Monday 28 May 2018

இந்துக்களின் வேதங்கள்





  “வேதங்கள் தெய்விகம் வாய்ந்தவை. இவற்றிற்கு அபௌருஷேயங்கள் என்னும் அடைமொழியை ஈந்து அவை மக்களால் ஆக்கப்படாத தெய்விக நூல்கள் என ஆஸ்திகர்கள் போற்றுவார்கள்.” (1)

   அதாவது கீதையைக் கிருஷ்ண பகவான் அருளியது போல வேதங்களை இறைவன் படைத்தான்.

  ஆனால் உண்மை வேறு:
 
   “கண்ணுவர்கள், கோதமர்கள், கிரித்சமதர்கள், விருகதுக்தன் முதலிய ரிஷிகளால் பாடப்பட்டவை வேதப் பாடல்கள்.” (2)

   “வேதங்கள் ஒரு தனிக்கவியின் ஆக்கமல்ல. இவை வெவ்வேறு காலங்களில் கவிகள் பலரால் பல்வேறு சூழ்நிலைகளில் இயற்றப்பட்டு நெடுங்காலம் வழங்கிவரும்போது ஒருகால் ஒன்று சேர்த்துப் பிரிவு பிரிவுகளாகத் தொகுத்து அமைக்கப்பட்டன. பல நூற்றாண்டுகளாக வளர்ந்த பின்னரே வேத இலக்கியம் இன்று காணப்படும் உருவைப் பெற்றிருக்கலாம் என ஊகிக்கப்படுகின்றது. இவ்வேத இலக்கியத்தைக் குறிக்க வரும் பெயர்களுள் திரயீவித்யா என்பது ஒன்று. மூவகை வித்தை என்பது இதன் பொருள். இருக்கு, யசுர், சாமம் என்பவையே இவ்வித்தையின் முப்பெரும் பிரிவுகள். நான்காம் வேதமான அதர்வம் நெடுங்காலத்துக்குப் பின்னரே வேத இலக்கியத்தில் இடம்பெற்றமையால், இது இங்கு வேதங்களுள் ஒன்றாகக் கூறப்படாதிருக்கக் காண்கிறோம்.” (3)

  எனவே, வேதங்கள் மக்களின் படைப்பு, அவை வெவ்வேறு காலத்தவை என்பது தெளிவாகிறது.

   “இப்பாட்டுகளைப் பாடியபோது ஆரியர்களுக்குக் கடவுள் பற்றிய விழுமிய அறிவு இல்லை." பண்டை நாளிலிருந்தே ஆரியர் முழுமுதற் கடவுளின் உண்மையை உணர்ந்தவர் அல்லர். அதனையுணராமையின் அம்முதற்பொருளை வழிபடுமாறும் உணரார் ஆயினர். தம்மால் கருதப்பட்ட இந்திரன் மித்திரன் வருணன் முதலான சிறு தெய்வங்களையே வேண்டி வணங்கிவந்தனர். (4)

  “வேதங்கள் ஒன்றேயான ஈஸ்வரனைச் சொல்லவில்லை. பல தேவதைகளைச் சொல்லியிருக்கிறது. அவர்கள் மனிதர்களைப் போன்ற ஓர் இனந்தான். (5)

  “இருக்கு என்பதற்குப் பாட்டு என்று பொருள். இருக்கு வேதப் பாடல்கள் பெரும்பாலும் அக்காலத்தில் வழிபட்ட தெய்வங்களை விளித்து அவர்களிடமிருந்து தமக்கு வேண்டிய பொருள்களை இரந்து கேட்டலைக் குறிக்கோளாகக் கொண்டு அவர்களைப் போற்றிக் கூறும் முறையில் அமைந்து விளங்குகின்றன. (6)

  ‘நான் உனக்கு நெய் முதலிய ஆகுதிகளைத் தருகிறேன். நீ எனக்கு வீரர்களான மக்களையும் பசுக்களையும் மழையையும் நீண்ட ஆயுளையும் தா’ என்பதே இருக்குப் பாக்களில் தெய்வங்களை நோக்கி மீண்டும் மீண்டும் வேண்டிய வேண்டுகோள்.” (7)

   “உலகியல் விஷயங்கள், அரசர்களைப் போற்றிக் கூறும் பகுதிகள், தத்துவக் கருத்துகளைக் கூறும் பாடல்கள் முதலியவற்றையும் இருக்கு வேதத்தில் அங்குமிங்கும் சிதறுண்டு கிடக்கக் காண்கிறோம்.” (8)

   இருக்கு மறையின் உள்ளடக்கம் இது; மற்ற வேதங்கள் ஆரியர்களின் பகைவர்களை இழித்தும் பழித்துங் கூறி அவர்களையழிக்கும்படி தெய்வங்களை வேண்டுகின்றன. ஆடு, பசு, எருது, குதிரை முதலியவற்றைக் கொன்று இயற்றும் வேள்விகளை விவரிக்கின்றன. மனிதனைப் பலியிட்டு வேட்ட யாகமும் உண்டு; இது புருஷமேதம் எனப்பட்டது; நரபலி என்றும் பெயர். கீழானவன் என்று கருதப்பெற்ற சூத்திரனைப் பலியிட்டிருப்பார்கள் என்று யூகிக்கலாம்.

   யசுர் என்றால் உரைப் பகுதிகள். இது கிரியைகளைப் பற்றி விளக்கங்கூற உரைநடையில் பெரும்பாலும் அமைந்த நூல். சாமம் என்றால் இசை பெருக்கி இராகம் இழைத்துப் பாடும் பாட்டு. அதர்வ வேதம் மாந்திரிக நூலாகவே பெரும்பாலும் அமைந்துள்ளது.

   வேதங்களை வியாசர் என்பவர் தொகுத்தார் எனவும் ஆதலால் வேத வியாசர் எனப்படுகிறார் எனவும் கூறப்படுகிறது. அவர் முறையாய்த் தொகுக்கவில்லை. எடுத்துக்காடு: சாம வேதத்தில் 1549 பாக்கள் இருக்கின்றன; இவற்றுள் 75 தவிர ஏனைய எல்லாம் இருக்கு வேதத்திலிருந்தே எடுக்கப்பட்டுள்ளன. இந்த 75-இலும் சில பாட்டுகள் வேள்விமுறை கூறும் வேறு நூல்களிலிருந்து வந்தவை. (9)

  வேதத்தில் தெஇளவாக விளங்காத பகுதிகள் எத்தனையோ இருக்கின்றன. வேதங்களின் கருத்தை அறிய முயலுதல் அநாவசியம் என்பது ஆன்றோர் கருத்து. இதே கருத்துடன்தான் இன்னும் வேதங் கற்போர், ஓதும் முறையையே பன்னிரண்டு ஆண்டுகள் முழுதும் கற்கின்றனர். (10)

  அதாவது அர்த்தம் புரியாமல் குரு சொல்வதைத் திருப்பிச் சொல்லி ஓதுகின்றனர்.

    இவ்வாறு பல குறைபாடுகள் இருப்பினும் இந்திய இலக்கியங்களுள் பழமை சான்றவை என்ற பெருமை வேதங்களுக்கு உண்டு. இவற்றின் அந்தமாக விளங்கும் உபநிடதங்கள் சிறப்பான தத்துவக் கருத்துகள் பொதிந்தவை.








குறிப்புகள்
(1)  வடமொழி இலக்கிய வரலாறு. பேரா. கா. கைலாசநாத குருக்கள் இயற்றியது. பக். 28.
(2)  வேளாளர் நாகரிகம். மறைமலையடிகள். பக். 89.
(3)  வடமொழி இலக்கிய வரலாறு. பக். 42.
(4)  வேளாளர் நாகரிகம். பக். 44.
(5)  சங்கராச்சாரியாரின் ‘தெய்வத்தின் குரல்.’
(6)  வடமொழி இலக்கிய வரலாறு. பக். 51.
(7)  மேற்படி நூல். பக். 83.
(8)  மேற்படி நூல். பக். 52.
(9)  மேற்படி நூல். பக். 127.
(10) மேற்படி நூல். பக். 86.

(படங்கள் உதவி - இணையம்)

Wednesday 16 May 2018

ஔவை சு. துரைசாமி


நூல்களிலிருந்து – 18

  ஔவை சு. துரைசாமி

(பழந்தமிழ் நூல்களைப் புரிந்துகொள்வதற்கு இன்றியமையாதன பற்பல அறிஞர் இயற்றிய உரைகள். அச்சிறந்த பணியை ஆற்றிய இளம்பூரணர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர் முதலானவர்களுக்கு நிகரான பெரும்புலவர் நம்மிடையே வாழ்ந்த ஔவை சு.துரைசாமி பிள்ளை. அவரது வாழ்க்கை வரலாறு மறைமலைநகர் காலஞ்சென்ற புலவர் தி.நா.அறிவு ஒளி 1998-இல் எழுதிய “தமிழறிஞர்” என்னும் நூலில் இடம்பெற்றுள்ளது. அதைச் சுருக்கிப் பதிகிறேன்.)



  திண்டிவனத்துக்கு அருகில் ஔவையார்குப்பம் என்னுஞ் சிற்றூர் உள்ளது. அவ்வூரில் திரு. சுந்தரனார் அவர்களுக்கும் திருவாட்டி சந்திரமதி அம்மையாருக்கும் 5-9-1902-இல் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஒன்று ஆண், அதுவே நம் ஔவை; மற்றது பெண், பெயர் பூமாதேவி.

  திரு.சுந்தரனார் ஊர்க் கணக்கராய்ப் பணியாற்றினார். தமிழில் ஆர்வமும் அறிவும் வாய்ந்தவர். மயிலம் முருகன் மீது பல செய்யுள் நூல்கள் பாடியுள்ளார்.

  துரைசாமி தம் பெற்றோர்க்கு ஐந்தாவது குழந்தை. உள்ளூரில் தொடக்கக் கல்வி முடித்துத் திண்டிவனம் உயர்நிலைப் பள்ளியில் இறுதி வகுப்பு வரை படித்தார். அப்போதே தமிழில் ஆர்வம் மிக்கவராய்த் திகழ்ந்தார். வேலூர் ஊரிசு கல்லூரியில் மேற்படிப்பு முடித்த பின்பு தஞ்சைக் கரந்தையில் நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் அவர்களிடமும் கரந்தைப் பாவரசர் வேங்கடாசலம் அவர்களிடமும் கழக இலக்கியங்களையும் தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களையும் கற்றார். ஆழ்ந்த புலமை பெற்றார். சிவநெறிக் கோட்பாட்டுக் கல்வியைத் திரு. கந்தசாமி தேசிகர், தவத்திரு. வாலையானந்த அடிகள் ஆகியோரிடம் கற்றுத் தெளிந்தார். 1930-இல் சென்னைப் பல்கலைக் கழகப் புரவலர் பட்டம் பெற்றார்.

  காவிரிப் பாக்கம், செங்கம், செய்யாறு, போளூர் ஆகிய ஊர்களில் தமிழாசிரியராக இருந்து நனிசிறப்பாகக் கற்பித்தார்.

  கற்றல், கற்பித்தல், நூலாராய்தல், நூலியற்றுதல் என்பன வாழ்க்கைக் குறிக்கோளாக அமைந்தன.

  கரந்தைத் தமிழ்ச் சங்கக் கல்லூரி, திருவேங்கடவன் கீழ்த்திசைக் கல்லூரியிற் பணியாற்றிய பின்பு அண்ணாமலைப் பல்கலைக் கழகத் தமிழ்த் துறையில் சேர்ந்தார். அங்கே ‘சைவ சமய இலக்கிய வரலாறு’ நூல் ஆராய்ந்து வெளியிட்டார். ஐங்குறுநூறு நூலுக்கு மிக அருமையான விரிவான விளக்கவுரை எழுதிப் பிரசுரித்தார்.

  உரை எழுதுவது எளிய செயலன்று. ஒரு நூலை முறையாகக் கற்றுத் தெளியவேண்டும். அந்நூலின் நுட்பமெலாம் ஆராய்ந்தறிய வேண்டும். பொருள் நுட்பம், இலக்கண அமைதி, மரபு, குறிப்புப் பொருள், சொல்நயம், சூழ்பொருள், நூலாசிரியரின் ஆற்றல், நூல்சார் ஏனைய செய்திகள் ஆகிய யாவற்றையும் நுண்மாண் நுழைபுலத்தால் ஆய்ந்து தெளிவாக உணர்த்த வேண்டியது உரையாசிரியரின் அரும்பணியாகும்.

  திரு. சு.வையாபுரியார் நற்றிணை ஓலைச்சுவடியை ஔவை அவர்களிடம் அளித்து நன்கு ஆராய்ந்து உரையெழுத வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஔவை அவ்வேட்டினைப் பிற ஏட்டுச் சுவடிகளோடு ஒப்பிட்டு ஆராய்ந்தார். மூவாயிரத்துக்குக் குறையாத பாட வேறுபாடுகளைச் சீர்தூக்கிப் பார்த்துத் தக்க பாடம் எதுவெனத் தெளிந்து அருமையான விளக்கவுரை இயற்றி இரு பெரும் தொகுதிகளாக வெளியிட்டார்.

  சிவனிய நூல் ஞானாமிர்தம் என்பது. இதன் பாடல்கள் இரும்புக் கடலை போன்றவை. இந்நூலையும் ஆய்ந்து ஔவை விளக்கவுரை எழுதினார்.

  புறநானூறு ஓலைச் சுவடியொன்றை ஆராய்ந்தபோது அதற்கு முன்பு வெளிவந்த புறநானூற்று நூலில் காணக் கிடைக்காத பாடத் திருத்தங்கள், பாட வேறுபாடுகளையறிந்து ஆராய்ச்சி உரையெழுதினார். 1947-இல் புறநானூறு முதற்பகுதியும் (1 முதல் 200 செய்யுள்) 1951-இல் இரண்டாம் பகுதியும் வெளிவந்தன.

  ஔவை அவர்களுக்குக் கல்வெட்டு, வரலாறு, தமிழக ஊர்ப் பெயர்கள் குறித்த ஆராய்ச்சியும் இருந்தமையால் கழகக்கால ஊர்கள், இடங்களைத் திட்டமாக அறிந்து தெளிவிக்க முடிந்தது.

  பதிற்றுப் பத்துக்கு உரை எழுத முற்பட்டபோது மலையாள நாட்டில் சுற்றுலாச் சென்று வரலாற்றுச் சிறப்பு உடைய இடங்களை நேரிற் பார்த்தறிந்த பின்பே உரை இயற்றினார்.

  அவரது உரைச் சிறப்பு யாதெனில் சங்க இலக்கியப் பாக்களுக்கு வரைந்துள்ள முன்னுரை எளிமையும் அருமையும் திட்பமும் நுட்பமும் வாய்ந்து பொலிவதேயாம். திணை, துறைகளை விளக்குவதும், தக்க மேற்கோள்களை ஆள்வதும், உணர்ச்சி பொங்க உரை விளக்கம் வழங்குவதும் சொல் நயம், ஆட்சியருமைகளைச் சுட்டுவதும் இவர் உரை மரபாம்.

  மதுரைத் தியாகராசர் கல்லூரியிற் பேராசிரியராய் இணைந்த பின்பு, தமிழ்த் தாமரை, பெருந்தகைப் பெண்டிர், தெய்வப் புலவர், நந்தா விளக்கு முதலிய ஆய்வுக் கட்டுரைத் தொகுதகள், சேர நாட்டு வேந்தல் என்னும் வரலாற்று நூல், சிந்தாமணி ஆராய்ச்சி, சிலப்பதிகார ஆராய்ச்சி, மணிமேகலை ஆராய்ச்சி, யசோதர காவிய உரை ஆகிய நூல்களை இயற்றிய ஔவை An introduction to the study of Thirukkural என்ற ஆங்கில நூலும் எழுதியிருக்கிறார்.

  1968-இல் பணி ஓய்வு பெற்ற பின்பு முழுநேரத் தமிழ் ஆய்வில் ஈடுபட்டார். ஒரு நாளில் 100 முதல் 100 பக்கம் வரை சோர்வின்றி எழுதியமையால் கை நரம்புகள் வலிவிழந்து எழு ஆற்றாத நிலை ஏற்பட்டது. தாம் சொல்லச் சொல்ல அவற்றை எழுதுவதற்கு உதவியாளரை நியமித்துக் கொண்டு தமிழ்ப் பணியைத் தொடர்ந்தார்.

  மதுரைத் திருவள்ளுவர் கழகம் அளித்த “உரை வேந்தர்”, தூத்துக்குடி சைவ சித்தாந்த சபை வழங்கிய “சித்தாந்த கலாநிதி”, மதுரைப் பல்கலைக் கழகம் கொடுத்த “பேரவைச் செம்மல்” ஆகிய பட்டங்கள் பெற்ற ஔவை அவர்களுக்குக் கேடயம் அளித்தும் பாராட்டினர், 1969-இல் சென்னையில் நிகழ்ந்த தமிழ் எழுத்தாளர் சங்க மாநாட்டில். ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் பொற்கிழி வழங்கப்பட்டது.

  சில நாள் உடல் நலிவுற்றிருந்த ஔவை சு.துரைசாமி 3-4-1981-இல் மதுரையில் இயற்கை எய்தினார். தமிழ்க்கென வாழ்ந்து தாளாண்மைக்கு இலக்கியமாய்த் திகழும் உரைவேந்தர் வாழ்க்கை நிறைவாழ்வின் இலக்கணம்.

  பின்குறிப்பு: இவரது புதல்வர்களுள் ஒருவராகிய ஔவை நடராசன் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தராய்ப் பதவி வகித்தவர்.