Wednesday 17 April 2013

எத்தனை இடையூறு!





இக் காலக் காதலர்கள் சந்திப்பதற்கும் பழகுவதற்கும் இடங்கள் ஏராளம், வசதிகளுக்கும் பஞ்சமில்லை; தடையோ மிகக் குறைவு. கொடுத்து வைத்தவர்கள்! ஆனால் பழங் காலத்தில் அப்படி இல்லை என்பது 122 ஆம் அக நானூற்றுப் பாடலால் தெரிகிறது.

இரவில் வந்து சந்திப்பான் தலைவன், திருட்டுத்தனமாய் (அதனால்தான் அதற்குக் களவு என்று பெயர்). இன்பச் சந்திப்பை எண்ணியெண்ணி எதிர்பார்த்து உறங்காமல் ஆவலுடன் காத்திருப்பாள் தலைவி. அது அவ்வளவு எளிதாய் இல்லை. தன் இக்கட்டை இப்படி வெளியிடுகிறாள்:

"இந்த ஊர், விழா எதுவும் இல்லாதபோதும் லேசில் தூங்காது; அது ஒருவாறு உறங்கிய பின்னும் அம்மா விழித்திருப்பாள் ; அவள் கண்ணை மூடினாள் என்று மகிழ முடியாது; ஊர் காவலர் சுற்றுவர், அவர்கள் அகன்றால், நாய்கள் குரைக்கும், அவை ஓய்ந்தால், மதி தோன்றி எங்கும் ஒளியைப் பரப்பும்; அது மறையுமாயின் ஆந்தைகள் அலறி அச்சத்தைத் தோற்றுவிக்கும்; அடுத்துச் சேவல்கள் கூவத் தொடங்கிவிடும். இவை எல்லாம் முடிந்துவிட்டாலோ, அவர் வரமாட்டார். எத்தனை இடர்ப்பாடு என் காதலுக்கு? 

பாவம் அவள்!
 
அந்தப் பாடல் இதோ...
 
இரும் பிழி மகாஅர் இவ் அழுங்கல் மூதூர்
விழவு இன்றுஆயினும் துஞ்சாது ஆகும்;

மல்லல் ஆவண மறுகு உடன் மடியின்,
வல் உரைக் கடுஞ் சொல் அன்னை துஞ்சாள்;

பிணி கோள் அருஞ் சிறை அன்னை துஞ்சின், 
துஞ்சாக் கண்ணர் காவலர் கடுகுவர்;

இலங்குவேல் இளையர் துஞ்சின், வை எயிற்று
வலம் சுரித் தோகை ஞாளி மகிழும்;

அர வாய் ஞமலி மகிழாது மடியின்,
பகல் உரு உறழ நிலவுக் கான்று விசும்பின் 
அகல்வாய் மண்டிலம் நின்று விரியும்மே;

திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின்,
இல் எலி வல்சி வல் வாய்க் கூகை
கழுது வழங்கு யாமத்து அழிதகக் குழறும்;

வளைக்கண் சேவல் வாளாது மடியின், 
மனைச் செறி கோழி மாண் குரல் இயம்பும்;

எல்லாம் மடிந்தகாலை, ஒரு நாள்
நில்லா நெஞ்சத்து அவர் வாரலரே;  


 

2 comments: