Tuesday 22 October 2019

நேர்மறையா?


(22-09-19 தினமணியில் வெளியான என் குறுங்கட்டுரை)



குறிப்பு - திங்ஸ் என்பது அச்சுப்பிழை; தின்க்கிங் என்றிருக்க வேண்டும்.

&&&&&&&

நேர்மறையா…?

விடையின் வகைகளைப் பற்றித் தொல்காப்பியர் கூறாவிடினும் உரை எழுதிய இளம்பூரணார் உடன்படுதல், மறுத்தல் முதலான ஆறு வகைகளைத் தெரிவிக்கிறார். நன்னூல் விதி ‘விடை எட்டு வகைப்படும்’ என்கிறது.

சுட்டு மறைநேர் ஏவல் வினாதல்
உற்றது உரைத்தல் உறுவது கூறல்
இனமொழி எனும்எண் இறையுள் இறுதி
நிலவிய ஐந்தும் பொருண்மையின் நேர்ப

(நன்னூல்-386)

  கட்டுவிடை, மறைவிடை, நேர்விடை ஏவல் விடை, வினாஎதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, இனமொழி விடை ஆகிய எட்டு விடைகள். மறை என்பது மறுத்தல்; நேர் என்பது உடன்படுதல்; இரண்டும் எதிர்ச்சொற்கள். இவற்றை ஒன்று சேர்த்து ‘நேர்மறை’ என்னும் சொற்றொடரைப் பலரும் எடுத்தாள்கின்றனர். இது பிழையாகும்.

“தம்பி, கடைக்குப் போவாயா?”

என்ற வினாவுக்குப் “போவேன்” என்பது நேர்; “மாட்டேன்” என்பது மறை. யாராவது இரண்டையும் சேர்த்துப் “போவேன், மாட்டேன்” என்று கூறுவாரா? ‘நெகட்டிவ் தின்க்கிங்’ என்பதை எதிர்மறைச் சிந்தனை எனல் சரி. பாசிட்டிவ் தின்க்கிங் என்பதை உடன்பாட்டுச் சிந்தனை அல்லது ஆக்கச் சிந்தனை என்று சொல்லலாம். எனவே ‘நேர்மறை’ என்னும் சொற்றொடரை எடுத்தாள்வதை இனி தவிர்க்கலாமே!

-                                                                                   ---  சொ. ஞானசம்பந்தன்

Sunday 13 October 2019

வானாய்வு





  ஈராக், பாபிலோனியா, கிரேக்கம் முதலிய சில நாடுகளில் பழங்காலத்தில் வாழ்ந்த அறிஞர்கள் இரவு நேர வானக் காட்சியைக் கவனித்துப் பார்த்து ஆய்வு செய்திருக்கிறார்கள்.
    
  வானாய்வுக் கண்டுபிடிப்புகள் 3000 ஆண்டு பழைமை வாய்ந்தவை. கோள்களின் சலனங்கள் உலகத்தின் எதிர்கால நிகழ்ச்சிகளை முன்னறிவிக்கின்றன எனவும் விண்மீன்களும் கோள்களும் மானிட வாழ்க்கையை நன்மையாகவோ தீமையாகவோ நிர்ணயிக்கும் எனவும் பாபிலோனியர் (பண்டைய ஈராக்கியர்) நம்பியிருக்கிறார்கள் என்பதை அவர்களின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. தங்கள் கண்டுபிடிப்புகளை அவர்கள் களிமண் பலகைகளில் எழுதி அவற்றைச் சுட்டு (செங்கல் போல) பத்திரப்படுத்தி இருக்கிறார்கள்.

  சந்திர சூரிய கிரகணங்கள் நிகழப் போகும் நாளையும் நேரத்தையும் அவர்கள் சரியாய்க் கணித்திருக்கிறார்கள். அவர்களின் முடிவுகளுள் சில தவறானவை எனினும் அந்த ஆய்வுகள் வானநூல் (astronomy) என்னும் அறிவியலுக்கு அடிப்படையாய் அமைந்தன.

  கிரேக்கர்களின் ஆராய்ச்சிகள் எழுத்திற் பதிவாகி ஆவணங்களாகியுள்ளன. ஆகையால் அவை பற்றி நிறையத் தெரிந்துகொள்ள முடிகிறது.

  தொடக்கத்தில் கிரேக்கர் எல்லா நாட்டு மக்களையும் போல பூமி தட்டையானது என்றே நம்பினார்கள். பொ.யு.மு.500 ஆம் ஆண்டளவில், கிரேக்கக் கணித வல்லுநர் பித்தகோரஸ் பூமி உருண்டையாக இருக்கிறது என்று கருத்தறிவித்தார். பூமியும் சூரியன் சந்திரன் கோள்கள் ஆகியவையும் நடுவிலுள்ள ஒரு தீயைச் சுற்றி வருகின்றன என்பதும் அவரது கண்டுபிடிப்பு. வெற்றுக் கண்களால் கண்டவற்றை வைத்துச் சிந்தித்து அந்த முடிவுக்கு வந்திருக்கிறார். எவ்வளவு அபாரமான மூளை!

  அரிஸ்டாட்டில் என்ற அறிஞர் பூமி உருண்டையாய்த் தான் இருக்கிறது என்பதை ஏற்றார். ஆனால் அது நிலையாக நிலைத்து நிற்கிறது மற்றவை அதைச் சுற்றி வருகின்றன என்று கருதினார். டாலமி என்னும் அறிஞரும் அரிஸ்டாட்டிலின் கருத்தே சரியானது என்று முடிவு கட்டினார்.

  இந்த இருவரின் முடிவு சில ஐயங்களை எழுப்பிற்று.

ஓர் எடுத்துக்காட்டு:

  சில சமயங்களில் செவ்வாய் பின்னோக்கி நகர்வதாய்த் தோன்றுகிறது (வக்ரம் என்று வடமொழியில் சொல்வார்கள்) அது ஏன் என்பது இன்று நமக்குத் தெரியும். பூமியும் செவ்வாயும் சூரியனைச் சுற்றி வருகையில் செவ்வாயைத் தாண்டி பூமி முன்னே செல்லும்போது செவ்வாய் பின்னால் நகவர்வதாகத் தோன்றுகிறது.

  பூமி அசையாமல் நிற்கிறது என்ற கொள்கையை ஏற்றால் இந்த வக்ரத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிக்க இயலாது.

  1500 ஆம் ஆண்டளவில் போலந்து அறிஞர் Nicolaus Copernicus (1473 – 1543) முப்பது ஆண்டுக்காலம் தளர்வின்றி விடாமுயற்சியுடன் ஆய்வுகள் நடத்தி On the Revolution of the Heavenly Bodies என்ற நூலை வெளியிட்டார்.

  1. பூமியும் கோள்களும் சூரியனைச் சுற்றி வட்டப் பாதையில் பயணிக்கின்றன.

  2. சிறு வட்டத்தில் சுற்றுகிற ஒரு கோளின் வேகம் சூரியனை நெருங்கும்போது அதிகரிக்கும்.

  3. பூமி தன் அச்சில் 24 மணி நேரத்தில் ஒரு முறை முழுதாகச் சுழல்கிறது.

  மேற்கண்ட அவரது ஆய்வு முடிவுகள் மூன்றும் சரியானவை, பாதைகள் வட்டம் என்பதைத் தவிர.

  கோப்பர்நிக்கசின் கருத்துகளை மேம்படுத்தினவர் Johannes Kepler (1571 – 1630) என்ற ஜெர்மானிய வானறிஞர்.  

இவர் தெரிவித்த 3 விதிகள்:

  1. கோள்களின் பாதை நீள்வட்டம்.

  2. ஒரு கோளின் பாதை நீளமாய் இருந்தால் அது சூரியனை ஒரு சுற்ற ஆகும் நேரம் அதிகமாகும்.

  3. எந்தக் கோளும் சூரியனை நெருங்கும்போது விரைவாகச் சுற்றும்.

  நவீன வானறிவியல் எக்கச்சக்கமாக முன்னேறி மகத்தான, அற்புதமான, நுட்பமான கண்டுபிடிப்புகளைச் செய்திருக்கிறது. இதற்கு அடிப்படை அமைத்துப் பெரும் பங்காற்றியவர் Galileo Galilei (1564 -1642) என்ற இத்தாலியர். ஹாலந்தில் தொலைநோக்காடி கண்டுபிடிக்கப்பட்டதை யடுத்து அவர் சொந்தமாய் ஒன்றை உருவாக்கி அதன் வழி நோக்கி சந்திரனின் மலைகள் மற்றும் பள்ளத்தாக்குகள், ஜூப்பிடரின் நான்கு துணைக் கோள்கள், சனியின் வளையங்கள் ஆகியவற்றைக் கண்டறிந்தார். சந்திரனைப் போன்றே வெள்ளிக்கும் தேய்பிறை வளர்பிறை உண்டென்றார். சூரியனில் கரும்புள்ளிகள் காணப்படுவதையும் அவை நகர்கின்றன என்பதைக் கவனித்து சூரியனும் தன் அச்சில் சுழல்கிறது என்னும் உண்மையையும் அறிவித்தார்.

  இங்கிலாந்தின் Isaac Newton (1642 – 1727) கூறிய 3 விதிகள் பிரசித்தம். அவரால் புவியீர்ப்பு விசை குறித்து அனைவரும் அறிந்து கொண்டனர்.

  தொல்கால வானறிஞர்கள் சனிதான் அதிக தொலைவிலுள்ள கோள் என்று கணக்கிட்டிருந்தனர். 1781 வரை அந்தக் கணிப்பு நீடித்தது. அந்த ஆண்டில் William Herschel (1738 – 1822) என்கிற இங்கிலாந்தில் வாழ்ந்த ஜெர்மானிய ஆய்வர் சனிக்கப்பாலுள்ள யுரேனசைக் கண்டுபிடித்தார்.

  இன்னொரு கோளான நெப்டியூன் கண்டுபிடிக்கப்பட்டமை ஆய்வால் அல்ல, கணிதத்தால் என்பது வியப்புக்குரிய செய்தி. யுரேனசின் சஞ்சாரத்தை ஆய்வு செய்தவர்கள் அது சில சமயம் மிக விரைவாயும் வேறு சமயங்களில் மெல்லவும் நகர்வதைக் கவனித்தார்கள். இதற்குக் காரணம் எதுவாக இருக்கும்? வேறொரு கோளின் ஈர்ப்பு விசையாகத்தான் இருக்க வேண்டும் என ஊகித்தார்கள்.
 
  அது எங்கே உள்ளது? இங்கிலாந்தின் John C. Adams, பிரான்சின் Le Verrier என்ற இரு ஆய்வர்கள் தனித்தனியே கணக்குப் போட்டு ஒரே சமயத்தில் கோளின் இருப்பிடத்தைத் துல்லியமாய்க் கணித்தனர். 1846 இல் Johann Galle என்னும் ஜெர்மானியர் அவர்கள் இருவரும் சுட்டிய இடத்தில் ஒரு கோள் இருப்பதைக் கண்டு கூறினார். நெப்டியூன் என்று பெயர் சூட்டப்பட்டது.

  புளூட்டோவைக் கண்டுபிடித்தவர் Clyde Tombaugh என்னும் அமெரிக்கர். அது 1930 இல்: அதை dwarf கோள் என்கிறார்கள். ஆற்றல் குறைந்த கிரகம்.

  செவ்வாய்க்கும் ஜூப்பிடர்க்கும் இடையில் ஒரு கோள் இருக்க வேண்டும் என்று 18 ஆம் நூற்றாண்டில் அறிஞர்கள் கணக்கிட்டார்கள்; ஆராய்ச்சி மேற்கொண்டார்கள். 1801 இல் இத்தாலியர் Giuseppe Piazzi ஒரு சிறு கோளைக் கண்டு Ceres என்று பெயர் சூட்டினார். மேன்மேலும் நடந்த ஆய்வுகளில் ஏகப்பட்ட, அதாவது லட்சக் கணக்கில், சிறு சிறு கோள்கள் அங்கு இருப்பது தெரிய வந்தது. அவற்றை asteroids என்கின்றனர். சிதைந்துபோன ஒரு கோளின் சிதறல்கள் எனக் கூறுகின்றனர்.

  ஆரியர்களும் மிகப் பழைய காலத்திலேயே வானத்தை ஆராய்ந்து பல உண்மைகளை அறிந்தார்கள். சந்திரன் இரவுதோறும் வெவ்வேறு விண்மீனுக்கருகில் நகர்வதைக் கவனித்து அந்த விண்மீன்கள் மொத்தம் 27 எனக் கணக்கிட்டு அஸ்வினி, பரணி முதலிய பெயர்களை வைத்தனர்; கோள்கள் 12 விண்மீன் கூட்டங்களின் வழியே பயணிப்பதறிந்து அவற்றை ராசிகள் என விளித்து மேஷம், ரிஷபம் எனத் தனித்தனிப் பெயருமிட்டனர். திரிசங்கு மண்டலம், சப்தரிஷி மண்டலம், அருந்ததி, துருவன் முதலான பெயர்களையும் விண்மீன்களுக்கும் கூட்டங்களுக்கும் சூட்டினர். உத்தராயணம், தட்சிணாயணம், கிரகண காலங்கள் முதலானவற்றைக் கணக்கிட்டுப் பஞ்சாங்கம் தயாரித்தனர். கோள்கள் ராசி விட்டு ராசி மாறுவதைத் துல்லியமாய்க் கணக்கிட்டு குருப்பெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி என்றெல்லாம் பெயர் வைத்தார்கள்.

  ஆண்டின் பெரும்பாலான இரவுகளில் தெளிவான விண்ணைக் காணக்கூடிய வாய்ப்புப் பெற்றிருந்தும் தமிழர்கள் ஆராய்ச்சிக்கான விருப்பார்வமோ (curiosity) முனைப்போ இல்லாமல் காலந்தள்ளி ஆரியர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றி அவர்களுடைய ஆண்டுகள் (பிரபவ) முதலியவை, நட்சத்திரப் பெயர்கள் முதலானவற்றைப் பின்பற்றி வந்துள்ளனர். அவர்களின் சோதிட நூலை நம்பி நல்ல நாள், நல்ல நேரம், ஜாதகம் பார்த்து வாழ்க்கை நடத்துகிறார்கள்.

  சோதிடத்துக்கும் வான நூலுக்கும் பெருத்த வேறுபாடுண்டு.



வானநூல்படி

சோதிடப்படி

1.
சூரியன்

விண்மீன்
கோள்
2.
சந்திரன்

துணைக்கோள்
கோள்
3.
செவ்வாய் à சனி

கோள்கள்
கோள்கள்
4.
பூமி

கோள்
X
5.
யுரேனஸ்

கோள்
X
6.
நெப்ட்யூன்

கோள்
X
7.
ப்ளூட்டோ

ஒரு வகைக் கோள்
X
8.
ராகு

X
கோள்
9.
கேது

X
கோள்

  நம் சந்திரனைப் போல் பற்பல சந்திரன்கள் உள்ளன. இவை பற்றிச் சோதிடம் எதுவும் அறியாது.

  அறிவியலையும் ஆராய்வையும் அடிப்படையாய்க் கொண்ட வானநூல் மேன்மேலும் முன்னேறிப் புதுப்புதுக் கண்டுபிடிப்புகளைத் தெரிவிக்கிறது. பழைய கருத்துகள் தவறெனத் தெரிந்தால் திருத்திக் கொள்கிறது. வான் ஆராய்ச்சிக்கு எல்லையில்லை.

&&&&&&
(படம் உதவி இணையம்)

Wednesday 2 October 2019

பெருஞ்சோறு



  சங்க கால வேந்தர்களுள் ஒருவன் சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன். புலவர் முரஞ்சியூர் முடி நாகனார் அவனைத் தம் பாடலுள் (புறம் 2 : அடி 13 – 16)

அலங்குளைப் புரவி ஐவரொடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை
ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

என்று புகழ்ந்திருக்கிறார்.

  பொருள்: அசைந்த தலையாட்டம் உள்ள குதிரைகளை யுடைய பாண்டவர் ஐவரோடும் பகைத்து, அவர்களுடைய நாட்டைக் கவர்ந்து கொண்ட, தும்பைப்பூச் சூடிய நூறு பேரும் போரிட்டுக் களத்தில் இறந்து போகப் பெருஞ்சோறாகிய மிக்க உணவை அளவு இல்லாமல் கொடுத்தவனே!

  இதற்கு உரையாசிரியர் ஔவை சு. துரைசாமி பிள்ளை தந்துள்ள விளக்கம்:

  பாரதப் போரில் இரு படைகளும் போர் செய்து மடியும் வரை அவர்களுக்கு இந்தச் சேர மன்னன் வேண்டிய அளவு உணவு வழங்கினான்.

  என்ன வேடிக்கை! 2000 கி.மீ.க்கு அப்பாலுள்ள போர்க்களத்துக்கு இங்கிருந்து எப்படி உணவு அனுப்பியிருக்க முடியும்? வழியிலேயே கெட்டுப் போய்விடாதா? அஸ்தினாபுரத்திலேயே ஏற்பாடு செய்திருக்க மாட்டார்களா? இயலவில்லை யெனில் அக்கம் பக்க நாடுகளின் உதவியை அன்றோ கோரியிருப்பார்கள்?

  இது குறித்துத் தமிழறிஞர் எஸ். வையாபுரி பிள்ளை தம் இலக்கியச் சிந்தனைகள் என்னும் நூலில் (பக். 42) பின்வருமாறு எழுதியுள்ளார்:

  “தென்னாட்டிலிருந்த அரசனொருவன் பாரத யுத்தம் நிகழ்ந்த குருக்ஷேத்திரத்திற்கு உணவுப் பொருள்களை யெல்லாம் எடுத்துச் சென்று அங்கே பொரக் கூடியிருந்த படைகளுக்கெல்லாம் உணவளித்தான் எனல் சரித்திர முறையில் ஒப்புக்கொள்ளக் கூடியதன்று. அன்றியும் சேரர்கள் இவ்வாறு உணவளித்தார்கள் என்ற செய்தி வியாச மகாபாரதத்தில் கூறப்படவில்லை. அங்குச் சேரர்களைக் குறித்துக் காணப்படுவதெல்லாம் கர்ணனது திக்கு விஜயத்தில் இவனால் தோல்வியுற்றுத் துரியோதனனுக்குத் திறை செலுத்தினார்கள் என்பதும் பின்பு யுதிஷ்டிரது படையோடு சேர்ந்து போருக்கு உதவினார்கள் என்பதுமேயாம்.”

&&&&&