Thursday, 17 July 2014

நம் நாட்டில் அடிமைகள்




 முன்கால எகிப்திலும் கிரேக்கத்திலும் ரோமிலும் அடிமைகள் என ஒரு மக்கட்கூட்டம் வதைபட்டது என வரலாறு தெரிவிக்கிறது. நீதிநெறிக் கதைகளை இயற்றிய ஈசாப் ஒரு கிரேக்க அடிமை.

 பழங்கால யூதரிடமும் அடிமைகள் இருந்தமைக்கு விவிலியம் சான்று பகர்கிறது:

 பழைய ஏற்பாடு - உபாகமம் - அதிகாரம் 15.

 மோசே கூறியது: "உன் சகோதரனாகிய எபிரேய ஆணாகிலும் எபிரேய பெண்ணாகிலும் உனக்கு விலைப்பட்டால், ஆறு ஆண்டு உன்னிடத்தில் சேவிக்க வேண்டும்; ஏழாம் ஆண்டு விடுதலை பண்ணி அனுப்பி விடுவாயாக.”

 அதே ஆகமம் - 21 ஆம் அதிகாரம்; இதுவும் மோசேயின் கூற்று:

 (போர்க் கைதிகளுள் ஒரு பெண்ணை விரும்பி மணந்துகொண்ட பின்பு) 

 "அவள் மேல் உனக்குப் பிரியம் இல்லாமற் போனால், நீ அவளைப் பணத்திற்கு விற்காமல், அவளைத் தன் விருப்பத்துக்குப் போக விடலாம்"

 ஆகவே மனித விற்பனை யூதர் சமுதாயத்தில் வழக்கமாய் இருந்தது.

 பண்டைய தமிழகத்திலும் அடிமைகள் இருந்தார்களா? நமக்கு வரலாறு இல்லாமையால், இலக்கியங்களைத் துருவ வேண்டியுள்ளது:

 1 -- தொல்காப்பியம் --- பொருள் 25:

   "அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்"

என்பதில் அடியோர் என்னும் சொல் அடிமைகளைக் குறிக்கக்கூடும்.

  2 --  திருக்குறள் 1080:

    "எற்றிற்கு உரியர் கயவர் ஒன்று உற்றக்கால்
  விற்றற்கு உரியர் விரைந்து"

 பொருள் - பட்டினி கிடக்கும் நிலை ஏற்பட்டால் கயவர்கள் தம்மை உடனடியாக விற்றுக்கொள்வார்கள்.

 இதிலிருந்து மனிதர் தம்மை விற்றுக்கொண்டு, வாங்கியோர்க்கு அடிமைகளானது தமிழகத்திலும் உண்டு என்பது தெரிகிறது. கயவர் விரைந்து விற்றுக்கொள்வர் என்றதால், அல்லாதார் வேறு வழி இல்லாதபோது விற்றுக்கொண்டனர் என ஊகிக்கலாம்.

 ஒருவன் தன் தட்டுமுட்டுச் சாமான்களை விற்றபின்னும் முடை தீராவிட்டால், மனைவி மக்களையும் விற்றுவிட்டுக் கடைசியாய்த் தன்னை விற்றுக்கொள்வான். அதுவே இயல்பு; அரிச்சந்திரன் அப்படித் தானே செய்தான்? இந்தக் கதையிலிருந்து வட நாட்டிலும் தன்னை விற்றல் இருந்தது என அறிகிறோம். ஆரியர்கள் தம் அடிமைகளைத் தாசர் என்று சுட்டினார்கள்.

 3 --  திருக்குறள் 220:

     "ஒப்புரவி னால்வரும் கேடுஎனின் அஃதுஒருவன்
   விற்றுக்கோள் தக்கது உடைத்து."

 இதன் விளக்கம்:  தாராளமான கொடையினால் வறுமை உண்டாகும் என்றால், தன்னை விற்றாயினும் அதை ஏற்கலாம்.

 மாந்த விற்பனை இருந்தது என்பதை இந்தப் பாடலும் உறுதி செய்கிறது.

 4 --  குறள் 608:

     "மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு
   அடிமை புகுத்தி விடும்"

 இந்தச் செய்யுள், சோம்பல் வயப்பட்ட மன்னன் தன் பகைவர்க்கு அடிமையாக நேரும் என்று எச்சரிக்கிறது. வேந்தர்களும் அடிமைகளாய் உழன்றனர்.

 சுந்தரமூர்த்தி நாயனார் கதை தெரியுமல்லவா? அவர் மண மேடையில் அமர்ந்து இருந்தபோது ஒருவர் வந்து, "நீ என் அடிமை;  திருமணம் புரிந்துகொள்ள உனக்கு உரிமை இல்லை" என்று கூறி அதற்கான சான்று காட்டி அவரைத் தம்முடன் அழைத்துச் சென்றார். தாம் பார்ப்பனராதலால் அடிமை ஆவதில்லை எனச் சுந்தரர் வாதாடிப் பார்த்தார் என்பதிலிருந்து மற்ற மூன்று வருணத்தார் மட்டுமே அடிமைகளாக இயலும் என்று அறிந்துகொள்கிறோம்.

  புதுச்சேரியில் அடிமை முறை வழக்கத்தில் நிலவியது என ஒரு பழைய பிரஞ்சுக் கட்டுரை தெரிவிக்கிறது. அதன் ஆசிரியர் ஒரு வெள்ளையர். அதில் காணப்படும் முக்கிய தகவல்கள்:

  பஞ்சக் காலத்தில் பெற்றோர் தம் குழந்தைகளை விற்றனர்; 1706 -இல் இரு சிறுமிகள் 10 பகோடாவுக்கும் 1719 -இல்  ஐந்து பெண்கள் 18 பகோடாவுக்கும் விலைபோயினர். ஐரோப்பியர் அடிமைகளை வாங்கிச் சேவகம் செய்யக் கற்பித்தார்கள். சில சமயங்களில் மொரீசியஸ் தீவுக்கு அனுப்பினர் எனினும் அடிமை இனம் என ஒரு மக்கட் கூட்டம் இந்தியாவில்  ஒருபோதும் இருந்ததில்லை.

 (பகோடா பழைய நாணயம்; அதன் இன்றைய மதிப்பு தெரியவில்லை)

  இந்தியாவில் பார்ப்பனர் தவிர மற்றவர்களுள் சிலர் அடிமைகளாய் விலை போயினர் என முடிவு செய்யலாம். இப்போதும் கொத்தடிமைகள் மீட்கப்பட்டார்கள் என்று அவ்வப்பொழுது நாளேடுகளில் செய்தி வெளியாகிறது;  அடிமை முறைக்கு ஆயுள் நெடியது.

            =======================

 (படம்: நன்றி இணையம்)

    

Monday, 16 June 2014

துணுக்குக் கோவை


1 --  வான்கோழி --- இது அமெரிக்கப் பறவை;  16-ஆம் நூற்றாண்டில் அங்கே வளர்ப்புப் பறவை ஆயிற்று. அங்கிருந்து ஐரோப்பாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு, இந்தியாவில் வெள்ளையர் ஆட்சி  நிலைத்த பின்பு, இங்கு அறிமுகம் ஆனது. இது 17 அல்லது 18-ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்திருக்கலாம்.




எனவே, "கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி" என்று பாடிய  பிற்கால ஒளவையார் அப்போது வாழ்ந்தார் என முடிவு கட்டலாம்.

(மிளகாய், உருளைக் கிழங்கு முதலியவற்றையும் அமெரிக்காவிலிருந்து நம் நாட்டுக்கு ஐரோப்பியர்தான் கொண்டு வந்தனர்)

2 -- பித்தலாட்டம் -- ஏமாற்று வேலை எனப் பொருள்படும்.

பித்தலாட்டம், இரு வடமொழிச்சொற்களின் கூட்டு: பித்தளா + ஆடகம்.

 பித்தளாவைத் தமிழில் பித்தளை என்கிறோம். இது செம்பும் துத்தநாகமும் கலந்த உலோகம். ஆடகம் என்பது தங்கம்;  இரண்டும் ஒரே நிறமாக இருப்பதால், இதுவா அதுவா என ஐயப்பட இடம் உண்டு. இதைப் பயன்படுத்தி, மோசடிப் பேர்வழிகள், பித்தளையை ஆடகம் என்று சொல்லி ஏமாற்றினால், அது பித்தலாட்டம்.

3 -- மடையன் - இச்சொல்லுக்கு உரிய பொருள்: சமையற்காரன். கோவிலில் பிரசாதம் சமைக்கும் இடத்தை மடைப்பள்ளி என்கிறோம் அல்லவா?

சொல்லின் பழைய வடிவம் மடவன். மடமை என்னும் வேரிலிருந்து கிளைத்தது; வேறு கிளை: மடத்தி, மடந்தை, மடத்தனம். மடமை என்றால் அறியாமை என்று பலரும் அறிவர்.

      குறுந்தொகை

பா. 66   
மடவ மன்ற தடவுநிலைக் கொன்றை
(கொன்றை மரங்கள் மடமை உடையன)

 பா. 251:  
மடவ வாழி மஞ்ஞை
(மயில் கூட்டங்கள் அறியாமை வாய்ந்தவை)

இதே அர்த்தம் கொண்ட முட்டாள் என்ற வார்த்தை முற்றாள் என்பதன் மரு.

முற்று + ஆள் = முழுதும் ஆள், அதாவது முழுவதும் உடம்பு. மூளை இல்லை என்பது குறிப்பாகச் சொல்லப்படுகிறது.

 4 --  "மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரிது" என்ற பழமொழியில் மூர்த்தி என்பதற்குச் சிலை என்று பொருள். (குறிப்பிட்ட கடவுளின்) சிலை சிறியது தான், எனினும் அதன் புகழ் பெரியது.

நாளடைவில், மூர்த்தியின் அர்த்தம் விரிவடைந்து, சாமியையே சுட்டுவதாய் மாறிற்று.

ராமமூர்த்தி - ராமன் ஆகிய கடவுள்.


    ++++++++++++++++++++++++++++++++++

Tuesday, 20 May 2014

பிழையான தகவல்கள்




1  --  சிலர்  கூறுவர்செய்தி என்று பொருளுடைய news  என்னும் ஆங்கிலச் சொல்,  north,  east,  west,  south  ஆகியவற்றின் முதல் எழுத்துகளைக் கோத்து உருவாக்கப்பட்டது எனவும் நான்கு திக்குகளிலிருந்தும் செய்திகள் வருவதால் அந்தச் சொல் மிகப் பொருத்தமானது எனவும்.

    அது ஆதாரம் அற்ற கூற்று.

  புதிய என அர்த்தம் தரும் niwe  என்னும் ஆங்கிலோ சாக்சன் மொழியின் வார்த்தையிலிருந்து உருவானது new  என்று அகராதி தெரிவிக்கிறதுஇதன் இறுதியில் சேர்ந்து news   ஆனது.

  செய்தியைக் குறிக்கிற பிரஞ்சுச் சொல்,  "நுவேல்" (nouvelle);  இதற்கும் புதிய என்பதே பொருள்.



 2 --  சதுரங்க விளையாட்டைச் சுட்டும் ஆங்கிலச் சொல் chess;   இந்த வார்த்தை எப்படி உருவாக்கப்பட்டது என்று ஒரு வார இதழில் அண்மையில் படித்தேன்அதில் எழுதப்பட்டிருந்தது:

      "சதுரங்கக் காய்களின் பெயர்கள் carts,  horses, elephants, soldiers;  இவற்றின் முதலெழுத்துகளைச் சேர்த்து chess  என்கிறோம்"

    இது தவறான தகவல்.

   1  -  காய்களுள் முக்கியமானவை ராஜாவும் ராணியும்ஆங்கிலத்தில் king,  queen;  இவற்றின் முதல் எழுத்துக்களான k -ஐயும் q - ஐயும் விட்டுவிட்டுப் பெயர் வைப்பார்களா?

    2  -  carts  முதலான நான்கு சொற்களும் எந்தக் காலத்திலும் பயன்பட்டதில்லை. சரியான பெயர்கள்,  rooks,  knights,  bishops,  pawns ஆகியவைதான்இவற்றின் எதன் முதலெழுத்தும் chess- இல் இல்லை.

   3  -  அந்த விளையாட்டின் பழைய பிரஞ்சுப் பெயர் esches ;  இதிலிருந்தே chess  என்னும் சொல் தோன்றிற்று. (இப்போது பிரஞ்சில் echecs  என்கிறார்கள்).
                                         =======================                                  

Saturday, 10 May 2014

தேங்காய்




தேங்காய் - இந்தச் சொல்லின் தொடக்க வடிவம்: தெங்கங்காய். தென்னை மரத்தின் பழைய பெயர், தெங்கு. நன்றி ஒருவற்கு எனத் தொடங்கும் வாக்குண்டாம்  செய்யுளில், “தளரா வளர் தெங்கு என வருதல் காண்க.

 தெங்கு + அம் + காய் = தெங்கங்காய். அம் என்பது இரண்டு பெயர்ச் சொற்களை இணைக்கப் பயன்படுவது; சாரியை என்பார்கள்.

  வேறு காட்டுகள்:
நாற்று + அம் + கால் = நாற்றங்கால்;
ஆறு + அம் + கரை = ஆற்றங்கரை;
தென்னை + அம் + கீற்று = தென்னங்கீற்று.

  தெங்கங்காய் முற்றினால், தெங்கம்பழம். நாய் பெற்ற தெங்கம்பழம் என்னும் பழமொழியை அறிந்திருப்பீர்கள். ஒரு நாயிடம் முற்றிய தேங்காய் கிடைத்தால், அதனை அது உருட்டி விளையாடக்கூடும், பயன்படுத்தாது. தேங்காயை எவராவது எடுக்கப் போனால், குரைக்கும், கடிக்க வரும். தானும் உபயோகிக்காமல் பிறர்க்கும் ஈயாமல் சேர்த்து வைத்திருக்கும் செல்வத்தைக் குறிப்பது அந்தப் பழமொழி.

  (“வைக்கோல் போர் நாய் என்றும் சொல்வதுண்டு: வைக்கோல் போரின் அடியில் படுத்திருக்கும் நாய் வைக்கோலைத் தின்னப்போவதில்லை; தின்ன வரும் மாட்டையும் விரட்டும்.)



 தேங்காய் என்பதற்குத் "தேங்காதே" எனவும் பொருளுண்டு. திருமணங்களில் ஏன் தேங்காய் வழங்குகிறார்கள்?  நகைச்சுவையாய் ஒரு காரணம் சொன்னார் தமிழறிஞர் அரசஞ் சண்முகனார். மணம் முடிந்துவிட்டது, போய்விடு; இங்கே தேங்காதே (தங்கிவிடாதே) என்பதை நாசுக்காய்த் தெரிவிப்பதற்குத் தேங்காய் கொடுக்கிறோம் என்றார் அவர்.

 பிஞ்சுத் தேங்காயை ளநீர்’  என்கிறோம்; இச்சொல்லை விளக்கியுள்ளார் தமிழறிஞர் தெ.பொ. மீனாட்சிசுந்தரனார்: இதில் உள்ள நீர்தமிழல்ல;  இந்தியாவின் மொழிகளுள் ஒன்றான முண்டாவில், நீர் என்பது தேங்காயைக் குறிக்கும்; எனவே, இள நீர் = இளந் தேங்காய் என்பது அவரது விளக்கம்.

         (முண்டா இன மக்கள் கிழக்கிந்தியவாசிகள்)
               -------------------------------------------