Monday 23 January 2012

மூன்றுவிதப்புத்தி




அற்புதப் பொறியாம் மனித மூளையின் அபூர்வப் பணிகளுள் ஒன்று கற்பிப்பதைப் புரிந்துகொண்டு உள்வாங்குதல். இந்தத் திறமையைப் பொருத்தவரை புத்தி மூவகைப்படும்.

1.கற்பூரப்புத்தி: எரிகிற நெருப்புக்குச்சி நெருங்கியவுடன் சூடம் கப்பென்று தீப்பிடித்துக்கொள்ளும். இது போன்ற மூளை எந்தக் கடின விஷயமாயினும் உடனடியாகப் புரிந்துகொண்டுவிடும். திருவள்ளுவர் "பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு" என்றது கற்பூரப்புத்திக்கே பொருந்தும்.

2.கரிப்புத்தி: கரியை நெருப்பாக்கல் எளிதா? சிறிது மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திக் குழலால் ஊதி ஊதிப் பற்றவைக்கவேண்டும். இதை ஒத்த மூளைக்குப் பன்முறை திருப்பித் திருப்பிச் சொல்லித் தான் புரியவைக்கலாம்.

3. கதலிப்புத்தி: கதலி - வாழை. வாழைத் தண்டைக் கொளுத்த எவ்வளவு முயன்றாலும் அது கருகுமே ஒழிய எரியாது. கதலிப்புத்தி உள்ளவர்களுக்குக் கற்பிப்பது கடினமோ கடினம். ஆனால் அது அவர்களின் குற்றம் அன்று. இரக்கத்துக்குரிய அவர்களை ஏளனஞ்செய்தல் பெருந்தவறு.

No comments:

Post a Comment