Monday 17 July 2017

ஞாலம்




உலகம் எனப் பொருள்படும் ஞாலம் என்னுஞ்சொல் பழைய நூல்களில் பரவலாய்க் காணப்படுகிறது:

       1 -- தொல்காப்பியம் - பொருள். பா 88, அடி 19.
                    ஞாலத்து வரும்
       2 -- அக நானூறு -  பா 4, அடி 5.
                    மலர்ந்த ஞாலம்
       3 -- திருக்குறள் - 102.
                    ஞாலத்தின் மாணப் பெரிது
       4 --குறுந்தொகை - பா 267,  முதலடி.
                    இருங்கண் ஞாலத்து
        5 -- பெருங்கதை 1. 37.
                    ஞாலத்து இன்னுயிர் வாழ்வோர்

   இந்தச் சொல் ஞாலல் என்பதுடன் தொடர்பு உடையது; ஞாலல் என்றால்  தொங்குதல்; ஞான்று = தொங்கி; இதுநான்று என மாறலாம்; நான்று கொள்ளுதல் =  தூக்கில் தொங்குதல்.

  பூமியைத் தமிழர் ஞாலம் என்றனரே! அது அந்தரத்தில் தொங்குகிறது என்பதை அறிந்திருந்தனரா என்று சிந்திக்க இடமுண்டுஆனால் அது பற்றி  இலக்கியங்களில் எந்தக் குறிப்புமில்லை.

 நீண்ட நெடுங்கால நம்பிக்கைபூமி தட்டையானது என்பதே; அதைப் பாய்போலச் சுருட்டிக்கொண்டு போய்க் கடலில் ஒளிந்தான் அசுரனொருவன்  என்று புராணம் கூறுகிறது. தட்டையுலகை எட்டுத் திக்குகளிலும் ஆண் யானைகள் தாங்குகின்றன என்பது ஆரியரின் ஊகம்; அவற்றை, 'அஷ்ட திக் கஜங்கள்' என்றனர்; பெயருஞ் சூட்டினர்: அஞ்சனம்ஐராவதம்குமுதம், சார்வபெளமம்சுப்ரதீபம்புட்பதந்தம், புண்டரிகம், வாமனம்.
   அந்தக் கருத்தைத் தமிழரும் ஏற்றனர்:

1 -- மதுரைக் காஞ்சி அடி 14, 15.
                  மேதகு மிகப்பொலிந்த
                  ஓங்குநிலை வயக்களிறு
பொருள்: ஓங்குநிலை - உலகைத் தாங்குகிற, வயக்களிறு -  வலிமை வாய்ந்த ஆண் யானைகள்,மேதகு -  சுமை நீங்கி, மிகப் பொலிந்த -மிகுந்த  அழகு பெற்றன.

  கருத்து - பாண்டிய மன்னர்கள் உலகத்தைத் தாங்குகிற பொறுப்பைத் தாங்களே ஏற்றுக்கொண்டமையால் யானைகளின் பாரம் நீங்கிற்று.

    ஆயிரந்தலைபடைத்த ஆதிசேஷன் என்னும் பாம்பு தனது ஒரு தலையால் உலகத்தைத் தாங்குகிறது என்பது வேறொரு நம்பிக்கை: "புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்" என்றார் பிற்கால ஒளவையார்.

   கம்ப ராமாயணம் இந்த இரு நம்பிக்கைகளையும் சேர்த்துக் கூறுவதுடன்  மூன்றாம் நம்பிக்கை யொன்றையும் தெரிவிக்கிறது. சில மலைகளும் அந்தப் பணியைச் செய்கின்றனவாம்.
   பா---1412 :  அடி  3 , 4 :
    வையமென் புயத்திடை நுங்கள் மாட்சியால்
    ஐயிரண்டு ஆயிரத்து ஆறு தாங்கினேன்
   பா -- 1414 :
    விரும்பிய மூப்பெனும் வீடுகண் டயான்
    இரும்பியல் அனந்தனும் இசைந்த யானையும்
    பெரும்பெயர்க் கிரிகளும் பெயரத் தாங்கிய
    அரும்பொறை இனிச்சிறி தாற்ற ஆற்றலேன்.

  பொருள் -- வீடு கண்ட யான் =  அரச பதவியிலிருந்து விடுதலை பெறுதற்குரிய காலத்தை அடைந்துவிட்ட நான்.

 விளக்கம் -- தசரதன் தன்னுடைய அமைச்சர்களிடம் கூறியது:                                     
  உலகை என் தோள்களில், உங்களது ஒத்துழைப்பால், அறுபதாயிரம் ஆண்டு சுமந்தேன்.

 மூப்பு வந்தமையால்பதவி துறக்க வேண்டும் எனத் தெரிந்த நான், ஆதிசேஷனும் யானைகளும் மலைகளும் பூமியைச் சுமக்கிற தத்தம் தொழிலிலிருந்து நீங்கும்படி இதுவரை நான் தாங்கிக்கொண்டிருந்த பாரத்தை இனியுஞ் சுமக்க என்னால் இயலாது.

  தசரதனால் பாம்புக்கும் களிறுகளுக்கும் மலைகளுக்கும் 60,000 ஆண்டு ஓய்வு கிடைத்தது.

   குடும்ப பாரம், அரச பாரம் என்பது மரபு; தந்தை குடும்பத்தைச் சுமக்கிறான், மன்னன் புவியைச் சுமக்கிறான்.

   யானைகளையும் ஆதிசேஷனையும் மலைகளையும் எது தாங்குகிறது என்ற வினாவுக்கு விடையில்லை!

++++++++++++++++++++++++++++++

8 comments:

  1. இம்மாதிரி செய்திகள் பரவலாகப் போய்ச் சேர வேண்டும் அவை இன்னும் பழைய கதைகளில் நம்பிக்கை கொண்டுள்ளோர்புரிந்து கொள்ள உதவும் நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

      Delete
  2. விளக்கம் அருமை ஐயா...

    நன்றி...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி .

      Delete
  3. நூல்களின் வழியே சொல்லப்பட்ட ஞாலம் பற்றிய கற்பனைக் கதைகளை அருமையாக விளக்கியுள்ளீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி .

      Delete
  4. ஞாலம் என்பதற்கும் ஞாலல் என்ற சொல்லோடு தொடர்புடையது; அதற்குத் தொங்குதல் என்று பொருள் உண்டு என்றறிந்தேன்.
    பூமியைத் தாங்கும் கற்பனைக்கதைகள் பற்றி விளக்கியமைக்கு நன்றி இலக்கியத்தில் ஞாலம் என்று வருகின்ற இடங்களையும் எடுத்துக் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி..

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு மிக்க நன்றி .

      Delete