Thursday 22 March 2012

பாண்டி பஜார்




"என்ன காரணம்?  பாண்டி பஜார் எனச் சென்னைத் தியாகராயர் நகரின் அங்காடித் தெரு அழைக்கப்படுவதேன்?  இப்போது புதுச்சேரி எனப்படும் பாண்டிச்சேரியின் சுருக்கம் அல்லவா பாண்டிஅந்த முன்னாள் பிரெஞ்சு இந்தியப் பகுதிக்கும் சென்னைக்கும் ஒரு தொடர்பும் இல்லையே?" என்று யாரும் குழம்பவேண்டாம். 

பெரியாரின் தொடக்கக் காலத் தளபதிகளுள் முக்கியமானவர் தென் தமிழகத்தின் பட்டிவீரன்பட்டி என்னும் ஊரினரான W.P.A.சவுந்தரபாண்டியன். 1929 இல் செங்கற்பட்டில் நிகழ்ந்த மாநில முதல் சுயமரியாதை மாநாட்டுக்குத் தலைமை வகித்தவர். 

இவரது பெயரால் அமைக்கப்பட்ட சவுந்தரபாண்டியன் கடைத் தெரு சுருக்கமாய்ப் பாண்டியன் கடைத் தெரு ஆகிப் பின்பு பாண்டி பஜார் என மாறிற்று , தியாகராயர் நகர் தி.நகர் ஆனது போல. 

சென்னையின் அந்தப் பகுதி நீதிக் கட்சித் தலைவர் சிலரின் பெயர்களைத் தாங்கியுள்ளது : 

1 - கட்சி நிறுவுநர் சர். பிட்டி தியாகராயர் நினைவாய் ----  தியாகராயர் நகர்; 

2 . அவருக்குத் துணை நின்ற டி. மாதவன் நாயரின் பெயரால் ---- டாக்டர் நாயர் தெரு; 

3 . கட்சித் தூண் நடேசனைப் பெருமைப்படுத்துவது --- டாக்டர் நடேசன் தெரு; 

4 . கட்சி சார்பில் மாநில முதலமைச்சராய்ப் பதவி வகித்த பனகல் ராஜாவின் பெயர் கொண்டுள்ளது --- பனகல் பூங்கா.


கொசுறு -- சென்னைச் சைனா பஜாரும் இப்படித்தான்அங்கே சீனர் கடைகள் இருந்ததில்லை. 

சின்ன கடைத் தெரு என்பது Chinna bazaar என்று ஆங்கிலத்தில் சொல்லப்பட்டு நாளடைவில் எழுத்துப் பிழையால் China bazaar ஆகிவிட்டது.  

சின்ன கடைத் தெரு சீனக் கடைத் தெரு ஆனமை விநோதம் தானே !

1 comment:

  1. சென்னை கடைத்தெருக்களின் வரலாறை அறிந்து கொள்ள உதவிய இப்பதிவுக்கு மிக்க நன்றி!

    ReplyDelete