Wednesday 1 May 2019

நூல்களிலிருந்து – 22

கவிஞர் ஞானக்கூத்தன்

(சென்ற ஆண்டு காலமான கவிஞர் ஞானக்கூத்தன், “கவிதைகளோடு ஒரு சம்வாதம்என்ற தலைப்பில் 2004-இல் வெளியிட்ட நூலிலிருந்து ஒரு பகுதி)

  இலக்கியத் திருட்டு என்று சொல்லப்படுகிற விஷயம் தமிழில் 20-ஆம் நூற்றாண்டில்தான் தலையெடுத்தது.

  பத்திரிகைகள் தங்களுக்கு வேண்டிய படைப்புகளை முதலில் விஷயதானம்என்றே குறிப்பிட்டன; அதாவது இந்த விஷயங்கள் தானமாகக் கொடுக்கப்படுவதால்தனம்பெறத் தகுதியற்றவை என்று பொருள்; ஆனால் விஷயம் தானத்தன்மை போய்சன்மானம்பெறத் தகுதியான பொருளான போது பிரச்னை தொடங்கிவிட்டது. சன்மானம் பெறத் தகுதி உடைய ஒருவர், உரிமை உடையவராக இருக்கும் நிலையில் அவரை அத்தகுதியிடத்திலிருந்து நீக்கித் தனதாக்கிக் கொண்டு தொகையைத் தான் பெற வேறொருவர் முயல்வதால் முன்னவர் பாதிக்கப்படுகிறார். அவர் பண இழப்புக்கு ஆளாகிறார்; அவருக்குச் சொந்தமான பொருளை இன்னொருவர் தன்னதாக விற்றுவிடுகிறார், பலனடைகிறார்.

  முற்காலத்தில் அப்படியில்லை; ஒரு நூலில் ஆசிரியன் இயற்றாத பகுதிகளை வேறொருவர் இயற்றி முதல் ஆசிரியன் பெயரிலேயே வழங்கும்படி செய்துவிடுவார். அவை இடைச்செருகல் என்று சொல்லப்பட்டது. வெள்ளியம்பலக் கவிராயர் என்பவர் பல செய்யுள்கள் இயற்றிக் கம்பராமாயணத்தில் நுழைத்துவிட்டார் என்று சொல்லப்படுவதுண்டு.

  மூல ஆசிரியனின் அழகுணர்ச்சி, அவனது நூலின் கட்டுக்கோப்பு இவற்றை அறியாமல் அவனது நடையைப் பின்பற்றி இச்செய்யுள்கள் எழுதப்பட்டுவிடுகின்றன. ஒட்டக்கூத்தர் ஒரு ராமாயணம் எழுதும் திறமை உடையவர்தான்; ஆனால் ராமாயணத்தில் பிற்பகுதியான உத்தர காண்டத்தையே அவர் விரும்பி எழுதியிருக்கிறார். கம்பனின் ராமாயணத்துக்குள் நுழையவில்லை. கூத்தரின் உத்தர காண்டம் சிறப்புடையது: அது ஒரு போட்டிக் காவியமல்ல; சொல்லப்போனால் கம்பரைக் காட்டிலும் விநோதமானவர் கூத்தர்.

  சங்கப் பாட்டொன்றில் ஒரு நாயகி சொல்கிறாள்:

  தண்ணீர்க்குடத்தை அமிழ்த்தினால் விலகும் பாசி, குடத்தை எடுத்ததும் விலகிய இடத்தை மீண்டும் பிடித்துக் கொள்வது போல இந்தப் பசலை காதலன் என்னைத் தீண்டினால் விலகி, அகன்றதும் மீண்டும் பிடித்துக் கொள்கிறது.

இராமகிருஷ்ண பரமஹம்சர்

   இந்த உவமைச் செய்தியை இராமகிருஷ்ண பரமஹம்சர் இறைவன் தொடர்பாகக் கூறியிருக்கிறார் என்பதை இந்தி எழுத்தாளர் நிர்மல் வர்மாவின் ஒரு கட்டுரையிலிருந்து அறிகிறோம். பரமஹம்சர் சங்கப் பாட்டை அறிந்தவரல்ல; ஆனால் ஒரு அசாதாரணமான அனுபவம் இரண்டிடத்திலும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. மேதாவிகளின் புத்தி ஒற்றுமையானது (ஸம்வாதின்யா மேதாவி நாம் புத்யா) என்றொரு சமஸ்கிருத கவிதையியல் அறிஞர் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு சொன்னார். பார்க்கப் போனால் மேதாவிகளின் புத்தி ஒற்றுமையாக இருக்கிறது என்பதைப் போலவே அவர்களைக் கவரும் விஷயமும் ஒற்றுமைப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம்.

&&&
(படங்கள் உதவி - இணையம்)

8 comments:

  1. ஒரே விஷயம் இருவருக்கும் வரு என் அனுபவத்தில் என்மனைவி நான் நினைப்பதைக் கூறி விடுவாள் ஒரு வேளை என்னை அறிந்தவரென்பதால் இருக்கு ராமகிருஷ்ணருக்கு தோன்றியது may be famous people think alike

    ReplyDelete
    Replies
    1. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .சொந்த அனுபவம் வியப்பாக இருக்கிறது .

      Delete
  2. அறியாச் செய்தி
    நன்றி ஐயா

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்கநன்றி .

      Delete
  3. வியப்பு தரும் தகவல்...

    அருமை ஐயா...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி .

      Delete
  4. இருவருக்கும் ஒரே உவமை தோன்றுவது வியப்பான செய்தி தான்!

    ReplyDelete
  5. பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி.

    ReplyDelete