Thursday 6 September 2018

திசை எட்டும் இதழில் என் நேர்காணல்



சமீபத்தில் முனைவர் க. பஞ்சாங்கம் அவர்கள் என்னுடன் நடத்திய நேர்காணல் ‘திசை எட்டும்’ 56-வது இதழில் வெளியானது.   









மொழியாக்கமெனும் படைப்புக்கலை
பஞ்சாங்கம்

ஆசிரியர் சொ.ஞானசம்பந்தம் 1926-ல் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் பிறந்தவர். பிரெஞ்சுக் காலனி ஆட்சியின் கீழ் மேல்நிலைக் கல்வி வரை எல்லாப் பாடங்களையும் பிரெஞ்சு மொழி மூலம் கற்றவர். துணை மொழிகளாக ஆங்கிலமும், லத்தீனும் கூட கற்றுக்கொண்டார். பிரெஞ்சுக் காலனி என்பதனால் வியட்நாமில் ஓராண்டும் பாரீஸ் பெரு நகரத்தில் மூன்று ஆண்டும் பணி ஆற்றிய பிறகு காரைக்காலில் அரசுப்பள்ளி ஆசிரியராக அமர்த்தப்பட்டார். ஒன்றிரண்டு ஆண்டில் 1954 புதுச்சேரி மாநிலம், இந்தியப் பெருந்தேசத்துடன் இணைக்கப்பட்ட சூழலில் பள்ளிகள் அனைத்தும் தமிழ்நாடு கல்வித்திட்டத்தின் கீழ் வந்தன. எனவே தமிழில் பாடம் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது. தயங்காமல் தமிழையும் முறைப்படிக் கற்றுப் புலவர் பட்டம் பெற்றுத் தமிழாசிரியராகித் தலைமையாசிரியராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இன்றும் 92 வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கி வருகிறார். தவறாமல் குறிப்பிட வேண்டிய ஒன்று, இந்த வயதிலும் முழுமையான பகுத்தறிவுவாதியாகத் தான் மட்டுமில்லாமல் தன் குடும்பத்தையே (மூன்று மகன்கள், இரண்டு மகள்கள்) பகுத்தறிவுப் பாதையில் செலுத்திச் செல்லக்கூடிய அளவிற்கு உறுதியான ஒரு வாழ்வை வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவருடைய மகள் கலையரசியின் புதிய வேர்கள் என்ற சிறுகதைத் தொகுப்பு வெளியீட்டு விழாவில் அவர் பேச்சைக் கேட்கும் அரியதொரு வாய்ப்புக் கிடைத்தது. தமிழ்த்தாய் வாழ்த்து என்று சொன்னவுடன் கூட்டத்தில் எல்லாரும் எழுந்து நிற்க ஆயத்தமாகும்போது, ‘யாரும் தியானத்தில் இல்லையேஎன்று சமயம் பார்த்து அடித்த அடி அவரை உடனே எனக்கு யாரென்று காட்டியது. மேடையில் பேசும்போதும், ‘தமிழன் தமிழன் என்று இப்பொழுது சொல்கிறீர்களே, நாங்கள் சிறுவர்களாக இருந்த அந்தக் காலத்தில் ஏது தமிழன்? சூத்திரன், சூத்திரச்சி என்றுதான் வழக்கிருந்தது; என் காதுபடக் கேட்டிருக்கிறேன். எல்லா இழிவுகளையும் மாற்றியது தந்தை பெரியார்தான்என்று அன்றைக்கு அவர் பேசியது இன்றும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

  68 வயதில் இந்திமொழியைக் கற்று அதிலும் பட்டம் வாங்கி வைத்திருக்கிறார். மொழிகளைப் படிப்பதிலும் மொழிபெயர்ப்பதிலும் ஆர்வமுடன் தொடர்ந்து இயங்கியுள்ளார். இவ்வாறு வெளியே பெரிதும் தெரியாமல் பன்மொழி அறிஞர்களாக விளங்கித் தமிழிலக்கியத்திற்கு அறிவுக் கொடை வழங்கிக் கொண்டிருப்பவர்கள் பல பேர் இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவரைதிசை எட்டும்வாசகர்களுக்கு அறிமுகப் படுத்துவதில் பெரிதும் மகிழ்ச்சி கொள்ளுகிறேன். அவர் பிரெஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்த்த எழுத்துக்கள் பலவும் மஞ்சரி இதழில் வெளிவந்துள்ளன. இதற்குமேல் பிரெஞ்சு இலக்கிய வரலாறு, இலத்தீன் இலக்கிய வரலாறு, மறைந்த நாகரிகங்கள் என்று மிக அரிதான நூல்களையும் தமிழுக்குத் தந்துள்ளார்.  

இனி வாசகர்கள் பன்மொழி அறிஞர், மொழிபெயர்ப்பாளர் திரு.ஞானசம்பந்தன் அவர்களின் உரையாடலை வாசிக்கலாம்.

மொழிபெயர்க்கிற இந்த அரும்பணியில் ஈடுபட உங்களுக்கு எது தூண்டுகோலாக அமைந்தது?

  அப்படிச் சிறப்பாகப் பெரிய தூண்டுதல் என்று சொல்லும்படியாக எதுவும் நடக்கவில்லை. என்னுடைய இலக்கிய ஆர்வத்தால் அதில் நானே விரும்பி ஈடுபட்டேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

எப்பொழுதிலிருந்து மொழிபெயர்க்கத் தொடங்கினீர்கள்?
 
  ஆசிரியராகப் பள்ளியில் பணியாற்றும்போதே மொழிபெயர்க்கத் தொடங்கிவிட்டேன்.

பிரஞ்சு மொழியிலிருந்து மாப்பசான் கதைகளைப் பெரிதும் மொழிபெயர்த்துள்ளீர்கள். அதற்கென்ன காரணம்?

  எனக்கு பழைய பிரஞ்சு மொழிதான் பழக்கம். இன்றைக்குள்ள பிரஞ்சு மொழியில் எனக்கு அவ்வளவு பரிச்சயம் கிடையாது; இது முதற்காரணம். மற்றொன்று மாப்பசான் உலகப் புகழ்பெற்ற சிறுகதை எழுத்தாளர். சிறுகதை வடிவத்தில் அவர் செய்து காட்டியுள்ள சாதனை, படைப்பாளிகள் வாசகர்கள் விமர்சகர்கள் என யாரையும் பிரமிக்க வைப்பவை. நானும் பிரமிப்போடு அவர் எழுத்துக்களை வாசித்துள்ளேன். அதனால் தமிழுக்குக் கொண்டுவர ஆசைப்பட்டேன்.

மொழிபெயர்க்கும்போது கதைகளைத் தேர்ந்தெடுக்க எந்த வகையான முறையைக் கையாளுவீர்கள்?

  முதலில் அந்தக் கதை நம்முடைய பண்பாட்டுச் சூழலுக்கு ஏற்புடையதாக இருக்குமா என்று பார்ப்பேன். இதில் எச்சரிக்கையாக இருப்பேன். ஏனென்றால் மாப்பசான் கதைகளில் ஆபாசமெனக் கருதப்படுகிற பகுதிகளும் வரும். இதுவரை சொல்லப்படாததாகப் புதிதாகத் தோன்றுகிறதா என்றும் பார்த்து தேர்வு செய்வேன்.

பிரஞ்சு மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்க்க முயலும்போது நீங்கள் எதிர்கொண்ட சிக்கல்கள் என்ன?

  அப்படிச் சிக்கலாக எனக்கு எதுவும் படவில்லை. இரண்டு மொழியிலும் முறையாகக் கற்றுத் திறமை இருந்ததால் பெரிதாகச் சிக்கல் இல்லை. சில நேரங்களில் அகராதிகளின் துணையோடு சரியான சொற்களையும் மரபுத் தொடர்களையும் கண்டடைந்து திருப்தி தரும்படி மொழிபெயர்த்துவிடுவேன்.

மொழிபெயர்க்கும்போது நீங்கள் கையாளும் உத்தி என்ன? அதாவது ஒரு பத்தியைப் படித்து உள்வாங்கிக்கொண்டு, பிறகு அதை உங்கள் நடையில் உங்கள் மொழியில் எழுதிவிடுவீர்களா? அல்லது வரிக்கு வரி வாசித்து அதை அப்படியே மொழிபெயர்ப்பீர்களா?

  முதலில் நான் என்ன செய்வேன் என்றால், முழுவதுமாகக் கதையைப் புரிந்து வாசித்து முடித்துவிடுவேன். இந்தக் கதையை மொழிபெயர்க்கலாமென்று தேர்ந்தெடுத்தவுடன் வாக்கியத்துக்கு வாக்கியம், இன்னும் சொல்லப் போனால் சொல்லுக்குச் சொல், ஒரு சொல் கூட விடாமல் தமிழில் மொழிபெயர்த்துக்கொண்டே வருவேன்; இப்படி மொழிபெயர்த்தவுடன் என் மொழிபெயர்ப்பை முதலில் இருந்து கடைசி வரைக்கும் வாசிப்பேன்; வாசிக்கும்போதே நல்லஓட்டமா இருக்காஎன்று கவனித்து, அதற்குத் தகுந்தவாறும், தமிழ் மொழி மரபிற்கு ஏற்றவாறும் இருக்கிறதா என்று கவனித்து அதற்கேற்றவாறு திருத்தம் செய்வேன்.

இதற்கொரு எடுத்துக்காட்டு சொல்லுங்களேன்?

  இப்போது, ‘அழுத்தமாகச் சொன்னார்என்று எழுதியிருந்தால், அதைஅடித்துச் சொன்னார்என்று எழுதும்போது தமிழ் ஓட்டம் வந்து வாய்க்கிறது இல்லையா? இப்படித்தான் ஒழுங்குபடுத்துவேன்.

எழுதிய நூல்கள்:

1. மாப்பசான் சிறுகதைகள் 
2. பிரெஞ்சு இலக்கிய வரலாறு
3. இலத்தீன் இலக்கிய வரலாறு
4.  சிங்க வேட்டை - A.Daudet இயற்றிய குறும் புதினம்
5. மறைந்த நாகரிகங்கள்
6. தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி?
7.   Arthur Rimband-ன் தேர்ந்தெடுத்த கவிதைகள் 



8 comments:

  1. மொழியாக்கத்தில் ஈடுபடுவோர்க்குப் பயன் தரும் வகையில் நேர்காணல் அமைந்துள்ளது. நன்றி, திசையெட்டும் இதழில் நேர்காணல் வெளியானதற்குப் பாராட்டுகள்!

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி .

      Delete
  2. தங்களின் அனுபவம் மற்றவர்களுக்கு வழிகாட்டும் ஐயா
    நன்றி
    வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . நான் பலரது அனுபவங்களை வழிகாட்டியாய்க் கொண்டுள்ளேன் .

      Delete
  3. ஒவ்வொரு பதிலும் மிகவும் அருமை...

    ReplyDelete
    Replies
    1. பாராட்டிப் பின்னூட்டம் தந்தமைக்கு மிக்க நன்றி .

      Delete
  4. உங்களைப் பற்றி இன்னும் தெரிந்து கொள்ள முடிந்தது

    ReplyDelete
    Replies
    1. வருக , வணக்கம் . எனக்கு வெளிச்சம் தந்தமைக்குப் பேராசிரியர் க . பஞ்சாங்கம் அவர்களுக்குப் பெரிதும் நன்றி உடையேன் .உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .

      Delete