந்நூலில் குறிக்கப்பட்டுள்ளது.

 2 -- பல நாட்டினரை இளங்கோ கூறுகிறார்:

    கொங்கணர் கலிங்கர் கொடுங்கரு நாடர்
    பங்களர் கங்கர் பல்வேல் கட்டியர்

பங்களர்,  வங்க தேசத்தினர்க்கு 7,  8 ஆம் நூற்றாண்டளவில் சாஸனங்களில் வழங்கும் பெயர்.

  3 -- சங்க காலத்தில் காணப் பெறாத சில தெய்வங்களும் இந்நூலில் கூறப்பட்டுள்ளன. உதாரணமாகக் கலைமகளாகிய தெய்வத்தைக் கூறலாம். நாயன்மார்கள் காலத்தில்தான் (7 ஆம் நூ.) முதல்முதலாக இத் தெய்வத்தைக் குறித்து வந்துள்ளது:

  கலைமகள் தலைமகன் இவனென வருபவன் (சம்பந்தர் 1 -124,3 )

  சிலப்பதிகாரத்தில்  ஆய்கலைப் பாவை (12 - 71) எனவும்  மாமகளும் நாமகளும் (22 0 இறுதி வெண்பா) எனவும் காண்கிறோம்

  4 -- மிகப் பிற்பட்ட காலத்தனவாகிய பல சொற்கள் வந்துள்ளன: இந்த,  நான்,  வார்த்தை,  பிற்பாடு,  செட்டி,  உடைய (6 ஆம் வேற்றுமை உருபு)

இனி,  விநாசித்தம்பி செல்வநாயகம் தம்,  " தமிழிலக்கிய வரலாற்றில்" எழுதியுள்ளதை அறிவோம்:

 "சங்கப் பாக்களில் இல்லாத நான் (தன்மை ஒருமை),  நீர் (முன்னிலைப் பன்மை),  இந்த (சுட்டு),  அன் (எதிர்காலத் தன்மை ஒருமை விகுதி: போக்குவன்,  உறுவன்),  கள் விகுதி (உயர்திணைப் பன்மையில்) சிலப்பதிகாரத்தில் பயின்றுள்ளன;  இந்நூலிற் குறிக்கப்பட்டுள்ள வாழ்க்கை முறை,  பண்பாடு,  சமய வழிபாடுகள் பிற்காலத்தவை. இளங்கோவடிகள் காலத்தில் நடந்ததாய்க் கற்பனை செய்யப்பட்டுள்ளது."

             =======================





  

Sunday 15 December 2013

பழைய விளையாட்டுகள் -- பேந்தா

பழைய விளையாட்டுகள் -- (தொடர்ச்சி 4 )
5--பேந்தா  (Benthaa)

 கொந்தம் என்பதற்குப் பொருள் தெரியாதது போலவே,  பேந்தாவுக்கும் தெரியவில்லை;  அதுவாவது தமிழ் போன்று ஒலிக்கிறது,  இது எந்த மொழிச் சொல் என்றே தெரியவில்லை. அர்த்தம் எதுவாக இருந்தால் என்ன?   ஆட்டம் தானே முக்கியம்?

  இதுவும் முக்குழி மாதிரி கோலியாட்டம்ஆனால் ஆறு பேர் ஆடுவது.

  தரையில் ஒரு நீள் சதுரம் வரைய வேண்டும்; ஒரு சாண் அகலம், ஒன்றரை சாண் நீளம்; கொந்ததத்துக்கு கோடு காலால் அகலமாகப் போடுவது;  இதற்குக் கை விரலால் மெல்லியதாய்க் கிழிக்க வேண்டும். நீள் சதுரத்தை நீளவாக்கில் சரி பாதியாகப் பிரிக்கிற கோடு ஒன்று: இதை அ - இ கோடு என்போம்.

   
 களத்துக்குக் கொஞ்ச தூரத்தில் நின்று குனிந்து அவரவரும்  கோலிகளை நீள்சதுரத்தை நோக்கி உருட்டிவிடுவார்கள். (முக்குழிக்குப் போல). களத்துக்கு அதிகத் தொலைவில் நிற்கிற மூன்று கோலிகளை, அ - இ கோட்டின் மத்தியில் சேர்ந்தாற் போல் வைக்க வேண்டும், எந்தக் கோலியாவது கோட்டின் மேல் போய் நின்றால் அல்லது உள்ளே  புகுந்துவிட்டால் அது மூன்று கோலிகளுள் ஒன்றாக அ - இ கோட்டில் இடம் பெறும்.

 அ - இ கோட்டில் வைக்கப்பட்ட மூன்று கோலிகளையும், மற்ற மூவரும் தத்தம் கோலிகள் நிற்கிற இடத்திலிருந்து, அடித்து அடித்துத் தொலைவாகத் தள்ளவேண்டும்: இதுவே ஆட்டத்தின் குறிக்கோள்.

 நீள்சதுரத்தின் மிக அருகில் கிடக்கிற கோலிக்கு உரியவர் முதல் ஆட்டக்காரர்;  பிந்தி நிற்கிற கோலிக்காரர் மூன்றாவதாக ஆடுவார்;  நடுவில் உள்ள கோலியின் உரிமையாளர் இரண்டாமவர்.

 முதல்வர்க்கு அடி பிடிக்கும் வரை தொடர்ந்து ஆடுவார்குறி தவறிய பின்பு இரண்டாம் ஆள் அடிக்கத் தொடங்குவார்அப்புறம் மூன்றாமவர்; மறுபடியும் 1, 2, 3.  யாராவது ஒருவர்,  குறியைத் தாக்கினால் போதும்; தொடர்ந்து மூவரும் ஆடலாம். மூவருக்குமே குறி  தவறிவிட்டால், அதனோடு நிறுத்திக்கொண்டு தம் கோலிகளை எடுத்துக்கொள்வார்கள்.

  மற்ற மூன்று பேரும் குனிந்து, இடக் கையை மடக்கி முதுகின்மேல் வைத்தபடி, வலக் கையை மூடி, தம் கோலிகள் நிற்கிற இடத்திலிருந்து, முட்டியால் அவற்றைத் தள்ளிக்கொண்டு போய்க் கட்டத்தினுள் நுழைத்துவிட வேண்டும்;  முதலில் ஒருவர் ஒரு தள்ளல் தள்ள, அடுத்து இரண்டாமவர் ஒரு தடவை, கடைசியாய் மூன்றாமவர் ஒரு தள்ளல். மீண்டும் 1,2,3  என மாறிமாறித் தள்ளுவார்கள்.

  எவ்வளவு ஜாக்கிரதையாகத் தள்ளினாலும், தரையில் கிடக்கும் சிறு கல், மண்ணாங்கட்டி முதலியவற்றில் விரல்கள் உராய்ந்து சிராய்ப்பு ஏற்பட்டு  ரத்தம் கசியாமல் இருக்காது. ஒவ்வொரு தடவையும் கோலி அதிகத் தொலைவுக்குப் போகுமாறு பலமாய்த் தள்ளினால், தள்ளல் எண்ணிக்கை குறைந்து,  தரையில் கை  மிகுதியாக உரையாது. விளையாட்டில் வலி, காயம் சகஜம்;  இந்தச் சிறு துன்பம், ஆட்டத்தின் பேரின்பத்தில் விரைந்து கரைந்து மறைந்து விடும்.

 ஒரு கோலியை அடித்த கோலி, உருண்டு போய், வேறொரு கோலியையும் மோதுவதுதவறு: அது "ஜல்லி" எனப்படும்;  அடிபட்ட கோலி ஓடி இன்னொரு கோலியில் படுவதும் ஜல்லி தான். அந்த மாதிரி இடிக்காமல் அடிக்க வேண்டும். தவறுதலாய் அடிபட்ட கோலிக்கு உரியவர், ஜல்லி அடித்தவருடைய கோலியை, தம் கையை அகலமாக விரித்துப் பலம் கொண்ட மட்டும் எட்டத் தள்ளிவிடுவார். அங்கிருந்துதான் ஆட வேண்டும். (முக்குழி ஆட்டத்தில் ஜல்லி தவறு அல்ல)

  இந்த ஆட்டத்தை இரு அணியாயும் ஆடலாம்; தொடக்கத்தில் அணித் தலைவர் மட்டும் கோலி உருட்டினால் போதும்.

            +++++++++++++++++++++++++++++++









Sunday 8 December 2013

பழைய விளையாட்டுகள் - முக்குழி

பழைய  விளையாட்டுகள்  -  (தொடர்ச்சி-3)
4 - முக்குழி

  கோலி, குண்டு, ரவை எனப் பல பெயர்களால் அழைக்கப்பட்ட, பளிங்காலான அல்லது மாக்கட்டியலான உருண்டைகளைக் கொண்டு ஆடிய ஆட்டங்களுள் ஒன்று முக்குழி. நான்கு பேர் ஆடலாம். அதற்கு மேலோ கீழோ போனால் ஆட்டம் சுவைக்காது.


நடுத் தெருவில் மூன்று சிறு குழிகளைக் கையால் தோண்டுவார்கள்; ஒரே நேர்க் கோட்டில் அமையும் அந்தக் குழிகளுக்கு இடைவெளி சுமார் ஒரு மீட்டர் இருக்கும்.

   o o o
   1 2 3

முதல் குழிக்குக்  கொஞ்ச தொலைவில் போய் நின்று குனிந்து, அவரவரும் தம் கோலியை முதல் குழியை நோக்கித் தரையில் உருட்டுவர். குழிக்கு மிக அருகில் ஓடி நின்ற கோலியின் உரிமையாளர் முதல் ஆட்டக்காரர்; அதிகத் தொலைவில் கிடக்கும் கோலிக்காரர் கடைசி ஆட்டக்காரர்;  மற்றவர் கோலி நின்ற இடத்தைக் கொண்டு இரண்டாம், மூன்றாம் ஆட்டக்காரர் ஆவர்.

முதல்வர்,  தம் கோலி கிடக்கிற இடத்தில் வலக்கை (அல்லது இடக்கை)க் கட்டை விரலை ஊன்றி,  ஆள்காட்டி விரலை மாத்திரம் நீட்டி,  மற்ற கையின் எல்லா விரல்களையும் சேர்த்துக் குவித்துஅவற்றின் நுனியில் கோலியைப் பிடித்து,  நீட்டியுள்ள ஆள்காட்டி விரலை அந்தக் கோலியால் பின்புறமாய் வளைக்க வேண்டும்;  முடிந்த மட்டும் வளைந்ததும், கோலியை ஆள்காட்டி விரலால் தள்ள வேண்டும்வில்லை வளைத்து அம்பு எய்வதை நினைத்துக்கொள்ளுங்கள். இலக்கு பார்த்து அம்பு விடுவது போல், முதல் குழியில் போய்க் கோலி புகும்படி எய்ய வேண்டும்.

புகுந்துவிட்டால், அந்தக் குழியில் விரலூன்றி அடுத்த குழிக்கு அனுப்ப வேண்டும். குழி தொலைவில் இருப்பதால், இது கடினம்;  ஆதலால், முதல் குழியுள் புகுந்தவுடன், பக்கத்தில் கிடக்கிற கோலியை நோக்கி அடிப்பார்கள்; அந்தக் கோலி எட்டப் போகும்,  நம் கோலி இரண்டாம் குழியை  நெருங்கும். (இதற்குச் சாமர்த்தியம் தேவை);  இங்கிருந்து குழியுள் புகலாம். புகாவிட்டாலோ பிற கோலிகளின்மீது மோதாவிடிலோ தொடர்ந்து ஆடக் கூடாது. கோலி தரையில் கிடக்கும்.

இப்போது இரண்டாமவர் ஆடுவார்;  அடுத்து வரிசைப்படி மற்றவர்கள்; கடைசி ஆள் ஆடியபின்பு, மீண்டும் முதல்வர்.

 1, 2, 3 குழிக்குப் பின், மறுபடி 2, 1, அப்புறம் 2, 3, பிறகு 2, 1, கடைசியாக 2 :  மொத்தம் பத்துக் குழி புகவேண்டும்;  அதற்குப் பின்பு, அங்கிருந்து  யாருடைய கோலியையாவது அடித்துவிட்டால், அது, "பித்து" எனப்படும்; பித்து அடித்தவர் "ராஜா";  அவர் தம் கோலியை எடுத்துக்கொள்வார், ( பித்து அடிக்காதவரைக்கும் ராஜா அல்ல). மற்ற மூவரும் ஆட்டத்தைத் தொடர்வார்கள்அவர்களுள் இருவர் ராஜா ஆகிவிடநான்காமவர் தோற்றவர்.

இவர் முதல் குழியின் அருகில் அமர்ந்து,  முட்டியை மடக்கி, மூன்றாம் குழியை நோக்கி, முதல் குழியின்மேல் வைக்க வேண்டும்; முதல் ராஜா மூன்றாம் குழியில் விரல் ஊன்றி அந்த முட்டியைக் குறி வைத்துக் கோலியால் அடிப்பார்;  மொத்தம் மூன்று அடி. அடுத்து மற்ற ராஜாக்கள் இருவரும் அடிப்பார்கள்; ஒன்பது அடிகளில் சில, குறி தவறிப் போகும்; நாலைந்து அடியாவது விழும்,  முட்டி வலிக்கும்.

இனி, அடுத்த ஆட்டம்.

குறி பார்த்துச் சரியாக அடிப்பது என்பது அனுபவத்தில் கைவரும்இலக்கு இருக்கிற தொலைவைக் கணித்து அதற்குத் தக்கவாறு 
பலமாகவோ லேசாகவோ அடிக்க வேண்டும்சிலர் இரண்டு மீட்டருக்கு  அப்பாலுள்ள கோலியைக்கூட அடித்துவிடுவர். அடுத்தடுத்து  அடிப்பதற்கு "அடிபிடித்தல்" என்று பெயர்;   யாருக்காவது குறி தொடர்ந்து தவறினால், அவர்,"இன்னைக்கு எனக்கு அடிபிடிக்கலெ" எனச் சொல்லி வருந்துவார். ராஜா ஆவதற்கு, அடுத்தடுத்து விரைவாய்க் குழி புகுந்தால் போதாது;  மற்றவர் ராஜா ஆவதைத் தடுக்கவும் வேண்டும்;  அதற்காக அவர்களது கோலிகளை அடித்துக் குழிகளுக்கு அப்பால் தள்ளுவது அவசியம்.

தொடக்கத்தில் முதல் குழியை நோக்கிக் கோலிகளை உருட்டுகையில், "குட்டுனா எட்டு,  குழி பூந்தா ஒன்பது" (குட்டினால் எட்டு,  குழி புகுந்தால் ஒன்பது) என அவரவரும் சொல்வார்கள்;  அதாவது,  ஏற்கனவே தரையில் கிடக்கிற எந்தக் கோலியையாவது மோதினால்,  எட்டுக் குழி புகுந்ததாய்க் கொள்ள வேண்டும்;  முதல் குழியுள் போய்க் கோலி நுழைந்துவிட்டாலோ, ஒன்பது குழி புகுந்ததாய் ஆகும்;  இன்னம் ஒரு குழி புகுந்தால் போதும். அப்படிச் சொல்ல மறந்தால், குட்டுவதும் குழி புகுவதும் செல்லாது.


       ---------------------------------------------
படம் : நன்றி இணையம்

Wednesday 4 December 2013

பழைய விளையாட்டுகள் - குச்சி தள்ளல்

பழைய விளையாட்டுகள் (தொடர்ச்சி-2)
                 3 -குச்சி தள்ளல்
  
ஒருவரது குச்சியை மற்றவர்கள் தத்தம் குச்சிகளால் தள்ளிக்கொண்டே போவது இந்த விளையாட்டு.

  ஆட்டக்காரர் ஐந்து பேர் என வைத்துக்கொள்வோம்ஒவ்வொருவர் கையிலும் ஒரு மெல்லிய, சுமார் ஒரு மீட்டர் நீளக் குச்சி,  சவுக்கை அல்லது மூங்கில்.

  நடுத் தெருவில்,  ஓரிடத்தில் (இதுதான் தொடக்க இடம்) நின்று, குச்சிகளைப் பலம் கொண்ட மட்டும்,  ஒவ்வொருவராய்த் தூக்கி எறிய வேண்டும். அதிக வலு உள்ளவரின் குச்சி முன்னாலும் பிறரின் குச்சிகள் பின்னாலும் போய் விழும். ஒருவரின் குச்சி மற்ற எல்லாக் குச்சிகளையும்விடப் பிந்திக் கிடக்கும் அல்லவா?  இவர் பெயர் எவ்வி எனக் கொள்வோம்.

 எல்லாரும் குச்சிகளை எடுத்துக் கொள்கிறார்கள்;  எவ்வி,  தொடக்க இடத்தில் நின்றுகைகளைத் தலைக்குமேல் தூக்கிஉள்ளங்கைகளை விரித்து வானத்துக்குக் காட்டிக்கொண்டுஅவற்றால் தம் குச்சியை  ஏந்துகிறார். கைகளுக்கு நடுவே இடைவெளி இருக்கிறது;  ஒருவர்  எவ்வியின் பின்னால் போய் நின்றுஅந்த இடைவெளியில் தம் குச்சியை நீட்டித்  தம் முதுகுக்குப் பின்னால் எவ்வியின் குச்சி போய் விழும்படி பலமாகத் தள்ளுகிறார்; அது விழும் இடம் நோக்கி எல்லாரும் ஓடுகிறார்கள்.

  அதைத் தத்தம் குச்சியால் தொலைவில் சென்று விழும்படி எத்திக்கொண்டே போகவேண்டும். எத்துகிற ஒருவரை எவ்வி தொட்டுவிட்டால்ஆட்டம் முடிந்துபோகும். தெருவில் கிடக்கிற கல், மண்ணாங்கட்டி, இலை, தழை முதலான எதன்  மேலாவது குச்சியை ஊன்றலாம்அப்போது தொடுவது செல்லாது. அவரவரும் தள்ள முயல்வதுபோல் போக்குக் காட்டுவார்;  எவ்வி இங்கும் அங்கும் விரைந்து  யாரையாவது தொட்டுவிடப் பார்ப்பார்;   அவர் நெருங்கும்போது குச்சியை ஊன்றித் தப்பித்துக்கொள்வார்கள். அவரது கவனம் தம்மீது இல்லாதபோது, குச்சியைத் திடீரெனத் தள்ளிவிடுவார்கள்.

    இப்படித் தள்ளிக்கொண்டு போகையில் ஒருவர் தொடப்படுகிறார்; அவருக்கு முகிலன் என்று பெயர் சூட்டுவோமே! இனிமேல் தள்ளக்கூடாது. எல்லாரும் குச்சிகளை எடுத்துக்  கொள்கிறார்கள்;  எவ்வியும் எடுத்துக்கொண்டு நொண்டியபடியே,  தொடக்க இடத்துக்குப் போக வேண்டும்;   மற்ற நால்வரும் கூடவே நடந்து வருவார்கள். அப்போது அவர்கள் பாடும் பாட்டு

            எங்கூட்டு நாயீ எலை பொறுக்கப் போச்சு
            கல்லால் அடிச்சேன்  காலொடிஞ்சு போச்சு.

  "எலை பொறுக்கப் போச்சு" என்பதன் பொருள் முதியோர்களுக்கு மட்டுமே தெரியும். முன் காலத்தில் திருமணம், வளைகாப்பு, காதணி விழா, பூப்பு நீராட்டு விழா முதலிய எல்லா நிகழ்ச்சிகளும் வீடுகளில் கொண்டாடப்பட்டன. சாப்பாடு பந்தி பந்தியாய் நடந்தது;   ஒவ்வொரு பந்தியிலும் சுமார் இருபது பேர் உண்டவுடன் எச்சில் இலைகளைச் சுருட்டி எடுத்துப் போய்த் தெரு ஓரத்தில் வீசுவார்கள். அதற்காகக் காத்திருக்கும் பிச்சைக்காரர்கள் நான் நீ எனப் போட்டி போட்டு,   ஆளுக்குச்  சில இலைகளைக் கைப்பற்றிஅவற்றில் உள்ள மிச்சம் மீதிகளைச் சாப்பிடுவார்கள்;  இலைகளை எடுக்கையில் தள்ளுமுள்ளுதகராறு ஏற்படும்; அந்தக் காட்சியைப் பதிந்தார் உடுமலை நாராயணகவி,   பராசக்தி (1952) திரைப்படத்தில்,   கா கா  எனத் தொடங்கும் பாடலில்:

          எச்சிலை தனிலே எறியும் சோற்றுக்குப்
          பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே.

    பிச்சைக்காரரோடு நாய்களும் சேர்ந்துகொள்ளும்,  அதாவது, " இலை பொறுக்கப் போகும்."

                            -----------------------------

Sunday 1 December 2013

பழைய விளையாட்டுகள் -- கொந்தம்

பழைய  விளையாட்டுகள்  --  (தொடர்ச்சி 1)
                கொந்தம் 
             
  நொண்டிக் கோடு போலவே இதிலும் இரண்டு அணி. பெயர் சூட்டுவோம்: ப அணித அணி.

   ஆடுகளம் ஒரு நீள்சதுரம்அதைச் சரி பாதியாக நீள வாக்கில் பிரிக்கும் ஒரு கோடு. அப்புறம் சம தொலைவில் குறுக்குக் கோடுகள்; எட்டுப் பேர் ஆடுவதற்கு இரு கோடு தேவை. இப்போது களத்தில் ஆறு கட்டங்கள் உள்ளன. 
     நீள் சதுரம் கிழக்கு - மேற்காய் அமைந்திருக்கிறதுமுதல் கோட்டில் ப அணித் தலைவர்மற்ற மூன்று கோடுகள் ஒவ்வொன்றிலும் ஒருவர் என நால்வரும் கிழக்கு நோக்கி நிற்கிறார்கள். எதிரில்வெளியில் நிற்கிற  த அணி அடி படாமல் அல்லது தொடப்படாமல் களத்துள் நுழைந்து கடந்து மேற்குப் பக்கமாய் வெளியேற வேண்டும்.

    உடனே ப அணியினர் திரும்பி மேற்கைப் பார்த்து நிற்பார்கள்;  தலைவர் நான்காம் கோட்டின்மீது நிற்பார்: அதுதானே இப்போது முதல் கோடு?   த அணி மறுபடி களத்தைத் தாண்டிக் கிழக்கே வந்துவிட வேண்டும்.

    தொடக்கத்திலிருந்தே அவர்களைத் தடுக்க ப அணி முயலும்; கையை நீட்டித் தொடலாம்அடிக்கலாம். தொட்டவுடன் அல்லது அடித்தவுடன் அசையாமல் நிற்க வேண்டும்கால்கள் நகரக் கூடாது;   சிறிது நகர்ந்தாலும்,   "பேத்தடி வச்சுட்டான்" (பெயர்த்து அடி வைத்துவிட்டான்) என்று த  அணி ஆட்சேபிக்கும். மண்ணில் பதிந்த கால் சுவட்டைக் கவனித்துபெயர்த்தடியா அல்லவா எனத் தீர்மானிப்பர்பெயர்த்தடி  வைத்தால் தொட்டது செல்லாது.

 (தொடரும்)
------------------------------------------------------------------------------------------------