Sunday, 28 February 2016

கம்பன் கவிதை

நூல்களிலிருந்து – 4

'கம்பன் கவிதை' என்ற தலைப்புடைய நூலொன்று 1926-இல் வெளிவந்தது; கம்ப ராமாயணத்தைப் பற்றி வெவ்வேறு அறிஞர்கள் எழுதிய 17 கட்டுரைகள் கொண்ட அதில், முதலாவது, வ. வே. சுப்ரமணிய அய்யர் (வ.வே.சு. அய்யர்) இயற்றியது; அதிலொரு பகுதியைக் கீழே பகிர்கிறேன். தலைப்பு: கம்பராமாயண ரசனை.

"சீதையைத் தேடுவதற்காக இலங்கையில் ஒவ்வொரு வீடாக அனுமன் நுழைந்து சென்றான் என்று சொல்லிவரும்போது, 9-வது சருக்கத்தில், வால்மீகி, 'பிரகஸ்தன் வீட்டையும் மகாபார்சுவன் வீட்டையும் கும்பகர்ணன் அரண்மனையையும் இந்திரசித்தன் அரண்மனையையும் விபீஷணன் மந்திரத்தையும்' என்று வேறொரு வர்ணனையும் இல்லாமல் ஜாபிதாவாக அடுக்கிக்கொண்டு போகிறான். கம்பன், தன் வர்ணனைக்கு, வேறுபடுத்தி வைத்தலால் வரும் அழகைத் தந்து வைத்திருக்கிறான்.


 உதாரணமாகக் கும்பகர்ணனை அனுமன் கண்டான் என்னும்போது, அவன் ஆதிசேஷனைப் போலவும், பரந்த கடலைப் போலவும், உலகத்திலுள்ள இரவெல்லாம் ஒரே இடத்தில் செறிந்து நின்றது போலவும், தீவினை யெல்லாம் உடல்பெற்றுத் தோன்றியது போலவும் இருந்தான் என்றும் பிறவுமாக வர்ணிக்கிறான். விபீஷணனது அரண்மனையிற் பிரவேசித்ததும், அவன் தோற்றத்தினின்று அவனது தன்மையை அனுமன் ஊகித்துக் கிரகித்துக்கொண்டு, அரக்கர் நாட்டில் பகிரங்கமாக வசித்தல் அசாத்தியம் என்பது கண்டு, அவர்களைப் போன்றதோர் உடலை எடுத்துக்கொண்டு வசிக்கும் அறத்தைப் போலிருக்கிறான் என்று அவன் நினைத்தான் எனக் கவி கூறுகிறான். இந்திரசித்தனை அனுமன் கண்ணுற்றான் என்பதற்கு முன்னேயே,

  'இந்திரன் சிறையிருந்த வாயிலின்கடை எதிர்ந்தான்'

 என்று ஓர் கட்டியம் கூறிவிட்டு, அவனைக் கண்ணுற்றபோது, ஆச்சரியப்பட்டு,

   'வளையும் வாள்எயிற்று அரக்கனோ, கணிச்சியான் மகனோ,
   அளையில் வாளரி அனையவன் யாவனோ, அறியேன்
   இளைய வீரனும் ஏந்தலும் இருவரும் பலநாள்
   உளைய உள்ளபோர் இவனொடும் உளதுஎன உணர்ந்தான்'

என்றும்,

  'சிவனை, நான்முகத்து ஒருவனை, திருநெடு மாலாம்
   அவனை அல்லவர் நிகர்ப்பவர் என்பதும் அறிவோ?'

என்றும் நினைப்பதாகக் கூறுகிறான்.

  (அரக்கர் தலைவனாகிய ராவணன்தானோ, சிவனது மகனாகிய முருகனோ, குகையில் சிங்கம் தூங்குவதுபோல் தூங்கும் இவன் யாரோ, தெரியவில்லை, இலக்குவனும் இராமனும் பல நாள் தவிக்கும்படி போரிட வல்லவன் என்பதை உணர்ந்தான்; சிவன், பிரம்மா, திருமால் ஆகியோரைத் தவிர இன்னொருவர் இவனுக்கு நிகர் எனக் கூறுவது அறிவாகுமா?)

  இந்த மேற்கோள்களினின்று, பிறருடைய கதைகளை சுவீகரித்து அவற்றை முதனூலாசிரியன் போலவே சுதந்தரமாகவும் கம்பீரமாகவும் நடத்திக்கொண்டு போவதில் கம்பன், ஹோமரின் கதைகளை சுவீகரித்துக் கையாண்ட எஸ்கூலனுக்கும் ஸோபோகிளனுக்கும் ஓர் படி உயர்ந்தவன் எனவே அறிஞர் கண்டுகொள்வர்.

 ஊர்தேடு படலம் போன்ற கட்டங்களில் கவிக்கு நீண்ட உபதேச வர்ணனை மாலையை ஆக்க வேண்டியது அவசியமாக இருக்கிறது; ஆனால் இவற்றை வெறும் வர்ணனை மாத்திரம் நிரப்பின், படிப்போருக்கு சலித்துப்போம். இவற்றோடு பொருந்திய உணர்ச்சிகள் விரவி வருவதே ரசனைக்கு அழகு தரும். இவ்விரகசியம் மகா கவிகளுக்குத்தான் தெரியும்.

    -----------------------------------------------------

Saturday, 20 February 2016

உபாயம் நான்கு


  


ஆரியர்கள், காரியஞ்சாதிப்பதற்கான ஐந்து தந்திரங்களைக் கண்டறிந்து, பட்டியலிட்டு, அவற்றை விளக்குவதற்குப் பஞ்ச தந்திரக் கதைகளை  இயற்றியதோடு நில்லாமல் நான்கு உபாயங்களையும் அனுபவத்தில் தெரிந்துகொண்டார்கள். அவை வாழ்க்கையில் என்றும் பயன்படுபவை. 

      அவைசாம தான பேத தண்டம்.

1 - சாமம்  --  நேரடியாகவோ அதிகாரம் அல்லது செல்வாக்கு உடைய ஒருவரைத் துணைக் கொண்டோ எதிராளியுடன் பேச்சு நடத்தி உடன்பாடு எய்திப் பிரச்சனைக்குத் தீர்வு காணுதல். இதுவே சிறந்தது, பெரும்பாலும் கடைப்பிடிக்கப்படுவது, நீடித்த பயனை நல்க வல்லது, பக்க விளைவு இல்லாதது. 

2 - பேதம்  --  எதிராளிகள் ஒருவர்க்கு மேல் இருந்தால், அவர்களிடையே பேதம் (பிளவு) விளைவித்துப்  பலவீனப்படுத்தித் தனது பிடிக்குள் ஒரு  சாராரைக்  கொண்டுவந்து காரிய  சித்தி பெறும் வழி.

3 - தானம் --  இதில் பல வகை  உண்டு: அன்னதானம், சொர்ண தானம்,  கோதானம், பூதானம், கன்னிகாதானம் முதலியவை. 

  பக்தர்களின்  தானங்கள், 'தங்களுக்குப்  புண்ணியம் சேரும், அதன்  பலனாகப்  போகிற கதி  நல்லதாகும்' என்னும் நம்பிக்கையின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன.

   சாதாரண மக்கள் சொர்ணதானம் (பணம், பொருள், விலையில்லா மிக்சி  முதலானவை) மூலம்  பயனடைகிறார்கள். சில  சமயம் இது லஞ்சம் என்னும்  பெயர் பெறுகிறது. இன்று பெருவாரியாகப் புழக்கத்தில் உள்ள உபாயம் இதுவே எனில் மிகையாகாது. அரசு அலுவலகங்களில் வேலை முடிக்க இது உதவுகிறது; இன்னதுக்கு இன்ன ரேட் என்று நிர்ணயித்து அதிகாரத் தொனியில் கேட்டு வாங்கும் துணிச்சல் மிக்க அதிகாரிகளுக்குப் பஞ்சமில்லை. 

 பணமோ பதவியோ சலுகையோ தந்து எதிர்க்கட்சிக்காரரை ஆளுங்கட்சியானது  தன் வலையில் வீழ்த்துவது நம் நாட்டு அரசியலில் சகஜம். 

4 - தண்டம்  -- வன்செயல்அடி, உதை, கொலை முதலியவை இதிலடங்கும்.  மேற்சொன்ன வழிகள் உதவாதபோது இந்த உபாயம் நாடப்படுவது உண்டு; குழந்தைகளுக்கு எதிரான வன்செயல்கள், எழுத்தாளரை ஒடுக்குதல், அரசியல் கொலைகள் இதன்பாற்படும். 

        *************************

Thursday, 11 February 2016

அஞ்சறைப் பெட்டி




1   --  சிறுவர்களுக்கான தேவதைக் கதைகள் ஆங்கிலத்தில் பல உண்டு.   அவற்றுள் சிண்டரெல்லா  (Cinderella),  தூங்கும் அழகி (Sleeping Beauty) ஆகிய  இரண்டுக்கும்  மூலம்  பிரஞ்சு.

 ஷார்ல் பெரோ (Charles Perrault) என்னும் 17-ஆம் நூற்றாண்டு  எழுத்தாளர் இயற்றிய சாந்த்ரியோன் (Cendrillon), லாபேல்    புஆ  தொர்மான்  (La Belle au bois  dormant) ஆகியவை  அந்த மூலப்  படைப்புகள்.

2 --  கிரேக்க ஈசாப்பின்  கதைகள்தமிழ் உள்படபல்வேறு மொழிகளில்  பெயர்க்கப்பட்டு, பாரெங்கும் பரவியுள்ளன; காக்கையும்  நரியும் (பாட்டி வடை சுட்ட கதை), பொன்முட்டை  இட்ட வாத்துஆமையும்  முயலும்  முதலானவை   பிரசித்தம்.

   அந்த உரைநடைக்  கதைகளை லத்தீன் கவிஞர் ஃபேத்ருஸ் (Phaedrus) செய்யுள் வடிவில் மொழிபெயர்த்ததுடன்புதுக்கதைகளும் இயற்றி  சேர்த்தார். அவற்றுள்  ஒன்று, 'ஓநாயும் நாயும்';  இதன் மையக்கருத்தைத் தழுவிசுப்ரமணிய பாரதியார், 'ஓநாயும் வீட்டு நாயும்' என்னுந் தலைப்பில்  உரைநடையாய்த் தந்துள்ளார்; மூலத்தைக் குறிப்பிடாமையால்அவருடைய  சொந்தப்  படைப்பு என்று   தவறாக  நம்ப  இடமேற்பட்டுவிட்டது.

3 --- சேடிஸ்ம்  (sadism)  பிறரைத் துன்புறுத்தி, அவர்கள் படுந்துயரைக்  கண்டு பரவசமடையும்   கொடிய   மனப்பான்மை.

  18- ஆம் நூற்றாண்டில்  வாழ்ந்த மர்க்கீ தெ சாத் (Marquis de Sade) என்ற பிரபலமாகாத பிரஞ்சு எழுத்தாளர் அத்தகைய குரூர மனம் படைத்தவர். உடற்பசி தீரப் பெண்களைப்  பல விதமாய்  இம்சித்து இன்புற்றவர்அவரது  பெயரிலிருந்து பிறந்த பிரஞ்சு சொல் சதீஸ்ம்  (sadisme). அவரது கொடுமை அவரை சிறைக்கு அனுப்பிற்று.   மர்க்கீ என்பது  பிரஞ்சு  பிரபு   பட்டம்.

   அதற்கு  எதிர்சொல் மசொக்கிஸ்ம் (masochism). ஆஸ்ட்ரிய (Austria) நாட்டு (ஆஸ்த்ரெலியா அல்லமசோக் (Masoch) 19-ஆம் நூற்றாண்டுக்காரர்; இளமையில் சில புதினங்கள் இயற்றிய அவர்பின்பு மனக் கோளாறுக்கு ஆளாகிதம்மைக்  கொடுமைப்படுத்தும்படி பெண்களிடம் கோரிஅவர்கள்   இழைத்த  துன்பத்தில்  இன்பங் கண்டார்.

4 --- அரபி கடலில் உள்ள லட்சத்தீவுகள் இந்தியாவின் யூனியன் பிரதேசங்களுள் ஒன்றுபெயரைப்  பார்த்து, ' யப்பாலட்சம்  தீவுகளா?' என மலைக்காதீர்கள். பெயர்தான் அப்படிமொத்தம்  27 தான், அதிலும் 17 காலி.  

    பூர்விகப் பெயர் லக்கடீவ் (Laccadive); 1973-இல் லக்ஷத்வீப் (Lakshadweep)  எனப்  பெயர்  மாறியது.

5- ஒரு வயதுக்கு உட்பட்ட மற்றும் ஆரோக்கியமான குழந்தைகள் (பெரும்பாலும் பெண்) தூங்கும்போது இறந்துவிடுவதுண்டு; கட்டில் இறப்பு (cot death) எனப் பேச்சு வழக்கிலும் சிட்ஸ் (SIDS-Sudden Infant Death Syndrom) என  மருத்துவ மொழியிலும் அழைக்கப்படுகிற இந்தத் துயர நிகழ்வுக்குக்  காரணம்   தெரியாமையால், மருத்துவப்  புதிராகக் கருதப்படுகிறது.

     அப்படி ஒரு  பெண் குழந்தை ஏணையில் இயற்கை எய்தியமை எனக்குத்  தெரியும்.

   ///////////////////////////////////////


     

Friday, 5 February 2016

நூல்களிலிருந்து -- 3


   ஜவாஹர்லால்  நேரு, இந்திய சுதந்தரப் போராட்டத்தில் மிக முக்கிய பங்கேற்று, அரும் பெருந் தியாகங்கள் புரிந்த தலைவர்களுள் ஒருவர். கோடீஸ்வரரின் ஒரே மகனாய்ப் பிறந்த அவர்க்கு, உலக இன்பங்கள் அனைத்தையும் சலிக்கும் அளவுக்குத் துய்ப்பதற்கும் நகத்தில் அழுக்கு படாமல் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்குமான அரிய வாய்ப்பு கிட்டிற்று; ஆனால் அதைப் புறக்கணித்துவிட்டுப் போராட்டக்களத்தில் குதித்த பெருமகனார் அவர்.

 வாணாளின் கணிசமான பகுதியை சிறைகளில்  கழித்த அவர், அங்கேயே தம் வரலாற்றை எழுதினார்; 1934 ஜூன் -- 1935 பிப்ரவரி காலகட்டத்தில் உருவான அதன் முன்னுரையில், "என் வாழ்க்கையின் துன்பம் மிகுந்த காலத்திலே எழுதப்பட்டது"  என்று  அவர்  குறித்துள்ளார்.



   தமிழ் பெயர்ப்பு, "ஜவாஹர்லால் நேரு சுய சரிதை"  எனத் தலைப்பிடப்பட்டு 1957 இல் பிரசுரமாயிற்று;  620 பக்கமும் 68 அதிகாரமும் உடைய அதில் 25 ஆம் அதிகாரம் 1928 இல் நிகழ்ந்த சைமன் குழுவுக்கு எதிர்ப்பு பற்றி விவரிக்கிறது; ஒரு பகுதியைக் கீழே காணலாம். தலைப்பு:  தடியடி அனுபவம்

 போக்குவரத்துக்குத் தடையேற்படும் என்ற காரணத்தைக் காட்டி ஊர்வலங்களைத் தடை செய்தனர்;  இந்த வகையில் யாரும்  குறை  கூற இடம் வைத்துக்கொள்ளல் ஆகாது என்பதற்காகவே பதினாறு பேர் கொண்ட சிறு சிறு கூட்டங்களாகத் தனித்தனியே பிரிந்து போக்குவரத்து குறைவாக உள்ள தெருக்கள் வழியாய் ஊர்வலம் போக ஏற்பாடு செய்தோம்; சட்டப்படி பார்த்தால், இதுவும் ஆணையை மீறியதாகத்தான் ஆகும். கொடியுடன் பதினாறு பேர் சென்றாலும்  ஊர்வலந்தானே! 

  ஒரு தொகுதிக்கு நான் தலைமை தாங்கி நடத்திச் சென்றேன். நடுவிலே பெரிய இடைவெளிக்கு அப்பால், என் தோழர் கோவிந்த வல்லப பந்த் தலைமையில் அடுத்த கூட்டம் வந்துகொண்டிருந்தது. நாங்கள் சுமார் இருநூறு கஜ தூரம் சென்றுவிட்டோம்; தெருவில்  வேறு நடமாட்டம் இல்லை.

  திடீரென்று குதிரைகளின் காலடி ஓசை கேட்டது. திரும்பிப் பார்த்தோம்: இருபது முப்பது பேரடங்கிய குதிரைப் போலீஸ் படையொன்று எங்களை நசுக்க விரைவாக வந்துகொண்டிருந்தது. எங்களை நெருங்கி, அணிவகுப்பின் குறுக்கே பாய்ந்தது. குண்டாந்தடிகளால் தாக்கியது. தொண்டர்களில் சிலர் நடைப்பாதைப் பக்கமொதுங்கினர்; சிலர் கடைகளில் நுழைந்தனர். படை அவர்களைத் தொடர்ந்து  அடித்து  நொறுக்கிற்று. 

  குதிரைப்படை எங்களை நோக்கிப் பாய்ந்து வந்த பயங்கரக் காட்சியைக் கண்டதும் எனக்கும் தப்பி ஓடலாமா என்றுதான் முதலில் தோன்றியது; ஆனால் அந்த எண்ணம் உடனே மாறியது; அணிவகுப்பை விட்டு நகராமல் நின்றேன். என் பின்னால் இருந்த தொண்டர்கள் தடுத்துக்கொண்டதால், முதலடி என்மேல் விழவில்லை; ஆனால் திடீரென்று மற்றவர்கள் ஓடிப் போகவே, நான் மட்டும் நடுத்தெருவில் தன்னந்தனியனாய் இருக்கக் கண்டேன். சில கஜ தொலைவுக்கு அப்பால் காவலர்கள் தொண்டர்களைத் துரத்தியடித்துக்கொண்டிருந்தார்கள். இதுதான் சமயமென்று பாதையோரத்தில் ஒதுங்க நகர்ந்தேன்; ஆனால் அதே இடத்தில் நின்று யோசித்தேன். இடத்தை விட்டு நகருவது இழிவான செயல் என்ற முடிவுக்கு வந்தேன். இவ்வளவும் கண நேரத்தில் நடந்ததெனினும் என் மனத்தில் நிகழ்ந்த போராட்டமும் கோழையைப் போல் நடந்துகொள்ளக்கூடாது என்ற மான உணர்ச்சியால்  நான்  செய்த முடிவும்  நன்றாக நினைவில் நிற்கின்றன.

  கோழைத்தனத்துக்கும் தைரியத்துக்கும் அதிக இடைவெளி இல்லை.  நான் கோழையாய் நடந்துகொண்டிருக்கவும் கூடும். நான் முடிவு செய்ததும் சுற்றிப் பார்த்தேன். குதிரை  வீரனொருவன், தன் புதிய நீண்ட தடியை வீசிக்கொண்டு என்னை  நோக்கிப் பாய்ந்து வந்துகொண்டிருந்தான்; 'உன் வேலையை செய்' என்று அவனிடம் சொன்னேன். தலையையும் முகத்தையும் காப்பாற்றிக்கொள்ளும் இயல்புணர்ச்சியின் பேரில், முகத்தை வேறு புறம் திருப்பிக்கொண்டேன். முதுகில் பலமாய் இரண்டு அடி கொடுத்தான்; என் உடலெல்லாம் நடுங்கியது. நான் இன்னம் அதே இடத்தில் நின்றிருந்தது எனக்கு  வியப்பாய் இருந்தது.

   காவலர்கள் அடிப்பதை நிறுத்திவிட்டு, வழியை மறைத்துக்கொண்டார்கள். தொண்டர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தனர்; பலருக்கு மண்டை உடைந்தும் காயங்கள் ஏற்பட்டும் இரத்தம் பீறிட்டுக்கொண்டிருந்தது. பந்த்தும் அவருடைய கூட்டமும் எங்களுடன் சேர்ந்துகொண்டார்கள்; அவர்களும்  எங்களைப் போல் அடிபட்டிருந்தனர். எல்லாரும் காவலர்களுக்கு எதிரில் உட்கார்ந்துகொண்டோம்.

   இவ்வாறு இரண்டொரு மணி நேரம் உட்கார்ந்திருந்தோம். இருட்டத் தொடங்கிவிட்டது. ஒரு பக்கம் மேலதிகாரிகள் கூடிவிட்டனர்.  செய்தி பரவவே பொதுமக்கள் திரண்டு வந்து, மறுபக்கத்தில் பெருங்கூட்டமாய்க் கூடிவிட்டனர். கடைசியில்,  நாங்கள் திட்டமிட்டிருந்த தெருக்களின் வழியாக செல்வதற்கு அதிகாரிகள் இணங்கினர்; எங்களை அடித்துத் துன்புறுத்திய குதிரைப்படைக் காவலர்கள் முன்செல்ல, நாங்கள் ஊர்வலத்தை முடித்தோம்.

  இச்சிறு சம்பவம்  என் உள்ளத்தில் புதிய ஊக்கத்தைத் தோற்றுவித்தது என்பதற்காகவே இதை இவ்வளவு விரிவாய் எழுதினேன். தடியடியைத் தாங்கக்கூடிய சக்தி எனக்கு இருந்தது என்ற பெருமிதத்தில் வலியைக்கூட மறந்துவிட்டேன். அடிபட்டுக்கொண்டிருந்தபோது கூட  என் மனம்  பிறழாமல், என் உணர்ச்சிகளை ஆராய்ந்துகொண்டிருந்தமை வியக்கத்தக்கது.

          ++++++++++++++++++++++++++++++++++

(படம் உதவி - இணையம்)