Saturday 28 January 2017

வல்லவனுக்கு வல்லவன் -- 4


காட்சி 5
இடம்: நீதிமன்றம்.
பாத்திரங்கள் -- பாத்லேன், நீதிபதி, வியாபாரி, திபோ.




பாத்லேன் -- கனம் ஐயா, கர்த்தர் உங்களுக்கு இன்று நல்ல போணியும் உங்கள் மனம் விரும்புவதையும் அருள்வார்.

நீதிபதி -- உங்கள் வருகை நல்வருகையாகட்டும். ஏன் போர்த்துக்கொண்டிருக்கிறீர்கள்? அமருங்கள்.

பாத்லேன் -- உடம்புக்கு ஒன்றுமில்லை; சும்மா வந்தேன்.

நீதிபதி --- சரி. வழக்கை சீக்கிரம் ஆரம்பிக்க வேண்டும்; முன்னேரத்தில் என் வேலை முடியும்.

வியாபாரி -- என் சாட்சிக்கு அவசர வேலை; முடித்துவிட்டு இப்போது வந்துவிடுவார். கொஞ்சம் காத்திருக்கக் கேட்டுக்கொள்கிறேன்.

நீதிபதி --- எனக்கு வேறு வழக்கு இருக்கிறது; காத்திருக்க முடியாது. தொடங்கலாம். நீங்கள் தானே வாதி?

வியாபாரி -- ஆமாம், ஐயா.

நீதிபதி --- பிரதிவாதி எங்கே? வந்திருக்கிறாரா?

வியாபாரி -- அதோ, வாய் மூடி, மெளனியாய்.

நீதிபதி --- இரண்டு பேரும் இருப்பதால், வாதத்தை ஆரம்பியுங்கள்.

வியாபாரி -- கனம் ஐயா, நான் இவன்மேலே இரக்கப்பட்டு, சிறு வயதிலிருந்து வளர்த்தேன். ஆடு மேய்க்கிற பருவம் வந்ததும், என் இடையனாக்கி, என்னுடைய ஆடுகளை ஒப்படைத்தேன். ஆனால், ஐயா, இவன் ஆட்டை...

நீதிபதி --- இருங்கள், சம்பளம் கொடுத்தீர்களா?

பாத்லேன் -- இல்லை, கூலி தராமல் வேலை வாங்கினது எனக்குத் தெரியும்.

வியாபாரி --- ஆ! நீங்களா?

நீதிபதி -- ஏன் முகத்தை மறைத்துக்கொண்டிருக்கிறீர்கள்?

பாத்லேன் -- பல்வலி, ஐயா. முகத்தை நிமிர்த்த முடியவில்லை.

நீதிபதி --- நீங்கள் தொடருங்கள்; சீக்கிரம் முடியுங்கள்.

வியாபாரி --- பிஏர் ஐயா, உங்களிடந்தானே கம்பளி விற்றேன்!

நீதிபதி --- கம்பளியா? எந்தக் கம்பளி?

பாத்லேன் -- சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார்.

வியாபாரி --- என் கம்பளியை நீங்கள் தான் வாங்கினீர்கள்!

பாத்லேன் --- நான் நினைக்கிறேன், அவருடைய இடையன் என்னிடம் கம்பளி விற்றதாயும், அதைக் கொண்டு நான் கோட் தைத்துக்கொண்டதாயும் நம்புகிறார்.

நீதிபதி -- போதும், எதை எதையோ சொல்கிறீர்கள். மன்றத்தின் நேரத்தை வீணடிக்காமல், வழக்கு பற்றிப் பேசத் தெரியாதா?

பாத்லேன் --- அவருக்கு எவ்வளவு பதற்றம் என்றால் எங்கே விட்டார் என்பதே தெரியாமல் போய்விட்டது.

நீதிபதி -- நம்முடைய ஆட்டுக்குத் திரும்புவோம்; அப்புறம் என்ன ஆயிற்று?

வியாபாரி -- ஆறு ஓன் எடுத்தார், ஒன்பது பிரான்.

நீதிபதி -- நீங்கள் எங்கே இருப்பதாக நினைக்கிறீர்கள்?

பாத்லேன் -- அப்பாவி போல் தெரிகிறார். எதிர்த் தரப்பைக் கேட்கலாம்.

நீதிபதி --- நீங்கள் சொன்னது சரி;  நீ, வா இங்கே, சொல்லு.

திபோ --- பே!

நீதிபதி -- இது என்ன சங்கடம்! எதற்கு பே? ஆடா நான்? என்னிடம் பேசு.

திபோ ---- பே!

நீதிபதி -- கிண்டலா பண்ணுகிறாய்?

பாத்லேன் -- ஆட்டு மந்தையில் இருப்பதாக நினைக்கிறானோ?

வியாபாரி -- என் துணியை வாங்கின ஆள்,  நீங்களல்ல என்று சொல்லுங்கள்
பார்ப்போம். கனம் ஐயா, உங்களுக்குத் தெரியாது, இவர் எவ்வளவு தந்திரமாய்...

நீதிபதி --- நிறுத்துங்கள்; கிறுக்கா நீங்கள்? அதை விட்டுவிட்டு வழக்குக்கு வாருங்கள்.

வியாபாரி - சரி, ஐயா. அது என்னைப் பாதித்த விஷயம்; ஆனால் இன்றைக்கு அது பற்றி ஒரு வார்த்தை பேசமாட்டேன்; இன்னொரு நாள் பார்த்துக்கொள்கிறேன். ஆறு ஓன் கொடுத்ததை சொன்னேன். என் ஆடுகள்... மன்னியுங்கள், இந்த வழக்குரைஞர்... என் இடையன் ஆடு மேய்த்தபோது... மூன்று வெள்ளி தருவதாக சொன்னார். விஸ்வாசமாக இருப்பேன் என்றான். மூன்று ஆண்டு ஆயிற்று. பணமுந் தரவில்லை, துணியுந் தரவில்லை. ஆரோக்கியமாய் இருந்த ஆடுகளைக் கொன்று தின்றுவிட்டு ரோமத்தையும் விற்றிருக்கிறான். கம்பளி வாங்கியவர், வீட்டுக்கு வா, வெள்ளிப் பணம் தருவேன் என்றார்.

நீதிபதி -- என்னய்யா சொல்கிறீர்கள்? கருத்துமில்லை, அர்த்தமுமில்லை; இதிலே கொஞ்சம்; அதிலே கொஞ்சம். ஒன்றுமே புரியவில்லை.

பாத்லேன் -- ஆடு மேய்க்கக் கூலி கொடுக்கவில்லை.

வியாபாரி -- என் பரிதாப நிலைமை எனக்குத்தான் தெரியும்; உங்கள் இரண்டு பேருக்கும் தெரியாது.

நீதிபதி -- அப்படி யென்ன உங்களுக்கு?

வியாபாரி -- இவர் ஏமாற்றிவிட்டார்; ஆனால் என் வாக்குறுதிப்படி ஒன்றுஞ் சொல்லமாட்டேன் ; ஆடு பற்றிப் பேசுவேன்.

நீதிபதி -- சீக்கிரம் பேசி முடியுங்கள்.

பாத்லேன் -- இந்தப் பையனுக்கு வழக்குரைஞர் இல்லாமல் எதுவும் சொல்லத் தெரியாது போலிருக்கிறது; நீங்கள் அனுமதித்தால், நான் கேசை எடுத்துக்கொள்வேன்.

நீதிபதி -- என்ன தொகை கிடைக்கப்போகிறது?

பாத்லேன் -- ஒன்றும் வேண்டாம், ஏழைக்கு உதவி.

நீதிபதி -- சரி.

பாத்லேன் -- இங்கே வா, உன் தரப்பை சொல்லு.

திபோ -- பே!

பாத்லேன் -- பே யா? என்ன பே? உன்னுடைய நன்மைக்காகத்தான் நான் பேசுகிறேன்; புரிகிறதா?

திபோ -- பே!

பாத்லேன் -- ஆமாம், இல்லை என்று சொல்லு.

திபோ -- பே!

பாத்லேன் -- ஒழுங்காகப் பேசாவிட்டால் உனக்குத்தான் கஷ்டம்.

திபோ -- பே!

பாத்லேன் -- இந்த இளைஞன் ஒரு பைத்தியம் போல் தெரிகிறது, ஐயா; இவனை மந்தைக்கு அனுப்புங்கள்.

வியாபாரி -- இவனா பைத்தியம்? உங்களைவிடப் புத்திசாலி; நன்றாகப் பேசுவான்.

பாத்லேன் - அப்படித் தெரியவில்லை; ஆடு மேய்க்க அனுப்புங்கள், ஐயா; கிறுக்குகளை வைத்துக்கொண்டு வழக்கா?

வியாபாரி -- அனுப்புவதா? என் வாதத்தைக் கேட்காமலா?

நீதிபதி -- வேறென்ன செய்ய? அவன் பேச முடியாதவனாக இருப்பதால்...

வியாபாரி -- ஐயா, ஐயா. என்னைப் பேச விடுங்கள்; என் வழக்கைக் கேளுங்கள்.

நீதிபதி -- வீண் வேலைதான்.

பாத்லேன் -- இரண்டு பேரும் நேரத்தை வீணடிக்கிறார்கள்.

வியாபாரி -- நீங்கள் பணந் தராமல் துணியைக் கக்கத்தில் இடுக்கிக்கொண்டு போனீர்கள்; அது யோக்கியர்களின் வேலையல்ல.

பாத்லேன் -- யாரிடமோ கொடுத்துவிட்டு என்னைக் கேட்கிறீர்கள்.

வியாபாரி -- உங்கள் முகம், குரல், கோட் எல்லாம் எனக்குப் பரிச்சயம்.நல்லவர் கெட்டவர் தெரிந்துகொள்ள எனக்குப் புத்தி இருக்கிறது. நீதிபதி அவர்களே, என் மன சாட்சிப்படி...

பாத்லேன் -- ஐயா, முடித்து வையுங்கள்; இரண்டு மூன்று ஆடு, அற்பம். இதற்குப் போய் வழக்கா?

வியாபாரி --- ஆடாவது, மாடாவது! உங்களிடந்தான் பேசுகிறேன். என் பணத்தைக் கொடுங்கள்.

நீதிபதி -- இதென்ன குளறுபடி!

வியாபாரி --- நான் கேட்பது ...

பாத்லேன் -- இரண்டு ஆட்டைத் தின்றால்தான் என்ன? அவன் எவ்வளவோ உங்களுக்கு சம்பாதித்துக் கொடுத்திருப்பான்.

வியாபாரி -- பாருங்கள் ஐயா. நான் துணி பற்றிக் கேட்கிறேன், இவர் ஆடு பற்றிப் பேசுகிறார். ஆறு ஓன்! எங்கே?

பாத்லேன் -- பாவம், அந்தப் பையன்! சில ஆட்டுக்காகத் தண்டிக்கப் போகிறீர்களா?

வியாபாரி -- இப்படிப்பட்ட ஆளிடம் துணி விற்கச் செய்தது பிசாசின் வேலையாய்த்தான் இருக்கும். ஐயா, அவரிடம் நான் கேட்பது...

நீதிபதி --- நீங்கள் கேட்பதை நான் தள்ளிவிடுகிறேன். இந்தா, நீ போ மந்தைக்கு.

திபோ --- பே!

வியாபாரி --- ஐயையோ, ஐயா, எனக்கு சேர வேண்டிய..

பாத்லேன் -- இவர் ஓயவே மாட்டாரா?

வியாபாரி -- உங்களுடன்தான் தகராறு; சாமர்த்தியமாய்ப் பேசி ஏமாற்றித் துணியை எடுத்துப் போனீர்.

நீதிபதி --- உங்கள் இரண்டு பேராலும் பெரிய தொந்தரவு. இந்தாப்பா, மன்றம் உன்னை விடுவிக்கிறது, புரிகிறதா? போ, திரும்பி வராதே.

பாத்லேன் --- ஐயாவுக்கு நன்றி சொல்லு.

திபோ --- பே!

நீதிபதி -- போதும் பே! போய்ச் சேர்.

வியாபாரி -- நியாயமா அவனை விடுவது?

நீதிபதி -- நான் வேறு வழக்கை விசாரிக்க வேண்டும்.


*******

 தொடரும்...

(படம் நன்றி இணையம்)




6 comments:

  1. பே .... பே .... பே .... பே .....

    உனக்கும் ’பெப்பே’ உங்கப்பனுக்கும் ’பெப்பே’ போல நல்ல நகைச்சுவையாக உள்ளது.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . இந்த நாடகத்தைப் பிரஞ்சு மூலத்தில் படித்த புதுச்சேரிக்காரர்கள் தோற்றுவித்த தமிழ்ப் பழமொழிதான் ' உனக்கும் பேபே உங்கப்பனுக்கும் பேபே ' .

      Delete
  2. அருமை... தொடர்கிறேன்....

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . தொடர்வதற்கும் நன்றி .

      Delete
  3. நல்ல நகைச்சுவை. எதிர்பாராமல் ஏற்கெனவே ஏமாற்றியவரைச் சந்திக்க நேரும்போது ஒருவனுக்கு ஏற்படும் குழப்பத்தை மிகவும் யதார்த்தமாக விளக்குகிறது நாடகம். பாவம் அந்த வியாபாரி! தொடருங்கள்!

    ReplyDelete
  4. வரங்கொடுத்தவன் தலையிலேயே கை வைத்த கதையாக இந்த ஆடு மேய்ப்பவன் வழக்குரைஞரையும் ஏமாற்றப் போகிறான்... ஆக மொத்தத்தில் நஷ்டம் என்னவோ வியாபாரிக்குதான்.. நல்ல நகைச்சுவையும் பாடமும்.

    ReplyDelete