காட்சி - 3 -- இடம்: வழக்குரைஞர் இல்லம்.
வியாபாரி, கீய்மேத், பாத்லேன்.
(கடைக்காரரை ஏமாற்றுவதற்குக் கணவரும் மனைவியும் தயார்)
வியாபாரி -- ஐயா, வழக்குரைஞர் ஐயா!
கீய்மேத் -- எது
சொல்வதாக இருந்தாலும், மெதுவாகப் பேசுங்கள்.
வியாபாரி -- கர்த்தர்
உங்களை ஆசீர்வதிக்கட்டும்.
கீய்மேத் -- இன்னம் மெல்ல.
வியாபாரி -- எங்கே அவர்?
கீய்மேத் -- அந்தோ, படுக்கையில்
கிடக்கிறார், பாவம், பதினொரு வாரமாய்.
வியாபாரி --- யார்?
கீய்மேத் -- மன்னியுங்கள், நான் உரத்துப்
பேசத் துணியவில்லை; அவர் பலவீனமாக இருக்கிறார்.
வியாபாரி -- யாரைப்
பற்றி சொல்கிறீர்கள்?
கீய்மேத் -- பிஏர்.
வியாபாரி -- என்னது?
செத்தமுன்னே வந்து துணி வாங்கவில்லையா?
கீய்மேத் -- யார், இவரா?
வியாபாரி -- ஒரு மணிகூட ஆகியிருக்காது; காக்க வைக்காமல்
பணத்தைக் கொடுங்கள்.
கீய்மேத் -- என்ன, கதையா விடுகிறீர்கள்?
வியாபாரி -- உங்களுக்கென்ன
கிறுக்கா? ஒன்பது பிரான், என் பணம். அவரை வரச்சொல்லுங்கள்.
கீய்மேத் -- அவரால் முடியாதே!
வியாபாரி -- வழக்குரைஞர்
பிஏர் பாத்லேன் வீடுதானே இது?
கீய்மேத் -- ஆமாம்,
மெல்லப் பேசுங்கள். அவர் தூங்கட்டும்.
வியாபாரி -- மெல்ல என்றால்,
கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது
போலவா?
அவர் ஆறு ஓன் கம்பளித் துணி இன்று வாங்கினார்.
கீய்மேத் --
இன்றைக்கா? பதினொரு வாரமாய்ப் படுத்துக் கிடக்கிறார்.
வியாபாரி -- இதோ பாருங்கள்; ஆறு ஓன் துணிக்குப்
பணங்கொடுங்கள்.
கீய்மேத் --- யாரிடங்
கொடுத்தீர்கள்?
வியாபாரி -- இவரிடந்தான்.
கீய்மேத் --- இவருக்கு
எதற்குக் கம்பளி? இவர் வெள்ளை மட்டுமே உடுத்துவார்.
வியாபாரி -- நான்
அவரிடம் பேச வேண்டும்.
பாத்லேன் -- கீய்மேத்,
கொஞ்சம் வொய்ன் கொடு,
என்னைத் தூக்கி விடு.
வியாபாரி -- அவர் குரல் கேட்கிறது.
கீய்மேத் -- ஆமாம்.
பாத்லேன் -- இங்கே வா, எதற்காக சன்னல்களைத்
திறந்தாய்? போர்த்துவிடு. இந்தக் கருப்பு மனிதர்களைப் போகச் சொல். தடதடா, மொற மொற. அவர்களை என்னிடம் அழைத்து வா, அழைத்து வா.
கீய்மேத் -- என்ன இது? ஏன் இப்படி அசைகிறீர்கள்?
பாத்லேன் -- உனக்குப் புரியாது, அதோ ஓரு
கருப்புப் பாதிரியார் பறக்கிறார். அவருக்கு ஒரு அங்கி கொடு. பூனை, பூனை! எவ்வளவு வேகமாக ஏறுகிறது!
கீய்மேத் --- என்னென்னவோ
உளறுகிறீர்கள்.
பாத்லேன் -- இந்த
மருத்துவர் என்னைக் கொல்லுகிறார், கஷாயத்தைக் குடிக்கச் செய்து.
கீய்மேத் - ஐயா, வந்து பாருங்கள், எவ்வளவு கஷ்டப்படுகிறார் என்று.
வியாபாரி -
உண்மையாகவே நோயாளியா? இப்போதுதானே
கடைத்தெருவிலிருந்து
வந்தார்!
கீய்மேத் ---
கடைத்தெருவிலிருந்தா?
வியாபாரி -- பின்னே? ஐயா, பிஏர், என் துணிக்குப் பணங்
கொடுங்கள்.
பாத்லேன் -- வாருங்கள்.
இரண்டு மாத்திரை, கல்லைவிடக் கெட்டி. தின்றேன்; மீண்டும் எனீமா
எடுக்க வேண்டுமா?
வியாபாரி --- எனக்கென்ன
தெரியும்? என் பிரச்சினையா அது?
எனக்கு வேண்டியது ஒன்பது
பிரான் அல்லது மூன்று வெள்ளி.
பாத்லேன் -- மூன்று கருப்பு உருண்டைகளையும் மாத்திரை என்றா
சொல்கிறீர்கள்? பல்லையே ஆட்டங்காணச்
செய்துவிட்டன. கர்த்தரே! இனிமேல் அதைத் தராதீர்கள்.
என்ன குமட்டல்! அதைவிடக் கசப்பு வேறில்லை.
வியாபாரி -- என்னுடைய
ஒன்பது பிரான் கொடுக்கவில்லை.
பாத்லேன் --- எவ்வளவு
கஷ்டம் கொடுக்கிறார்! தூக்கில் போட வேண்டும்!
வியாபாரி --- பணம்
அல்லது துணி.
பாத்லேன் --- சிறுநீரைப்
பாருங்கள்; அது சொல்லவில்லையா, நான் செத்துக்கொண்டு
இருக்கிறேன் என்று?
கீய்மேத் --- போங்கள்
ஐயா! அவரைச் சங்கடப்படுத்தாதீர்கள்.
வியாபாரி --- ஆறு ஓன்!
அதை நான் இழப்பதா? சொல்லுங்கள், மனசாட்சிப்படி.
கீய்மேத் --- ஐயோ! இவ்வளவு
தொல்லைப்படுத்துவதா? இந்த அளவு கல்மனமா? நீங்கள் டாக்டர் என்று அவர் நினைத்துக்கொண்டிருப்பதைத் தெளிவாகப் பார்க்கிறீர்கள். பதினொரு வாரம், தொடர்ச்சியாய்,
படுக்கையில்!
வியாபாரி -- தெய்வமே!
எப்படி இந்த நோய் வந்தது என்பது புரியவில்லை. இன்றைக்கு வந்து துணி வாங்கினாரே!
கீய்மேத் --- ஐயோ, மாதாவே, உங்களுக்கு
ஞாபகம் சரியில்லை. என்னைக் கேட்டால் நீங்கள் போய் ஓய்வெடுங்கள் என்பேன்.
உங்களை இங்கே பார்த்து நிறைய பேர் வதந்தி
பரப்பக்கூடும். தயவு செய்து வெளியே போங்கள். மருத்துவர் வருகிற நேரம்.
வியாபாரி --- யார் எதைப்
பரப்பினாலும் எனக்குக் கவலையில்லை;
ஏனென்றால் என் மனம்
தூய்மையானது. சரி, வாத்துக்கறி அடுப்பில் இருக்கிறதா?
கீய்மேத் -- ஆகா! என்ன
அருமையான கேள்வி! நோயாளி உணவா அது?
வீட்டுக்குப் போய்த் தின்னுங்கள், வாத்து!
(கடைக்காரர் போகிறார்.
அவருக்கு ஒரே குழப்பம்: துணி வாங்கியவர் இவர்தானா அல்லது வேறு ஆளா?)
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\
(படம் உதவி - இணையம்)
வல்லவனுக்கு வல்லவன்-2 என்ற நாடகக் காட்சிகள் நல்லதொரு நகைச்சுவையுடன் நகர்ந்து முடிந்துள்ளது. பாராட்டுகள்.
ReplyDeleteஇந்த நாடகம் மேலும் தொடரும் என்ற நம்பிக்கையுடன் + ஆவலுடன் .....
உங்கள் பாராட்டுரைக்கு மிக்க நன்றி .
Deleteஉனக்கும் பெப்பே என்னும் கதை நினைவுக்கு வந்தது
ReplyDeleteஉங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி . அந்தப் பழமொழி இந் நாடகம் பயின்ற புதுச்சேரிவாசிகளால் உருவாக்கப்பட்டதுதான் .
Deleteஅருமை...
ReplyDeleteஉங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி .
Deleteசாமர்த்தியசாலி தான். ரசிக்க வைக்கும் நாடகம். பகிர்ந்தமைக்கு நன்றி.
ReplyDeleteபாராட்டியமைக்கு மிகுந்த நன்றி .
Delete