Wednesday 22 March 2017

சிறுமி ரோக்கு (முடிவு)





கடிதம் முடிந்தது, பொழுதும் விடிந்தது. கீழே இறங்கி சிவப்புப் பெட்டியை நோக்கி விரைந்து சென்று,மடலை செலுத்தியபின், திரும்பி வந்து கோபுரத்தில் ஏறி, சாவோலையை எடுத்து செல்லப்போகிற அஞ்சலரை எதிர்பார்த்திருந்தார். இப்போது எவ்வளவு நிம்மதி! விடுதலை பெற்றுவிட்ட உணர்வு! தொல்லை நீங்கியதென்ற களிப்பு!

  சில்லிட்ட குளிர் காற்று முகத்தில் பட்டது; வாயைத் திறந்து அதை ஆர்வத்துடன் விழுங்கினார். கீழ்வானம் சிவந்திருந்தது: செக்கச் செவேல் என்று, பனிக் காலத்து சிவப்பு; தரையை மூடியிருந்த பனியில் சூரியனின் இளங் கதிர்கள் பட்டு அந்தத் தரை முழுதும் மின்னியது, கண்ணாடித் துண்டுகள் சிதறிக்கிடந்தாற்போலே.

 எதிரில் விரிந்திருந்த இயற்கைக் காட்சியை நோக்கினார்: இடப்புறம் புல்வெளிகள், வலப்பக்கம் உணவு தயாரிப்பதற்கு மூட்டிய அடுப்பிலிருந்து எழும் புகையை வெளியிடத் தொடங்கிய கூரைகளைக் கொண்ட கிராமம். கீழே ஓடிக்கொண்டிருந்தது ஆறு; அதனருகே சில பாறைகள்; அவற்றில் மோதித்தான் இறக்கப்போகிறார். அந்த அழகிய குளிர்ந்த வைகறையில், முழு வலிமையையும் நிறைந்த உற்சாகத்தையும் மீண்டும் புதிதாய்ப் பிறந்தது போன்ற உணர்வையும் அடைந்தார். ஒளி வெள்ளம் அவரைக் குளிப்பாட்டிற்று, சுற்றி சூழ்ந்தது, புது நம்பிக்கையை அவருக்குள் செலுத்தியது. ஆயிரம் நினைவுகள் ஆக்ரமித்தன. இதே போன்ற காலைவேளைகள், காலடியில் ஓசையிட்ட உறுதியான தரைமீது விரைவான நடை, காட்டு வாத்துகள் உறங்கும் குளங்களின் கரையில் உற்சாக வேட்டைகள், யாவும் நினைவுக்கு வந்தன. அவருக்குப் பிடித்த எல்லா நல்ல விஷயங்களும் வாழ்க்கையின் இன்பங்களும் மனத்தில் புகுந்து, புதிய ஆசைகளை ஊட்டி, அவரது சுறுசுறுப்பான, உரமேறிய உடம்பின் ஆற்றல் மிக்க எல்லாத் தேவைகளையும் விழித்தெழ செய்தன.

 "சாக வேண்டுமா? எதற்காக? ஒரு நிழலுக்கு அஞ்சியா என்னை மாய்த்துக்கொள்ளப் போகிறேன்? ஒன்றுமில்லாததற்குப் பயமா? நேற்றிரவு அவளைப் பார்க்கவில்லையே! ஏன்?  வேலை இருந்ததால் மூளை அதில் ஈடுபட்டிருந்தது. இனிமேல் அவள் வராமல்கூட இருக்கலாம் அல்லவா? ஒரு பொழுதுபோக்கு, ஓர் இடப் பெயர்ச்சி, ஒரு பயணம் போதுமே எல்லாவற்றையும் மறக்க! ஏன் இறக்க வேண்டும்?  இளமையும் செல்வமும் நீங்கிவிடவில்லையே!"

 அதோ மெதேரீக்! வெலவெலப்பு உடல் முழுதும் பரவ, அவர் இறங்கித் தபால் பெட்டியை அடைந்தார்.

"காலை வணக்கம், மெதேரீக்!

--காலை வணக்கம், மேயர் ஐயா!

 --நான் ஒரு கடிதத்தைப் பெட்டியில் போட்டேன். அது இப்போது தேவைப்படுகிறது. உன்னிடம் கேட்டு வாங்க வந்திருக்கிறேன்.
 --அதற்கென்ன, ஐயா, தருகிறேன்."

 நிமிர்ந்து மேயரின் முகத்தைப் பார்த்த மெதேரீக் வியப்புற்றார்: கலைந்த தலை, சிவந்த கன்னம், கரு வளையமிட்ட கண்கள், மருண்ட பார்வை. இரவு தூங்கவில்லை என்பது வெட்ட வெளிச்சம்.

 "உடம்பு சரியில்லையா, ஐயா?

 -- இல்லையில்லை, ஒன்றுமில்லை; கடிதத்தை வாங்க.. கட்டிலில் இருந்து.. வந்தேன். தூங்கிக்கொண்டு இருந்தேனா? அதுதான்"

 முன்னாள் பட்டாளத்தாரின் மூளையில் லேசான சந்தேகம் மின்னிற்று.
ஒருவேளை அதில், ஏதாவது அரசியல் ரகசியம் இருக்குமோ?

 "யாருக்கு எழுதியது?

--புய்த்துவேனுக்கு; காவல்துறை மேலதிகாரி புய்த்துவேன், என் நண்பர்; உனக்குத் தெரியுமே!"

 அஞ்சல்காரர் தேடி எடுத்து, இப்படியும் அப்படியும் திருப்பிப் பார்த்தார். கொடுத்துப் பெருந்தவறு புரிவதா, கொடுக்காமல் மேயரின் எதிரி ஆவதா என்று தர்ம சங்கடம்.

 அவரது தயக்கத்தைக் கண்ட ரெனார்தே தட்டிப் பறிக்க முயன்றார்; இந்தத் திடீர் செயல், முக்கிய மர்மம் கடிதத்தில் இருக்கிறது என்பதை அஞ்சலர் உறுதியாய்த் தெரிந்துகொள்ளவும் 'என்ன ஆனாலுஞ் சரி, கடமையை செய்வது' என்று அவர் முடிவு எடுக்கவும் உதவிற்று; கடிதத்தைப் பைக்குள் போட்டு மூடிவிட்டு, "முடியாது, மேயரையா, காவல் துறைக்கு அது போவதால் தரமாட்டேன்" என்றார்.

 மேயரின் இதயத்தைப் பெருங்கலக்கம் இறுக்கிற்று. அவர் தாழ்ந்த குரலில் கூறினார்:

 "என்ன இப்படி சொல்கிறாய்? என்னை உனக்கு நன்றாகத் தெரியும்; என் கையெழுத்தைக்கூட உன்னால் அடையாளங் காண முடியும். அந்தக் கடிதம் எனக்குத் தேவைப்படுகிறது, மெதேரீக்.

 - மாட்டேன், ஐயா.

 -- மெதேரீக்! உன்னை நான் ஏமாற்றக்கூடியவன் அல்ல என்பது தெரியாதா? அது எனக்கு வேண்டும் என்று சொல்கிறேனே!.

 -- மன்னியுங்கள், ஐயா, என்னால் முடியாது.

 - ஜாக்கிரதை; நான் தமாஷ் பேர்வழியல்ல. உன்னைத் தொலைதூரத்துக்கு மாற்றல் செய்ய என்னால் முடியும், அதுவும் உடனடியாக. மேயர் என்ற முறையில் இப்போது உத்தரவிடுகிறேன். கொடுத்துவிடு.

 -- மாட்டேன் ஐயா, நான் கொடுக்கக் கூடாது".

 நிதானம் இழந்த மேயர் அவரைப் பிடித்துப் பையைப் பிடுங்கப் பார்த்தார்; ஆனால், அவரோ, சமாளித்துக்கொண்டு, கொஞ்சம் பின்வாங்கி, தம் பருத்த தடியை ஓங்கிக்கொண்டு, ஆனால் ஆத்திரப்படாமல், சொன்னார்: "என்னைத் தொடாதீர்கள் மேயரையா; அடித்தே விடுவேன். என் கடமையைத்தானே செய்கிறேன்? "

 மோசம்போனேன் என்றெண்ணிய ரெனார்தே, சட்டென்று குணம் மாறி, மெல்லிய குரலில், அழாக் குறையாய்க் கெஞ்சினார். "சரி சரி, நண்பரே, அதைத் தந்துவிட்டால், நான் சன்மானம் கொடுப்பேன்;  நூறு பிரான் தருவேன், தெரிகிறதா? நூறு பிரான்!" என்று சொன்னதைக் காதில் வாங்காமல் மெதேரீக் திரும்பி நடக்கலானார். ரெனார்தெ பின்தொடர்ந்தார். "ஆயிரம் வாங்கிக்கொள், ஆயிரம்!"

 அவர் பதில் சொல்லாமல் விரைந்தார். மேயர் தளரவில்லை. "ராஜபோகம் கிடைக்கும்; எது கேட்டாலும் தருவேன். ஐம்பதாயிரம்?..  ஒரு கடிதத்துக்காக... யோசித்துப்பார்.. போதாதா? சரி, ஒரு லட்சம்! புரிகிறதா? ஒரு லட்சம் பிரான்!"

 அஞ்சல்காரர் திரும்பிப் பார்த்தார்; முகத்தில் கடுமை, கண்களில் முறைப்பு: "நிறுத்துங்கள் இந்தப் பேச்சை. இல்லாவிட்டால் நீங்கள் இப்போது சொன்னதை யெல்லாம் நீதித்துறைக்குக் கொண்டுபோவேன்!" என்று அவர் சொன்னதும் ரெனார்தே நின்றுவிட்டார். எல்லாம் முடிந்தது; இனி செய்வதற்கு எதுவுமில்லை. வீட்டுக்கு விரைந்தார், வேட்டைக்குத் தப்பியோடுகிற விலங்கு போலே.

 அவரது நெடிய உருவம் கோபுர உச்சியில் தோன்றிற்று. கொடிமரத்தைப் பிடித்து ஆவேசத்துடன் அசைத்தார்; ஒடிக்க முடியவில்லை; எனவே தண்ணீரில் தலை குப்புறப் பாயும் நீச்சல்வீரரைப் போல் குதித்தார்.

 தொழிலாளர்கள் ஓடிச் சென்று பார்த்தபோது பாறையில் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் உடல் கிடக்கக் கண்டார்கள். பாறையை சுற்றி ஓடிய ஆற்றின் தெளிந்த நீரில், மூளைப் பகுதிகளும் ரத்தமும் கலந்து ரோசு நிற ரிப்பன் போல நீண்டு சென்றன.

=====================


(மாப்பசானின் சிறுகதைகள் என்னுந் தலைப்புடன் 2004 இல் வெளிவந்த என் நூலில் உள்ள கதையொன்றன் சுருக்கம்)

 (படம் உதவி - இணையம்)

8 comments:

  1. //"சாக வேண்டுமா? எதற்காக? ஒரு நிழலுக்கு அஞ்சியா என்னை மாய்த்துக்கொள்ளப் போகிறேன்? ஒன்றுமில்லாததற்குப் பயமா? நேற்றிரவு அவளைப் பார்க்கவில்லையே! ஏன்? வேலை இருந்ததால் மூளை அதில் ஈடுபட்டிருந்தது. இனிமேல் அவள் வராமல்கூட இருக்கலாம் அல்லவா? ஒரு பொழுதுபோக்கு, ஓர் இடப் பெயர்ச்சி, ஒரு பயணம் போதுமே எல்லாவற்றையும் மறக்க! ஏன் இறக்க வேண்டும்? இளமையும் செல்வமும் நீங்கிவிடவில்லையே!"//

    இதை.... இதை.... இதைத்தான் நான் மிகவும் எதிர்பார்த்தேன். அவர் தற்கொலை செய்து கொள்ள மாட்டார் என்றே நான் எதிர்பார்த்தேன்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. பின்வரப்போவதை முன்கூட்டியே ஊகிக்க உங்களால் முடிகிறது ; உங்கள் நுண்ணறிவைப் புகழ்கிறேன் .

      Delete
  2. எந்த மிரட்டலுக்கும் அஞ்சாத, எந்த சபலத்திற்கும் மசிந்துவிடாத, தன் கடமையிலேயே கடைசிவரை குறியாக இருந்து நியாயமாக நடந்துகொண்டுள்ள அஞ்சல்காரர் மெதேரீக் கதாபாத்திரம் வியக்க வைக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. கடமை வீரர்கள் கொஞ்ச எண்ணிக்கையிலாவது இருக்கத்தான் செய்கிறார்கள் . உங்கள் பின்னூட்டத்திற்கு மிகுந்த நன்றி .

      Delete
  3. ’பெண்ணாசை’ என்று ஒன்று மனதில் ஏற்பட்டு விடும்போது, ஒரு சில நிமிட சபலங்களால், ஒருவன் உணர்ச்சிவசப்பட்டு விடுவதால், அவனுடைய பணக்காரத்தனம், சமூக அந்தஸ்து, கெளரவம் அனைத்தும் ஒரு நொடியில் அடிபட்டு, சமூகத்தில் பல்வேறு அவமானங்களை சந்திக்கவும் துணிவு இல்லாமல், கடைசியில் தானே தன் உயிரை மாய்த்துக்கொள்ளும் வரை அவனைக் கொண்டுபோய் விட்டு விடுகிறதே! நினைத்தாலே மிகவும் வருத்தமாகத்தான் உள்ளது.

    இந்த நிகழ்வு நம் அனைவருக்குமே ஒரு நல்ல பாடமாகும்.

    பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்து மிகமிகச் சரியானது .பெண்ணாசையால் அழிந்தவர் பலர் .

      Delete
  4. நாமே எழுதியது என்றாலும், பெட்டிக்குள் போட்ட பிறகு அதை நாம் திரும்ப வாங்க முடியாது என்பது இக்கதை சொல்லும் உண்மை. பணத்துக்கு மசியாமல், கடமை வீரராகத் திகழும் அஞ்சல் காரர் பாராட்டப்பட வேண்டியவர். நிமிடத்துக்கு நிமிடம் மனம் மாறக்கூடியது; சட்டத்தினால் அவர் தண்டிக்கப்படவில்லையென்றாலும், தார்மீக ரீதியில் அவருக்குத் தண்டனை கிடைத்தாக வேண்டும்.மகளை இழந்து தவித்த தாய்க்கு நீதி கிடைத்துவிட்டது. அருமையான கதை. மொழியாக்கம் செய்து பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நம் நாட்டிலும் பெட்டியுள் போட்ட மடலைத் திரும்பப் பெற இயலாது .கண நேர மனத் தடுமாற்றமானாலும் விளைவு பயங்கரம் .பாராட்டிக் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி .

      Delete