தமிழகத்தின் இரண்டு ஊர்களின் பெயர்கள்
வேடிக்கையான முறையில் மாற்றம் பெற்றுள்ளன:
1 - விருத்தாசலம் -- கடலூர்க்கு அண்மையில் இருக்கிற இதன் முந்தைய தமிழ்ப்
பெயர் பழ மலை; கனி மரங்கள் நிறைந்த மலை என்று பொருள்.
ஒரு கால கட்டத்தில் இது சமற்கிருதத்தில் தவறாய் மொழிபெயர்க்கப்பட்டு விருத்தாசலம் ஆனது;
பழ மலையைப் பழைய மலை என்று பிழையாய் அர்த்தப்படுத்திக்கொண்டு
அந்தப் பெயரை இட்டனர்;
விருத்த + அசலம் = முதிய மலை அதாவது கிழ மலை!
வள்ளலார் ஒரு பாட்டில், "பழமலையைக் கிழமலை என்று ஓதுகின்றீர்” எனச் சாடியுள்ளார்.
தமிழர்களில் சிலர்,
உண்மைப் பெயர் பழ மலை என்பதை அறியாமல்,
விருத்தாசலத்தை முதுகுன்றம் எனப் பெயர்த்தனர்;
சமற்கிருதக் கிழமலை தமிழிலும் கிழமலையாய் நீடித்தது.
முதுமை +
குன்றம் = முதுகுன்றம் = கிழ மலை!
பாடல் பெற்ற தலம் ஆகையால், திரு என்ற சிறப்பு டைமொழி சேர்ந்து,
திருமுதுகுன்றம் எனப்பட்டது; ஆனால் சமற்கிருத மோகம் வென்றதால் விருத்தாசலமாகவே நிலைபெற்றுவிட்டது.
2 - வேதாரண்யம் -- திருத்துறைப்பூண்டிக்கு அருகில்
உள்ள சிறு காடு மரைக்காடு என இனிய தமிழில் பெயர் சூட்டப்பட்டது. மரை என்றால் மான்;
மான்கள் நிறைந்த காடு ஆதலால் அது மிகப் பொருத்தமான
பெயர். தாமரை என்னும் சொல்லை,
தா + மரை ஆகப் பிரித்துத் தாவுகின்ற மான் என்று பொருள் கொள்ளலாம் என இலக்கணத்தில் படித்திருக்கிறோம்.
தமிழ் சரியாய் அறியாத பார்ப்பனர், அதை மறைக்காடு (மறை
= வேதம்) எனத் தவறாய்ப் புரிந்துகொண்டு, வேதாரண்யம் என்று மாற்றினர்;
வேதம் + ஆரண்யம் = வேதக் காடு!
வேதம் என்ன
புலியா சிங்கமா, அதற்கு ஒரு காடு ஒதுக்க? கொஞ்சங்கூடப் பகுத்தறிவு
இன்றிச் செய்த மொழிபெயர்ப்பு அது! ஆரியரின் வேதத்துக்கும் தமிழரின் காட்டுக்கும் என்ன
தொடர்பு? அடிமை மனப்பான்மை மிக்க தமிழர் அதை எதிர்ப்பின்றி ஏற்றனர்; சிலர் மட்டும் தமிழ்ப் படுத்தியும்
திரு சேர்த்தும் "திருமறைக்காடு" என்றனர்; ஆனால் அது அற்ப ஆயுளில் மறைந்து சமற்கிருதப் பெயரே புழக்கத்தில் இருக்கிறது.
இந்த விசித்திர மாற்றங்களுக்கு ஒரு பாலமும்
உள்ளானது: சென்னையில் திருவல்லிக்கேணியையும் மய்லாப்பூரையும் இணைக்கிற
பாலம் ஹமில்ட்டன் பிரிட்ஜ் என யாரோ ஒரு வெள்ளைக்காரரின் பெயரைக் கொண்டிருந்தது;
பாமரர்கள் அதை அமில்ட்டன் வாராவதி என்று
அழைத்தார்கள்; காலப் போக்கில் அது அம்பட்டன் வாராவதி ஆயிற்று. ஆங்கில மோகம் உடையோர், பார்பர்ஸ் ப்ரிட்ஜ்
என மொழிபெயர்த்தார்கள். ஹமில்ட்டன்,
பார்பர் ஆனார்! இப்போது பிபி எனச் சுருக்கமாகச்
சுட்டப்படுகிறது.
===============================