Sunday 29 January 2012

எழுதுகோலின் வரலாறு



மின்னஞ்சலும் கைப்பேசியும் உடனடித் தகவல் தொடர்புக்குப் பயன்பட்டுக் கணிசமான கால இழப்பைத் தவிர்த்துவிட்டன. ஆயினும் எழுத்துத் தேவை அடியோடு ஒழிந்துவிடவில்லை. பள்ளிகளிலும் வங்கி முதலிய நிறுவனக்களிலும் படிவம் நிரப்பவும் இன்னமும் பேனாவுக்கு வேலை இருந்துகொண்டுதான் இருக்கிறது. பற்பல நூற்றாண்டாய் எழுதுவதற்கு உலகு முழுதும் மிகுதியாய்ப் பயன்பட்ட, இப்போதும் ஓரளவு உதவும் எழுதுகோலின் வரலாற்றை அறிந்துகொள்வோம். 

எழுத்தைக் கண்டுபிடித்து எண்ணங்களையும் நிகழ்ச்சிகளையும் பதிந்தமை நாகரிகத்தின் முதல் படிகளுள் ஒன்று.  

மெசோப்பொட்டேமியாவில் (தற்கால ஈராக்) கி.மு. 2900 அளவில், ஒரு பக்கம் கூராக்கிய முனை கொண்ட குச்சியால், களிமண் பலகைகளில் எழுதினர். பின்பு முனையை முக்கோண வடிவில் சீவி மேம்படுத்தினர். இதுவே பேனாக்களின் முன்னோடி. இது உருவாக்கிய எழுத்து ஆப்பெழுத்து எனப்பெற்றது. ஈரக் களிமண் பலகைகளில் எழுதிச் சூளையில் சுட்டுப் பாதுகாத்தனர். இவற்றில் இடம்பெற்ற பாடல், சட்டக்குறிப்புகள் முதலியவையே உலகின் முதல் இலக்கியம். 

எகிப்தியரோ சித்திர எழுத்துகளை முதலில் கல்லிற் செதுக்கிப் பிற்காலத்தில் பேப்பரஸ் என்ற செடியின் தண்டுகளிலிருந்து பேப்பர் தயாரித்து அதில் எழுத ஒரு பக்கம் பிரஷ் போல் நசுக்கிய முனை உடைய குச்சியை மையில் தோய்த்துப் பயன்படுத்தினர். அந்த மை புகைக்கரி, நீர், ஒரு விதப் பசை கலந்து செய்யப்பட்டது.  

கி.மு. 2000 அளவில் சீனர்கள் மையும் தூரிகையும் கொண்டு எழுதினார்கள். கி.பி. 2 ஆம் நூற்றாண்டில் தாள் தயாரிக்கக் கற்றார்கள்.  

கிரேக்கர்கள் கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் கற்பலகையில் (ஸ்லேட்) மெழுகு தடவி அதன்மீது குச்சியால் எழுதினார்கள். 300 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆட்டுத்தோலைப் பண்படுத்தி அதன்மேல் மையில் தோய்த்த பறவையிறகு பேனாவால் (quill pen) எழுதினர். 

பற்பல நாடுகளில் செம்பில் வரையும் பழக்கம் பரவியபோது எழுத்தாணி என்னும் இரும்புக் கருவி உதவிற்று. தமிழகத்தில் ஓலைச் சுவடிகளில் எழுத எழுத்தாணியைத் தான் உபயோகித்தனர்.  

களிமண்ணில் எழுதியது, கல்லில் செதுக்கியது, ஆட்டுத்தோலில் சித்திரந் தீட்டியது, இவற்றையடுத்து மை தொட்டுப் பறவையிறகு பேனாவில் தாளில் எழுதிய வழக்கம் ஐரோப்பாவில் 700 ஆம் ஆண்டளவில் ஏற்பட்டதாய்த் தெரிகிறது. 1000 ஆண்டுகளுக்குப் பின்பும் இறகு பேனா நடைமுறையில் இருந்தது. 

மையில் தோய்த்து எழுதுகிற எஃகு நிப் (nib) கொண்ட பேனா 18 ஆம் நூற்றாண்டில் பயன்பாட்டுக்கு வந்தது. அடுத்த நூற்றாண்டு இறுதியில் அதே நிப் உடைய ஊற்று பேனா கண்டுபிடிக்கப்பெற்றது. இது மூன்று பாகங்கள் கொண்டது. 

1.அடிப்பகுதி: ஒரு நீளக்குழாய். இதில் மை ஊற்றி வைத்துக்கொள்ளலாம்.  

2.நிப் செருகிய சிறு பகுதி: இதைத் திருகி மையூற்றிய குழாயை மூடிவிடலாம். 

3. மேல்மூடி: நிப்புக்குப் பாதுகாப்பு. திருகி மூடவும் திறக்கவும் முடியும். 

ஊற்று பேனா மிகப்பெரிய முன்னேற்றம். மைப்புட்டி தேவையில்லாமற் போயிற்று. விரைவாய் எழுத முடிந்தது. ஆனால் இரு குறைகள் இருந்தன; மை தடித்துப் போனால் (thick) நிப்பில் வராது, உதறி உதறி அக்கம் பக்கமெல்லாம் மைப்புள்ளிகளால் நிறைத்த பின்புதான் எழுதலாம்.சில சமயம் மை கசிந்து விரல்களை, பேனா வைக்கிற சட்டைப்பையைக் கறைப்படுத்தும். 

இந்தக் குறைகள் நீங்கிய புதுவிதப் பேனாவை உருவாக்கியவர் அங்கேரி நாட்டுப் பத்திரிகையாளர் லஸ்லோ பிரோ (Laszlo Biro). செய்தித்தாள்களை அச்சிடும் மை, பேனா மையை விட விரைவாக உலர்வதைக் கவனித்த அவர், "பேனாவுக்கு அது உதவுமே" என்றெண்ணிப் பேனாவில் அதை ஊற்றினார். அந்தக் கன (thick) மை நிப் வழியே சரளமாய் வராமையால் எழுத இயலவில்லை. அதனால் நிப்புக்குப் பதிலாய் பால்பேரிங்கைப் பயன்படுத்தினார். இதுவே பால்பாயிண்ட் பேனா. உலக்முழுதும் பரவிப் பயன்பாட்டில் உள்ள இதை 1938 இல் உருவாக்கி உரிமை (patent) பெற்றார் பிரோ. 

கன மை பெரும்பாலும் கசிவதில்லை. நீர் பட்டால் அழிவதில்லை. வழவழவென்று விரைவாகவும் எழுதுகிறது. ஆதலால் இந்தப் பேனா ஒரு வரப் பிரசாதமாகத் திகழ்கிறது.



(ஆதாரம்: Who invented what? என்னும் ஆங்கில நூல்.)

3 comments:

  1. எழுதுகோலின் வரலாறு அறியச் செய்தமைக்கு மிகவும் நன்றி. கணினி புழங்க ஆரம்பித்தப்பிறகு எழுதுகோலின் பயன்பாடு வெகுவாகக் குறைந்துவிட்டது வருத்தத்துக்குரியது.

    ReplyDelete
  2. ஆமாம் . எல்லாத் துறைகளிலும் புதியன புகும்போது பழையன மறைகின்றன . இது பெரும்பாலும் முன்னேற்றத்தின் அடையாளம் .
    கருத்துரைக்கு நெஞ்சம் நிறை நன்றி

    ReplyDelete
  3. அருமையருமையருமை ஐயா 👏👏

    ReplyDelete