Saturday, 30 June 2012

நண்பர்கள்




திருவள்ளுவர் நட்புப் பற்றித் தொடர்ச்சியாக 50 குறள் இயற்றியதுடன் வேறு சில அதிகாரங்களிலும் 11 பாக்களில் அது குறித்துக் கூறுகிறார். ஆராய்ந்துதான் நட்புக் கொள்ளவேண்டும் என்பது அவரது முக்கிய அறிவுரை.

அது பண்டைக் காலத்தில் எல்லார்க்கும் பெரும்பாலும் பொருந்தியிருக்கும். போக்கு வரத்து வசதியும் தகவல் தொடர்பும் இல்லாத அக் காலத்தில் மக்கள் தம் எல்லாத் தேவைகளையும் நிரப்பிக்கொண்டு ஒரு சிறு பிரதேசத்துக்குள்ளேயே வாழ்ந்திருப்பார்கள். ஆதலால் நட்பாராய இயன்றிருக்கும். நம் காலத்திலுங்கூட கிராமங்களில் நிலைத்து வாழும் உழவர் பெருமக்களுக்குஅந்த வாய்ப்பு கிட்டுகிறது. ஆனால் நகர வாழ்க்கையில் யாருடன் நட்பு பாராட்டலாம் யாரைத் தவிர்க்கவேண்டும் என்றெல்லாம் ஆராய்ந்துகொண்டிருக்க முடிவதில்லை. நட்பு தானாகப் பிறக்கிறது, வளர்கிறது, மாய்கிறது.

"ஐந்து வயதினிலே அறியாப் பருவத்திலேபள்ளியில் உருவாகும் நட்பு நீடித்திருக்கும் என்று சொல்வதற்கில்லை. பள்ளி மாறினால், ஏன் வகுப்பு மாறினால்கூட,பழைய நட்பு போய்ப் புது நட்பு தோன்றலாம். கல்லூரி நண்பர்கள் யார்? பள்ளி நண்பர்கள் அல்லவே! கல்லூரி நட்பாவது நிரந்தரமா? அன்று, அன்று.

கல்வி முடிந்த பின்பு அலுவலகத்தில் சக பணியாளர் சிலருடன் நெருக்கம் உண்டாகிறது. விளையாட்டுக் களங்கள், பொழுது போக்குக் கழகங்கள், நற்பணி மன்றங்கள், தொழிற்சாலைகள் இன்ன பிறவும் நட்பு முகிழ்க்கும் கழனிகள்.

பொதுவாக நட்புக்கு இன்றியமையாதவை புணர்ச்சியும் பழகுதலும். அடிக்கடி சந்தித்து அளவளாவிக் கூடிச் செயல்படும்வரை நட்பு தொடரும், வளரும். இன்றேல் சிறிது சிறிதாய்க் குன்றி இல்லாகும். முழு மதி தேய்வதை உவமை காட்டுகிறார் வள்ளுவர். "அவுட் ஆஃப் சைட் அவுட் ஆஃப் மைண்ட்என்று ஆங்கிலத்தில் சொல்வர். "பார்வைக்கு அப்பால் மனத்துக்கு அப்பால்என்பது பொருள். இதே கருத்தைப் பிரஞ்சுப் பழமொழி கண்களுக்குத் தொலைவில், இதயத்துக்குத் தொலைவில்எனக் கூறுகிறது. ஆனால் இதற்கு மாறாக மொழிகிறாள் குறுந்தொகைத் தலைவி தன் காதலனைப் பற்றி:


"நெடுஞ்சேண் நாட்டார் ஆயினும்
நெஞ்சிற்கு அணியர்... (பா 228) 

அவர் நெடுந் தொலை நாட்டில் வாழினும் என் மனத்திற்கு அருகில் உள்ளார்என்பது அர்த்தம். 

கற்பனைத் தலைவி தானே என்று சிலர் நினைக்கலாம். ஆனால் மெய்யாகவே அப்படி வாழ இயலும் என்பதைப் பிசிராந்தையாரும் கோப்பெருஞ்சோழனும் உறுதிப்படுத்தியிருக்கின்றனர். இருவரும் வெவ்வேறு நாடுகளில் உறைந்தாலும் நெஞ்சிற்கு அணியராகவே வாழ்ந்திருக்கின்றனர். உணர்ச்சி மட்டுமே அவர்களைப் பிணைத்திருக்கிறது. அத்தகைய அரிய நட்பைப் பற்றித்தான் திருக்குறள் 

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாங் கிழமை தரும் 

என்கிறது.


என்னதான் அடிக்கடி சேர்ந்து பழகினாலும் சிலர் நம் நட்பைத் துறக்கின்றனர். காரணம் தெரியாமலே போகக்கூடும்.தக்க காரணத்துடன் பிரிவோர்கூட சிறிது காலம் சென்று மீண்டும் கூடினாலும் பழைய நெருக்கம் மீளாது என்பதை 

நீக்கமற இருவர் நீங்கிப் புணர்ந்தாலும்
நோக்கின் அவர்பெருமை நொய்தாகும்  

என்ற நன்னெறிப் பாடல் தெரிவிக்கிறது. 

காலப் போக்கில் நண்பன் பகைவன் ஆவதும் எதிரி தோழன் ஆவதும் உண்டு.ஆதலால் யாருடனும் அளவு மீறிப் பழகி நம் பலவீனங்களை வெளிப்படுத்தாமை நன்று. இவன் எதிரி ஆகக்கூடும் என்ற எச்சரிக்கை உணர்வு நம்மிடம் நிலை பெற்றிருப்பது நமக்குப் பாதுகாப்பு. அதேபோல இன்றைய வேண்டாதவன் நாளைய தோழனாகலாம் என்னும் நினைப்புடன் எல்லை கடந்து பகைமை பாராட்டாமல் ஒழுக வேண்டும். பகை நட்பாங் காலம் வரும்என்கிறார் திருவள்ளுவர். 

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பனும் இல்லை என்னும் சந்தர்ப்பவாதிகளின் கொள்கை பொதுமக்களுக்கு ஒத்துவராது.

*******************************************************************

Wednesday, 27 June 2012

தலைவலியோடு திருகுவலியும் - சிறுகதை




மாறனுக்குப் புது இடத்தில் படுத்தால் தூக்கம் வரவே வராது. ஆதலால் உறவினர் வீடு, விடுதி முதலியவற்றில் இரவு தங்குவதைப் பெரும்பாலும் தவிர்த்துவிடுவான். என்றாலும் சிலசமயம் முடியாமற் போய்விடும். 

அப்படித்தான் ஒரு நாள் வெளியூர் நண்பனின் இல்லத்தில் இராத் தங்கும் கட்டாயம் ஏற்பட்டது. 

"தனியறை, வசதியான படுக்கை, குளிரூட்டி எல்லாம் உண்டு; தூக்கம் நிச்சயம் வரும்" என நண்பன் உறுதியளித்தான். 

அவன் தெரிவித்தது தன்னுடைய நம்பிக்கையை. அந்த நம்பிக்கையால் வழக்கமான துன்பம் நேர்வதைத் தடுக்க இயலவில்லை. "பஞ்சணையில் காற்று வரும், தூக்கம் வராது" என்ற கதைதான். 

சொந்தக்காரர் வீடாய் இருந்தாலும் தெருவுக்குப் போய் இயற்கைக் காற்றாடச் சிறிது நேரம் கழிக்கலாம். இங்கே அவனைத் தவிர வேறு யாரையும் தெரியாது; அவனது தங்கை வேறு இருக்கிறாள்; இந்தச் சூழ்நிலையில் அறையை விட்டு வெளியே போனால்? தவறான நோக்கம் கற்பித்துக் காலிப்பயல் பட்டம் சூட்டிவிடுவார்கள். 

நண்பனும் வசவுக்கு ஆளாவான். 

வேறென்ன செய்யலாம்? 

எதிலோ எப்போதோ படித்திருந்த யோசனைகளை அமல்படுத்த முடிவு செய்தான். 

"ஒரேயொரு பொருளை இடைவிடாமல் மனக்கண்ணால் பார்த்துக்கொண்டிருந்தால் மனங்குவிந்து ஒருமுகப்பட்டுத் தூக்கம் வந்துவிடும்" 

ஒன்றின்மீது மட்டும் கவனஞ் செலுத்துவது எவ்வளவு கடினம் என்பது புரிந்தது; சும்மாவா சொன்னார்கள் மனம் ஒரு குரங்கு என்று? 

"ஒன்றுமுதல் எண்ணிக்கொண்டிருந்தால் ஒரு கட்டத்தில் அலுப்புத் தோன்றி உறங்கிவிடுவோம்" 

எண்ணினான்; 500 தாண்டிவிட்டது. தவறாக எண்ணிவிடக் கூடாதே என்ற எச்சரிக்கை மனப்பான்மை ஏற்பட்டு விழிப்புணர்வை மிகுதிப்படுத்தியதுதான் கண்ட பலன்! 

தொலைக்காட்சித் தொடர் பார்த்தால் உண்டாகும் சலிப்பு உறக்கத்தைத் தரலாம். அறையில் பெட்டி இருந்தது. ஆனால் அகாலத்தில் தொடர் இல்லையே! 

எழுந்து விளக்கேற்றி அறையிலிருந்த நூல்களுள் ஒன்றை எடுத்தான். வாசிப்பு, "தூக்க மருந்து" என்பது மாணவப் பருவத்துப் பட்டறிவு. தொடக்கத்திலிருந்து வாசித்தால் சுவை ஏற்பட்டுத் தூக்கத்தை விரட்டக்கூடுமாதலால் பாதியைத் திறந்து படிக்கலானான்: 

"நள்ளிரவு. அவள் தேர்வுக்குப் படித்துக்கொண்டிருந்தாள். எல்லாரும் தூங்குகிறார்கள் எள்ளளவும் கவலை இல்லாமல், நான் மட்டும் தனியாய், கண்விழித்துப் படிக்க வேண்டியிருக்கிறதே என்னும் எரிச்சலானது மனத்தின் ஒரு மூலையில் எதிர்ப்புக் குரல் எழுப்பிக்கொண்டிருக்க, அவள் படித்தாள். 

சன்னல் பக்கத்தில் கருப்பு உருவம் ஒன்று தோன்றியது. கம்பிகளை ஒலியின்றி எளிதாய் வளைத்து மெதுவாய் உள்ளே இறங்கிற்று. 

கயல்விழியின் முதுகுக்குப் பின்னாலிருந்து அடிமேல் அடி வைத்து முன்னேறிய அந்த நெடிய உருவம் பையிலிருந்து கத்தியொன்றை உருவியது;  பளபள என்று மின்னிய புதுக் கத்தியை ஓங்கியவாறே நெருங்கியது. 

அருகில் வந்தாயிற்று; அவளது பிடரியில் சதக் என்று..." 

ஐயோ என அலறியேவிட்டான் மாறன். புத்தகத்தை எறிந்தான்; உடல் நடுங்கியது, இதயத் துடிப்பு காதில் கேட்டது; விளக்கை அணைக்கவும் அச்சம். சன்னலருகில் போய்க் கதவுகளை அவசரமாய் மூடினான். அந்த உருவம் இந்த அறையிலேயே இருக்குமோ என்ற விசித்திர ஐயம் அவனைக் கிடுகிடுக்க வைத்தது. 

இனி வருமோ தூக்கம்? புத்தகம் வாசித்ததால் புதிய சங்கடமாய்த் திகில் நிலை ஏற்பட்டது. 

அமைதி இழந்து படுக்கவும் பயந்து இரவு முழுதும் உட்கார்ந்தபடியே விடியலை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

 ************************************************************

Thursday, 21 June 2012

நீரோ





கொடுங்கோல் செலுத்திய ரோமானியப் பேரரசர் பலருள் ஒருவன் நீரோ; தன் தாயையும் மாற்றான் தாய் மகனையும் படுகொலை புரிந்த பாதகன் அவன். 

ரோம் தீப் பற்றி எரிந்தபோது நீரோ பிடில் வாசித்தான் என்ற வாக்கியத்தைக் கேட்டுள்ளோம். அது மெய்யா? 

வரலாறு அவ்வாறு கூறவில்லை:

ரோமில் தீ விபத்து நிகழ்ந்தது உண்மை; நீரோ தான் கொள்ளி
 வைத்திருப்பான் என மக்கள் ஐயுற்றார்கள். அவ்வளவுதான்.

Tuesday, 19 June 2012

பிரஞ்சு எண்களில் குறைபாடு

 
70 , 80 , 90 ஆகிய எண்களுக்குப் பிரஞ்சில் தனிச் சொல் இல்லாமையால்,


70 ஐ அறுபது பத்து எனவும்

80 ஐ நாலிருபது என்றும்

90 ஐ நாலிருபது பத்து எனவும் கூறுகிறார்கள்.


காட்டு :


78 -- அறுபது பத்து எட்டு. 

87 -- நாலிருபது ஏழு. 

99 -- நாலிருபது பத்து ஒன்பது.