செங்கோல், கொடுங்கோல்:
மன்னர்களைப் பற்றி, செங்கோல் செலுத்தினார்கள் என்றோ கொடுங்கோலர்கள் என்றோ குறிப்பிடுவது வழக்கம். கோல் என்றால் கம்பு: ஆளுக்கொரு கம்பைக் கையில் பிடித்திருந்தார்களா சங்கராச்சாரியாரைப் போல?
செங்கோல் (செம்மை + கோல்) என்றால் செம்மையான கம்பு, அதாவது கோணல்மாணல் இல்லாத கம்பு. 390 ஆம் குறளின் உரையில்,
பரிமேலழகர், "செவ்விய கோல் போன்றது ஆகலின் செங்கோல் எனப்பட்டது" ஏன்று விளக்கியுள்ளார்.
குற்றங் குறை அற்ற ஆட்சியை நூல் பிடித்தாற் போல நேராக உள்ள கம்பாக
உருவகித்தார்கள்.
கொடுங்கோல் (கொடுமை + கோல்);
இங்கு,
கொடுமை என்பதற்கு வளைவு என்று பொருள்; ஆகவே, கொடுங்கோல் = வளைந்த கம்பு.
மோசமான ஆட்சிக்குக் கோணல் கம்பு உருவகம்.
சிலப்பதிகாரம், காட்சிக் காதை, அடி 98 , 99 :
வல்வினை வளைத்த கோலை
மன்னவன்
செல்லுயிர் நிமிர்த்துச்
செங்கோல் ஆக்கியது.
ஊழானது கோலை வளைத்துவிட்டது;
மன்னனின் உயிர் அதை நிமிர்த்தது.
இங்கே, கொடுங் கோலை வளைந்த கோல் எனவும் நிமிர்த்திய கோலைச் செங்கோல் எனவும் புலவர்
குறிப்பிடக் காண்கிறோம்.
ஆகையால், செங்கோல் கொடுங்கோல் என்பவை உண்மையான கம்புகள் அல்ல, வெறும் உருவகமே என்று அறிகிறோம்.
---------------------------------------------------
(படம்; நன்றி இணையம்)